LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Monday, September 1, 2014

சகவுயிர் - கவிதை

கவிதை

சகவுயிர்

ரிஷி


பொம்மையின் தலையை யாரோ திருகியெறிந்துவிட்டார்கள்.
தாங்க முடியாமல் தேம்பிக்கொண்டிருந்தாள் சிறுமி.
வேறொன்று வாங்கிவிடலாம் என்று சொன்ன ஆறுதல்
அவளை அதிகமாய் அழச்செய்தது.
“இல்லை, என் வள்ளி தான் எனக்கு வேண்டும்…
எத்தனை வலித்திருக்கும் அவளுக்கு..”
என்று திரும்பத்திரும்ப அரற்றினாள் சிறுமி.
சுற்றிலுமிருந்தவர்களுக்கு ஒரே சிரிப்பாயிருந்தது.
‘குவிக்ஃபிக்ஸி’ல் தலையைக் கழுத்தோடு விரைந்தொட்ட முயன்றார் தந்தை. முடியவில்லை.
சற்றே தொங்கிய பொம்மைத்தலையை யொருவர்
அவசர அவசரமாக அலைபேசியில் படம்பிடித்துக்கொண்டார்.
’உச்சகட்ட வன்முறைக்காட்சிகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படும்போது பயன்படுத்திக்கொள்ள முடியும்…’
தலையற்ற வள்ளியின் உடலை மார்போடு அணைத்துக் கண்ணீர் பெருக்கிக்கொண்டிருந்தாள் சிறுமி.
‘பாவம், வள்ளிக்குப் பசிக்குமே’ என்ற பரிதவிப்பில்
அள்ளிய உணவுக்கவளத்தை அவளால் உண்ணமுடியவில்லை.
அவளுக்கு இன்றே புரியவைத்துவிடுவது நல்லது;
பொம்மைகள் மனிதர்களுக்கென்றே தயாரிக்கப்படுபவை.
அவற்றிற்கு உயிர் கிடையாது….
”யார் சொன்னது? வள்ளி எத்தனை நல்லவள் தெரியுமா?
வெள்ளிக்கிழமைக்கு அடுத்துவரும் விடுமுறைகளில்
எனக்குச் சொல்வதற்காகவே எங்கிருந்தெல்லாமோ
அதிசயக்கதைகளை அள்ளியெடுத்து வருவாள்….
அழுதுகொண்டே கூறினாள் சிறுமி.
“கண்ணைத் துடைத்துக்கொள்-
யாரேனும் பார்த்தால் கிறுக்கி என்பார்கள்_”
பொறுக்கமுடியாமல் முதுகில் ஒன்று வைத்தாள் தாய்.
“ஐயோ….” என்று வீறிட்டாள் சிறுமி.
’கையால் அடித்ததற்கே இத்தனை வலிக்கிறதே…
கழுத்து வெட்டுப்பட்ட நேரம் எத்தனை துடித்திருப்பாள் வள்ளி …’
பள்ளிக்குக் கிளம்பும்போதெல்லாம் கையாட்டி விடைதருவாள்.
வள்ளல் அவள் – தனக்குத் தரப்படும் இனிப்புகளையெல்லாம்
எனக்கே தந்துவிடுவாள் பெருவிருப்போடு.
இனி என்னோடு தட்டாமாலை சுற்ற யார் இருக்கிறார்கள்….’
மனம் பதறிய சிறுமியின் விழிகளிலிருந்து பெருகிய கண்ணீர்
சிற்றோடையாய், நதியாய் கடலாய் பெருகிக்கொண்டேயிருந்தது.
ஆழிசூழ் உலகில் அன்றும் இன்றும் என்றும்….
அனைத்தும் தனக்கே படைக்கப்பட்டதாய் பாவிக்கும் அனேகரும்
அந்தச் சிறுமியும் வள்ளியும் அன்னபிறரும்
”அது வெறும் பொம்மை”
”இல்லை அது வள்ளி. என் அன்புத்தோழி. அதுவே உண்மை”.
ஏங்கியழுதுகொண்டிருந்த சிறுமியைப் பார்த்து
ஏதாவதொரு காட்டி லொரு மானோ முயலோ
எண்ணிக்கொண்டிருக்கக் கூடும் _
மனிதர்கள் குழந்தைகளாகவேயிருந்துவிட்டால் எத்தனை நன்றாயிருக்கும்..



