LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Sunday, May 18, 2025

சர்க்கஸ் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 சர்க்கஸ்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
ஆடு ஆடு ஆடு என்கிறார்கள் கோரஸாக.
மேரியின் ஆட்டுக்குட்டி திருமண மண்டபத்திற்குள் வந்திருக்கிறதா என்று ஆசைஆசையாக நாலாபக்கங்களிலும் திரும்பிப் பார்க்கிறாள் குழந்தை.
அதற்குள் அம்மா
அவளது சின்ன இடுப்பில் ஒரு பக்கமாக
சற்றே நிமிண்டிவிட்டு
'ஆடு' என்கிறாள்.
அவளுடைய மாமா அலற விடுகிறார் பாட்டை:
”அப்படிப் போடு போடு போடு போடு போடு......”
எதைப் போடச்சொல்கிறார் என்று
ஒருகணம் புரியாமல் குழம்பி நின்ற குழந்தை
எதுவானாலும் பெரியவர்கள் சொல்வதைக் கேட்டுத்தானே ஆகவேண்டும் என்ற எண்ணம் மேலோங்க
கையில் கிடைத்த தாம்பாளத்தை எடுத்துத்
தரையில் போட
அது ஆங்காரமாய் ரீங்காரமிட்டவண்ணம்
ஆடி அடங்கியது.
அம்மா அவமானத்தில் அடிக்கக்
கையை ஓங்குவதற்குள்
'ஆ, தாம்பாளத்தில் நின்று ஆடுமா குழந்தை?'
என்று ஆவலாகக் கேட்டபடி ஒருவர்
தன்னுடைய அலைபேசியில் ‘வீடியோப் பகுதிக்கு
வாகாய்ப் போய்நின்றார்.
அந்தக் குட்டி உடம்பை குண்டுகட்டாய்த் தூக்கி தாம்பாளத்தின் விளிம்புகளில்
அதன் பிஞ்சுப் பாதத்தைப் பதித்த பெரியப்பா
குழந்தையும் தெய்வமும் ஒன்று,
குழந்தைக்கு வலியே தெரியாது' என்று
திருவாக்கு அருள _
வலிபொறுக்காமல் துள்ளித்
தரையில் குதித்த குழந்தை
தாம்பாளத்தை எடுத்துத்
தன் தலையில் கவிழ்த்துக்கொண்டு
அங்கிருந்து ஓட ஆரம்பித்தது.
“அட, இது நல்லாயிருக்கே –
அப்படியே ஓடு ஓடு ஓடு –
இதுக்கொரு பாட்டுப் பாடு பாடு பாடு”
என்று அடுத்தவீட்டுக்காரர்
குழந்தையின் பின்னே ஓட
அவர் பின்னே அங்கிருந்த எல்லோரும் ஓட
அலறியடித்துக்கொண்டு ஓடிய குழந்தை
மண்டபத்தில் விரிக்கப்பட்டிருந்த
விலையுயர்ந்த கம்பளத்தின் கிழிசலில்
குட்டிக் கால் சிக்கித் தடுக்கிவிழ_
தலையிலிருந்த தாம்பாளம்
தெறித்துவிழுந்து
அதன் சின்னக்கையைத் துண்டித்தது.
கண்ணீரோடு தாயும் பிறரும் அலைக்கழிந்துகொண்டிருந்தார்கள்
கண்மூடிக் கிடந்த குழந்தையிடம்
ஒரே கேள்வியை
திரும்பத்திரும்பக் கேட்டபடி _
“என்ன சொன்னாலும் கேட்காம
இப்படி தலைதெறிக்க ஓடலாமா?”

No comments:

Post a Comment