LIFE GOES ON.....

LIFE GOES ON.....
Showing posts with label ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)யகவிதைகள். Show all posts
Showing posts with label ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)யகவிதைகள். Show all posts

Saturday, July 24, 2021

கத்திமுனைப் பயணம் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 கத்திமுனைப் பயணம்

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)

நிரந்தரம் என்பதும் தாற்காலிகம் என்பதும்

காலக்கணக்கு மட்டுமல்ல…..

காலின்கீழ் கத்திமுனை உறுத்திக்கொண்டே

யிருக்கிறது.

கணநேர சந்தோஷம் பாதங்களின் கீழ் பஞ்சை

அடர்த்தியாக நீட்டிப் பரப்பிவைக்கும் நேரங்களில்

கத்திமுனை காணாமல் போய்விடுகிறது.

சமயங்களில் கால்பதியும் குளிர்நீர்ப்பரப்பின் இதம்

முனை மழுங்கச் செய்கிறது.

இறங்கித் தான் ஆகவேண்டுமென்றாலும்

பறக்கும் பொழுதுகள் உண்டு.

தம்மைக் கிழித்துக்கொண்டு நமக்கு

மலர்க்கம்பளம் விரிக்கும் தருணங்கள்

ஆகப்பெரும் வரம்.

என்றாலும் _

எப்போதுவேண்டுமானாலும் அது சிந்தச்

செய்யலாகும் சில ரத்தத்துளிகள்

பிரக்ஞையில் ஒரு மூலையில்

சேகரமாகிக்கொண்டு.

போகப்போக பழகிப்போய்விடுமாயினும்

கத்திமுனையின் கூர்மை ஓர்மையில்

ஆழமாகக் குத்திக் கிழித்தபடியே

 

சகவாழ்வு - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 சகவாழ்வு

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

மயிலைப் பார்த்துக் காப்பியடிப்பதாய்
வான்கோழியை வசைபாடுவோம்.
வாத்துமுட்டையைப் பரிகசிப்போம்.
நாயின் சுருள்வாலை நிமிர்த்தப்
படாதபாடு படுவோம்.
கிளியைக் கூண்டிலடைத்து
வீட்டின் இண்டீரியர் டெகரேஷனை
முழுமையாக்குவோம்.
குதிரைப்பந்தயத்தில் பின்னங்கால்
பிடரிபட பரிகளை விரட்டித் துரத்தி
யோட்டி
பணம் பண்ணுவோம்.
காட்டுராஜா சிங்கத்தை நாற்றம்பிடித்த மிருகக்காட்சிசாலையில்
போவோர் வருவோரெல்லாம்
கல்லாலடித்துக் கிண்டலடிக்கும்படி
பாழடைந்து குறுகவிரிந்திருக்கும்
புழுதிவெளியில் உழலச் செய்வோம்.
வாழைப்பழத்தில் மதுபுட்டிக் கண்ணாடித்
துண்டைச் செருகி
யானைக்கு உண்ணத் தருவோம்.
பிடிக்காதவர்களைப் பழிக்க பன்னி என்று
பன்னிப்பன்னிச் சொல்லுவோம்.
அதுபாட்டுக்குப் போய்க்கொண்டிருக்கும்
கன்றுக்குட்டியின் முதுகில்
ஒரு தடித்த கழியால் ஓங்கியடிப்போம்.
எதிரேயுள்ள நடைமேடைச் சுவரின்
விளம்பரத்தாளை வாய்க்குள் இழுக்கப் படாதபாடுபட்டுக்கொண்டிருக்கும்
தாய்ப்பசுவின் கண்களில்
நீர் ததும்பக்கூடும்.
அதைப்பற்றி நமக்கு என்ன கவலை?
மனம் கசிந்து அழுபவரையும்
பழித்து இழிவுபடுத்த
தினந்தினம் உதாரணம் காட்டுவோமே
யல்லாமல்
மற்றபடி முதலையின் ரணம், சினம் கனம்
அது அதிகமாய்க் காணப்படும் சதுப்புநில
வனம்
அதற்கு இருக்கலாகும் மனம் பற்றி
என்ன தெரியும் நமக்கு?

