LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Thursday, June 20, 2024

குழந்தைகளுக்குப் பாதுகாப்பான உலகம்வேண்டும் _ லதா ராமகிருஷ்ணன்

 குழந்தைகளுக்குப்

பாதுகாப்பான

உலகம்வேண்டும்

_ லதா ராமகிருஷ்ணன்

.........................................................................................................................................
புதுச்சேரியில் ஒன்பது வயதுச் சிறுமி பாலியல் துன்புறுத் தலுக்கு ஆளாகி கொலை செய்யப்பட்டிருக்கிறாள். இளைஞன் ஒருவரும் 50+ வயதினரான ஒருவரும் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். இதில் இன்னும் சிலரும் கூட்டாளிகளாக இருக்கக்கூடும்.
வன்புணர்வு செய்யப்பட்டிருக்கலாம். இன்னும் உடற் கூராய்வு அறிக்கை வரவில்லை.
இப்போதெல்லாம் குழந்தைகளை வன்புணர்வு செய்வது என்பது காமுகர் களுக்கு நேரடியாகவும் மறைமுகமாக வும் இன்பமளிக்கும் ஒன்றாகிவிட்ட நிலைமை அதிர்ச்சி யளிக்கிறது.
குழந்தைகளை வைத்து பாலுறவுக் காணொளிகள் எடுப் பது சுலபமாக இருக்கிறது என்பதால் இது ஒரு பன்னாட்டு வியாபாரமாகவும் கிளைபரப்பியிருக்கிறது.
கணினியில், கைபேசி யில் சமூக ஊடகங்களில், யூட்யூப் களில் நிரம்பிவழியும் பாலுறவுக்காட்சிகளை நடை முறையில் செய்துபார்க்க குழந்தைகளே easy targets ஆக இருக்கிறார் கள்.
இத்தகைய கொடூர சம்பவங்கள் எங்கு நடந்தாலும் உடனே அதை அரசியல்ரீதியாக ஒருவரையொருவர் வசைபாடிக்கொள்ளப் பயன்படுத்துவதா தீர்வு? இது பிரச்சனையை திசைதிருப்பும் செயல்.
இப்படியொரு பயங்கரம் நடந்தால் மட்டுமே குழந்தை கள், வளரிளம்பருவத்தினரின் நலன்களை, பாதுகாப்பைப் பற்றிப் பேசுவது என்றில்லாமல் ஆசிரியர்கள், பெற்றோர் கள், சிறுவர் சிறுமியர், பொதுமக்கள், காவல்துறையினர் என பலதரப்பட்டவர் களுக்கும் விழிப்புணர்வுத் திட்டங் கள், SENSITIZATION PROGRAMMES தொடர்ந்த ரீதியில் நடைபெறவேண்டியது அவசியம்.

வாக்குரிமை _ வாக்காளர்கள் _ கருத்துத்திணிப்புகள் _ கள நிலவரங்கள் - லதா ராமகிருஷ்ணன்

