LIFE GOES ON.....

LIFE GOES ON.....
Showing posts with label நான் வாசித்த கவிதைத்தொகுப்பு கள் குறித்து... Show all posts
Showing posts with label நான் வாசித்த கவிதைத்தொகுப்பு கள் குறித்து... Show all posts

Sunday, March 16, 2014

மயிலிறகாய் வருடும் நிர்வாணம்

நந்தமிழ் நங்கையின் கவிதைத்தொகுப்பு

புதுப்புனல் வெளியீடு; முதல் பதிப்பு 2012, விலை: ரூ.60, 80 பக்கங்கள்


_லதா ராமகிருஷ்ணன்



ஏறத்தாழ 80 கவிதைகள் அடங்கியுள்ள தொகுப்பு இது. கவிஞர் நந்தமிழ்நங்கை பனிக்குடம் இதழின் துணையாசிரியராகப் பணியாற்றியவர். முடிவில்லா உரையாடல்என்ற தலைப்பில் பெண் நாடகப் பிரதிகளைத் தொகுத்து நூலாக வெளியிட்டுள்ளார். தமிழில் முனைவர் பெற்றுள்ள இவர் ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரியின் தமிழ்த்துறையில் உதவிப் பேராசிரியராகப்பணியாற்றுகிறார். கவிஞரின் தமிழ்மொழித் தேர்ச்சியும், இலக்கியப் பரிச்சயமும் இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகளில் புலப்படுகின்றன.

வரைபடம் என்ற தலைப்பிட்ட கவிதை ஒரு பெண் வீட்டு விலக்காகியிருப்பது குறித்துப் பேசுவது. வலி, பயம், உதிரப்போக்கு என எதுவுமே நேரடியாகச் சொல்லப்படவில்லை. எனினும் தாக்கத்தை ஏற்படுத்தத் தவறவில்லை. குறிப்பாக ‘தொற்றுகிறது அச்சம் லேசாக/ ஆடையில் பதிந்த வரைபடத்தில்என்ற வரிகள் கவித்துவம் மிக்கவை.

அதுபோலவே காமம் என்ற தலைப்பில் இடம்பெறும் கவிதையும், உடல் உறுப்பு எதையும் குறிக்கும் சொற்களின்றியே நுட்பமாக அந்த உணர்வை, அலைக் கழிப்பை விவரிக்கிறது.

காமம்
மெழுகிய தரையின் விரிசலிலிருந்து
புடைத்தெழுந்த சாணத்தின்
பசிய வாசனையில்
ஊறித் திளைத்த
காமம் நடுநிசியில்
பக்கத்தில் படுத்திருக்கும் அம்மாவையும்
தங்கையையும் தாண்டி
மாலை அரும்பிய மல்லிகையை ஏந்தி
சுற்றித் திரிகிறது
விடிவெள்ளி எழும் மட்டும்
பின்
அடுப்பைப் பற்றவைத்துப்
புலரிய காலையில்
புகுந்து ஒடுங்கியது
பஞ்சாரக் கூடைக்குள்.


இலக்கிய வெளியில் இயங்கும் பெண், பெண்களின் பிரத்யேகப் பிரச்னைகளை மட்டுமே எழுதவேண்டும்[அதற்கான தேவை இருப்பதால், அல்லது, தனிக் கவனம் கிடைத்துவிடுவது எளிது என்பதால்] என்றவிதமான முன்நிபந்தனைகள் ஏதுமின்றி மனதை வருடும், வலிக்கச் செய்யும் வாழ்வியல் நிகழ்வுகள், மனிதர்கள் அனைவரையும் நெகிழ்வோடும், உக்கிரத்தோடும் பதிவுசெய்திருக் கிறார் கவிஞர்.

இழந்துபோன காலம், உறவுகள், கிராமம் ஆகியவை குறித்த ஏக்கமும், தத்து வார்த்தப் பார்வையும் இடம்பெற்றுள்ள கவிதைகள், இயற்கைக்காட்சிகளில் மனம் கொள்ளும் பரவசம், அமைதியைப் பதிவுசெய்யும் கவிதைகள், வாழ்வின் புதிர்களை அவதானிக்கும் கவிதைகள் என வாழ்வின் பல்பரிமாணங்களைப் பேசும் கவிதைகள் இத்தொகுப்பில் வாசிக்கக் கிடைக்கின்றன. தாத்தாவிற்காக ஏங்கும் சிறுமி மனம், காதலைத் தகிக்கும் மனதோடும், தத்துவார்த்தமாகவும் பார்க்கும் யுவதி மனம் என நுண்ணுணர்வு மிக்க ஒரு மனதின் பல நிலைகள் இந்தத் தொகுப்பில் விரிந்து மனம் வீசுகின்றன.

