LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Saturday, July 14, 2018

முகநூலில் நீலப்படங்களும் நட்புக்கோரிக்கைகளும் - லதா ராமகிருஷ்ணன்


முகநூலில்
நீலப்படங்களும்
நட்புக்கோரிக்கைகளும்
லதா ராமகிருஷ்ணன்
(14.07.2018)















நாளும் நிறைய பேர் நட்புக்கோரிக்கை அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள். பலரைப் பற்றி அவர்களது முகநூல் பக்கத்தில் எவ்வித விவரக் குறிப்பும் இல்லை. அத்தகையோர் எனக்கு நட்புக்கோரிக்கை அனுப்ப வேண்டாம் என்று வேண்டிக் கொள்கிறேன்.

சிலருடைய முகநூல் பதிவுகளில் அநாகரீகமான ஆபாசமான பதிவுகள் சொல்லாடல்கள் மண்டிக் கிடக்கின்றன. மாற்றுக்கருத்துடைய வர்களை இத்தனை கேவலப்படுத்திக்கொண்டே பேச்சுரிமை, கருத்துரிமை என்றெல்லாம் முழங்குவதில் உள்ள போலித்தனமும் அதிகாரத்தொனியும் என்னால் நட்புகொள்ள முடியாதவை.

நான் சாதாரண ஆள். எந்த இலக்கியக் குழுவிலோ, அரசியல் கட்சியிலோ அங்கம் வகிக்காதவள். எனக்கு சரியென்று பட்டதை என் முகநூலில் கண்ணியம் குறையாமல் பதிவிடுகிறேன். அத்தகை யோரிடமே நட்பு பாராட்டவும் விரும்புகிறேன். இதுபோதும் எனக்கு. இதை ஏற்றுக்கொள்ளாதவர்கள் எனக்கு நட்புக்கோரிக்கை அனுப்பவேண்டாம் என்று வேண்டிக் கொள்கிறேன்.

இன்று காலை TAMI L என்பவரிடமிருந்து நட்புக் கோரிக்கை வந்திருந்தது. அவரைப் பற்றி விவரம் அறிய அவருடைய முகநூல் பக்கத்தில் சென்றால் அப்பட்டமான நீலப்படம் ஓட்டிக்காட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதைப் பார்க்க கூகுளில் எத்தனையோ வழிகள் இருக்கின்றனவேஇவரிடம் நட்பு பாராட்டித் தான் பார்க்கவேண்டுமென்பதில் லையே என்று நினைத்துக்கொண்டேன்.

இணையக் குற்றங்கள், அவற்றிற்கான தண்டனை கள் என்று எத்தனை பேசப்பட்டாலும் இத்தகைய அநாகரீகங்கள், அத்துமீறல்கள் இருந்துகொண்டு தானிருக்கும் போலும். அந்த முகநூல் கணக்கைஸ்பாம்செய்துவிட்டேன்.

நட்பினரின் நட்பினர் தான் எனக்கு நட்புக்கோரிக்கை அனுப்பவியலும். எனவே, என் நட்பினர் யாரோ ஒருவரின் நட்பினர்தான் இந்த முகநூல் கணக்கை வைத்திருப்பவர்கள். சம்பந்தப்பட்ட என் நட்பினர் இதுகுறித்து அவருக்கு எடுத்துரைக்கவேண்டு மென்று கேட்டுக்கொள்கிறேன்.

நீலப் படம் பார்க்க விரும்புபவர்கள் பார்த்துக் கொள்ளலாம். நிறைய பேருக்கு அது வடிகாலாகக் கூட அமையலாம். அது குறித்து நீதிநெறி புகட்டுவது என் நோக்கமல்ல. ஆனால் என்னளவில் இந்த நீலப்படங்கள் ஆண்-பெண் உறவை வெறும் உடல் ரீதியானதாக்கி, காட்சிப் பொருளாக்கி் கொச்சைப் படுத்துகின்றன. ஒரு பெண் எத்தனை ஆண்களால் வேண்டுமானாலும் என்னென்ன வக்கிரமான வழி களிலும் புணரப்படலாம் . எந்தப் பெண்ணும் அதை உள்ளூர விரும்புவாள் என்ற எண்ணத்தையே இந்த நீலப்படங்கள் எல்லாவழிகளிலும் உருவேற்றிக் கொண்டே யிருக்கின்றன.

