LIFE GOES ON.....

LIFE GOES ON.....
Showing posts with label ரிஷியின் கவிதைகள். Show all posts
Showing posts with label ரிஷியின் கவிதைகள். Show all posts

Monday, January 26, 2015

நாடெனும்போது...

கவிதை

நாடெனும்போது.....

                  ரிஷி


1.

நந்தியாவட்டை,  மந்தமாருதம்
வந்தியத்தேவன்,  சொந்தக்காரன்
சந்தியா விந்தியா முந்தியா பிந்தியா

_ எந்த வார்த்தையை வேண்டுமானாலும் உச்சரிக்கலாம்

”இந்தியா என் தாய்த்திருநாடு; வந்தனத்திற்குரியது”
என்று
நாக்குமேல் பல்லுபோட்டுச் சொல்லிவிட்டாலோ
வில்லங்கம்தான்.

தடையற்ற தாக்குதலுக்காளாக நேரிடும்.
எச்சரிக்கையா யிருக்க வேண்டும்.

2.

”எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
யிருந்ததும் இந்நாடே, அவர் முந்தையர் ஆயிரம் _”

“_ மேலே பாடாதே. என்னவொரு தன்னலம்
உன் பெற்றோர் மட்டும் நலமாயிருந்தால்
எல்லாம் வளமாகிவிடும். அப்படித்தானே?”

_தவறாமல் வந்துவிழும் தப்படி யிப்படி.

3.

இந்தியா சகதி என்றார்.
வெறெங்கு சென்றாலும் நாம் இரண்டாந்தரக் குடிகள்  அல்லது
அகதிகள் தானே என்றேன்.
என்ன தகுதி உனக்கு மனிதநேயம் பேச என
மிகுதியாய் வசைபாடிச் சென்றுவிட்டார் வந்தவர்.

4.

”நம்பத்தகுதியற்றதாய் தன்னை மீண்டுமொருமுறை நிரூபித்துக்கொண்டுவிட்டது இந்தியா”
என்று வெம்பி வெடித்ததொரு மின்னஞ்சல்.

முப்பதாவது முறையா?
முந்நூற்றியைம்பதாவதா?

”தப்பாது எப்போதும் ஏமாற்றியே வரும் நாட்டை
இப்போதும் எதிர்ப்பார்ப்பதும் ஏன்?” எனக் கேட்டாலோ
மாட்டிக்கொள்வீர்கள் முடியா வசைப்பாட்டில்.

5.

”ஆயிரம் காதங்களுக்கப்பால் இறந்தவர்களுக்காக அழுகிறாயே நியாயமா?”
என்று வாரந்தோறும்
ஒளியூடகத்தில் முழங்கிக்கொண்டிருக்கிறார் ஒருவர்
அபிமானமும் வருமானமும் கொண்டு.
எல்லைப்புறத்தில்
மூன்றாம்பேருக்குத் தெரியாமல்
மடிந்துகொண்டிருப்போரில்
தென்கோடி குக்கிராம தனபாலும் உண்டு.

6.

போராளிகள் புரட்சியாளர்களின் நாட்டுப்பற்று போற்றத்தக்கது.
நீயும் நானும் கொண்டிருந்தால் அது நகைப்பிற்குரியது.

”_ எனவே, தேர்தலைப் புறக்கணியுங்கள்”
என்று திரும்பத் திரும்ப அறிவுறுத்திவருகின்றன
சில குறுஞ்செய்திகள்.
மாற்றென்ன என்று கேட்டால்
தூற்றலுக்காளாக வேண்டும்.

”மீள்நிர்மாணம் குறித்து மலைப்பெதற்கு
முதலில் கலைத்துப்போட்டுவிட வேண்டும்”.

7.

’இந்தியா என்றால் எந்தை உந்தையல்ல;
விந்தியமலையுமல்ல _
மத்தியில் குந்தியிருக்கும் அரசு’ என்பார்
வந்துபோகும் நாளிலெல்லாம் உதிர்த்துக்கொண்டிருக்கும்
வெறுப்பு மந்திரத்தில்
அந்தப் பிரிகோடு அழியும் நிலையை
என்னென்பாரோ…..?



 0

Sunday, November 2, 2014

நாம் - 'ரிஷி'யின் கவிதை

நாம்

 உன்னொத்தவர்களுக்கு
எத்தாலும்
அட்சயபாத்திரமாய் இந்த வார்த்தை:

”நாம்”

சமத்துவம், சகமனித நேயம் அன்னபிற
அனேகப் போர்வைகளின் அடியில்
இந்த ஒற்றைச் சொல்லை யுனக் கொரு
கூர் ஆயுதமாக
ஆர்வமாய் செதுக்கியபடியே நீ….

