LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Saturday, July 24, 2021

நடுவில் நிறைய பக்கங்களைக் காணவில்லை ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 நடுவில் நிறைய பக்கங்களைக் காணவில்லை


‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
அவர் வாழ்ந்த காலத்திலிருந்து வெகுகாலம் கடந்து
அவர் கவிதைகள் பற்றி எழுதப்பட்டிருந்த
குறிப்பு
கட்டுரை
திறனாய்வில்
காணாமல் போயிருந்தது _
கையில் கிடைத்த தத்துவங்களை
சோழியாய் வரிகளில் சுழற்றி வீசி
யவர் தன்னை தீர்க்கதரிசிக் கவியாக நிலைநிறுத்திக்கொண்டது;
அன்பே சிவம் என்று ஒரு மேடையில் போதித்து
சிவம் சவம் என்று இன்னொரு அரங்கில் சாதித்தது;
தன் வீட்டின் பத்துக்குக் குறையாத அறைகளை பூதங்காத்தவாறும்
எந்நாளூம் நிலவறையில் நெல்மூட்டைகள்
பத்துக்குக் குறையாமல் வைத்திருந்தபடியும்
‘தனியொருவனுக்குணவில்லையெனில்
ஜகத்தினை அழித்திடுவோமை
தவறாமல் உணர்வெழுச்சிமிக்க ஏற்ற
இறக்கங்களோடு தழுதழுக்கும் குரலில்
தீ கலந்து பகர்ந்தது;
தந்த கோபுரத்தின் கண்ணாடி அறையுள்ளிருந்து கணினியைத் தட்டியவாறே
தன்னாலான கலவரத்தைத் தூண்டும்
சமூகப்பணி செய்துகொண்டிருந்த
அவர் தர்மசிந்தனையும்
தாராளமய நன்னெறியும்;
கழிபொழுதில் தனது மொழியாற்றலை
யெல்லாம்
குறிப்பிட்ட ஒரு தலைவரைப் பழிப்பதற்கே
செலவழித்த
அவரது மெச்சத்தகுந்த கூர்கவனமும்;
அழியாப்புகழ் பெற அவர் செய்த
அரசியலும்;
அவரிலிருந்து பெருக்கொடுத்தோடிக்
கொண்டிருந்த
பொல்லாப்பும் பொச்சரிப்பும்;
சிற்றும்பு கடித்ததைச் சிக்கெனப் பிடித்துக்கொண்டு
உச்சிமீது வானிடிந்து வீழுகின்றபோதிலுமான
’சிச்சுவேஷனை’ உருவாக்கி அவர் பாடிய
நவீன ஒப்பாரியில் அவர்
கச்சிதமாய் ஒளித்துவைத்திருந்த
நச்சுத்துப்பாக்கியும்;
அச்சச்சோ அராஜகம் என்று
பன்னிப் பன்னிச் சொன்ன அதே வாயால்
அதே விஷயத்தை ‘அதெல்லாம் வாழ்வில் சகஜம்’
என்று அடித்துச்சொன்னதும்;
ஒரு பத்தியில் தொற்றுநோயும் மறுபத்தியில் நடிகர் வெற்றிவேலுக்கான
’வாகைசூடி வா’ வாழ்த்துமாய்
பதிவுகளைப் பகிரும் வித்தகமும்;
எழுத்தின் நிறைமௌனத்தைக் கிழிக்கும்
வெற்றுமுழக்கங்களும்;
மற்றும்……….

No comments:

Post a Comment