 வாக்குரிமை _ வாக்காளர்கள் _

கருத்துத்திணிப்புகள் _ கள நிலவரங்கள்
- லதா ராமகிருஷ்ணன்
…………………………………………………………
பல வருடங்கள் முன்பு அலுவலகத்தோழர்கள் நடத்திக் கொண்டி ருந்த சிற்றிதழ் ஒன்றுக்காக சில தோழிகளும் நானும் தேர்தல் சமயம் யாருக்கு மக்கள் வாக்களிப்பார்கள் என்றறிய அம்பத்தூர் பகுதியில் வீடுவீடாகச் சென்று பெண்களிடம் கருத்து கேட்டோம்.
எந்தக் கட்சிக்குப் போடுவார்கள், ஏன், வீட்டு ஆண்கள் சொல்பவர்களுக்குத் தான் வாக்களிப்பார்களா, தங்கள் பகுதியில் அவர்கள் என்ன எதிர்பார்க் கிறார்கள் என்ப தாக.
மிகவும் தெளிவாக பதிலளித்தார்கள். நல்ல கட்சி என்றா லும் தோற்கும் கட்சிக்கு வாக்களிப் பதில் தயக்கம் இருந் தது. தங்கள் வாக்கு வீணாகிவிடுமே என்ற எண்ணம் அவர்களுக்கு இருந்தது.
நிறைய அரசியல்வாதிகள் வெறுமே வாக்குறுதிகளை அளிப்பதாகக் கூறினார்கள். தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு தொகுதிப்பக்கம் வருவதேயில்லை என்று பலர் கூறினார்கள்.
உடனடித் தேவை நிறைவேற்றத்தை விட நிரந்தர வாழ் வாதார வழிவகைகளுக்கு அரசுகள் உதவ வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக, கோரிக்கை யாக இருந்தது.
வழக்கமாக முன்வைக்கப்படும் ‘வீர வசனங்கள்’ பிரி வினை வாதங்கள், வெற்று முழக்கங்கள், பொதுமக்க ளிடம் பெரிய அளவு தாக்கம் ஏற்படுத்தவில்லை என்பது தெரிந்தது.
அவர்கள் நடப்புநிலவரங்களைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்கள், சொல்லுக்கும் செயலுக்குமான தொடர்பைக் கணக்கிலெடுத்துக்கொள்கிறார்கள். ‘எதற்கு வம்பு’ என்று தங்கள் கருத்துகளைத் தங்களுக்குள்ளேயே சேமித்துக் கொண்டிருக்கிறார்கள்.
தகுந்த மாற்றுகள் இல்லாத போது இருப்பவற்றில் ஒன் றைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் மக்களுக்கு ஏற்படுகிறது.
தகுதியான, நம்பத்தகுந்த மாற்றாக ஒன்று அவர்களுக்குத் தட்டுப்படும்போது அவர்கள் அதற்கும் வாய்ப்பளித்துப் பார்க்கி றார்கள் (தில்லியில் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி இதற்கு ஓர் உதாரணம்).
மக்களின் கருத்துகளைக் கேட்டுக் குறித்துக்கொண்ட பிறகு அந்தப் பகுதியின் வேட்பாளர்களில் ஒருவரும் அவருடைய ஆதரவாளர் களும் கூடியிருந்த இடத்திற்குச் சென்றோம்.
அங்கு சிறிய கூட்டம்தான். வந்திருந்த எல்லோருக்கும்
அலுமினியத் தட்டுகளில் எளிய உணவு பரிமாறப்பட்டது, பிரபல கட்சிகளைச் சாராதவர் என்றாலும் உழைக்கும் மக்கள் அதிகம் வாழும் பகுதி என்பதால் அவர் அங்கே வெற்றிபெறும் வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகவே பல ரும் கருதியிருக்கக் கூடும். நல்ல மனிதர் அவர். ஆனால் மக்களிடம் அவ்வளவாக அறிமுகமுல்லா தவர்.
என்னிடம் கேட்கப் பட்ட போது நாங்கள் மேற்கொண்ட கள ஆய்வின்படி, அதிகபட்சமாக ஆயிரம், ஆயிரத்தி யைந்நூறு வாக்குகளே கிடைக்கும் என்றேன்.
கூட்டத்தில் தர்மசங்கடமான மௌனம் நிலவியது. அப்படி வெளிப் படையாகச் சொல்வது அரசியல் நாகரீகமற்ற செயலோ என்னவோ. ... ஆனால், எனக்கு உண்மை யெனப் பட்டதைச் சொல்லிவிடுவதே சரியென்று தோன்றி யது.
அந்த தேர்தலில் அந்த நல்ல மனிதர் அவ்வளவுதான் வாக்கு களைப் பெற்றிருந்தார்.
அப்போது ஜெயலலிதா அவர்கள் அரசியலில் காலடி யெடுத்து வைத்திருந்த நேரம். அந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தவர்கள் (அரசியல் ரீதியாய் மாற்றுக்கொள்கை யுடையவர்கள் என்றாலும்) ஜெயலலிதா அடுத்துவரும் வருடங்களில் தமிழக அரசியலில் தலைமைப்பொறுப் பில் இருப்பார், இப்போதே ஐ.ஏ.எஸ் பதவி நியமனங் களை யெல்லாம் அவர்தான் பார்த்துக் கொள்கிறார் என்றெல்லாம் கருத்துரைத்ததைக் கேட்டு எனக்கு ஆச்சரியமாக இருந்தது; வேடிக்கையாக இருந்தது.
அறிவுசாலிகள். களப்பணியாளர்கள் – இவர்களேகூட சினிமா மாயையில் விழுந்தவர்களாய் இப்படிப் பேசுகி றார்களே என்று எரிச்சலாகக்கூட இருந்தது.
ஆனால், அவர்கள் சொன்னதுதான் பிறகு நடந்தது.
கருத்துத்திணிப்புகள் வேறு, களநிலவரம் வேறு என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

கணக்கு

 கணக்கு

தமிழ்நாடே சொன்னது என்றார்.
தானே தமிழ்நாடெனக் கொண்டார்.

மெய்ப்பொருள் காண்பதறிவு - லதா ராமகிருஷ்ணன்

 மெய்ப்பொருள் காண்பதறிவு

லதா ராமகிருஷ்ணன்

............................................................................
இளக்காரச்சிரிப்போடு எத்தனை இழித்துப்பேசினாலும் இன்று தமிழக அரசியல் களத்தில் தவிர்க்கமுடியாத சக்தியாக திரு.அண்ணாமலை உருவெடுத்திருக்கிறார் என்பது மறுக்கமுடியாத உண்மை.
ஜூனியர் விகடன் போன்ற பத்திரிகைகள் அரைநிக்கர் போட்ட ‘லூஸு’ப்பையனாகத் திரும்பத்திரும்ப இந்த அரசியல்வாதியைச் சித்தரித்துத் தன் அரசியல் கடமையை செவ்வனே ஆற்றிக் கொண்டிருந்தாலும் அரசியல் சார்ந்தும், சாராமலுமாய் எத்த னையோ விஷயங்களைப் பற்றி அவர் ஆற்றிவரும் ஆழமான உரைகள், கண்ணியமாக அவர் தனது எதிர்க்கருத்துகளை வெளியிடும் முறை, ஆதாரபூர்வமாகத் தன் குற்றச்சாட் டுகளை முன்வைப்பது, தமிழகத்தையே தாங்கள்தான் குத்தகை எடுத்திருப்பதான பாவனையில் பேசாதது, முக்கியமாக எதிர்தரப்பு அரசியல்வாதி களைப் பற்றிப் பேசும்போது முகத்தில் இளக்காரச் சிரிப்பு இல்லாதது போன்றவை பல வருடங்களாகக் காணக் கிடைக்காத ஆக்கபூர்வமான விஷயங்களாகவே இருக்கின்றன.