‘அவர்கள்’ என்று நீ யாரை உன்
சுய ஆதாயத்திற்காகச் சுட்டிக்காட்டுகிறாயோ
இந்த ‘நாம்’ அந்த ‘அவர்களை’
எந்தக் காரணமுமின்றி எதிரிகளாக பாவிக்கப்
பழக்கப்படுத்தப்படுவதே உன் இலக்காய்…..

‘’நான்’ இணைந்த ’நாமா’கப் பேசியவாறே
உன் ‘நானை’ அந்த ‘நாமி’லிருந்து
கறாராய்ப் பிரித்தெடுத்து
உயரமாய், பீடத்தில் ஏற்றிவைத்துவிடப்
படாதபாடுபட்டவண்ணம் நீ…

உன் தொண்டைக்குழியிலிருந்து
வெளிவரும்போதெல்லாம்
நேயம் மிக்க அந்த வார்த்தை
வன்மம் நிறைந்ததாகி
வெறுப்பையுமிழத் தொடங்கிவிடுகிறது.

அவர்களை மல்லாக்காய்ப் படுக்கவைத்து
மிதித்து மேலேறி நசுக்கி நடைபயின்றவாறே
உலகச் சந்தையை அடைந்து
அவசர அவசரமாய்க் கடைவிரிக்கிறாய்:

”நாம்…! நாம்….! நாம்…. ! நாம்….!

”ஆறுரூபாயிலிருந்து ஆறுகோடி
டாலர் வரை
விதவிதமான  'நாம்'கள் இதோ !
விரைவில் தீர்ந்துபோகும்
வேகவேகமாய் வந்து வாங்குவீர்!”


நிச்சயம் வெற்றிகரமானது தான் உன் உத்தி
கத்தைகத்தையாய் பணத்தைத் தந்து
பயங்கரவாதிகளைத் தயாரித்துவரும் காலத்தில்
‘நாம்’ என்ற ஒரே சொல்லில்
பொய், பகை எனப் பலவாய்
எத்தனை பயங்கரங்களை வெகு சுலபமாகத்
தயாரித்து, பரவலாக்கிவிட முடிகிறது உன்னால்!

நாளும்
’நீ’ யாகிய ‘நாமை’ ‘நீங்களு’ம் ‘நாங்களு’மாய்
தீயாகக் கொழுந்துவிட்டெரியச் செய்து
அதில்
குளிர்காய்ந்துகொண்டிருக்கிறாய்

விடிய விடிய எரிந்து சாம்பலாகும்
மனிதநேயத்தின் எலும்புக்குவியல்மேல்
எப்பொழுதும் போல் ‘நீரோ ஃபிடில்’
வாசித்துக்கொண்டிருக்கும் நீ .

உன் ‘நாமு’க்குள் தாமும் உண்டு என்று
நம்பியவாறு
ஆமை பாவம் தன் உறுதியான மேலோட்டை
அன்பின் மிகுதியால்
உனக்குப் பரிசாகத் தந்து
ஆட்டோகிராஃப் கேட்கிறது.
இனி அடிபடப்போகும் அதன் சின்னத் தலையின் வலி
கவிதைக்குறியீடாய் கிளம்பும் உன்னிடமிருந்து.






0

Sunday, September 28, 2014

வாக்குமூலம் - கவிதை

கவிதை


வாக்குமூலம்

ரிஷி


ஊ….......லல்லல்லா…………ஊ…......லல்லல்லா…….......
ஊகூம், ஏலேலோ உய்யலாலா….

உளறிக்கொட்டிக்கொண்டிருப்பேன்;
உதார்விட்டுக்கொண்டிருப்பேன்
ஒருபோதும்
உனக்கொரு சரியான பதில் தர மாட்டேன்….

ஊ….......லல்லல்லா…………ஊ…......லல்லல்லா…….....
ஊகூம், ஏலேலோ  உய்யலாலா…..