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் பயிர் முளையிலே தெரியும்………… ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் பயிர் முளையிலே தெரியும்…………

‘ரிஷி’

(லதா ராமகிருஷ்ணன்)
ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்
அநியாய அவதூறுகள்
அவமானகரமான வசைச்சொற்கள்
அமைதியிழக்கச்செய்யும் கெக்கலிப்புகள்
அசிங்கப்படுத்தும் அடைமொழிகள்
அக்கிரம வக்கிரச்சொலவடைகள்
பொச்சரிப்புப் பழமொழிகள்
பொல்லாங்குப் புதுமொழிகள் என
ஒருவருக்கு நாம் தந்துகொண்டிருக்கும் அத்தனையையும்
நமக்கு இன்னொருவர் தரக்கூடும்
இன்றே
இங்கே
இப்போதே
குளிர்காலம் வசந்தம் போல்
முற்பகல் பிற்பகல்
இரண்டின் இடைத்தூரம் சில மாதங்கள்
அன்றி சில நாட்கள்
அன்றி
சில மணித்துளிகள்
அன்றி சில கணங்கள்
அன்றி ஒரு கணத்திற்கும் மறுகணத்திற்கும் இடையிலான
நூலிழை அவகாசம்….
காலம் கணக்குத்தீர்க்கும்போது
அதைப் புரிந்துகொள்ளத் தவறியும்
புரியாததுபோல் பாவனை புரிந்தும்
ஆழ்ந்த யோசனையிலிருப்பதாய் அண்ணாந்துபார்ப்பதாலேயே
நம்மை ஆகாசம் என்று இன்னும் எத்தனை நாள்தான் நம்பிக்கொண்டிருக்கப்போகிறோம்….?

'அவா' ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 'அவா'

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)


அவாவை நானாகிய இந்தப் பிரபஞ்சத்திலிருந்து
புறந்தள்ளும் அவாவிலேயே
அவாவை அறம்பாடுகிறேன் என்றார்.

அவாவைப் புறந்தள்ளியாகிவிட்டதா
தள்ளிக்கொண்டிருக்கிறீர்களா,
தள்ளப்போகிறீர்களா என்று கேட்டதற்கு
அவா இருந்தால்தானே அவாவைத் தள்ளவோ
கொல்லவோ முடியும் என்றார்.

அவா மட்டும்தான் புறந்தள்ளப்படவேண்டியதா
என்று வினவியதற்கு
அவாவே அனைத்துத் தீமைகளுக்கும் அடிப்படை என்றார்.

அப்படியுரைப்பதொரு குத்துமதிப்பான கருத்தல்லவா,
ஒட்டுமொத்தமான பொறுப்புத்துறப்பல்லவா என்றதற்கு
அப்படியிப்படி எக்குத்தப்பாய் ஏதேனும்கேட்டாலோ
கரும்புள்ளி செம்புள்ளி அப்பிவிடுவேன் அப்பி என்று
காறித்துப்பாத குறையாய். காதில் அறைந்தார்.

தப்பித்தேன் பிழைத்தேன் என்று ஓடாமல்
அப்படியேே நின்று
அவாவுக்குத் தனித்தனி உருவமுண்டா
அல்லது அதுவொரு மொந்தையா என்று கேட்டதற்கு
வேண்டும்போது அதை மொந்தையாக்கிக்கொள்ளலாம்;
தனித்தனி உருவமாக்கிக்கொள்ளலாம்.
அவாவைப் புறந்தள்ள என்ன தேவையோ
அதை செயல்படுத்துவதே நமக்கான சவாலாகட்டும் என்றார்.

அவா புறந்தள்ளப்படவேண்டியது என்றால்
பின் ஏன் நீங்கள் அவ்வப்போது
ஓர் அவாவுடனிருக்கும் படத்தைப் பதிவேற்றுகிறீர்கள்
என்று கேட்டதற்கு
அவாவில் சின்ன அவா பெரிய அவா உண்டல்லவா
எளியதை உதறித்தள்ளி வலியதைக்
கைக்கொள்ளுவதே
அவா தொடர்பான ஆகப்பெரும் சூத்திரம்
என்றார்.

