LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Sunday, January 18, 2015

மற்றும் சிலதிறவாக் கதவுகள் ’ கவிதைகள் 25 - 30

மற்றும் சிலதிறவாக் கதவுகள் 
’ரிஷி’யின் 3ம் கவிதைத் தொகுப்பு
கவிதைகள் 25 - 30

25. வாசம்

ஆளின் வாடையும் தோலின் வாடையும்
அலசித் தீர்க்கப்பட _
அணுகலாகாது கிடக்கும்
கலங்கிய
அடிமன வாடையின்
மூர்க்கங்கள்




26.  மேடுபள்ளங்கள்

தெருவெல்லாம் இறைந்து இடந்தன தங்கக் கைக்குட்டைகள்
திடீர் தானமாய் _

(அரசியல்வாதியின் இல்லத்தில் அன்று வருமான வரிச் சோதனை)

நம்மைப் புரக்க வந்தவர் தம்மைப் புரந்துகொண்டதில்
அதிகரித்த தரித்திரர்கள்
மடித்துக் கோவணமாய் உடுத்தவும் வழியின்றி.



27. தகனம்

நாயேனானது போதும் நக்கிக் குடித்ததெல்லாம் போதும்
வாலாட்டி தலையாட்டி விசுவாசங் காட்டியதும்
வெட்கம் விட்டுப் போய் வீசெலும்பு பொறுக்கியதும்
விளக்குக் கம்பம் தேடி வீதியெலா மோடியதும்
வலி கல்லெறிக்குப் பிறகும் வாயழைப்பிற்கும் உருகி
விழி நோக அண்ணாந்து துள்ளிக் கொண்டோடியதும்
அள்ளிய கைகளெல்லாம் அன்பெனக் கொண்டதும்
தொலைவோடிய பந்தைத் துரத்திப் பிடித்து வந்து
அலைகடலை வென்றதாய் அதிகம் களித்ததும்
அரை பிஸ்கோத்துக்காய் ஆறு குட்டிக் கரணமடித்து
குறையன்பே சரணமென்று காலடியில் கிடந்ததும்
எத்தும் பாதத்தை ஏக்கம் மிகப் பற்றிச்
சுற்றிச் சுற்றி வந்ததும் சொந்தங் கொண்டாடியதும்
முன்பற்றி பின்பற்றி முதுகு தொற்றிக் குதம் முகர்ந்
துற்றதில் பற்றிய தீயில் உயிர்ச்சுனை வற்றப்
பற்றிய உன்னியும் முற்றிய வெறிநோயுமா
யெந் நாளும் பேரென்பது ஜிம்மி பப்பியாக
தீராது ஊளையிட்டுத் தினந்தினம் மலம் விழுங்கித்
தெருநாயாய் சொறிநாயாய் செத்தும் புழங்குமொரு
துப்புக் கெட்ட வாழ்க்கை யினி ஒப்பேனே பராபரமே.




28.குகைமனிதன்

காட்டுமிராண்டி தான் நான்.
முட்ட முட்டத் தளும்பி வழியும் நறுமணத்தை
நாசூக்காய் அலங்காரக் குவளையில் கொட்டிஉதடு நலுங்காமல்
நளினமாய் உறிஞ்சிக் குடிக்கத் தேவையில்லை.
வாய் கொள்ளாமல் அள்ளி விழி கிறங்க அனுபவித்த ஆனந்தம் பற்றி
அரைபக்கக் கட்டுரையொன்று கனகச்சிதமாய் எழுத வரவில்லை.
நினைத்த மாத்திரத்தில் அக்குளில்முளைத்துவிடும் சிறகுகளையும்
அவை கொண்டு நானேகிய புவியீர்ப்பைத் தாண்டிய பூகோளப் பரப்புகளையும்
பதவிசாய்க் கவிதையாக்கும் பாங்கறியேன்.
திகட்டத் திகட்ட உன்னியவற்றை யெல்லாம் சகட்டுமேனிக்குக் கடைபரப்பி
காசு உண்டாக்குகின்ற கூலவாணிபம் பழகிலேன்.
நேச மொரு பொழுதுபோக்கென்ற நிதர்சனம் விளங்கா முழு மூட மனதில்
காற்று மட்டும் களங்கமில்லாமல் வீசியவாறு….





29. அமர்வு

கிடைத்த நேரத்தில்
முடைந்த நாற்காலியில்
நான்காம் கால் பின்னப்
பொழுது காணாமல்
நட்டுவைத்த மனது முட்டுக் கொடுத்தவாறு.



30.நெல்லிக்கனி

அகலிகையின் அடிபணிந்த ராமனை அறிமுகம் செய்தாய்.
ஜானகியின் கரம் பற்றிக் கானகமெங்கும் திரிந்த
காதல் மணாளனைப் பரிச்சயமாக்கினாய்.
நாதவெளியில் மிதக்கும் நற்றவம் கற்றுத் தந்தாய்.
பாதிப்பாதியாய் ஆளுக்கொரு முனையிலிருந்து
இழைபிரித்த கனவுச்சிடுக்குகள், நனவு முடிச்சுகள் நிறையவாய்.
சிக்கவிழ்த்தோம் சில மார்க்கங்களின் திக்குகளை.
ஒருபோதும் அதிராத உன் அடிமனக் குரல் எனக்கொரு பிடிமானமாய்.
அவரவர் வெந்தழலுக்குள் கனன்றபடி
நந்தலாலாவைச் சொந்தமாக்கிக் கொண்டோம்.
நிறைமாத கர்ப்பிணியின் எதிர்பார்ப்பும் குறைப்பிரசவக் கையறு நிலையுமாய்
நம்முடைய கலந்துரையாடல்கள்
மூன்று புள்ளிகளோடே முற்றும் திறம் வரமாய்ப் புரியப்
பெருகுமாக் கடலொரு பரிசாய் உனக்கு என்றும்.


(’பத்மினி மாடம்’க்கு)

No comments:

Post a Comment