இந்தப் படங்களில் ஒரு பெண்ணின் உடல், மன ரீதியான விருப்பம், விருப்பமின்மை குறித்த பிரக்ஞை அறவே ஓரங்கட்டப்படுகிறது. ஒரு வீட்டில் வேலை செய்யும் பெண் தொழிலாளியை அவளது முதலாளி தன் பாலியல் இச்சைக்கு உட்படுத்துவது வெகு இயல்பானது என்பதாய், அதில் அந்தப் பெண் உள்ளூ றப் பெருமையடைவதாய் திரும்பத்திரும்பக் காட்டப் படுகிறது.

அவள் உடலில் இதனால் ஏற்படும் ரணகாயங்கள், தாங்கமுடியாத வலி குறித்த பிரக்ஞையை இவை கச்சிதமாக ஓரங்கட்டிவிடுகின்றன.

இதன் சாதக பாதகங்கள் தெரியாத இளம்பருவத் தினர் வாழ்வுகளில் இந்தப் படங்கள் எத்தனையோ விதமான அக,புற பாதிப்புகளை ஏற்படுத்திவருகின் றன.

இந்தப் படங்களில் இடம்பெறும் பெண்கள் எப்படி யெல்லாம் வலைக்குள் சிக்கவைக்கப்படு கிறார்கள், இத்தகைய படங்களைக் காட்டி இளம் பெண்களும், ஆண்களும் எப்படியெல்லாம் தூண்டப்படுகிறார்கள், அச்சுறுத்தப்படுகிறார்கள் என்பதையெல்லாம் தினசரி பார்க்க, கேட்க நேர்கிறது.

இன்று தனிநபர்களாலும், கும்பலாலும் நடத்தப்படும் வன்புணர்ச்சிகள் அதிகமாக முக்கியக் காரணம் கைபேசி வழியாகவும் இணையம் வழியாகவும் காணக்கிடைக்கும் இத்தகைய நீலப்படங்களே என்று தோன்றுகிறது.

குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் அதிக ரித்துவர இந்த இணைய, கைபேசி நீலப்படங்களும் ஒரு முக்கியக் காரணம்.

இத்தகைய படங்கள் கைபேசியிலும் இணையத்தி லும் மலிந்துகிடப்பது குறித்த சமூகப்பிரக்ஞை இன் னும் பரவலாகவேண்டும்.

இனியும் மேற்குறிப்பிட்ட நபரோ, நபரொத்தவர் களோ எனக்கு நட்புக் கோரிக்கை அனுப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

தங்கள் வன்மங்களுக்கும் வக்கிரங்களுக்கும் என் முகநூல் பக்கத்தில் இடம்தேடிக்கொள்ளும் நோக்கில் அப்படி அனுப்பினால் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிவரும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தோழமையுடன்
லதா ராமகிருஷ்ணன்.

Wednesday, July 11, 2018

பூனையைப் புறம்பேசல் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)


பூனையைப் புறம்பேசல்

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

அவரிவர் குடியிருப்புப் பகுதிகளோ
ஆற்றங்கரையோரமோ
குட்டிச்சுவரோ
வெட்டவெளியோ _
பூனைக்கு அதுவொரு பொருட்டில்லை.
அதன் சின்ன வயிற்றுக்கு
இரை கிடைத்த நிறைவில்
கண்களை மூடிப் படுத்திருக்கும்.
உலகை இருளச்செய்யவேண்டும்
என்று கங்கணம் கட்டிக்கொண்டா என்ன?
பூனையாக நாம் மாறவியலாதது போலவே
பூனையும் நாமாகவியலாது.
இதில்
இலக்கும் பிரயத்தனமும்
அடுக்குமாடிகளும் அதிகாரபீடங்களுமாக இருப்பவர்கள்
இலக்கியத்தில் தங்களை யிழந்தவர்களையெல்லாம்
‘அசால்ட்’டாகப் பூனையாக்கிப் பேசுவதால்
அம்பலமாவது இறந்துபோய்விட்டவர்களல்ல –
இவர்களே யென்றறிவார்களாக.