 [* ஆகஸ்ட் 2014 திண்ணை இணைய இதழில் வெளியானது] 


0

என்ன தவம் செய்தேன்....! _ கவிதை

கவிதை

                                           என்ன தவம் செய்தேன்!

ரிஷி’


கிண்ணங்கள், கரண்டிகள், தட்டுகள், எண்ணெய்புட்டிகள்…..
இன்னும் பல துலக்கியவாறே
அண்ணாந்தேன் தற்செயலாய்.
அற்புதத்திலும் அற்புதமாய்
ஊருக்கே ஒளியூட்டிக்கொண்டிருக்கும் நிலவு -
சின்னஞ்சிறு செவ்வகத்திறப்புக்கு வெளியேயிருந்து
என்னைப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருந்தது!
எத்தனையோ காலமாய்
நான் ஏறெடுத்துப் பார்க்கவும் மறந்துபோயிருந்தது
புன்னகையில் கன்னங்குழிய
மின்னும் கண்களில் கனிந்துவழியும் அன்போடு
என்னையே பார்த்துக்கொண்டிருக்கும் இந்நேரம்
இன்னும் எத்தனையெத்தனை பேருக்குத்
தண்ணொளியால்
அருள்பாலித்துக்கொண்டிருக்கிறதோ…!
வெண்ணிலவே வெண்ணிலவே
உன் மௌனப் பண் கேட்டு என்னிரு விழிகளில்
தளும்பும் கண்ணீர்
சொல்லிலடங்கா சுகம், சோகம்
எல்லாவற்றிற்கும்.







0

Thursday, August 7, 2014

எடையின் எடை! ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

எடையின் எடை!
‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

யார் எத்தனை கேலி செய்தாலென்ன…? 
ஜோல்னாப் பையின் அழகே தனி தான்!
என்னவொரு உறுதிஎன்னவொரு நளினம்!
எத்தனை புத்தகங்களை வேண்டுமானாலும் அதில்
அடுக்கிவிட முடியும்;  அடைத்துவிட முடியும்.
தோளில் மாட்டித் தூக்கிசென்றால் பாரந் தாங்கலாகாமல்
கையுங் கழுத்தும் இற்றுவிழக் கூடுமே தவிர
‘பை’யின் பிடி யறுந்துபோகாது.
‘ஆள் பாதி; ஜோல்னாப் பை மீதி’ என்பதும்
அர்த்தமுள்ள பொன்மொழிதான்!


2















                                ஆனால் ஒன்று _ சமீபகாலமாக ஜோல்னாப் பைக்குள்
புத்தகங்கள் குறைந்து தராசுத்தட்டுகள் நிறையவாகிவருகின்றன.
விதவிதமான அளவுகளில் துலாக்கோல்கள் இருக்கமுடியும்.
ஆனால், எடைக்கற்கள் கூடவா?
அதாவது, ஒரே எடையளவை ஒவ்வொருவருக்கும், இல்லை, வேண்டும்போதெல்லாம், வெவ்வேறு எடையாக்கிக் காட்டுபவை!


