LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Friday, May 22, 2026

அம்மாவின் சித்திரம் பிரம்மராஜன் (மஹாவாக்கியம்(2000த்தில் வெளியானது) தொகுப்பிலிருந்து)

 அம்மாவின் சித்திரம்

பிரம்மராஜன்
(மஹாவாக்கியம்(2000த்தில் வெளியானது) தொகுப்பிலிருந்து)








புகைப்படமெழுதாது கோட்டுத்தீட்டல்களில்
பதித்துவிடவே ஒத்திப்போட்டிருந்தேன்
தூரிகை எதுவும் தோதாகவில்லை
சாக்குச் சொல்லி
என் அம்மையின் படத்தை சாசனப்படுத்த
துணியும் வாக்குமூல மொழியில்
பாழுற்றுக் கிடந்த பால்யத்தின் தனிமுகம்
தாளடியில் தடுக்கும் நீர்க்கோடாய்க் கவிழ்க்கும்
பிச்சைக்காரிகளின் முகம் அவளதாய்த் தோன்றுவதாகத்
துக்கம் தவிர்ப்பது எவ்விதம்
எதற்குமில்லாதிருக்கிறது உறுதி
சாட்சாத் என் பிறவியைக் கருக்கொள்கிறேன்
அந்த நாழிகையில் என
அவள் ஊன் திளைப்பில் கவிமுகம் கண்டிருக்க
வாய்ப்பில்லை
சுழன்று சென்றுவிட்ட
வேற்றுப் பிரபஞ்சமானது
பால்யம் மாற்ருவதற்கில்லை
என்பதால்
எவரது மன்னிப்பையும்
கோருவதற்கில்லை இந்நிகழ்ப்படம்
ஓவியனின் சுருக்க ஒப்பத்துடன்
முற்றுகிறது
அம்மாவின் பிம்பங்களைத் தேடுவதில்
இவள்களிடம் சென்றிருக்கிறேன்
பிடித்தேனில்லை
சிக்கென
என் ஓவியம் எனக்குப் பிடிபடும் இச்சமய வாழ்விலும்

MOTHER'S DAY POEMS - அம்மாவின் பொய்கள் - கவிஞர் ஞானக்கூத்தன்

அம்மாவின் பொய்கள்

கவிஞர் ஞானக்கூத்தன்


..............................................................................
பெண்ணுடன் சினேகம் கொண்டால்
காதறுந்து போகும் என்றாய்
தவறுகள் செய்தால் சாமி
கண்களைக் குத்தும் என்றாய்
தின்பதற் கேதும் கேட்டால்
வயிற்றுக்குக் கெடுதல் என்றாய்
ஒருமுறை தவிட்டுக்காக
வாங்கினேன் உன்னை என்றாய்
எத்தனைப் பொய்கள் முன்பு
என்னிடம் சொன்னாய் அம்மா
அத்தனைப் பொய்கள் முன்பு
சொன்ன நீ எதனாலின்று
பொய்களை நிறுத்திக் கொண்டாய்
தவறு மேல் தவறு செய்யும்
ஆற்றல் போய் விட்டதென்றா?
எனக்கினி பொய்கள் தேவை
இல்லையென் றெண்ணினாயா?
அல்லது வயதானோர்க்குத்
தகுந்ததாய்ப் பொய்கள் சொல்லும்
பொறுப்பினி அரசாங்கத்தைச்
சார்ந்ததாய்க் கருதினாயா?
தாய்ப்பாலை நிறுத்தல் போலத்
தாய்ப் பொய்யை நிறுத்தலாமா
உன்பிள்ளை உன்னை விட்டால்
வேறெங்கு பெறுவான் பொய்கள்?

MOTHER'S DAY POEMS - ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

 1.என் அம்மா

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

ஒருபோதும்
சுனாமியாகப் பொங்காத சாகரம்;
சூறாவளியாகாத காற்று;
சுட்டுப்பொசுக்காத நெருப்பு;
சுக்குநூறாகாத திடம்;
சடசடவென்று முறிந்துவிடாத மரம்;
கையில் தம்பிடிக் காசில்லாத நேரம்
என் அருகில்
கதவை விரியத்திறந்திருக்கும் சிறுசேமிப்பு வங்கி;
எரியுங் குளிரில் போர்த்தக் கிடைத்த
அரிய மேலங்கி;
இரவில் காலந்தாழ்த்தி படுக்கையில் தலைசாய்த்து
’பச்சை புட்டி அமிர்தாஞ்சனை நான்
நெற்றியில் தேய்த்துக் கொள்வதை
எனக்குத் தெரியாமல் கண் திறந்து
கவலையோடு பார்க்கும்
எதிர்பார்ப்பற்ற பரிவு;
என்னவென்று சொல்லவியலா அன்பு;
சுருங்கிவரும் உடலுக்குள் சதாசர்வகாலமும்
சுழன்றுபெருகியோடிக்கொண்டிருக்கும்
ஜீவநதி;
கருகாத பூ;
ஒண்டுக்குடித்தன வீடோ
இன்றுள்ள இரண்டறைகள் கொண்ட
வாடகைக் குடியிருப்போ _
அரண்மனை, அரியணை, அரசவை,
மணிமகுடப் பிரக்ஞையற்று
பிரபஞ்சவெளியில் மிதக்கும் ஒரு
பறவைச் சிறகிழை ;
தனதேயான வானவில் நிறங்களையெல்லாம்
வாரி வழங்கும் பட்டாம்பூச்சி்;
தொட்டுவிடலாகும் தொடுவானம்;
என்றும் என் கவிதையில்
எட்டாச் சொல்……
//2021 MAY 11 – மீள்பதிவு//