வச்சிக்கவா? வச்சிக்கவா? வச்சிக்கவா வச்சிக்கவா….?
எச்சில் வழியக் கேட்பவன் இறுதியில்
‘‘உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ளே’  என்று சொல்லித்
தப்பித்துவிடும் உலகில்
பதிலளிக்காமல் போக்குக் காட்டுவதெல்லாம் மிக எளிது

ஊ….........லல்லல்லா……….ஊ…....லல்லல்லா…...........
ஊகூம், ஏலேலோ உய்யலாலா…

இணையற்ற என்னைப் பார்த்தா வினவத் துணிகிறாய்?
இல்லாத நூலிலுள்ள எழுதாத பக்கங்கள் எனக்கு  மனப்பாடம் தெரியுமா?
பார்த்தாயல்லவா – மார்க்வெஸ்ஸின் ஒரு வரியில்
(மாங்காய் மடையர்களிடம்) என்னை மேல்தாவியாக்கிக் காட்டும்
மேலான வித்தை  தெரிந்துவைத்திருக்கிறேன்.

ஊ…......லல்லல்லா………......ஊ…...லல்லல்லா…....... 
ஊகூம், ஏலேலோ உய்யலாலா

தர்க்கநியாயங்களை கணமேனும் எண்ணிப்பார்ப்பேன் என்றா நினைக்கிறாய்?
அநியாயம், அக்கிரமம் என்றே அலறுவேன் அரற்றுவேனே தவிர
தப்பித் தவறியும் தெளிவா யொரு பதிலைத் தரமாட்டேன்.
பின்வாங்கலை கடந்துபோவதாய் பொருள்பெயர்த்துவிட்டால் போயிற்று.

ஊ…........லல்லல்லா………..ஊ….லல்லல்லா…...............
ஊகூம்,ஏலேலோ உய்யலாலா

துணிவிருந்தால், தில்லாலங்கடியோ, கேட்டுப் பார் கேள்வியை
திரட்டிவைத்திருக்கும் கருத்துமொந்தைகளை
விறுவிறுவென விட்டெறிவேனே தவிர
மறந்தும் பதிலளிக்க மாட்டேன்.

ஊ….....லல்லல்லா………...ஊ…......லல்லல்லா….............
ஊகூம்,ஏலேலோ உய்யலாலா

மீண்டும் அறிவுறுத்துகிறேன், புண்ணாக்கு விடைவேண்டி
 வலியுறுத்தினாலோ
மளமளவென்று கிளம்பும் என் அய்யய்யோ வென்ற அலறல்கள்;
அதி வன்மம் நிறை உளறல்கள்.

ஊ….......லல்லல்லா………..ஊ….......லல்லல்லா…...........
ஊகூம்,ஏலேலோ உய்யலாலா

காலோ, அரையோ முக்காலோ, தெக்காலோ வடக்காலோ
எங்கெங்கு காணினும் தமிழ்க்கவிதைக் காவல்தெய்வம் நானாகி
ஊனாகி உயிராகி பேனாகி அரிக்கும் பணியில்
இருபத்திநான்குமணிநேரமும் என்னை இயக்கிக்கொண்டிருப்பது
வன்மம் என்பார் உன்மத்தர்கள் ஆம்

ஊ…........லல்லல்லா………  ஊ…......லல்லல்லா…...........
ஊகூம், ஏலேலோ உய்யலாலா…..

அடுத்தொரு கேள்வி கேட்டால் பின்னும் எட்டியுதைப்பேன் வெட்டிப் புதைப்பேன்….
இன்னும் பல செய்தவாறு செய்வதெல்லாம் நீயே என்பேன்
தின்பேன் என்னென்னவோ இவ் வின்னுலகம் உய்யவே.
என்னையா கேள்வி கேட்கிறாய் அப்போதைக்கப்போது?
இந்தா உனக்கொரு பெப்பே;. இப்போதைக்கு இது.

ஊ…........லல்லல்லா……….....ஊ…......லல்லல்லா…..........
ஊகூம்,ஏலேலோ உய்யலாலா ….




0

 (* திண்ணை இணைய தள 21,செப்டம்பர் 2014 இதஈல் வெளியாகியுள்ளது)

Tuesday, September 16, 2014

இப்போது...... கவிதை

கவிதை

இப்போது

‘ரிஷி’
  

1
எழுதியெழுதிக் கிழிக்கும் என்னைப் பார்த்துப்
பழிப்பதுபோல் வாலசைக்கிறது நாய்க்குட்டி
என்னமாய் எழுதுகிறது தன் சின்ன வாலில்!

எதிர்வீட்டிலிருந்தொரு குழந்தை
அத்தனை அன்பாய் சிரிக்கிறது.
பதறி அப்பால் திரும்பிக்கொள்கிறேன்.
உலக உருண்டை கண்டுவிடுமோ அதன் வாய்க்குள்!