கீழ்க்காணும் கவிதை தமிழ்க்கவிதைகளில் மிக மிக அதிகமாகப் பேசப்பட்டுவிட்ட காதலைப் பற்றிய வித்தியாசமான, கவித்துவம் மிக்க கவிதை:

காலமறியும்
இருகால்களை மடக்கிப்
பூனைபோல் உற்றுநோக்குமென்,
மீன் பற்றிய விருப்பங்களுக்குச்
செவிசாய்க்க முடியாத உன்னை
அணுஅணுவாய் ரசிக்கத்தான் முடிகிறது
வானம் வெளிறிய மழைக்காலப் பொஉழ்தொன்றில்.

பின்பொருநாள்
உடலொட்டிக் கடக்கும் தும்பிகள்
ஒருகணம் உன் பெயரையும்
உச்சரித்ததாக நினைவு
காதலோ பொழுதோ
உன்னையும் நனைவிக்காதா என்ன?

காலமறியும் இப்படியாகப்பட்ட காதற்கதைகள்.


ஊரின் இயற்கையெழில், தாத்தாவின் ஞாபகம் என மனதை நெகிழவைக்கும் கவிதைகளும், கவி வரிகளும் இந்தத் தொகுப்பை மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டும். இன்றும் என்ற தலைப்பிட்ட கவிதையில் இடம்பெறும்

‘கொல்லைப்புறப் படியடியில்
 குழிபறித்துப் புதைத்தேன்
தேன்சிட்டின் அழைப்புக்குரலையும்
மருதாணிப்பூவின் மணத்தையும்

என்ற வரிகள்_

சிநேகத்தின் சந்தனவாடை[உறுத்தல்], போன்ற சொற்றொடர்கள் வாசிப்பின்பம் தருபவை.

சில கவிதைகள், பெரும்பாலான கவிதைத்தொகுப்புகளில் வழக்கமாகக் காணப் படுவது போலவே அதிக உரைநடைத்தன்மை வாய்ந்தவையாக உள்ளன. உதாரணம் ‘மழைஎன்று தலைப்பிட்ட கவிதை. அதே சமயம், அவற்றை ஈடுசெய்வதுபோல் வேறு பல கவிதைகளில் தமிழ் மனமும், தாய்மண்ணின் மணமும், இயல்பாக, இரண்டறக் கலந்து கிறங்கடிக்கிறது.

அத்தனை கவிதைகளிலும் துல்லியமாகத் தெரிகிறது கைத்தட்டலுக்காகவோ, கவனங்கோரலுக்காகவோ வலிந்து கவிதை புனைய முனையாத, கவிதையில் தோய்ந்து, தன்னைக் கரைத்துக்கொண்டு வலிநிவாரணம் தேடும், வாழ்வாங்கு வாழும் இன்மனம்!




0


[* மலைகள் இணைய இதழில் வெளியானது]
[Jul. 02  2013, மலைகள் டாட்.காம் ]




மைனஸ் ஒன் -1 என்ற தலைப்பே கவிஞரின் நவீன தமிழ்க்கவிதை ஆர்வத் திற்கும் வாசிப்பிற்கும் கட்டியங்கூறுவதாய் வெளியாகியுள்ள கவிதைத் தொகுப்பு இது. மொத்தம் 89 கவிதைகள் இடம்பெற்றுள்ளன. கவிஞர் நந்தாகுமா ரனைப் பற்றிய ரத்தினச்சுருக்கமான அறிமுகக்குறிப்பு இடம்பெற்றிருக்கிறது.