                   3
















தராசுத்தட்டின் அடியில் புளியை அழுத்தி ஒட்டவைத்தல் _
தாங்கிப்பிடிக்கும்போது சற்றே ஒரு புறமாய் சரியச் செய்தல்
இன்னபிற உத்திகள் பத்தாம்பசலித்தனமானவை.
இப்பொதெல்லாம் கைகளே துலாக்கோல்களாக
ஒரு கை காட்டும் எடை மறு கை மாற்ற
முடையில்லா கடைவீதிகள்
நீண்டகன்று நாற்புறமும் விரிந்தேகத் தடையில்லை

4



ஆயிரமாயிரம் கோப்புகள் ஒரு கணிணிக்குள் அடங்கும் காலமிது.
அந்தக்கால எடைக்கற்கள் யாருக்கு வேண்டும்?
இன்று வரிகளிலும், வார்த்தைகளிலும், வாக்கியங்களிலும் _
அட, ஒற்றைச் சொல்லிலும் கூட உண்டு _
துலாக்கோல்களும் எடைக்கற்களும்.
அதேசமயம், வண்டிவண்டியாய்ப் பக்கங்களும் இதற்கு விதிவிலக்கல்ல!

5


‘நலம், நலம் அறிய ஆவல்’ போய்
‘நாசமாய்ப் போவாய்’ என்றே மலரும் திருவாயின்
சொத்தைப் பற்களும் கூடத் தம்மை
தராசெனக் கற்பிதம் செய்துகொள்ளும்.
இதழ்க்கடையோர இளக்கார முறுவலில் வெளிப்படும்
துருப்பிடித்த தராசுத்தட்டுகள்.


6




ஆளுக்கொரு துலாக்கோலைக் கக்கத்திலிடுக்கிக்கொண்டுபோகும் சிலர்_
கையில் பிடித்தாட்டிக்கொண்டேகும் சிலர்_
ஆளுக்குத் தக்கபடி எடையைக் கூட்டிக்குறைக்கும் சிலர்_
‘கடவுள் நான்; அவர் செய்வதும் இதுதான்’ என்று வக்கணை பேசி


தம் துக்கிரித்தனத்திற்கு நியாயம் சேர்க்கும் சிலர்_
கத்தியைத் துலாக்கோலாக்கும் சிலர்_
கத்திக் கத்தித் தம் குரலையே தராசாக்கிக்கொள்ளும் சிலர்_
கழிவிரக்கத்தால் தம் எடை கூட்டிக்கொள்ளும் சிலர்_
கல்பகால சோகங்களுக்கு ஏகபோக உரிமைபாராட்டி
தம் துலாக்கோலை கவனமாய் ஒரு பக்கமாய் சாய்த்தபடியே சிலர்….
சுருங்கச் சொன்னால், இந்நாள்
இல்லாத கையிலு மிருக்கும் தராசுகள் சில பல!



7




அதோ, தனித்தன்மை வாய்ந்ததாய் தன்னைத் தானே அன்றாடம்
துண்டுபோட்டுத் தாண்டாத குறையாய் கொண்டாடிக்கொள்ளுகின்ற
கடல் தாண்டிப் போயிருக்கும் தராசின் தட்டொன்றில்
மனிதர்கள் தூசின் மொந்தைகளாக்கப்பட்டு
மற்றதில் அத்தனை எடைக்கற்களும் அதிகாரத்தின் குறியீடாய்
பிடித்துக்கொண்டிருக்கிற தொரு மண்ணாந்தைக் கை.


8



எத்தனையெத்தனை வடிவங்களில் எடைக்கற்கள்!
மண்டையோடுகள்; ரத்தம் சொட்டும் மனிதத் தலைகள்;
ஆள்காட்டி விரலும், கட்டைவிரலும் சேரும் நுனியில்
‘இங்க்’, ‘பால் பாயிண்ட்’, ‘ஜெல்’ பேனாக்கள்.
பல்லெல்லாம் வெளியே தெரியும் வாய்கள்.
கனியிருப்பக் கவர்ந்த காய்கள்.
முனிப்பேய்கள்; பனிப்போர்கள்
நார்நாராய்க் கிழிக்கக் காத்திருக்கும் கூர்நகங்கள்
காரிருளார்ந்த அகங்கள், கனம் பிடித்த சிரசுகள்,
பிறவேறும் இதுபோலும்….