2.
தொலைக்காட்சிப்பெட்டிக்குள்
அனல்பறக்கும் விவாதம்.
ஒரு குரலின் தோளில்
தொத்தியேறுகிறது இன்னொரு குரல்.
தன் சக்தியையெல்லாம் திரட்டிக்கொண்டு
உதறிவிடப்பார்த்தும்
முடியவில்லை முதற் குரலால்.
அதற்குள் மூன்றாவது
இரண்டாவதன் கால்களைக் கீழிருந்து
இழுக்கத் தொடங்குகிறது.
எங்கிருந்தோ கொசு விளம்பரம் வந்துவிட
மூன்று குரல்களும் விளையாடத் தொடங்குகின்றன _
“ரிங்கா ரிங்கா ரோஸஸ்…”

3.
பட்டியல்கள் தயாரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன
ஆயத்த ஆடைகளாய் ஆயிரக்கணக்கில்.
ஆத்திகரோ நாத்திகரோ, அருள் வந்து ஆடும் பாங்கில்
சில பெயர்களைக் கைகளில் கசக்கித் திருகி
தலையைச் சுற்றித் தூக்கியெறிகிறார்கள்
பேயோட்டுவதாய்
இன்னும் சிலவற்றை எலும்புகள் பொடிப்பொடியாக
உலுக்கியெடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.
பின், நிலவைக் கடத்திக்கொண்டுவந்து
பட்டியலை உலகெங்கும் காணும்படியாய்
விரித்துப் பிடித்தவாறு தன் பயணத்தைத் தொடரும்படி
எழுதுகோலைத் துப்பாக்கியாக்கி அச்சுறுத்துகிறார்கள்
எப்பொழுதும்போல் சரி யென்று உறுதியளித்து
உயரே சென்றுவிட்ட நிலா
அந்தப் பட்டியல் தாளை குறும்பாய் ஒரு பந்தாகச் சுருட்டி
கீழே விட்டெறிகிறது!

4.
திருமணமே கலவியின் மர்மத் திறவுகோல் ஆன அவலம்
’சொல்வதெல்லாம் உண்மையாகி’விட,
அண்மை சேய்மையாகி
இல்லாமலாகும்
இல்லறத்தில்
குழலும் யாழும் துருப்பிடித்தவாறு…..

5.
நான் எழுதும் ஒவ்வொரு வரிக்கும் அப்பால்
அந்தரத்தில் அலைந்துகொண்டிருக்கும்
அப்பாவுடைய,
அம்மாவுடைய,
அறிவுசால் தம்பியுடைய,
அன்புத் தாத்தாவுடைய,.
தேவதைகள் கண்டுமகிழும் என்று
கருக்கலிலேயே கோலம் போட வந்துவிடும்
அந்த உழைப்பாளி மூதாட்டியுடைய,
ஆயிரமாயிரம்
அரூபத் தடங்கள்….

6.
கழுத்தை நெரித்துக் கொன்றுவிடும் கொலைவெறியோடு
திரும்பத் திரும்ப உரத்துக் கூறிக்கொண்டிருக்கிறார்:
“செத்துவிட்ட மொழி”.
சுற்றிலும்
சான்றோர் சிலைகள்
பழுத்துதிரும் இலைகள்
நினைவாலயங்கள்
அமாவாசைத் தர்ப்பணங்கள்
நீத்தார் பிரார்த்தனைக் கூட்டங்கள்
நனவோடை இலக்கியங்கள்
என……

7.
கரைபுரண்டோடிக்கொண்டிருக்கிறது ஜம்மு-கஷ்மீர் வெள்ளம்
தொலைக்காட்சிப்பெட்டிக்குள்ளிருந்து காப்பாற்றச் சொல்லி
இறைஞ்சும் கண்கள்.
உயிர்காப்பான் ‘ரிமோட்’ ஐ அவசர அவசரமாய் அழுத்தி
மூடிக்கொண்டுவிட்ட பூனைக்கண்களின்
கையறுநிலை
குத்தீட்டிகளாய் உள்ளத்தைப் பொத்தலிட்டபடி….

 8.
இவர் ஆனந்தமாய் மேளம் வாசித்ததைக் கண்டு
காணப் பொறாமல்
விலையேற்றம் மின்வெட்டு
என சொல்லத் தொடங்குகிறார் அவர்
அறுபதுவருட கால ‘செலக்டிவ் அம்னீஷியா’வின்
அதலபாதாளத்திலிருந்து.





