LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Friday, January 15, 2016

சூழல் மாசு - 'ரிஷி’


சூழல் மாசு


'ரிஷி’



காறித் துப்பத் தயாராய் வன்மம் நிறை வார்த்தைகளை
யெப்போதும் குதப்பியவாறிருக்கிறாய்.

தப்பாமல் கொஞ்சம் அந்தப் பக்கம் திரும்பித் துப்புகிறாய்;

கொஞ்சம் இந்தப் பக்கம் திரும்பித் துப்புகிறாய்;

காழ்ப்பேறிய உன் நுரையீரல், உணவுக்குழாய்
குரல்வளை யெங்கிலும்
பரவிக்கொண்டிருக்கும் குரோத நஞ்சு.

நீ அப்பிக்கொள்ளும் பவுடர்,
வெட்டிக்கொள்ளும் புருவங்கள்,
கன்னத்து ரூஜ்,
உதட்டுச்சாயம்,
இன்னும் பலவற்றை மீறி
அகத்தின் அழுகல் முகத்தில் தெரிகிறது பார்.

உடல் பொருள் ஆவியாகும்
அகங்காரம், ஆங்காரம் கொப்பளிக்க
ஆங்காலம் போங்காலம் உன்னிலிருந்து கிளம்பும்
காறித்துப்பல்களில்
கணிசமாய் உன் மீதே பட்டுப் படர்ந்திருப்பதை
என்றேனும் உன்னால் உணரமுடியுமோ
சந்தேகம்தான்.

உன்னிடம் ஒரேயொரு வேண்டுகோள்:
நீ எதிரே வந்தாலே நாசியைப் பொத்திக்கொண்டு
நீங்கிச் செல்பவர்களை
நாசமாய்ப் போக என்று ஏசுவதற்கு பதில்
உன் ஊத்தை உள்ளிருப்பில் எங்குபார்த்தாலும் 
சிதறிக்கிடக்கும்
மாசுகளை  சுத்தம் செய்யச்
சிறிதேனும் முனைப்பு காட்டு.

(* ஜனவரி 2016 பதிவுகள் இணையதளத்தில் வெளியாகியுள்ளது)

திடக்கழிவுகள் - ரிஷி

திடக்கழிவுகள்


ரிஷி


குட்டி வாயும் குண்டுமணிக் கண்களுமாய்

படுசுட்டியாய்ப் பாய்ந்தோடும் சுண்டெலி தனி அழகுதான்.

ஐந்தறிவுள்ள அந்தச் சுண்டெலிக்குத் தெரியும்
அதன் வாழ்வெல்லைப்பரப்பின் நீள அகலங்கள்;

தனக்குப் பாதுகாப்பான பொந்து;

உணவு கிடைக்கக்கூடிய மூலைகள்….


ஆனால், ஆறறிவுள்ள சில அற்பச் சுண்டெலிகள்
ஆங்காலம் போங்காலம்
கிலி பிடித்தாட்ட,

தங்களைச் சிறுத்தைப்புலிகளாக ‘பாவ்லா’ காட்டி

இக்குணூண்டு கூட இல்லாத வாலை சுழற்றி

பொக்கைவாயின் சொத்தைப்பற்களே வளைநகங்களாய்

கெக்கேபிக்கேவென்று

கம்மிய குரலில்

சதா கீச்சுக்கீச்சென்று உறுமிக்கொண் டிருப்பதைக் கேட்க

உண்மையிலேயே கண்றாவியாக இருக்கிறது.


(* ஜனவரி 2016 பதிவுகள் இணையதளத்தில் வெளியாகியுள்ளது)

Thursday, January 14, 2016

உளவியல் சிக்கல் - ரிஷி

உளவியல் சிக்கல்
ரிஷி

ஒரு மண்புழு
தன்னை கட்டுவிரியன் பாம்பு என்று எண்ணிக்கொண்டுவிட்டது.
வந்தது வினை.
புலியை அடித்துக்கொல்லச் சென்றது;
முடியவில்லை.
சிங்கத்தை விழுங்கித் திங்கப் பார்த்தது
முடியவில்லை.
யானையை
கரடியை
மாடை ஆடை முயலை கிளியை _
எதுவுமே முடியாமல் போனதில்
எந்த வியப்புமில்லை.

ஆம், மண்புழுவும் அன்புக்குரியதுதான் –
உண்மையானதெனில்!