9



எத்தனையெத்தனை வண்ணங்களில் துலாக்கோல்கள்1
நிறம் மங்கியவை; நிறம் மாறாதவை.
நிறமற்ற நீரனைய தூய்மையாகவும் தூசிகளோடும்,
கொள்கலத்திற்கேற்ப எடைகாட்டக் கூடியவை.
ஏட்டில் மட்டுமே இடம்பெற்றிருப்பவை.
எந்நேரமும் ஊசலாடிக்கொண்டிருப்பவை.
கச்சிதமாய் எடையைக் கூட்டிக்குறைத்து
வருமானம் பெருக்கி வெற்றிவாகைப்
பிச்சிப்பூ அணிந்திருப்பவை.
பச்சோந்தி நிறத்தில் இறுமாந்திருப்பவை….


10



எத்தனை சிரமங்களுக்கிடையில் தராசுகள் தயாராகின்றன தெரியுமா!
நைச்சியமா யொரு ராஜாளிப்பறவையைக் காக்காய் பிடித்து
வளிமண்டலத்தில் நிரம்பியிருக்கும் கரியமிலவாயுவை
கடத்திக்கொண்டுவந்து சிலர் உருவாக்க,
வேறு சிலர் நீமூழ்கிக்கப்பலுக்குள் பதுங்கிக்கொண்டு
கடலடிக்கு ‘விர்ரெ’ன்று சென்று
திமிங்கலம் சுறாமீன்களூடாய் சீறிப்பாய்ந்து
பவழப்பாறைகளுக்கப்பாலோ எங்கோவான
எழவெடுத்த பள்ளத்திலிருந்து
அள்ளிக் கொண்டு வருகிறார்கள்.


11



மூச்சை யடக்கித் தன் உளச்சான்றைக் கொன்று முடித்து
ஒரே வீச்சில் தராசை வென்றெடுப்பது எத்தனை கடினம் தெரியுமா?
கண்டு விண்டிட வியலா வேதனையில்
காற்றிலொரு துலாக்கோலைக் கட்டமைத்து
குமிழ் எடைக்கற்களால்
நம் வாழ்வின் சாரங்களையும் பாரங்களையும் நாளும்
அளக்கும் ஆதிபகவன் கைத் துலாக்கோல் கலகலத்து
இற்றுவீழ்ந்துவிடுவது முண்டு!


12


துலாக்கோலும் தராசும் ஒன்றுதானா…? முதலில் அது தெரியுமா…?
என்று பேச்சை மாற்றுகிறாய்.
இது மொழிப்பிரச்னை யல்ல; வழிப்பிரச்னை. புரிந்துகொள்ளேன்.
ஒருவகையில் சந்து வீதி சாலை எல்லாம் ஒன்று தான்; எனில், தனித்தனியும் கூட.
ஆனால் நீயோ துலாக்கோல்களோடே போய்க்கொண்டிருக்கிறாய்
வழியெங்கும் எடைக்கற்களைக் குறிபார்த்து வீசியெறிந்தபடி.
சேருமிடம் வந்துவிட்டால் எதுவும் சரிதான் என்பாய்.
செல்வழியெங்குமுள சுவடுகளைக் காலக்கண்கள் அளவெடுத்தபடியே…..





 [*பதிவுகள் ஆக்ஸ்ட் முதல் வார இதழில் வெளியாகியுள்ளது]


0

Tuesday, July 29, 2014

அபத்த நாடகம்

ரிஷி


3 + 3 = 6,
4 + 2 = 6,
1+ 5 = 6,
3 x 2 = 6,
6 x 1 = 6,
2 x 3 = 6,
8 _ 2 = 6,
7 _ 1 = 6,
5 + 1 = 6,
4 + 2 =  ஆறொன்றே யெல்லா மென் றாறு மனமே
ஆறென விடையொன்றை உடும்புப்பிடியாய் பிடித்தவாறு
நடைபழகிக்கொண்டிருக்கிறாள் இடும்பியவள்;
சொல் தருமாம் போதைகள் என சொல்லித் திரிகிறாள்.

தன்னைத்தானே கணிதமேதையாய்
முன்னிறுத்திக்கொள்ளு மப் பேதை
யின் மொழி பெரும் வாதையாய்.