0

(*செப்டம்பர் 2014 முதல் வார திண்ணை இணைய தள இதழில் வெளியாகியுள்ளது)








Monday, September 1, 2014

சகவுயிர் - கவிதை

கவிதை

சகவுயிர்

ரிஷி


பொம்மையின் தலையை யாரோ திருகியெறிந்துவிட்டார்கள்.
தாங்க முடியாமல் தேம்பிக்கொண்டிருந்தாள் சிறுமி.
வேறொன்று வாங்கிவிடலாம் என்று சொன்ன ஆறுதல்
அவளை அதிகமாய் அழச்செய்தது.
“இல்லை, என் வள்ளி தான் எனக்கு வேண்டும்…
எத்தனை வலித்திருக்கும் அவளுக்கு..”
என்று திரும்பத்திரும்ப அரற்றினாள் சிறுமி.
சுற்றிலுமிருந்தவர்களுக்கு ஒரே சிரிப்பாயிருந்தது.
‘குவிக்ஃபிக்ஸி’ல் தலையைக் கழுத்தோடு விரைந்தொட்ட முயன்றார் தந்தை. முடியவில்லை.
சற்றே தொங்கிய பொம்மைத்தலையை யொருவர்
அவசர அவசரமாக அலைபேசியில் படம்பிடித்துக்கொண்டார்.
’உச்சகட்ட வன்முறைக்காட்சிகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படும்போது பயன்படுத்திக்கொள்ள முடியும்…’
தலையற்ற வள்ளியின் உடலை மார்போடு அணைத்துக் கண்ணீர் பெருக்கிக்கொண்டிருந்தாள் சிறுமி.
‘பாவம், வள்ளிக்குப் பசிக்குமே’ என்ற பரிதவிப்பில்
அள்ளிய உணவுக்கவளத்தை அவளால் உண்ணமுடியவில்லை.
அவளுக்கு இன்றே புரியவைத்துவிடுவது நல்லது;
பொம்மைகள் மனிதர்களுக்கென்றே தயாரிக்கப்படுபவை.
அவற்றிற்கு உயிர் கிடையாது….
”யார் சொன்னது? வள்ளி எத்தனை நல்லவள் தெரியுமா?
வெள்ளிக்கிழமைக்கு அடுத்துவரும் விடுமுறைகளில்
எனக்குச் சொல்வதற்காகவே எங்கிருந்தெல்லாமோ
அதிசயக்கதைகளை அள்ளியெடுத்து வருவாள்….
அழுதுகொண்டே கூறினாள் சிறுமி.
“கண்ணைத் துடைத்துக்கொள்-
யாரேனும் பார்த்தால் கிறுக்கி என்பார்கள்_”
பொறுக்கமுடியாமல் முதுகில் ஒன்று வைத்தாள் தாய்.
“ஐயோ….” என்று வீறிட்டாள் சிறுமி.
’கையால் அடித்ததற்கே இத்தனை வலிக்கிறதே…
கழுத்து வெட்டுப்பட்ட நேரம் எத்தனை துடித்திருப்பாள் வள்ளி …’
பள்ளிக்குக் கிளம்பும்போதெல்லாம் கையாட்டி விடைதருவாள்.
வள்ளல் அவள் – தனக்குத் தரப்படும் இனிப்புகளையெல்லாம்
எனக்கே தந்துவிடுவாள் பெருவிருப்போடு.
இனி என்னோடு தட்டாமாலை சுற்ற யார் இருக்கிறார்கள்….’
மனம் பதறிய சிறுமியின் விழிகளிலிருந்து பெருகிய கண்ணீர்
சிற்றோடையாய், நதியாய் கடலாய் பெருகிக்கொண்டேயிருந்தது.
ஆழிசூழ் உலகில் அன்றும் இன்றும் என்றும்….
அனைத்தும் தனக்கே படைக்கப்பட்டதாய் பாவிக்கும் அனேகரும்
அந்தச் சிறுமியும் வள்ளியும் அன்னபிறரும்
”அது வெறும் பொம்மை”
”இல்லை அது வள்ளி. என் அன்புத்தோழி. அதுவே உண்மை”.
ஏங்கியழுதுகொண்டிருந்த சிறுமியைப் பார்த்து
ஏதாவதொரு காட்டி லொரு மானோ முயலோ
எண்ணிக்கொண்டிருக்கக் கூடும் _
மனிதர்கள் குழந்தைகளாகவேயிருந்துவிட்டால் எத்தனை நன்றாயிருக்கும்..