(* ஜனவரி 2016 பதிவுகள் இணையதளத்தில் வெளியாகியுள்ளது)

கண்காட்சி - ரிஷி


கண்காட்சி

ரிஷி
பாவம், ஏனோ தெரியவில்லைசாக்கடைக்குள் நின்றபடி
அந்தப் போக்கத்த பித்துக்குளிப் பேதைக் கழுதை
தன்னைப் படைப்புக்கடவுளாகக் கூவிக்கூவி விற்கும் எத்தனத்தில்
எழுதுகோலைப் பின்னங்காலாக்கிக்கொண்டு
அவரிவரெவரொருவரையும் விடாமல்
எட்டியுதைக்கப் பிரயத்தனப்பட்டுக்கொண்டேயிருக்கிறது….
மனதின் நோய்மை எலும்பு மஜ்ஜை வரை பரவி
பலவீன நோஞ்சானாயிருக்கும் தன்னை மாபெரும் பயில்வான் என்று
கற்பூரம் அடித்துச் சத்தியம் செய்யாத குறையாய் நம்பச் சொல்லி
ரம்பக் குரலில் கத்திக்கொண்டு புரண்டு விழுந்து எழுந்தழுதபடி
பொழுதைக் கழித்துக்கொண்டிருக்கிறது.
 ‘கரெண்ட்’டில் கைவிட்டதுபோல் வரட்டு வரட்டென்று
வாய்கோணக் கத்தும் அதை பார்த்து
கடந்து செல்பவர்கள் எல்லாம்
கழுதையல்லாக் கழுதை இஃதென்ன விசித்திரப் பிராணி
என்று விசனத்தோடு உச்சுக்கொட்டியபடி
தம் வழியேகிக்கொண்டிருக்கிறார்கள்.


(* ஜனவரி 2016 பதிவுகள் இணையதளத்தில் வெளியாகியுள்ளது)

' 24 x 7 +' மையங்கள் - ரிஷி


 '24x7+' மையங்கள்


ரிஷி

ரவு பகல் எந்நேரமும் திறந்திருக்கின்றன.
மும்முரமாய் கூவிக்கூவி வியாபாரம் நடந்தவாறு.
டாஸ்மாக் கடைகள் கூட நள்ளிரவைத் தாண்டி ஏதோவொரு சமயம்
மூடிவிடுவதாகக் கேள்வி.
ஆனால், இந்த விற்பனை மையங்களோ
ஒரு நாளின் 60,000 மணிநேரமும் ஓய்வின்றி இயங்கியபடியே….
வகைவகையாய்க் கொட்டிக்கிடக்கின்றன அதிகாரங்கள்.
வகைக்கிரண்டாய் பொறுக்கிப்போட்டு
கூறுகட்டி வைக்கப்பட்டிருக்கிறது.
அவ்வப்போது மாறிக்கொண்டிருக்கும்
கொள் பொருள் அளவுகள்.
சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம் _
சனாதனம், இனமானம், இந்துமதம் _
பௌத்தம், கிறித்துவம், கவித்துவம் _
முற்போக்கு, பண்பாடு, கலாச்சாரம் _
விளையாட்டு, வீரம், தீரம் _
காரம் சாரம் வாரம் சோரம் பேரம்……..
அமோகமாய் நடக்கிறது வியாபாரம்.
அள்ள அள்ளக் குறையா லாபம்.

(* ஜனவரி 2016 பதிவுகள் இணையதளத்தில் வெளியாகியுள்ளது)

அகாலப்புள்ளிகள் மேலாய் ஒரு பயணம்! ‘ரிஷி’




அகாலப்புள்ளிகள் மேலாய் ஒரு பயணம்!
 ‘ரிஷி’


(சிற்றிதழ் வெளியில் பல் பரிமாணங்களில் தொடர்ச்சியாக இயங்கிவரும் நண்பர் சி.மோகனுக்கு விளக்கு விருது வழங்கும் விழா சமீபத்தில் சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்றது. கவிஞர் ஷங்கர ராம சுப்பிரமணியன், யவனிகா ஸ்ரீராம், யூமா வாசுகி, யவனிகா ஸ்ரீராம் நான் இன்னும் சிலர் மோகன் குறித்து உரையாற்றி னோம். அவ்வமயம் நான் வாசித்த கவிதை இது. 

சி.மோகனுடைய ஏற்புரை http://tamilsnow.com/?p=69782 இணையதளத்தில் காணொளி யாக இடம்பெற்றுள்ளது.




ஆறிலிருந்து அறுபதுக்கு மேலான பருவங்களின் அகாலப் புள்ளிகள் மேல்
படர் அடர் பாசிகளின் மீதாய் காலாற நடைபழகிக்கொண்டிருக்கிறாய்…
பயணத்தின் சுகம் கண்டுவிட்டால் பின் கல்லென்ன, முள்ளென்ன!

உன் பார்வைப் பரப்பெங்கும் எல்லையற்று விரிந்துகிடக்கும்
கண்ணுக் கெட்டாத் தொலைவின் வர்ணஜாலக் குறியீடுகள்!

அலைபாய்வே நிறைவமைதியான மனமும் அன்பே குணமுமாய்
இன்சொல்லே எந்நாளும் உன்னிலிருந்து கிளம்பும் பாங்கில்
தளும்பும் சிநேகிதம்.

ஒரு அமரகாவியப் புகைப்படத்தில் உன்னோடு தோள்சேர்த்து நிற்கும்
என்னருமைக் கவி ஷங்கர ராம சுப்ரமணியனின் கண்ணின் ஒளி காண
என்ன தவம் செய்தேனோ?!