சமீபநாட்களாக தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனை என்ற விஷயம் பற்றிப் பரவலாகப் பேசப்படுகிறது. அதையொட்டி திரு.அண்ணாமலை வெளியிட்டிருக்கும் காணொளிப்பதிவு லிங்க் இங்கே பகிரப்படுகிறது.

https://youtu.be/orzMtaYlqaQ?si=u89kGqmEEnMC4maC

இளந்தலைமுறையினரை மிகவும் பாதிக்கும் சமூக சீர்கேடு போதைப்பொருள் விற்பனை. எனவே, கட்சி சார்புகளுக்கு அப்பாற்பட்டு இந்த விஷயத்தை மக்களாகிய நாம் அணுக வேண்டும். அணுகுவோம் என்பது என் எதிர்பார்ப்பும் நம்பிக்கையும்.

’போகிற போக்கில்’ [என்னுடைய எட்டாவது கவிதைத்தொகுப்பு] - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

’போகிற போக்கில்’


 [என்னுடைய எட்டாவது கவிதைத்தொகுப்பு]

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)

என்னுடைய எட்டாவது கவிதைத்தொகுப்பு ’போகிற போக்கில்’. 24 கவிதைகள் கொண்ட சிறுநூல். 2011இல் வெளியாகியது. அதில் கடைசிக் கவிதையாக இடம்பெறு வது இப்போது ஆஸ்கார் வி்ருது வாங்கியுள்ள நடிகர் வில் ஸ்மித் நடித்த அற்புதமான படம்The Pursuit of Happyness. அதை பதிவேற்றலாம் என்று தேடியபோது கணினியில் சேமித்துவைத்திருக்கும் போகிறபோக்கில் தொகுப்பு (சிறு நூல் தான்) ஒரு வாசகராக அதை பலநாட்களுக்குப் பிறகு மீண்டும் படித்துப்பார்த்தேன். நிறைய கவிதைகள் நன்றாகவே இருப்பதாய் மனதிற்கு நிறைவாயிருந்தது. அந்தச் சிறுதொகுப்பு இதோ.