”நச்சுவிதைகள் நமக்கு முன்னிருந்தோரெல்லாம்
எட்டி யுதையுங்கள் அவரை, அவர்தம் கல்லறைகளை
காலில் ரத்தம் கொட்டினாலும் பரவாயில்லை
எப்படியும் உங்கள் கால்கள் தானே
யானபடியால் வளர்ப்பீர் வெறுப்பை” என
அன்றாடம் ஆகாயத்தில் பறந்தபடி
போதித்துக்கொண்டிருக்கிறாள்..

’‘என்றும் எழுத்துச் சிற்பி நானே’
என கழுத்துவரை கர்வம் தளும்ப
கிளுகிளுத்துப் பிதற்றி

வெத்துவார்த்தைகளைத் தத்துவம் என்ற பெயரில்
கைபோன போக்கில் விசிறியெறிந்தபடி
கிள்ளிப்போட்ட கீரையால் வீராங்கனையானவள் தானே
வாராது போல வந்த மாமணி யானே னென் றறை
கூவுகிறாள், பறைசாற்றுகிறாள்.

அதற்கும் ஆமாம் போடத் தயாராய்
ப்ரோக்ராம்ட்பேர்வழிகள்.

நாலு வார்த்தைகள் ஒலிபெருக்கிகளுக்குள் வீறிட்டலறியதால்
தன்னை யரும் போராளியென அடையாளங்காட்ட
அவள் படும் பாடு அப்பப்போ…..அய்யய்யோ

குய்யோ முறையோ வெனக் கூவிக்கூவியே
மெய்யைப் பொய்யாக்கி பொய்யை மெய்யாக்கி
கன ஜோராய்க் கடைவிரித்தாயிற்று….
கறாராய் கலப்படம் செய்தால்
பின்,  கொள்ளை லாபம் தான்!






[*திண்ணை இணைய இதழ் ஜூலை2014இல் வெளியானது]





0
அவலக்காட்சிகள்

ரிஷி



காளியினுடையதாய்க் கனலும் கண்களைச் சுழற்றி உறுத்துப் பார்க்கிறாள் _
ஒரு கணமேனும் உலகம் உறைந்துபோகும் என்ற எதிர்பார்ப்போடு..
எதுவும் நடக்கவில்லை.

தாள மாட்டாமல், நீலிக்கண்ணீர் வடிக்கிறாள்; நியாயங் கேட்கிறாள்.
நேசம் பேசுவதாய் நிறையப் பொய்யுரைக்கிறாள்.
அவற்றை நிஜமென்று ஒப்ப மாட்டாதவர்களை
நீசர்களென்று காறியுமிழ்கிறாள்; கடித்துத் துப்புகிறாள்.
கொடுங்குற்றவாளிகளாக்கி
சொற்களால் அகழப்பட்ட பாதாளச்சிறைக்குள்
கழுத்தைப் பிடித்துத் தள்ளி குப்புற விழச் செய்கிறாள்.
இன்னொருவர் அழிவில் தான் தன் உயர்வு
என்ற அயரா நம்பிக்கையோடு
அன்பின் பெயரால் உன்னை யென்னை
யவனை யவளை யவரை யெல்லா நேரமும்
அடைத்துவைக்கிறாள்; அடித்து நொறுக்குகிறாள்
அடியாட்களின் துணையோடு.

கழுமரத்தடியே கதியென்று கிடக்கும் அவளைப் பார்த்தால்
கண்றாவியாக இருக்கிறது.
என்னவொரு வீண்விரய உழைப்பு இது!

’ஐயோ பாவம், பிழைப்புக்காக
என்னவெல்லாம் பாத்திரம் ஏற்றாகவேண்டியிருக்கிறது!’

அதோ அவளுடைய குரலின், கைவிரல்களின் இடிமின்னலில்
அரங்கமே அதிர்ந்துபோக
அடர்ந்திருண்டு பொழியும் நஞ்சில்
அவளே வழுக்கிவிழுந்துகொண்டிருக்கிறாள்.