மாற்றிதழ்க்காரர்களுக்கெல்லாம் உன் பெயர் முத்திரை வாசகம்!
உனக்கு நீயே வழங்கியவாறிருக்கும் வாசிப்பனுபவம்
உன்னால் எங்களுக்கு வாய்க்கும் வரமாகும்!

மனதை மயிலிறகால் வருடித்தரும் உன் குரல்!

சத்தமிடாமல் எனில் ஒருபோதும் சமரசம் செய்யாமல்
இயங்கிக்கொண்டிருக்கிறது
இன்றளவும் பழுதடையா உன் எழுதுகோல்!

முழுமையென்பதும் பின்னமே என்றுணர்ந்தவாறு
உன் வழியேகுகிறாய்
உடன் வருபவர்களை அரவணைத்தபடி.

நேற்றும் இன்றும் நாளையுமாய் தன் பாட்டில்
நம்மை வாழவைத்திருக்கும் காற்றுக்கு
என்னவென்று நன்றிசொல்வது என்று புரியாமல்
எப்பொழுதும் போல்
அரைகுறையாய் தன்னை நிறைவாக்கிக்கொள்கிறது இக்கவிதை.





Monday, December 14, 2015

புனைபெயரின் தன்வரலாறு - ’ரிஷி’

கவிதை:

புனைபெயரின் தன்வரலாறு

ரிஷி


(14 December 2015 20:49 பதிவுகள் இணையதளத்தில் வெளியாகியுள்ளது)























என் புனைபெயர் என் தனியறை;
அரியாசனம்;
நட்புவட்டம்;
 வீடு; நாடு; சமூகம்; உலகம்;
கடல்; கானகப் பெருவெளி;
காலம்; காலாதீதம்;  
கனாக்களின் கொள்ளிடம்….
என் நம்பிக்கைகளின் கருவூலம்;
என்னிலிருந்து பல கிளைபிரிந்து
விரிகின்ற கற்பகவிருட்சம்
காணக் கண்கோடிவேண்டும் தரிசனம்,
 தேவகானம்…..

ஒரு புனைப்பெயருக்குள் இயங்கிக்கொண்டிருக்கும்
தனியடையாளங்களை,
இருமடங்கு வாழ்வை,
மும்மடங்கு ஆற்றலை,
பன்மடங்கு உயிர்ப்பை
இனங்காணவியலாதவர்கள்
விதண்டாவாதம் செய்வது இயல்புதான்.

வருந்தி வருந்திக் கேட்டதால்தான்
அனுப்பிவைத்தேன் என் எழுத்துக்களை.
இதை ஒப்புக்கொள்ளும் திராணி யுனக்கிருக்குமோ
தெரியவில்லை.

அட, வகையான நிதியுதவியோடு, வெளியிடத் தயாராய்
பத்திரிகையைக் கையில் வைத்திருப்பவரிடம்
கட்டளையிட்டுவிட முடியுமா என்ன?

மாற்றிதழ்காரரிடம் மரியாதை கிடைக்கும் என்று நம்பியது
என் தவறுதான்.

கேவலம் செய்த பின் என் கவிதைகளை வெளியிடலாகாது
என்று கூறினேன்; திட்டவட்டமாகவே.
திரும்பவும் கூறுவேன்.
அது ஏனோ தெரியவில்லை _
சிலருக்குப் பேனாவைப் பிடித்தாலே
திரித்து எழுதத்தான் முடிகிறது.

பூஜ்யத்திற்குள் ராஜ்யமே என் பரிபூர்ண சுதந்திரமாய்
வாழ்ந்துவருபவள் நான்.
எனக்கா வகுப்பெடுக்கிறாய் _
பெயரென்றால், புகழென்றால் என்னவென்று?

என் பெயரையோ படைப்புகளையோ
எந்தப் பத்திரிகைக் கல்வெட்டுகளிலும் பொறித்துவைக்க
என்னாளும் நான் பிரயத்தனப்பட்டதில்லை.
என்னோடு என் எழுத்துக்களும் தடயமின்றி மறைந்திடவேண்டும்
என்பதே என் பெருவிருப்பம்.
(தேவைப்பட்டால் அதுகுறித்து
ஓர் உயில் எழுதிவைக்கவும் எண்ணமுண்டு!)
உன்னொத்தவர்களின் இரக்கமற்ற கைகளில் சிக்கி
யவை அடிமைகளாய் சீரழிந்துவிடலாகாது.

நீ மிகவும் நேசிக்கும் உன் புனைப்பெயரையே நானும் வரித்து
நீ மிகவும் நம்பும் கலையைப் புழுதியில் தள்ளிக் கரித்துக்கொட்ட
என் கவிதையால் முடியும்;
உன்னைக் கொண்டே உன்னைக் காயப்படுத்தினால்
ஒருக்கால் வலி புரியலாம் உனக்கும்....

எனில், கீழ்மை பழகாது என் கவிதை யென்றும்.