ஒரு சமூகப் பிரக்ஞையாளர்
சகல ரோக நிவாரணியாக ஒருவரையும்
முன்முடிவு செய்துகொண்ட பிறகே
அவரது சமூகப் பிரக்ஞை
சுற்றிவரத் தொடங்குகிறது உலகை.
நான்கு சுவர்களுக்குள்ளான வெளியைப்
பிரபஞ்சமாக்கி
நட்சத்திரங்களிடம் உதவிகோருகிறார்
தன் நாட்டின்
நலிந்த பிரிவினருக்காக.
பரிவோடு அவை தரும்
ஒளிச்சிதறல்களைக் கொண்டு
தன் அறைகளுக்கு வெளிச்சமூட்டியபடி
மீண்டும் சகல ரோகக் காரணியாகவும்
சகல ரோக நிவாரணியாகவும்
முன்முடிவு செய்திருந்தவர்களைப்
படம் எடுத்துப்போட்டு
அவர்களில் முதலாமவரை எட்டியுதைத்தும்
இரண்டாமவரைக் கட்டித்தழுவியும்
இன்றைக்கும் என்றைக்குமாய்
சகல காரணியாக முன்முடிவு செய்தவரை
கட்டங்கட்டி மட்டந் தட்டியும்
சகலரோக நிவாரணியாக முன்முடிவு செய்தவரை
பட்டமளித்துப் பாராட்டியும்
நோகாமல் இட்ட அடியும்
கொப்பளிக்காமல் எடுத்த அடியுமாக
ஆகாகா எப்பேர்ப்பட்ட சமூகப்பிரக்ஞையாளர்
அவர்
கட்டாயமாய்
எம்மைச் சுற்றி உம்மைச் சுற்றி
தம்மைச் சுற்றி
வேகாத வெய்யிலிலும்
தட்டாமாலைத் தாமரைப்பூவிளையாட்டில்….

No comments:
Post a Comment