.......................................................................................................
என்னுரை
கவிதை என்பது இலக்கியத்தின் ’சபிக்கப்பட்ட பிரிவாகப் பார்க்கப்படும் கால கட்டம் இது. குறிப்பாக தமிழில். இலக்கியமே கவிதைவடிவில் இயங்கிவந்த மொழியி தில் இன்று அரசு நூலகங்கள் கவிதைத்தொகுப்புகளை ’பீச்சாங்கை வீச்சாக' புறமுதுகிவிடும் போக்கு நிலவு கிறது. [கடந்த சில வருடங்களாக அரசு நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்கப்பட வில்லை என்று கேள்வி] இருந்தும் கவிதை எழுதுகிறவர்கள் எழுதியவாறே... வாசிப்பவர்கள் வாசித்தவாறே...
அப்படி கவிதையில் - எழுதுவதிலும், வாசிப்பதிலும் -
என்ன இருக்கிறது?
'கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்’
ரிஷி
...............................................................................................
போகிற போக்கில்...
1
ஒருவர் ஒன்றை மொழிந்ததுதான் தாமதம்
அந்த இன்னொருவரின் கை
வழக்கம்போல் வீறிட்டெழுந்துவிடும்!
வெறிகொண்ட பரவசத்தில் அவர் உடல் துடித்தெழ
கூறப்பட்டதை தனக்குரிய விதத்தில்
பொருள்பெயர்த்துத் தந்துவிடும்
அவர் வாய்
பல வண்ணங்களில்
பிறழ்வாய்
பிறவாய்.
சகபயணிகளில் இது ஒரு வகை.
பரவலாய் காணக்கிடைப்பதுதான்
ஒரு கேள்வியை இடைமறித்து
கச்சிதமாய் தவறான விடையளிக்கும்
பரிதாபத்திற்குரிய மே(ல்)தாவித்தனம்.
தம்மைக் கதிரோனாய்
காவ்யாசானாய்
கருதிக்கொள்வதும் காட்டிக்கொள்வதுமாய்
இரவல் வெளிச்சங்கள் நம்மை வழிநடத்தப் பார்க்கும்.
விழிப்போடிருக்கவேண்டும்.
2
உன்னுடைய எண்ணங்களை கைபோன போக்கில்
வெட்டி
கண்ணுக்குப் புலனாகாத தட்டொன்றில் பரப்பி
நீட்டுகிறாய்என்னிடம்.
ஆப்பிள்துண்டுகளாகவோ ஆரஞ்சுச்சுளைகளாகவோ
ஆர்வம்பொங்க அவற்றை நான்
அள்ளியெடுத்துக்கொள்ளவேண்டும்,
அதற்காய் காலத்திற்கும் நன்றியோடிருக்கவேண்டும்.
என்பது உன் எதிர்பார்ப்பு.
எனக்குத் தெரியும்தான்.
அவ்விதம் செய்யாவிடில்
என்னையோர் எதிர்மறை கிளர்ச்சியாளராய்
குற்றஞ்சாட்டி
நடுவீதியில் நாயாய் கல்லடி படச்செய்வாய்.
அதுவும் தெரியும்தான்.
என்றாலும்
மாற்றுச் சிந்தனைகள் தரும்
காற்றும் ஒளியும் ஊற்றும்
என்னுள்ளே
முகிழ்த்து மலர்ந்து மணம்வீசிக்கொண்டிருக்க
உன்னை மறுத்து முன்னேகுவதே
என்னுயிரின் உயிர்ப்பாய்.
3
அவருடைய கால்களில் அவர் நடந்துகொண்டிருந்தார்.
தேடிச் சென்று இடைமறித்த வித்தகர்
முன்னவரின் கால்களைப் போலவே தனக்கும்
பாதங்கள் இரண்டும் பத்துவிரல்களும்தான் என்றாலும்
அவா போகும் தொலைவும்
தான் போகும் தொலைவும ஒன்றல்ல என்றார்.
“கண்டிப்பாக பயண இலக்குகளுக்கேற்ப வேறுபடும்
தொலைவும்; மேலும்
தொலைவின் தொலைவு கிலோமீட்டர்களில்
அடங்காதது" என்று
முன்னவர் மொழிய
’விவரம் தெரிந்த ஆசாமிதான் போலும்’ என்று
வழிவிலகிச் சென்று விட்டார் பின்னவர்
பின்னங்கால் பிடரியில் பட ஓட்டமாய் ஓடி !
4
குருவி தென்படாத இயற்கைச்சூழலினூடாய்
பயணித்துக்குக்கொண்டிருக்கும்போதும்
கவண்கல்லைக் கையிலெடுத்துக் குறிபார்த்துச்
சென்றால்
கல் இடறி காலில் காயம்படத்தான் செய்யும்.
சுயநலம் கருதியேனும்
சகவுயிர்களை நல்லவிதமாக நடத்தப் பழகு.
"சகோதரத்துவம் மனிதரிடமே வராத போது
மிருகங்களிடம் எப்படி வரும்”, என்று எதிர்க்கேள்வி
கேட்கிறயா?