ராமன் என்பது சீதை மட்டுமல்ல; சீதை என்பது ராமன் மட்டுமல்ல - லதா ராமகிருஷ்ணன்


அணுகுமுறை 
ராமன் என்பது சீதை மட்டுமல்ல;

சீதை என்பது ராமன் மட்டுமல்ல
லதா ராமகிருஷ்ணன்


ஒரு காவிய நாயகன் நாயகி, காவியக் கதை எல்லாவற்றிலுமே சாரமும் உண்டு; சக்கையும் உண்டு. எல்லாவற்றிலும் சாரத்தை எடுத்து சக்கையை விடுத்துச் செல்வதே வாசகர்களாகிய நாம் செய்ய வேண்டியது.

ராமன் என்ற காப்பிய நாயகனை நாம் ஏன் எப்போதுமே சீதையை சந்தேகித்தவனாக மட்டுமே அணுகவேண்டும்? அற்பதினாயிரம் மனைவி யரை ஒரு மன்னர் வைத்திருந்த காலத்தில் ஒரு சொல் ஒரு இல் ஒரு வில் என வாழ்ந்தவனும் அவன் தானே. எல்லாப் பெண்களுக்குமான ஆத்மார்த் தமான எதிர்பார்ப்பு அவன் வழி சீதைக்கு லபித்ததல்லவா! சீதையை சந்தேகித்ததில், அவள் பிரிந்ததில் அவன் மகிழ்ச்சியடைந் தானா? மனநிம்மதியடைந்தானா?

’தீர்ப்பளிக்காதே நாமெல்லாமே பாவிகள்தான்’ என்று ஒரு பரத்தைமீது கல்லெறி பவர்களை நோக்கி ஏசு கூறுவது பரத்தையர்களைக் குறை சொல்வதாக தொனிக்கிறது. அவர்கள் பரத்தையரானதற்கு இந்தச் சமூகம்தானே காரணம் என்று எழுத்தாளர் தேவகாந்தன் தனது கதை யொன்றில் குறிப்பிட்டிருப்பார். இதுவோர் ஆழமான சமூகநேயம் மிக்க பார்வை என்பதில் சந்தேகமில்லை. ஆனால், ஏசுவின் வாசகத்தில் தொனிப்பது, அடர்ந்திருப்பது பரத்தையை குறைசொல்லும் போக்கா, அல்லது அவளை ஏசுபவர்களுக்கு புத்திபுகட்டும் நோக்கமா? எழுத்தாளர் தேவகாந்தனை எனக்குத் தெரியும். பல வருடங்களுக்கு முன் அவர் சென்னையில் இருந்தகாலத்தில் நாங்கள் இதுகுறித்து விவாதித்ததுண்டு.

‘உனக்கும் கீழே உள்ளவர் கோடி, நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு’ என்று முடியும் சுமைதாங்கி திரைப்படப் பாடலைப் பற்றி (கண்ணதாசன் எழுதியது) ஒருவர் நமக்குக் கீழே உள்ளவர் கோடி என்னும்போது அதை நினைத்துப்பார்த்து நிம்மதியாக இருக்கமுடியுமா, அப்படிச் சொல்வது அக்கிரமமல்லவா என்று கோபத்தோடு எழுதியிருந்தார். அவருடைய சமூகப் பிரக்ஞையைப் புரிந்துகொள்ள முடிகிறது என்றாலும் அந்தப் பாட்டில் இடம்பெறும் அந்த வரிகள் அலைப்புறும் நாயகனை அமைதிப் படுத்தப் பாடப்படுவதே தவிர ’அவருக்குக் கீழே உள்ள மனிதர்களைப் பொருட்படுத்தாமலிருக்கும்படி போதிப்பதல்ல.