 [* ஆகஸ்ட் 2014 திண்ணை இணைய இதழில் வெளியானது] 


0

என்ன தவம் செய்தேன்....! _ கவிதை

கவிதை

                                           என்ன தவம் செய்தேன்!

ரிஷி’


கிண்ணங்கள், கரண்டிகள், தட்டுகள், எண்ணெய்புட்டிகள்…..
இன்னும் பல துலக்கியவாறே
அண்ணாந்தேன் தற்செயலாய்.
அற்புதத்திலும் அற்புதமாய்
ஊருக்கே ஒளியூட்டிக்கொண்டிருக்கும் நிலவு -
சின்னஞ்சிறு செவ்வகத்திறப்புக்கு வெளியேயிருந்து
என்னைப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருந்தது!
எத்தனையோ காலமாய்
நான் ஏறெடுத்துப் பார்க்கவும் மறந்துபோயிருந்தது
புன்னகையில் கன்னங்குழிய
மின்னும் கண்களில் கனிந்துவழியும் அன்போடு
என்னையே பார்த்துக்கொண்டிருக்கும் இந்நேரம்
இன்னும் எத்தனையெத்தனை பேருக்குத்
தண்ணொளியால்
அருள்பாலித்துக்கொண்டிருக்கிறதோ…!
வெண்ணிலவே வெண்ணிலவே
உன் மௌனப் பண் கேட்டு என்னிரு விழிகளில்
தளும்பும் கண்ணீர்
சொல்லிலடங்கா சுகம், சோகம்
எல்லாவற்றிற்கும்.







0

Tuesday, July 29, 2014

அபத்த நாடகம்

ரிஷி


3 + 3 = 6,
4 + 2 = 6,
1+ 5 = 6,
3 x 2 = 6,
6 x 1 = 6,
2 x 3 = 6,
8 _ 2 = 6,
7 _ 1 = 6,
5 + 1 = 6,
4 + 2 =  ஆறொன்றே யெல்லா மென் றாறு மனமே
ஆறென விடையொன்றை உடும்புப்பிடியாய் பிடித்தவாறு
நடைபழகிக்கொண்டிருக்கிறாள் இடும்பியவள்;
சொல் தருமாம் போதைகள் என சொல்லித் திரிகிறாள்.

தன்னைத்தானே கணிதமேதையாய்
முன்னிறுத்திக்கொள்ளு மப் பேதை
யின் மொழி பெரும் வாதையாய்.

”நச்சுவிதைகள் நமக்கு முன்னிருந்தோரெல்லாம்
எட்டி யுதையுங்கள் அவரை, அவர்தம் கல்லறைகளை
காலில் ரத்தம் கொட்டினாலும் பரவாயில்லை
எப்படியும் உங்கள் கால்கள் தானே
யானபடியால் வளர்ப்பீர் வெறுப்பை” என
அன்றாடம் ஆகாயத்தில் பறந்தபடி
போதித்துக்கொண்டிருக்கிறாள்..

’‘என்றும் எழுத்துச் சிற்பி நானே’
என கழுத்துவரை கர்வம் தளும்ப
கிளுகிளுத்துப் பிதற்றி

வெத்துவார்த்தைகளைத் தத்துவம் என்ற பெயரில்
கைபோன போக்கில் விசிறியெறிந்தபடி
கிள்ளிப்போட்ட கீரையால் வீராங்கனையானவள் தானே
வாராது போல வந்த மாமணி யானே னென் றறை
கூவுகிறாள், பறைசாற்றுகிறாள்.

அதற்கும் ஆமாம் போடத் தயாராய்
ப்ரோக்ராம்ட்பேர்வழிகள்.

நாலு வார்த்தைகள் ஒலிபெருக்கிகளுக்குள் வீறிட்டலறியதால்
தன்னை யரும் போராளியென அடையாளங்காட்ட
அவள் படும் பாடு அப்பப்போ…..அய்யய்யோ

குய்யோ முறையோ வெனக் கூவிக்கூவியே
மெய்யைப் பொய்யாக்கி பொய்யை மெய்யாக்கி
கன ஜோராய்க் கடைவிரித்தாயிற்று….
கறாராய் கலப்படம் செய்தால்
பின்,  கொள்ளை லாபம் தான்!






[*திண்ணை இணைய இதழ் ஜூலை2014இல் வெளியானது]





0