உங்கள் வாழ்வில் அவாவின் பாத்திரம்தான் என்ன
என்று கேட்டதற்கு
அவா எனக்குக் கிடைத்திருக்கும் ஜோக்கர் சீட்டு,
என்றார்.

குவா தவா சிவா ரவா போல்
அவாவும் வேண்டும்
அன்றாட வாழ்க்கைக்கு சுவாரசியம் சேர்க்க
என்று பாடிக்கொண்டே வேகமாய்ச் சென்றவரின் முதுகில் பளிச்சிட்ட கண்களில்
கண்ட
அவா மீதான வெறுப்பு
அவரை மெகா துறவியாக்க _

அவாவை சபிக்கும் அவாவில் அவர்
அவாஞானியென்ற அடைமொழிக்குரியவராக…..

நடுவில் நிறைய பக்கங்களைக் காணவில்லை ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 நடுவில் நிறைய பக்கங்களைக் காணவில்லை


‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
அவர் வாழ்ந்த காலத்திலிருந்து வெகுகாலம் கடந்து
அவர் கவிதைகள் பற்றி எழுதப்பட்டிருந்த
குறிப்பு
கட்டுரை
திறனாய்வில்
காணாமல் போயிருந்தது _
கையில் கிடைத்த தத்துவங்களை
சோழியாய் வரிகளில் சுழற்றி வீசி
யவர் தன்னை தீர்க்கதரிசிக் கவியாக நிலைநிறுத்திக்கொண்டது;
அன்பே சிவம் என்று ஒரு மேடையில் போதித்து
சிவம் சவம் என்று இன்னொரு அரங்கில் சாதித்தது;
தன் வீட்டின் பத்துக்குக் குறையாத அறைகளை பூதங்காத்தவாறும்
எந்நாளூம் நிலவறையில் நெல்மூட்டைகள்
பத்துக்குக் குறையாமல் வைத்திருந்தபடியும்
‘தனியொருவனுக்குணவில்லையெனில்
ஜகத்தினை அழித்திடுவோமை
தவறாமல் உணர்வெழுச்சிமிக்க ஏற்ற
இறக்கங்களோடு தழுதழுக்கும் குரலில்
தீ கலந்து பகர்ந்தது;
தந்த கோபுரத்தின் கண்ணாடி அறையுள்ளிருந்து கணினியைத் தட்டியவாறே
தன்னாலான கலவரத்தைத் தூண்டும்
சமூகப்பணி செய்துகொண்டிருந்த
அவர் தர்மசிந்தனையும்
தாராளமய நன்னெறியும்;
கழிபொழுதில் தனது மொழியாற்றலை
யெல்லாம்
குறிப்பிட்ட ஒரு தலைவரைப் பழிப்பதற்கே
செலவழித்த
அவரது மெச்சத்தகுந்த கூர்கவனமும்;
அழியாப்புகழ் பெற அவர் செய்த
அரசியலும்;
அவரிலிருந்து பெருக்கொடுத்தோடிக்
கொண்டிருந்த
பொல்லாப்பும் பொச்சரிப்பும்;
சிற்றும்பு கடித்ததைச் சிக்கெனப் பிடித்துக்கொண்டு
உச்சிமீது வானிடிந்து வீழுகின்றபோதிலுமான
’சிச்சுவேஷனை’ உருவாக்கி அவர் பாடிய
நவீன ஒப்பாரியில் அவர்
கச்சிதமாய் ஒளித்துவைத்திருந்த
நச்சுத்துப்பாக்கியும்;
அச்சச்சோ அராஜகம் என்று
பன்னிப் பன்னிச் சொன்ன அதே வாயால்
அதே விஷயத்தை ‘அதெல்லாம் வாழ்வில் சகஜம்’
என்று அடித்துச்சொன்னதும்;
ஒரு பத்தியில் தொற்றுநோயும் மறுபத்தியில் நடிகர் வெற்றிவேலுக்கான
’வாகைசூடி வா’ வாழ்த்துமாய்
பதிவுகளைப் பகிரும் வித்தகமும்;
எழுத்தின் நிறைமௌனத்தைக் கிழிக்கும்
வெற்றுமுழக்கங்களும்;
மற்றும்……….