நவீனம் என்ற சொல் உருவம், உள்ளடக்கம் ஆகிய இரண்டையும் சேர்த்தே தரப் படும் அடைமொழியாகத்தான் இலக்கியத்திலும் வாழ்க்கையிலும் பார்க்கப்பட்டு வந்திருக்கிறது எனலாம். The best selection of words in the best order என்றும் செறிவான கவிதைக்கு இலக்கணம் வரையறுக்கப்பட்டிருக்கிறது. Best என்ற வார்த்தை ஓரளவு relative term தான் என்றாலும் ஒரேயடியாக relative term அல்ல. நவீன தமிழ்க்கவிதை இயக்கத்தின் போக்கில் உருவம் சார்ந்த பரிசோ தனை முயற்சிகள் அதிக நேரங்களில் எள்ளலும் எதிர்ப்புமாகவே எதிர்கொள்ளப் பட்டிருக்கின்றன. உருவம் சார்ந்த, மொழி ரீதியான பரிசோதனைகளில் ஒரு கவிஞர் இறங்கினால் உடனேநவீன தமிழ்க்கவிதை வெளிக்குப் புறத்தே இருப் பவர்களோடு சேர்ந்து நவீன இலக்கியப் பரப்பிற்குள் தம்மளவில் பங்காற்றி வருவோரும் கூட மேற்படி பரிசோதனை முயற்சியை எதிர்ப்பதும், தூற்றுவதும் வழக்கமாக நடந்தேறிக்கொண்டிருக்கும் காட்சிகள். பரிசோதனை முயற்சியில் தொடர்ச்சியாக ஈடுபட்டுவரும் கவிஞர் தமிழ்க்கலாச் சாரத்திற்கு அந்நியப் பட்டவர், மேனாட்டு பாணிகளை ஈயடித்தான் காப்பி அடிப்பவர் என்பதாக, ஒட்டு மொத்தமாக முத்திரை குத்தப்பட்டு ஓரங்கட்டப்படு வதன் மூலம் அவர் கவிதை களில் இடம்பெறும்தமிழ் மண்வளம், கலாச்சார-இலக்கியப் பரிச்சயங்கள், அவற்றை அந்தக் கவிஞர் புதுவகையாக, நவீன வாழ்க்கையின் ஊடாட்டத்தோடு அணுகும் பாங்கு ஆகிய அனைத்தும் கவனம் பெறாமல், பேசப்படாமல் போய் விடும் அவலநிலையும் நீடிக்கிறது.

இந்த ஏசல்கள்,வசைபாடல்களால் சோர்ந்துபோய் தங்களுடைய மொழிரீதியான, வடிவம்சார்ந்த பரிசோதனை முயற்சிகளைக் கைவிட்டுவிடும் இளங் கவிஞர் கள் கணிசமாகவே உண்டு. ‘புரியவில்லைஎன்ற வார்த்தை கவிதையில் மொழி ரீதியான, நடை ரீதியான பரிசோதனை முயற்சிகளை மேற்கொள்கிறவர் களை முடக்க, புறமொதுக்க தொடர்ந்த ரீதியில் முன்வைக்கப்பட்டுவரும் [விதண்டா] வாதம். நவீன கவிதையின் உத்திகள், பரிசோதனை முயற்சிகள், நவீன கவிதை களைப் புரிந்துகொள்வதற்கான திறவுகோல்கள் முதலியவை குறித்த அகல்விரி வான, திறந்த மன விவாதங்கள், கருத்தரங்குகள், நூல்கள் இங்கே தொடர்ந்த ரீதியில் அமையவில்லை.

இன்னொரு பக்கம் நவீன கவிதை என்ற பெயரில்கதை சொல்லல்அல்லதுவரிக்கு நான்கு குறியீடுகளைக் குவித்தல், அப்பட்டமான உரைநடையை வரி வரியாக வெட்டித்தந்து கவிதை படைத்தல், மேலோட்டமாக சில நவீனச் சொல் லாடல்களைத் தூவுதல் போன்ற செயல்பாடுகளும் இடம்பெறுகின்றன.

ஒரு காலத்தில் பரிசோதனை முயற்சிகளாக, நவின உத்திகளாக இருந்தவை இன்றைய தமிழ்க்கவிதைகளின் உள்ளார்ந்த அம்சங்களாகிவிட்டன என்று சொல்லப்பட்டாலும் உருவ ரீதியாய், மொழி ரீதியாய்கவித்துவம் நிறைந்தபத்திகவிதைகள்என்ற ஒரு புதுவகையைத் தவிர மற்றபடி தமிழ்க்கவிதை யின் மொழிப் பயன்பாடு சார்ந்து வடிவம் சார்ந்து ஒருவகையான தேக்கநிலை ஏற்பட்டிருக்கிறது என்றே நினைக்கத் தோன்றுகிறது.