பதில்சொல்லக் காத்திருக்கின்றன வழியெங்கும்
புதைகுழிகளும் பேரழிவுகளும்.
5
கவியும் இருளில் சில சமயங்களில்
நிலாவாகிவிடுகிறேன் நான்!
இரு இரு
கனிந்து மெழுகென உருகும் என்னிடம்
சந்திரனை இரவல் ஒளியாக உண்மையுரைத்து
எந்தப் புண்ணியமுமில்லை; புரிந்துகொள்.
ஒரு தண்ணணைப்பு அருள்பாலிக்க
பறக்கத் தொடங்குகிறேன்!
பரிகசிப்பதை சற்றே நிறுத்தி
முயன்று பார்.
மயிலாகிவிடக்கூடும் நீயும்!
6
நடக்கும் கால்களின் தாளகதியும்
ஓடும் கால்களின் தாளசுதியும்
ஒருபோலல்ல.
புரிந்துகொள்ள
நீ நடந்திருக்கவும் ஓடியிருக்கவும் வேண்டும்.
அல்லது, நடப்பவரை ஓடுபவரை
பார்த்திருக்கவேண்டும்.
எதையுமே செய்யாமல் இயந்திரகதியில்
பரபரபர பப்பரவெனப் பயணமாகும் உனக்கு
பிடிபடுமோ இசையும் நடனமும்?
7
முன்னேகியவாறு இருப்பது மட்டுமே பயணம் என்று
சொன்னது யார்?
கைதவறிக் கீழே விழுந்துவிட்ட கைக்குட்டையைக்
குனிந்து எடுக்க,
யதேச்சையாக அந்தக் குளத்தின் நடுவே தட்டுப்பட்ட
கண்கொள்ளாப் பூவை விழிவழியே போய் தீண்டிப்
பரவசமாக,
என்றைக்குமாய் பிரிந்துசெல்பவர் முதுகை
இறுதியாய் இன்னொரு தடவை
இதயத்தில் பெருகும் வலியோடு பார்க்க,
தூர்ந்துப்போய்விட்ட நீர்நிலையில்
வெள்ளம் பெருகிய நாளில்
மீண்டும் கால்நனைக்க,
அன்றொரு நாளின் ஆறாக்காதல் அரவணைப்பை
திரும்பவும்
அனுபவங்கொள்ள...
பின்னேகுவதும் பயணத்தின் ஓர் அம்சமாய்
ஊசலாடும் காலத்தின் 'பெண்டுலம்' அசைந்தவாறு.
8
கும்மிருட்டு.
குறுகலான பாதை.
இருமருங்கும் நெருஞ்சிமுட்புதர்கள்.
கைவிளக்கைக் கொண்டுவராமல் போய்விட்டோமே
என்று கலங்கி நிற்கையில்
எங்கிருந்தோ வந்த மின்மினி
கண்ணிமைப்போதில்
சன்னமாய் ஆற்றின் பரிமாணங்களை
அளந்துகாட்டிவிடுகிறது!
சில நேரங்களில் நெருப்புக்கோழியும் கூட!!
9
வலப்புறம் பிரம்மாண்டமான கோட்டையிருந்தது.
இடப்புறம் நீண்டு நெளிந்து
சுழித்தோடிககொண்டிருந்தது
ஆறு.
‘எல்லா நீரும் ஒருபோல; எனில்,
ஒவ்வொரு கோட்டையும் தனித்தன்மையானது.
எனவே கோட்டைக்குப் போய் பார்த்துவிட்டு வரலாம்
என்றார் 'இவர்’.
’பாரபட்ச சமூகத்தைப் பறைசாற்றுவதைத் தவிர
வேறென்ன உண்டு கோட்டையில்?
எனில், பிரதிபலன் எதிர்பாரா ஆறு
தியாகத்தின் மறு உருவம்; நிரந்தரத்தின் நிதர்சனம்!
இயற்கை நமக்களித்திருக்கும் மகோன்னத ஆடி!
இன்னும் என்னென்னவோ...
ஆற்றங்கரையில் அமர்ந்தாலே போதும் - வாழ்க்கை
பொருளுடைத்தாகும்'
என்றார் ’அவர் '.
பயணத்தையே வண்ணமயமாக்கிக்கொண்டிருக்கின்றன
கலைடாஸ்கோப் கோலங்கள் !
10
மலையிலும் சுவர்களிலும்
மின்சார ரயிலின் உட்புறங்களிலும்
கீறப்பட்ட பெயர்களை
சிரிப்பும் குறுகுறுப்புமாய் வாசித்தவாறு
போய்க்கொண்டிருந்தனர் பயணியர்.
கவனமும் அக்கறையுமாய் தேடும் கண்களுக்கு
தட்டுப்படக்கூடும்
காற்றில் செதுக்கப்பட்டவையும்!
தென்றலும் புயலும் பேச்சும் மூச்சுமாய்
என் உன் வாழ்வெல்லாம்
காற்று வெளியிடை கண்ணம்மா...!
11
தொடக்கப்புள்ளியிருந்து வெகுதூரம் வந்தாயிற்று -
போகவேண்டிய தூரம் அதிகம் என்ற தெளிவோடு
சிறுகற்கள் மலைமுகடுகளாய் வழியடைத்த நிலை மாறி
பெரும்பாறைகளும் இன்று துகள்களாகிவிட்ட
ரசவாதம்!
கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்!!
புரியாமல்
கருத்துப்போர்வையில் கற்களைச் சுருட்டியெடுத்துவந்து
கைபோனபோக்கில் என் ஆறெங்கும்
இறைத்துக்கொண்டிருக்கும் நீ