’உடைந்திருக்குமோ என்ற பயமில்லை முதுகெலும்பு
இருந்தால் தானே’ என தமக்குள் சிரித்துக்கொள்கின்றனர்
பார்வையாளர்கள்.

நல்லவேளையாக அவ்வப்பொழுது திரை கீழிறங்கிக்கொண்டிருக்கிறது.



[* திண்ணை இணைய இதழில் ஜூலை 2014இல் வெளியானது]
0

Wednesday, June 25, 2014

கவிதை
விளைவு
ரிஷி

வலியறியா மனிதர்களின் விகார மனங்கள்
விதவிதமாய் வதைகளை உருவாக்கும்;
வண்ணமயமாய் வக்கிரங்களைக் காட்சிப்படுத்தும்.
சின்னத்திரையிலிருந்து வழிந்தோடும் உதிரம்
வீடுகளில் வெட்டப்படும் தலைகளில் இரண்டறக் கலக்கின்றது.
மெகா தொடர்களில் தொலைந்துபோய்க்கொண்டேயிருக்கும் குழந்தைகள்
கடற்கரை மணற்துகள்களை எண்ணிவிடக்கூடியதாக்கிவிடுகிறார்கள்.
அலைவரிசைகளெங்கும் யாராவது யாரையாவது அறைந்துகொண்டேயிருக்கிறார்கள் _ அன்பின் பெயரால்.
ஒரு கதாநாயகன் ஒன்பது கயவர்களை இருநூறாண்டுகளாக
ஓயாமல் உருட்டிப் புரட்டிக்கொண்டேயிருக்கிறான்.
தெருவோர டாஸ்மாக் கடையில், நெருங்கிய நண்பர்களில்
ஏழுபேர் கரங்கோர்த்து
மிதித்துக்கொல்கிறார்கள் எட்டாமவனை.
ஒளியூடகங்களில் ஆடல் என்ற பெயரில் பூமி அதிர அதிர
அங்கங்களைக் குலுக்கிப் பதறவைக்கிறார்கள்….. இதில்
எங்குபோய் முறையிடுவது தங்கமே தங்கம்?
தங்கையைக் கொன்றுவிடும் அளவுக்குப் பொங்கும்
அண்ணன் மனதில் வேரோடியிருக்கும் வன்முறை
தீரா மானுடக் கறையாகக்
கண்டுணர்வதும் எப்போது?
போரே பேராண்மையாய்ப் பாராண்ட மன்னர்கள்
இனியும் நமக்கு வழிகாட்டக் கூடாது.
ஈரம் விளைந்த மண் இது; வீரம் விளையாட்டாகாது.
கலை கலாசாரத்தின் பெயரால் காலந்தோறும் செய்யப்பட்டுவரும்
மூளைச்சலவையை மீறி
நாளையேனும்
மனம் வெளுக்கச் செய்வாயே எங்கள் முத்துமாரீ….



Saturday, May 24, 2014


துளிவெள்ளக்குமிழ்கள்

’ரிஷி’



(1)
பட்டுப்போய்விட்டது என்று திட்டவட்டமாகத் தெரியும் நிலையில்
இட்ட தெய்வம் நேரில் வந்ததேபோல்
மொட்டவிழ்ந்து விரிந்திருந்தன மலர்கள் சில.
கண்வழி நுகரக்கிடைத்த நறுமணத்தின் கிறக்கத்தில்
கணத்தில் இடம் மாறி
வேண்டும் வரம் கேள்என்று இறைவனிடம் சொல்ல எண்ணி
அண்ணாந்தேன் நான்
ஆகாயமெங்கும் சிறகடித்துக்கொண்டிருந்தேன்!

