LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Monday, June 7, 2021

கவிதையின் விதிப்பயன் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 கவிதையின் விதிப்பயன்

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)

நீங்கள் மர்மம் என்றால் அது மர்மம்;

அதுவே இன்னொருவர் சொன்னால்

அதர்மம்.

மர்மமெனக்கோருணர்வென்றால்,

மனநிலையென்றால்

உங்களுக்கு அது கத்தி கபடா கொலை

துப்புத்துலக்கலாக

இருக்கக்கூடாதா என்ன?

உயிரின் ஊற்றுக்கண் ஆகப்பெரிய

மர்மமென்றால்

பர்மா நீரல்ல நிலமென்கிறீர்கள்!

கவிதையின் சர்வமும் நானே என்று

எத்தனை தன்னடக்கத்தோடு

கர்வங்கொள்கிறீர்கள்!

அதைக் கண்டு மலைத்துயர்ந்த

என் இருபுருவங்களும்

இன்னமும் இறங்கி இயல்புநிலைக்குத்

திரும்பியபாடில்லை.

கர்மம் கர்மம் _

இல்லையில்லை உங்களைச்

சொல்லவில்லை.

வர்மக்கலை பயின்ற நல்லறிவாளி நீங்கள்

நயத்தக்க வார்த்தைகளால்

வையத்தொடங்கினாலோ

நான்கைந்து வட்டுகள்

நிச்சயமாய் நகர்ந்துவிடும் முதுகெலும்பில்

நன்றாகவே அறிவேன்

மற்றெல்லோரையும் முட்டாள் எனச்

செல்லமாகவும் சினந்தும் குட்டியும்

இட்டுக்கட்டியும்

தன்னைத்தானே அரிதரிதாமெனக் கட்டங்கட்டிக்

காட்டுவோர்

பலரையும்கூட பரிச்சயமுண்டெனக்கு

என்பதுதான் பிரச்சினையே.

கர்மவினையென்று கேள்விப்பட்டிருப்பீர்கள்தானே

நான் குறிப்பிடும் கர்மமும் அதுவேயென்று

எங்குவேண்டுமானாலும்

துண்டுபோட்டுத் தாண்டிவிடுகிறேன்.

பயன்படுத்திய பழையது போதுமா?

புதிதாக வாங்கவேண்டுமா?

நிர்மலமும் மலமும் வேறுவேறென்று

உறுதியாகத் தெரியுமென்றாலும்

கர்மமும் கருமமும் ஒன்றா அல்லவா என்று

சொல்லமுடியாதிருக்கிறது.

துர்மரணமோ கல்யாணச்சாவோ _

இருத்தலும் இருபதுவரிக் கவிதை

இயற்றலும்..

திருத்தமான இருபதுக்கும்

குறியீடாகும் இருபதுக்குமிடையேயான

பிரிகோடுள்ள வரை _

எவர் மறுத்தால் என்ன?

அவரவர் மர்மம் அவரவருக்கு.

No comments:

Post a Comment