LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Sunday, January 18, 2015

மற்றும் சிலதிறவாக் கதவுகள் _ கவிதைகள் 31 - 35

மற்றும் சிலதிறவாக் கதவுகள்  _ 
’ரிஷி’யின் 3ம் கவிதைத் தொகுப்பு
கவிதைகள் 31 _ 35






31. உறவியல்

திரைகட லோடித் தேடிய
திரவியம்
விரயமான பிறகும்
அருவியாகும் பிரயத்தனத்தில்
தரங்கம் கரைந்தவாறு.



32. அன்றில்

கழிந்த காலத்தின் வழியே
பின்னேகி என்றுமாய்
இழந்த நாட்களுக்குள் மீண்டும்
நுழைந்துகொண்டேன்.
உதிர்ந்து போயிருந்த இலைகள் எழும்பிப்
பச்சைப்சேலாகப் பதிந்தன கிளைகளில்.
கிளைத்த வண்ணமிருந்தன அடிமுடியறியா
அலைகள்.
அலைந்து களைத்த கால்கள்
புதிதாய்ப் பயணப்படலாயின.
புத்தம்புதிதாய் முளைத்த வெளிகளில்
பாடிப் பறந்தன வேடனம்புக்கிரையான
புள்ளினங்கள்.
புள்ளிகளின் கோலங்கள் மறு
கோலத்திற்குத் தயாராகி….
தயாரிக்கப்பட்டிருந்த தத்துவங்கள்
திரும்பவும் தனித்தனி வார்த்தைகளாகிப்
பிறிதொரு வரிசையில்.
வரிசைகள் அழிந்து பிறந்த
தொடக்கங்களின் புதிர்வழிகளில்
என் முதல் சதுரங்கள் எங்கோ
பதுங்குகுழிகளில்.



 33. பரிமாணங்கள்
 குச்சிக் காலழகி, கோண மூக்கழகி ‘ஆலிவ் ஆயில்’ மேல்
தீரா இச்சையில்
எந்நேரமும் இருவர் தம்முள் பொருதியவாறு…..
பசலைக் கீரையைச் சுவைத்துச் சுவைத்துக் காதலை
தழைக்கவைத்துக் கொண்டிருப்பான் மாலுமி ‘பப்பாய்’.
குரோதமே காதலாய் உதைத்திருப்பான் ‘Bளூட்டோ’
நேரத்திற்கொருவரை நெருங்குவாள் சிந்தூரி!
ஆறாது வல்வினை யாற்றும் அன்பில்
வாழ்க்கை யொரு கேலிச்சித்திரமாய்.

  
34. வாகைகள்

ஒவ்வொரு முறையும் மாறிக்கொண்டே யிருக்கின்றன
ஓட்டப் பந்தய நியதிகள்.
மீறுவதற்கென்றே விதிமுறைகள்.
பக்கவாட்டுக் கோடுகளில் படாது விரைபவர் அருகில்
தரை பிளந்தோடும் காலில் தொக்கி நிற்கும் சக்கரம்.
தக்கபடி புதுக்கோடுகள் வரைந்து கொள்வார் வேறொருவர்.
ராஜாளிப் பறவையோடும் பேரம் படியச் செய்து
ரக்கை கட்டி எக்கிச் செல்வார் ஆறாம் எண்காரர்.
தட்டித் தடவி யேகுபவர் தங்கக் கோப்பைத் தாகத்தில்
குட்டிக் கரண மடிக்கத் தொடங்குவார்.
இறுதியில் வருபவரை கரம்பிடித் திழுத்து
விருதுக் கரை சேர்ப்பார் நடுவரும்….

தோல்விக் கப்பாலான துக்கம் முட்டி
கால் வலிக்கப் போய்க்கொண்டிருப்பான்
முற்றக் கற்றதொரு கத்துக்குட்டி.



35. மூன்றாம் கண்

பழம் வெல்ல வேண்டும்.
பிள்ளையாரின் வாகனம் பறந்து செல்லாது.
முருகனுக்குக் கவலையில்லை.
சித்தி விநாயகனோ சாதுர்யமாய்
அம்மையப்பனை வலம் வந்து அகிலம் என்றான்.
கனியோ
கார்த்திகேயன் மயிலை மூஞ்சூறாக்கி விழச் செய்து
கணபதி தொந்தியை பலூனாய் உந்தி யெழச் செய்து
ஒருவருக்கும் எட்டாமல் நழுவும் இனி.





0

No comments:

Post a Comment