(2)
முதன்முறையாய் பார்த்துக்கொள்கிறோம்
என்னிடம் பாய்ந்தோடி வந்தது குழந்தை.
விட்டகுறை தொட்ட குறையாய் இது என்ன ஒட்டுதல்?
அள்ளியெடுத்துப் பின் யாரோவாகிவிட்டால்
எத்தனை பெரிய நம்பிக்கை துரோகம்…
எப்படி எதிர்கொள்வது இந்த அன்பு பாராட்டலை?
அருகில் ஒரு கணம் நின்று ஏறிட்டுப் பார்த்தது குழந்தை.
என்ன எண்ணிக்கொண்டதோ?
அதன் பார்வையில் நான் வண்ணத்துபூச்சியோ காண்டாமிருகமோ….
இரண்டுமே உருமாறிக்கொண்டுவிடுமோ?
‘எண்ணம்போல் வாழ்வு’ என்று சொல்வதுபோல்
என்னைப் பார்த்துப் புன்சிரித்த பிள்ளை
கடந்தேகிவிட்டது காலத்தை எட்டிப்பிடிக்க!

(3)
”ஒருவழியாக தேர்தல் திருவிழா முடிந்துவிட்டது” என்று அலுப்போடு கருத்துரைத்தார் ஒருவர்;
“ஒலிபெருக்கிச் சப்தத்தில் காது செவிடாகிவிட்டதென சீறிச் சினந்தார் ஒருவர்.
யாராண்டால் என்ன? காசுக்குக் குடிநீரும் கழிப்பறையும் தொடரும் கதைதான்
என்றார் ஒருவர்.
தூசியாய் துரும்பாய் வீசியெறியப்பட்ட எச்சிலையாய் இதுகாறும் அடையாளமற்றிருந்தவன்
வாக்காளப் பெருமகனாகி
அகண்ட வீடாய் நாடு கிடைத்த தாக்கத்தில் தொண்டையடைக்க
அடுத்திருந்த துணிக்கடையின் தொலைக்காட்சிபெட்டியில்
அண்டை மாநிலச் செய்திகளில் கண்ட மக்கள்திரளில்
தன்னை உன்னிப்பாகப் பார்க்கத் தொடங்கினான்!

(4)
கனவுகண்டுகொண்டிருந்தபோதெல்லாம்
‘கனவு மெய்ப்படவேண்டும்’ என்று
ஒருசமயம் வேண்டிக்கொண்டும்
ஒருசமயம் வேண்டமறந்தும்
ஒரு சமயம் வேண்டலாகாதவாறும்
கழிந்தது புலர்பொழுது.       
கண்ட கனவுகள் ஆயிரமிருக்குமா?
ஆகாய விண்மீன்கள் எண்ணிலடங்காதன.
கனவும் நட்சத்திரம் எனில்
நினைவில் நிற்பது எண்ணிக்கையா, மினுமினுப்பா…?
காட்சியா? குறியீடா? ஒளியா? இருளா…..?
நிரந்தரமும் நிலையாமையும் நீண்டகால நண்பர்களாய்
வாழ்வுப்பாலத்தின் மீது கைகோர்த்து நடந்தவாறு.
அடியில் கரைபுரண்டோடிக்கொண்டிருக்கிறது காலவெள்ளம்.

(5)

’அன்னையர் தினம்’ அங்கங்கே கொண்டாடப்பட்டுக்கொண்டிருக்கிறது
அலங்கார விளக்குகள் தொங்கும் அதி யகன்ற அரங்குகளில்.
அதனால் என்ன?
அம்மாவும் சரி அன்பும் சரி
முகடுக்கும் அடிவாரத்திற்கும் இடையேயான அதலபாதாளத்தை வென்றுவிட்டது தெரிந்தது தானே!
கைத்தட்டலுக்காக மட்டுமே எழுதாதவரை எந்தக் கவிதையும் மட்டமல்ல.
_ தனக்குள் சொல்லிக்கொண்டவள்
வெளியே தெரியாத தன் எளிய தாய்க்கு
அவளறியாதவாறு பரிசளிக்க
சிறிய பொட்டலமாய் ஒரு புத்தம்புதுக் கவிதைக்குள்
பத்திரமாகப் பொதிந்துகொள்கிறாள்
தானாகிய கொத்துமலர்களை!





[*திண்ணை மே இணைய இதழில் வெளியானது]
0