இருபதாண்டுகளுக்கு முன்பு என் தோழியொருவர் ஆசிரியராக இருந்து வெளிவந்துகொண்டிருந்த சூர்யோதயா என்ற இதழொன்றில் ‘படி தாண்டிய பாஞ்சாலி’ என்ற சிறுகதையை எழுதியிருந்தேன். மகாபாரதப் போரில் தங்கள் கணவர்கள், குழந்தைகள், தகப்பன், தமையன் என்று எல்லோரையும் இழந்துபோன பெண்கள் பாஞ்சாலியை சந்தித்து உங்கள் வீட்டு விவகாரத்திற்காக எங்கள் மக்களையெல்லாம் போரில் பலியாக்கிவிட்டீர்களே இது என்ன நியாயம் என்று கோபத்தோடு கேட்க, அந்தக் கேள்வியின் உண்மையுணர்ந்த பாஞ்சாலி தன் கணவர்களிடம் தன்னுடைய சீதனத்தை கேட்டு வாங்கி அவர்களை விட்டு நீங்கி பாதிக்கப்பட்ட பெண்களுக்காகப் பணியாற்றச் செல்வதாய் அந்தக் கதை விரியும். மகாபாரதத்தை ஒரு புதிய சமூகக் கண்ணோட்டத்தில் அணுகிவிட்டதாய் எனக்கு உள்ளூற ஒரு பெருமை இருந்திருக்கக் கூடும். அதற்குப் பின் சில காலம் கழித்து ஆங்கில நாளிதழொன்றில் வாசிக்க நேர்ந்த KURUKSHETHRA AND ITS AFTERMATH என்ற கட்டுரை என் கதை முன்வைத்த பார்வையும் அதைத் தாண்டிய பல பார்வைகளும், போரின் கொடுமை, மக்கள் சீற்றம், போரின் வெற்றி யாருக்குமே மகிழ்ச்சியளிக்காது என்ற உண்மை என பலப்பல குருக்‌ஷேத்திரப் போருக்குப் பிறகு’ என்பதாய் அந்தக் காப்பியத்திலேயே விரிவாகப் பேசப்பட்டிருப்பதை விரித்துக்கூறியிருந்தது!

வால்மீகி ராமாயணம் என்ற கடலில் தனது காப்பிய முயற்சி ஒரு துளி என்று கம்பராமாயணத்தில் கம்பர் குறிப்பிட்டிருப்பார். கம்பராமா யணத்தில் இந்திரனோடு கலந்திருந்ததன் விளைவாகக் கிடைத்த சாபத்தால் கல்லாகச் சமைந்திருக்கும் அகலிகை ராமனின் கால்பட்டு மீண்டும் உயிர்பெற்றதும் ராமனின் காலில் விழுந்து வணங்குவதாக வரும். ஆனால் மூல காவியமான வால்மீகி இராமாயணத்தில் இந்திரனின் அழகில் மயங்கி, தெரிந்தே அவனோடு கலக்கும் அகலிகை சாபத்தால் அருவமாக உலவிக்கொண்டிருக்க ராமன் அந்த இடத்தின் எல்லையை மிதித்ததும் உருவம் பெறுவாள். ஆனால், ராமன் தான் அவள் காலில் விழுந்து வணங்குவான். தெய்வாதீனமாக நேர்ந்துவிட்ட ஒன்று என்றுதான் அவளுடைய இந்திரக் கலப்பை அவள் மகனே  குறிப்பிடுவான். அதற்காக யாரும் அந்தப் பெண்மணியை மதிப்பழித்து நடத்தமாட்டார்கள். வால்மீகி இப்படி எழுதியதால் சோரம் போகிறவள் பெண், பெண் சோரம் போவதே சரி என்று சொல்வதாய் எடுத்துக்கொள்வது சரியா? கம்பர் இதை மாற்றியெழுதியதால் அவர் ஆணாதிக்கவாதியாக முத்திரைகுத்தத் தக்கவரா?