எப்போதுமே
ஐயோ பாவம்!
12
உன் உன்னும் என்னும் முன்னும் பின்னும்
ஒடுங்கும் ஒருமைக்குள்.
எதிர்வினைக்கும் அறவுரைக்கும் இடையே நிறையும்
அகழி மறைத்துக்
கவியும் காரிருள்.
என் என்னும் உன்னும் இன்னும்
என்னென்னவும்
புதிரவிழ்க்கும் எல்லையின்மைக்குள்
இல்லையாகிவிடும் உன் எல்லாமும்!
13
இருந்தாற்போலிருந்து
ஒரு காலாதீதத் தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்டு
வேர்த்துவிறுவிறுவிறுத்துப் பாய்ந்துவந்து
வழியெங்கும் ஆர்ப்பரித்துக் கொட்டி முழக்குகிறது
அறியாமை புரையோடிய அந்த வரி:
'இருண்மை தமிழுக்குப் புதிதோபுதிது'
கேட்டு
சங்ககாலம் தொட்டு நவீன
தமிழ்க்கவிதைவெளியெங்கும்
வாயார வயிறுகுலுங்க கவிகள்
சிரித்துக்கொண்டிருப்பதைப் பார்க்க
எத்தனை மகிழ்ச்சியாயிருக்கிறது தெரியுமா?
காயப்படுத்தும் சூழலிலேயே வாழப்பழகியவர்கள்;
கழுவேற்ற மேடை வெகு பரிச்சயமானவர்கள்;
வதைமுகாம்களே வசிப்பிடமானவர்கள்
வடிகட்டிய பாழ் கண்டு
விழுந்து விழுந்து சிரிக்காமல் என் செய்வார்கள்?
இறந்துபோய்விட்டவர்களில் புதைக்கப்பட்டவர்கள்
கல்லறைகளில் புரண்டு சிரிக்க,
எரித்துவிட்டவர்கள் திரும்ப எழுந்துநின்று
குதிக்கிறார்கள் "ஹே, இது என்ன புதுக்கதை என்று!”
இருந்துவரும் கவிகளின் செவிப்பறைகளை அந்த
உச்சபட்ச அபத்த வரி
சென்றடையும் நேரம்
நிச்சயம் சீறத்தொடங்கும் சில எரிமலைகள்.
“சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா!"
சொன்ன பாரதியாரை வெறும் பிரச்சாரக்கவி
என்பாரை
'கல்லுக்குள் தேரை கவனித்து'க் கொள்ளும்.
மெல்ல
சன்னமாய் என் காதுகளுக்குள்ளும் ரீங்கரிக்குமாறு
சில்வண்டிடம் வேண்டிக்கொண்டு
தொடரும் என் பயணம்.
14
சாலையோரங்களில் சில வீடுகள்
சிலவற்றில் வெளியே அமர்விடங்கள் உண்டு.
இளைப்பாற வரும் வழிப்போக்கர்கள் பலவகை.
அடுத்தவருக்கு இடம் தராமல் தம்மை விரித்துப்
பரப்பிக்கொள்ளும் சிலர்
‘அதனாலென்ன பரவாயில்லை' என்று தரையமரும்
சகபயணியை
சீடராக வரித்துக்கொண்டு சிட்சையளிக்கப்
புறப்பட்டுவிடுவார்கள்.
(பீடம் கிடைக்க வேறேது கதி?)
இதற்கு கால்வலியே மேல் என்று எழுந்துகொண்டு
விடுபவரை
வழிமறித்து பிடித்திழுத்து செவிப்பறை கிழியக்கிழிய
சொல்லித்தருவார்கள் -
'சொல்லும் சொல்' பழகாதவர்கள்.
சொக்கப்பித்தளை இளிப்பை
சொல்ல வல்லாயோ கிளியே...
15
அன்பிற்காகும்;
அவதூறுக்காகும்.
ஆசுவாசத்திற்காகும்.
அக்கப்போருக்காகும்;
அறிவுக்கூடமாகும்;
அதிகாரபீடமாகும்...
அகழ்வாரைத் தாங்கும் நிலம்.
அதுதானோ திண்ணையும்?
16
செல்வழியெங்கும் பாய்ந்தோடிக்கொண்டிருக்கிறது
சிந்தா நதி யொன்று!
படகில்லை,
நீந்தத் தெரியாது,
சிறகில்லை,
பறக்கமுடியாது...
ஆனாலுமென்ன?
ஏழு கடல் ஏழு மலை தாண்டி
அந்தப் பச்சைக்கிளியைக் கண்டடைவதுதானே
வழிச்செலவின் வரவு
என்று சுழித்தோடியவாறு அறிவுறுத்துகிறது ஆறு!
17
தெம்மாங்குப் பாட்டு தெரியாது.
கர்நாடக இசை படித்ததில்லை.
இந்துஸ்தானி, ஜாஸ், ராக், கஸல்
என்று எத்தனையெத்தனை உலகில்!
எதிலுமே பயிற்சியில்லை.
ஆனபோதும், குரலெடுத்துப் பாட வேண்டுமாய் எழும்
இந்தத் திருத்தினவை என்செய்ய...?
மெய்யோ பொய்யோ
உளதாம் குரல்வளம்;
உறுதியாய் கிளம்பும்தான் சுருதிபேதம்.
உச்சஸ்தாயியை எட்டமுடியாது;
பிசிறு தட்டும்.
நிச்சயமாய்த் தெரிந்தாலும்