இந்தப் பின்னணியில் கவிஞர் நந்தாகுமாரனின் மைனஸ் ஒன் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள மொழிரீதியான பரிசோதனை முயற்சிகள் கவனம் பெறுகின்றன. கணினித்துறையில் பணிபுரிபவர், தனது பணிக்களம், தொழில் நுட்பம் சார்ந்த அறிவு, விவரங்கள், தகவல்கள், அனுபவங்களின் பின்புலத்தில், அந்தத் துறைக்கேயுரிய கலைச்சொற்களைப் பயன்படுத்தி, துறை சார் தகவல் களைக் குறியீடுகளாக்கி வாழ்வனுபவங்களையும் உணர்வுகளையும் கவிதைக ளாக்கியிருப்பதால் இவரது கவிதைகளில் நவீனத்தன்மை மேலோட்டமாக இல்லாமல் வேர்கொள்ள முடிந்திருக்கிறது.

இதுவரையான நவீன தமிழ்க்கவிதையின் போக்குகள், பாடுபொருள்கள், உத்தி கள் ஆகியவற்றை ஆர்வத்தோடு தன் வாசிப்பின் மூலம் பரிச்சயப்படுத்திக் கொண்டு, உள்வாங்கிக்கொண்டு அவற்றிலிருந்து தன் கவிதைகளுக்கான உரு வத்தையும் உள்ளடக்கத்தையும் கவிஞர் தெரிவுசெய்துகொண்டிருப்பதை இந்தத் தொகுப்பில் இடம்பெறும் கவிதைகள் உணர்த்துகின்றன. எடுத்துக்காட்டாக, பிரக்ஞாபூர்வமாக எளிய நடையில் ஒரு கவிதை எழுதி அதற்கு ‘user friendly’ என்று தலைப்பிட்டிருக்கிறார் கவிஞர்!

சில கருப்பொருள்கள் அவற்றின் அளவிலேயே நவீனமானவையாக இருக்கும். ஆனால், பலரும் பல காலமாய் பல்வேறு விதமாய் விவரித்துவிட்ட, விவரித்தபடியுள்ள ஒரு கருப்பொருளை புதுவிதமாய் கவிதையாக்குவது உண்மையிலேயே சவாலான விஷயம். கவிஞர் நந்தாகுமாரனின் மழை குறித்த கவிதை இந்தச் சவாலில் வெற்றியடைந்திருக்கிறது!

மழை கேட்டல்
வழக்கம் போலவே
அது விழுந்ததும்
விமர்சனங்கள் எழுந்தன
அக்கறையில்லாமல் அது
Asbestos Sheet களை
அவசரமாக வாசித்துக்கொண்டே போனது

நீரோடு நீர் மோதும்
குதூகலக் குரல்
ஒளிவடிவங்களாய் விரிந்தது
அடுத்த பாடல்
ஜன்னல் கண்ணாடியில் அரங்கேறியது
அதன் நோக்கமற்ற ஒழுகலின்
உராய்வு ஓசை கேட்க
என் காதுகளைத் தீவிரப்படுத்தினேன்
கடைசித் தீக்குச்சியைப் பற்றவைக்கும்
தீவிரத்தோடு.


கூடலும் கூடல் நிமித்தமும் என்ற தலைப்பிட்ட கவிதை ஆண்-பெண் உடலுறவைப் பற்றிய நயமார்ந்த கவிதை.

ஒரு கவிதை வார்த்தைகள் என்ற தலைப்பின் கீழ் இடம்பெறும் மூன்று கவிதைகளில் நிறைவான கவித்துவம் கொண்ட முதலாவது இது:

தானியங்கி தாலாட்டு பாடும்
எந்திரத் தொட்டிலில்
மிதந்தபடி
கனவில் எழுதப்படும் கவிதையில்
இவன் வேண்டிக்கொள்கிறான்
விடாமல் தலைகோதும்
எந்திரக் கை வேண்டும் என.

கவிதை எண் 00 என்ற தலைப்பிட்ட கவிதையின் கவித்துவம் மிக்க ஆரம்ப வரிகள் இவை:

காற்று ரெண்டு குட்டிக்கரணம் அடித்து
தலைமுடியைக் கலைத்தது.