நான் இந்தக் காப்பியங்களையெல்லாம் முழுமையாகப் படித்ததாகச் சொல்லிக் கொள்ள முடியாது. ஆனால், இந்தக் காப்பியங்களிலும் சரி, வேறு பல ஆழமான படைப்புகளிலும் சரி – அடிநாதமாக ஒரு தொனி, ஓர் உட்குறிப்பு வேர்ப்பிடித்து ரீங்கரித்துக்கொண்டிருக்கும். அதை நாம் மாற்றிப்போடலாகாது. ஒரு பிரதியில் மறை-பிரதி இருந்தால் அதைக் கண்டுகொள்ளலாம். ஆனால், நாமே மறை பிரதிகளை உருவாக்க லாகாது. இராமாயணம் முன்வைப்பது ராமன் கொடுமைக்காரக் கணவன், அடுத்தவன் மனைவியைக் கவர்ந்துகொண்டு போகிறவனே பேராண்மையாளன் என்பதா?  இல்லையென்றே நான் நினைக்கிறேன். அப்படியிருக்குமானால் இராமாயணம் இத்தனை காலம் மக்களிடையே நிலைத்திருக்க வழியில்லை.

காப்பியங்களாக இருந்தாலும் சரி, சமகாலப் படைப்புகளாக இருந்தாலும் சரி, வாழ்வின் BIG PICTURE அல்லது அதன் பிரதிபலிப்பு களை முன்வைக்கும் படைப்புகளை நாம் ஒற்றைப்பரிமாண வாசிப்பாக, பொருள்பெயர்ப்பாகக் குறுக்கிவிடுவதால் என்ன பயன்?

தவிர, ராமன் என்பவன் சீதையின் கணவன் மட்டும்தானா? ஒரு தனி மனிதன், ஒரு சமூக மனிதன், ஒரு தனயன், ஒரு அரசன், ஒரு மகன், ஒரு நண்பன் - ஒரு கருத்தாக்கம், ஒரு சிந்தனைப்போக்கு,  ஒரு வாழ்முறை, ஒரு கற்றல் – இன்னும் எத்தனையோ. நாம் உள்வாங்கிக்கொள்வதில் தான் இருக்கிறது எல்லாம்

நான் புகுமுக வகுப்பில் படித்துக்கொண்டிருந்தபோது கம்பராமாயணச் செய்யுள்கள் சில பாடமாக உண்டு. அதில் ஒன்று – முதல் நாள் பட்டாபிஷேகம் என்றபோதும் மறுநாள் காட்டுக்குப் போ என்றபோதும் ‘சித்திரத்தில் வரைந்த செந்தாமரையைப் போல் அபப்டியே இருந்தது அவன் முகம் என்பதாய் விவரிக்கும். அந்தப் பக்குவப்பட்ட மனம் வாய்க்க வேண்டும் என்பதே, அதற்கான வழிகாட்டியே என்னைப் பொறுத்த வரை எனக்கான இராமார்த்தம்.




Tuesday, July 10, 2018

அணுகுமுறை - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

அணுகுமுறை
ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)



ராமன் என்பது சீதை மட்டுமல்ல

சீதை என்பது ராமன் மட்டுமல்ல

இங்கிருந்து வெளியே…. - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

இங்கிருந்து வெளியே….
‘ரிஷி'
(லதா ராமகிருஷ்ணன்)


  இத்தனை அலைச்ச லுக்குப் பிறகும் இரண்டாம் சதுரம் வசப்படவில்லை யிதுவரை.

மூன்றாவது தொடுவா னத்திற்கப்பால்.

அந்தரத்தில் அவ்வப்போது 
தொங்கிக் கொண்டிருக்கும் நூலேணியில்
எத்தனை முறை ஏறியும்
நிலவுக்குள் நுழையவே முடியவில்லை.

விண்கலத்தில் ஏறிச்செல்ல நானொன்றும் விஞ்ஞானியல்லவே.

அருகிலிருந்து பார்க்க அது அவ்வளவாக அழகாகவும் இல்லையாக…..

ஒரு குழந்தைபோல் காற்றின் முதுகேறி எத்தனை நேரம்தான் பறந்துகொண்டிருப்பது?

ஆற்றங்கரையோரத்தில் கட்டிவைத்திருக்கும் அரிய தோணி அப்படியேயிருந்தாலும்
ஆற்றைக் காணவில்லை.

நேற்றின் ஒரு முனையும் இன்றின் மறுமுனையும்
இறுகித்திருகி முறுக்கிக்கொண்டிருக்கும் நாளைக்குள்
நிற்கத் தோதான நான்காம் சதுரமிருக்கும் என்று நம்ப வழியில்லை.