இச்சமயம் வனாந்திரத்தில் எதிரொலிக்கும் குரலாய்
விரியும் இந்தப் பெருங்கனவை என்செய்ய?
பாடிவிடவேண்டியதுதான்'
18
அதெப்படியோ தெரியவில்லை
அயர்வையெல்லாம் மீறி
அவ்வப்போது என் நடையொரு துள்ளலாக
மாறிவிடுகிறது!
தேர்க்கால்களாக
புரவிப்பாய்ச்சலாக
அவ்வளவு ஏன் -
சற்றுமுன்னர் தான் சிறிதுநேரம்
மின்னலாகியிருந்தேன்!'
19
”உனக்கு நீயே என்ன பிதற்றிக்கொண்டு போகிறாய்?”
தாழப்பறந்துவந்து அன்போடு என் தலைதட்டிக்
கேட்டது கொக்கு.
”மழலைப்பேச்சு மற்றவருக்குப் புரியாது -
மக்கு! மக்கு!"
என்று செல்லமாய் அதன் நீள்மூக்கை நீவிவிட்டபடி
கூறினேன்.
இன்னுமா பாதைக்குப் பக்குவப்படவில்லை?" என்று
கடிந்துகொண்டது
கரையோர முதலை.
"காத்திரு" என்று வேண்டிக்கொண்டேன்.
'நாளை மற்றுமொரு நாளாகாத' நாளில் தருவேன்
நல்லதோர் பதிலை.
20
அருகேயொரு வண்ணத்துப்பூச்சி
பறந்து கொண்டிருக்கிறது
அற்புதச் சிறகுகளோடு!
ஆனால், எனக்கு ஆறறிவு இருக்கிறது!.
அந்த அசோகமரம்தான் எத்தனை உயர்ந்தோங்கி
வளர்ந்திருக்கிறது!
ஆனால், எனக்கு ஆறறிவு இருக்கிறது.
வழியில் காணக்கிடைத்த ஆமையின் ஓடு
அத்தனை உறுதியானது!
ஆனால், எனக்கு ஆறறிவு இருக்கிறது.
கருங்கல்லின் சொரசொரப்பும் கூழாங்கல்லின்
வழுவழுப்பும்
தொடுவுணர்வின் நல்வினைப்பயனாகிறது!
ஆனால், எனக்கு ஆறறிவு இருக்கிறது.
நாயின் மோப்பசக்தி எத்தனை நம்பிக்கைக்குரியது!
ஆனால், எனக்கு ஆறறிவு இருக்கிறது.
சிலந்திவலையின் தொழில்நுட்பம்
சொல்லிலடங்காது!
ஆனால், எனக்கு ஆறறிவு இருக்கிறது.
ஆனால்... ஆறறிவில் என்ன இருக்கிறது..?
21
வீதியெங்கும் சிதறிக்கிடக்கின்றன
வெட்டரிவாள்கள்;
வறுமையின் பரிமாணங்கள்;
பாதிக்கால்கள்;
பலியான நீதிநியாயங்கள்
பிய்த்தெடுத்த நகக்கணுக்கள்;
பொய்த்துப்போன வாக்குறுதிகள்;
வெறியின் விரிவுகள்;
வேறுபலவும் நிரம்ப
உலர்ந்தும் உலராமலும் பெருகியவாறிருக்கும் குருதியில்
மொய்த்திருக்கும் ஈக்கள் நோய்க்கிருமிகளைப்
பரப்பியவாறு...
கடந்துசெல்ல இயலவில்லை
நினைப்பிலும் நடப்பிலும்.
பயணத்தில் இந்தக் கையறுநிலை நேராதிருந்தால்
எத்தனை நன்றாயிருக்கும்.....
ஆறாது ஏங்கிச்சோரும் பித்துமனதைக்
காக்க காக்க கவிதை காக்க...
22.தோட்டாக்களும் வெட்டரிவாளும் வாழ்க்கையும்
துப்பாக்கிகளிலிருந்து பீறிட்டுக்கிளம்பும் தோட்டாக்கள்
தினமும் என் வீட்டிற்குள் தெறித்துவிழுந்தவண்ணம்...
'மக்பெத் மனைவி’ அல்ல என்றாலும்
என் மனமெங்கும் ரத்தக்கறை படிந்திருப்பதாய்
கழுவ இயலாது
தழுவ இயலாது
கொலைக்களங்களினூடாய், சடலங்களை
மிதித்தபடி
நகர்ந்துகொண்டிருக்கிறேன்.
நாளும் முதுகுகளின் பின்னாலிருந்து
சட்டென மேலெழும்பும்
வெட்டரிவாள்களின் வன்மத்தில்
மூச்சடைக்கிறது.
அத்தனை அந்நியோன்யமானவர்கள்
ஆளாளுக்கு நஞ்சூட்டி
அவதூறும் வஞ்சகமுமே வாழ்வாய்
அரிச்சுவடி கற்பிக்க...
எனக்கு நானே எதிரியாகிவிடுவேனோ என்று
ஒரே கலவரமாயிருக்கிறது.
நலிந்துகொண்டிருக்கிறது கலை, கலாச்சாரம்
கசடறக்கற்கவேண்டிய வாழ்க்கை
எல்லாம்...
நடுங்கும் மனதின் ஒரே நம்பிக்கையாய்
‘ரிமோட்’.
23. நிலாமுயலும் நாமும்
நிலவிலுள்ள முயலை இந்தக் குழந்தைகளுக்கு
நேயமுடன் அறிமுகப்படுத்த
யாருக்கும் ஆர்வமில்லை;
அவகாசமில்லை.
காத்திருக்காத காலத்தில் காத்துக்கொண்டிருக்கிறார்கள்
பிள்ளைகள்.
பெரியவர்களின் கைவிரல்களில் கசியக்கூடிய
