LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Saturday, July 24, 2021

அடையாளமும் அங்கீகாரமும் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 அடையாளமும் அங்கீகாரமும்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
இத்தனையத்தனை யெனச் சொல்லவியலா
எத்தனையெத்தனையோ காக்கைகளில்
தனித்தொரு காக்கையாகத் தன்னை யாரும் பார்க்கவில்லையே
என்ற ஏக்கம்
எந்தக் காக்கையையும் தாக்கியிருக்காது
என்றே தோன்றுகிறது.
சக பறவைகள் இரைதேடப்
பறக்கவேண்டும்.
தூண்டில்களுக்கும் துப்பாக்கிகளுக்கும்
இரையாகாமல் தப்பிக்கவேண்டும்.
நிழல் தேடி நிறைய தூரம் செல்லவேண்டும்...
தன் கூடிருக்கும் மரம் தொலையாதிருக்கிறதா
என்று தொடர்ந்து கண்காணித்துவரவேண்டும்...
தானியமென்று சிறுகல்லை முழுங்கியதில்
ஏற்பட்ட உபாதைகளை
யாரிடம் பகிர்ந்துகொள்வது?
இதில் யாரை யார் புகழ்ந்துபோற்றுவது.....
அலகுகளின் நீள அகலங்களைத்
துல்லியமாக அளப்பதாய்
ஆளுக்கொரு அளவை வைத்திருக்க
வழியில்லை காக்கைகளுக்கு.
சினிமாவில் நடிக்கவைப்பதற்கென்று
ஃபோட்டோஷூட் நடத்தி
ஒரு காக்காயைத் தேர்ந்தெடுத்து
அழைத்து வந்து
நூறு வருடத் தொன்மை வாய்ந்த
ஆறு நட்சத்திர மரமொன்றின் கிளையில்
யாரேனும் இதுவரை தங்கவைத்ததாகத்
தெரியவில்லை.
அதற்காக அங்கலாய்ப்பதெல்லாம்
காக்கைகளின் வழக்கமில்லை.
காக்கையை அழகென்று போற்றிப்
பாடுவதில்லை யுலகு.
அதன் கரும்பட்டொளிர் பூமென்மைச்
சருமம் பற்றி யொரு வரியேனும்
இதுவரை பேசி யறியோம்.
இனிமையற்ற அதன் குரலின்
கரகரப்பை
எப்படியெல்லாம் பரிகசித்திருக்கிறோம்.
ஆகாயத்தோட்டி என்று குறிப்பிடுவதிலும்
ஓர் உட்குறிப்பு இருக்கத்தானே செய்கிறது.
கிளியின் அழகை
குயிலின் குரலினிமையை
மயிலின் எழில்நடனத்தை
குருவியின் குட்டியுருவை
யெல்லாம் எடுத்துக்காட்டிக்
காட்டிக்காட்டி
காக்காயைப் பழிப்பதுமட்டும்
ஒருநாளும் வழக்கொழிந்துபோகாததாய்….
சிறுகல்லைப் போட்டுப்போட்டு
நீர்மட்டத்தை உயர்த்தி
தாகம் தீர்த்துக்கொண்டதாய்
காக்காயின் அறிவுக்கூர்மைக்கு
கைவசமிருப்பது ஒரேயொரு கதை....
ஆனால்
பாட்டி சுட்ட வடையைத் தட்டிப்பறித்த
வில்லன் காக்காய்க்கு
பட்டிதொட்டியெல்லாம்
கரும்புள்ளி செம்புள்ளி
குத்தப்பட்டவண்ணமே
காக்கை காக்காய் காகம் – எல்லாமே
மனிதர்கள் சூட்டிய பெயர்கள்.
எனில்,
காக்கை காக்கைக்கு என்ன?
எண்ண நேரமின்றி
ஏதொரு அவசியமுமின்றி
என்றும்போல் காகங்களாகிய
காக்காய்களாகிய
காக்கைகள்
வலம் வந்தபடி வானிலும்
விளக்குக்கம்பத்தில் அமர்ந்துகொண்டும்…..
காக்கையின் வாழ்க்கைக்கு
நோக்கம் கற்பிக்க விரும்பும்
நம் அறியாமையை அறியாமலும்…..

No comments:

Post a Comment