சுக்கானற்ற நாவாயாய்
பாதாளத்தில் அலைந்து திரிந்துகொண்டிருக்கும் என் ரயில் வேறு
உலக உருண்டையின் பொன்சாய் வடிவமாய்
குறுகிய வட்டப்பாதையில் சுற்றிச்சுற்றி வந்துகொண்டிருப்பதும்
புரிந்துவிட்ட பிறகு _

திரும்பிடத்தான்வேண்டும் முதல் சதுரத்திற்கு….

என்னவொன்று _
சதுரம் சற்றே பின்வாங்கியிருக்கக்கூடும்
வடிவம் கொஞ்சம் சிதைந்திருக்கலாம்.

விட்டுவந்த மரகதப்புற்களும் மண்ணுளிப் புழுக்களும்
இன்னுமிருக்குமோ இருக்காதோ…..

ஆனாலும், ஆழ வேர்ப்பிடித்து அகலவிரிந்திருந்திருக்கும்
அந்த மரத்தின் அடியில்
நிற்க நிழலிருக்கும் எப்போதும்.
அதுபோதும்.


தனிமொழியின் உரையாடல் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)


தனிமொழியின் உரையாடல்
‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)


”உன் கவிதையில் எந்நேரமும் நீந்திக்கொண்டிருக்கும் மயில்களை
உண்மையில் காட்டமுடியுமா உன்னால்”

”உங்கள் கனவுகளிலிருக்கும் ஆற்றைக்கடந்துதானே அவை என்னை அடையாளம் கண்டு வந்தடைகின்றன!”

”என் கனவுகள் எனக்கே தெளிவாகாதபோது நீ யார்
அவற்றில் நதிகளை வகுத்துரைக்க?”

உங்கள் உள்ளாழ நிலவறைகள் சிலவற்றின் திறவுகோல்கள்
என்னிடமிருக்கின்றன!”

”களவாணியா நீ?”

“கவி”.


இயங்கியல் - ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

இயங்கியல்
‘ரிஷி’
                                                      (லதா ராமகிருஷ்ணன்)














இரு நாற்பதுகளுக்கு மேல் இருக்கும் வயது.
இருந்தும், இன்றெழுதிவரும் கவிஞர்களில் இடம்பெறுபவர்.


”இவரா கவிஞர்? ஐயையையே” என்று மலம் மிதித்ததாய்
மறைவாய் முகஞ்சுளித்தபடியே
அவருக்கு முகமன் கூறி விதந்தோதி மலரச் சிரிக்கும்
சக கவிகள் சிலர் உண்டென்றாலும்
அவசியம் படிக்கவேண்டிய கவி யிவர் என்பதே
அப்பட்டமான உண்மை.

அப்படியிருந்தும்
இன்றுவரை இலக்கிய பீடாதிபதிகளால் அதிகவனமாக
கண்டுங்காணாததாய் கடந்துசெல்லப்படுபவர்.
(ஆஹா! இஃதெல்லாம் இலக்கியவுலகில் அதி சகஜமப்பா! )

என்றாலும்
அவர்க்கான புகழாஞ்சலிகள்
அனைவரிடமும் ஆயத்தமாக உள்ளன!

ஒருக்கால் அவருடைய படைப்புகள் நாட்டுடைமையாக்கப்பட்டால்
குறைந்தபட்சம் அவருடைய நான்கு நூல்களையாவது
அவசர அவசரமாக,
ஆயிரமில்லாவிட்டாலும் அறுநூறு அச்சுப்பிழைகளுடனாவது
வெளியிட்டுவிட _

அல்லது அன்னாரின் படைப்புகளைப் பற்றி
அரைகுறையாகவும் அறிந்திராத
அவருடைய குடும்பத்தாருக்கு
குத்துமதிப்பாக ஒரு சிறுதொகையைக் கொடுத்து
அவருடைய நூல்களில் பிரபலமானவற்றை
வன்பதிப்பு செய்ய _

சில வளர்ந்த பதிப்பகங்கள் என்றுமே
தயார்நிலையில்!