அன்பின் கருணையை அறவே அகற்றி
ஆளுக்கொரு கழியை இறுகப்பிடிக்கச்
செய்திருக்கும்
கிராதகப்பேய்க்கு எத்தனையோ பெயர்கள்.
'தீதும் நன்றும் பிறர் தர வாரா'
-அல்பகல் தாக்கும் தொல்பாடல் வரி.
இருந்தாற்போலிருந்து வெடித்துக்கிளம்பும்
பதுங்குகுழி.
அன்றாடம் உருகிக்கொண்டிருக்கின்றன
ஆர்க்டிக் துருவப் பனிப்பாறைகள்.
ஆழிப்பேரலையும் இங்கே
நகைச்சுவைப்பொருளாயிற்று.
அந்தக் குப்பைத்தொட்டியில் கிளறிக்கொண்டிருக்கும்
ஏழைச்சிறுமியின் உள்ளங்கையைப்
பதம்பார்க்கக் காத்துக்கிடப்பது
ஆணியோ, கண்ணாடித்துண்டோ,
தீகரப்பட்டையோ...
”அய்யோ...” எனப் பெருங்குரலெடுத்துக்
கதறவும் இயலாமல்
குரல்வளை நெரிக்கப்பட்டிருக்கும் நம்மில் யாருக்கும்
ஆர்வமில்லை
அவகாசமில்லை
நிலவிலுள்ள முயலை இந்தக்
குழந்தைகளுக்கு
நேயமுடன் அறிமுகப்படுத்த...
காத்திருக்காத காலத்தில் இன்னமும்
காத்துக்கொண்டிருக்கிறார்கள் குழந்தைகள்.
24. மகிழ்ச்சியைத் தேடி...
ஆரம்பமும் முடிவும் காணலாகா வாழ்க்கையொன்று
என் கண் முன்.
அன்புமயமான அந்தத் தகப்பனின் கைபிடித்திருக்கும்
பிள்ளையோடு பிள்ளையாய் போகத் தொடங்குகிறேன்.
அவனை விட்டுப் பிரிந்துசென்ற மனைவியாகி
மீண்டும் அவனைத் தேடிவந்து முத்தமிடுகிறேன்.
அந்தக் கண்களில் குத்திநிற்கும் முட்களையெல்லாம்
வலிக்காமல் ஒவ்வொன்றாய் பிடுங்கியெறியும் வழிதான்
தெரியவில்லை.
விரையும் வேகத்தில் 'ராணுவ வீரனின் பொம்மை
கைநழுவி
சாலை நடுவில் விழுந்து விபத்துக்குள்ளாக,
பேருந்திலிருந்து ஏங்கித் திரும்பும் சிறுவனின் விழிகளில்
நிறையும் நிராதரவில், குற்றவுணர்வில்,
உறவைப் பிரிந்த தவிப்பில்
இன்றும் நேற்றும் நாளையும் சிறைச்சாலையாகிவிடுகிறது உலகம்.
மகிழ்ச்சியைத் தேடி மகனை தோள்மீது சுமந்தபடி
நாளெல்லாம் ஓடித் திரிகிறான் க்ரிஸ்.
தினமும் தங்கவும் தூங்கவும் இடமில்லாமல்
அறைதேடி அல்லாடும் வழியெல்லாம் சிலுவைகள்.
அவரவர் உலகங்களை அன்பிணைக்க
இரத்ததானம் அளித்துப் பெறும் பணத்தில்
மகனுக்கு விருந்தளித்து மகிழ்பவன் மீண்டும் ஓடுகிறான்.
வேலை கிடைத்த மகிழ்ச்சியில் மகனை
மார்போடணைத்து
ராஜகுமாரனாக்குகிறான்!
அடுத்தவேளை சோறுக்கே வழியில்லாத நாளிலும்
ஆளரவமற்ற இரயில் நிலையத்தில்
மகனுக்காக
டினோசார் வாழும் காட்டையே
நிர்மாணித்தவனாயிற்றே!
”கோள்கள் எத்தனை?”
“ஏழு”
”இல்லை, ஒன்பது" ”வனராஜா யார்?"
"கொரில்லா”
”இல்லை, சிங்கம்”
தந்தையின் கேள்விகளுக்கு தயங்காமல் பதிலளிக்கும்
மகன்.
(தவறாய் இருந்தால்தான் என்ன!)
எனில், அன்றொரு நாள் மகன் கேட்கும் கேள்வியில்
கதிகலங்கி நிற்கிறான் தந்தை:
”அம்மா என்னால் தான் பிரிந்து போனாளா?”
“இல்லை, அம்மா தன்னால் தான் போனாள்”.
“நீ விரும்பினால் குகைக்கே திரும்பிவிடலாம்" என்று
பரிவோடு
கூறுகிறது பிள்ளை.
”வெறுமே கடற்கரைக்குச் சென்றோம்
எல்லாவற்றிலிருந்தும் தொலைவாக;
ஏமாற்றத்திலிருந்து வெகுதொலைவாக
என் வாழ்க்கையின் இந்தப் பகுதி
’இந்தச் சின்னஞ்சிறு பகுதியே மகிழ்ச்சியென்று அழைக்கப்படுகிறது”
என்கிறான் க்ரிஸ்.
”என்ன நடந்தாலும் சரி, நீ செய்தது அற்புதமான
காரியம்
நல்லபடியாக கவனித்துக்கொள் உன்னை”
என்றவரை
வேண்டி விரும்பி வழிமொழிகிறேன் நானும்.
காரணம் புரியாமல் விழிநிரம்பும் கண்ணீர்.
க்ரிஸ்ஸுக்காகவும் எனக்காகவும் உங்களுக்காகவும்
கருணை செய்யட்டும் காலம்.