4 டிகிரி செண்டிகிரேட் என்ற தலைப்பிட்ட கவிதையில் வரும் அருமையான விவரிப்பு:

பாறைக்குள் பறந்துகொண்டிருந்த என்னை
ஒரு புல்லாங்குழல் கண்டுபிடித்தது

ஒளி எரித்த திரை என்ற தலைப்பிட்ட கவிதையின் கவித்துவமும் நவீனத்துவமும் மிக்க இறுதி வரிகள் இவை:

ஜூபிட்டரின் பாதையில் குறுக்கே போனதாக
என் மீது மற்றொரு குற்றச்சாட்டு
எழுந்தது
ப்ளூட்டோவிலும் தான் நிகழ்கிறது பூரண
சூரிய கிரகணம்
கண்ணாடி அணிந்துகொள்ளுங்கள் என்னைப் போல
என்றேன்.

சாக்கடை என்பதும் நீர்நிலை என்ற நாலு வரி குறுங்கவிதை வடிவத்தில் வழக்கமானதே என்றாலும் சாரத்தில் அடர்செறிவானது.

கழுகுகள் ஊறும்
சாக்கடை வானில்
தனித்துத் தவழும்
கருடப் பறந்து

இந்தத் தொகுப்பின் பலமாக நான் கருதுவது கவிஞர் தனக்குப் பரிச்சயமான நவீன உலக கணினி தொழில்நுட்பத்தை, அதன் கலைச்சொற்களைத் தனது கவிதைகளின் விவரிப்புமொழியாக வரித்துக்கொண்டிருப்பது; அங்கிருந்து தனது உவமான உவமேய குறியீடுகளைத் தேர்ந்தெடுத்துக்கொண்டிருப்பது. பலவீன மாக எனக்குப் படுவது இந்தத் தொகுப்பின் கணிசமான அளவு கவிதைகள் கவிஞர் பிரம்மராஜனுடைய கவிதை வடிவை அபப்டியே பிரதியெடுத்திருப்பது போல் தோன்றுவது. நவீன தமிழ்க்கவிதை வெளியில் நுழையும் எவரும் புறக்கணிக்க முடியாத கவியாளுமை பிரம்மராஜன் என்பதில் இருவேறு கருத் துக்கு இடமில்லை. அதே சமயம் அந்தத் தாக்கம் இன்ஸ்பிரேஷன் என்ற அளவைத் தாண்டிவிடலாகாது.

உறுமும் பொழுதுகளில் சர்ரியலிஸம் என்று தலைப்பு மட்டும் நவீனமாக உள்ளடக்கம் சாதாரணமானதாக உள்ள கவிதைகளும் இத்தொகுப்பில் உண்டென்றாலும் இந்த அம்சம் இடம்பெறாத கவிதைத்தொகுப்புகளே இல்லை என்பது தானே உண்மை.

நவீனமான தலைப்புகளைக் கொண்ட கவிதைகள் இடம்பெறும் இந்தத் தொகுப் பில் கோடிட்டுக் காட்டத்தக்க கவிதைகள் கணிசமாகவே இருப்பதால் எனக்கு நிறைவான வாசிப்பனுபவம் கிடைத்தது. அறவுரை(unasked) தரத் தயாராயி ருக்கும் பலரில் ஒருவரோ ஒன்றுக்கு மேற்பட்டவரோ வரும் நாளில் ஒரு நாள் [இது நாள் வரை இல்லையெனில்] கவிஞரை அணுகிபுரியும்படி கவிதை எழுதச் சொல்லிபல்லாயிரக்கணக்கான [?!] கவிதை ஆர்வலர்களின் சார்பில் நைச்சியமாக வற்புறுத்த, மூளைச்சலவை செய்ய, ’புரியும் கவிதை எழுதுவது எப்படிஎன்று பாடம் எடுக்க முயற்சிக்கலாம். கவிஞர் நந்தாகுமாரன் அவற்றால் அலண்டுபோய்விடலாகாது. அதே சமயம், புரிந்துகொள்ள வேண்டும் என்ற உண்மையான அக்கறையோடு கேட்கும் வாசகர்களைப் பொருட்படுத்தாமல் அலட்டிக் கொள்ளவும் கூடாது!





000





மைனஸ் ஒன்
_ 1
நந்தாகுமாரனின் முதல் கவிதைத்தொகுப்பு
[வெளியீடு : உயிர்மை, முதல் பதிப்பு : டிசம்பர் 2012
பக்கங்கள் 112 விலை: ரூ.90