2.சிறகசைக்கும் சுமைதாங்கிக் கல்லும் சிறுமியும்
…………………………………………………………………………………………………………
(சமர்ப்பணம்: அம்மாவுக்கு)
.......................................................................................................................................
மூன்றாவது தொகுப்பு ‘மற்றும் சில திறவாக் கதவுகள் (2005) இலிருந்து
…………………………………………………………………………………………………………
உணரும் காற்றின் அரூபமாய்
உள்ளோங்கி
உலகளந்திருக்கும் ஒன்றை
என்னவென்று இனங்காட்டுவது…
இன்று நாளையாகுமந்த
நுந்தருணக் குமிழைக்
கையிலேந்த முடிந்தாலும் ஏலாது
முன்சொன்னது.
பின்னும் அடையாளங்காட்டத்
தவிக்கும் மனதின்
ஆழத்தில்
சுமைதாங்கிக் கல் லொன்று
அமைதியாய் சிறகசைத்தபடி…
உயரப் பறந்துவிடாதபடி
வானத்தை சுருட்டிவைத்துவிட வேண்டும்.
நரையைக் கருமையாக்கி,
வயதின் சுருக்கங்களை நீவிக் கொடுத்து
விழுந்துவிட்ட பல்லைத் திரும்பப் பொருத்தி
பத்திரமாய் தரையிறக்கிவிடும்படி
இப்பொழுதே நிலவிடம் சொல்லிவைத்துவிடவேண்டும்.
மறுபடி யொரு சிறுமியாய்
முழுவிழிப்புடன் நானும் உன்னுடன்
கடந்தகாலக் கதவுதிறந்து
முதலிலிருந்து வாழ்ந்திடவேண்டும்
முள்ளும் கல்லும் அற…


அம்மாவுக்கு எப்படி நன்றி சொல்வது…..?
‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
’அன்னையர் தினம்’ அங்கங்கே கொண்டாடப்பட்டுக்கொண்டிருக்கிறது
அலங்கார விளக்குகள் தொங்கும்
அதி யகன்ற அரங்குகளில்.
அதனால் என்ன?
அம்மாவும் சரி அன்பும் சரி
முகடுக்கும் அடிவாரத்திற்கும் இடையேயான
அதலபாதாளத்தை
வென்றுவிட்டது தெரிந்தது தானே!
கைத்தட்டலுக்காக மட்டுமே எழுதாதவரை
எந்தக் கவிதையும் மட்டமல்ல.
_ தனக்குள் சொல்லிக்கொண்டவள்
வெளியே தெரியாத தன் எளிய தாய்க்கு
அவளறியாதவாறு பரிசளிக்க
சிறிய பொட்டலமாய்
ஒரு புத்தம்புதுக் கவிதைக்குள்
பத்திரமாகப் பொதிந்துகொள்கிறாள்
தானாகிய கொத்துமலர்களை!

[’இப்போது’ கவிதைத்தொகுப்பிலிருந்து
//2019, மே 12 - மீள்பதிவு//
கவிதை எண். 17.துளிவெள்ளக்குமிழ்கள்(5)]

Tuesday, May 12, 2026

எமோஜிக்களின் உரையாடல் - வந்தே மாதரம்

 எமோஜிக்களின் உரையாடல் - வந்தே மாதரம்



பேரன் (கல்லூரிமாணவன்):

.......................................................

தாத்தா, ஏன் இந்திப்பாட்டுங் களை முன்னால பாடிட்டு மூணாவதா தமிழ்த்தாய் வாழ்த்து பாடினாங்க? - இது தப்பில்லையா


தாத்தா:
.............................................
என் செல்லப் பேராண்டி - நாம தமிழர்கள் மட்டு மில்லை -இந்தியர்களும்கூட. இந்தியர் கள் மட்டுமில்லை - தமிழர்களும் கூட. அந்தப் பாடல்கள் வெறும் இந்திப் பாடல், தமிழ்ப்பாடல் மட்டுமல்ல - நாட்டுப்பாடல். வந்தே மாதரம் ன்னா 'தாய் மண்ணே வணக்கம்'னு அர்த்தம்.

பேரன்(கல்லூரி மாணவன்) :
.....................................................................
என்ன இருந்தாலும் நம்ம மாநிலத்தில நம்ம தாய்மண் பாட்டுத் தானே முதலில் பாடப்பட வேண்டும்?

தாத்தா:
..........................................
எங்கே, அதை முழுசா தப்பில்லாம பாடு பாப்போம்

பேரன் :
.........................................
தாத்தா - அது வந்து...
.

தாத்தா
......................................
சுதந்திரப்போராட்ட காலத்தில் தமிழகம் உட்பட இந் தியா பூராவும் ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து 'வந்தே மாதரம்' என்று பாடிக்கொண்டு கொடியைத் தூக்கிக்கொண்டு செல்வார்கள் இளைஞர்களும், பெரியவர்களும். 'வந்தே மாதரம்' சொல்லாதேன்னு வாயிலேயே குண்டாந்தடியால போடுவாங்க பிரிட்டிஷ் போலீஸ்காரங்க. ரத்தம் வழியும். ஆனாலும், ஆவேசமா நாங்க 'வந்தே மாதரம்னு சப்தமா கத்துவோம்..... அதெல் லாம் ஞாபகம் வரது. ...

எமோஜிக்களின் உரையாடல் - தமிழக அரசியல் களம் - 2

 எமோஜிக்களின் உரையாடல் - தமிழக அரசியல் களம் - 2

ஆட்சிக்கு வரப்போகும் கட்சியின் தொண்டர்கள் கேலியா சுத்தி சுத்தி வந்து விசிலடிச்சாங்களாமே - இனி எல்லாமே நாசம் தான்னு ரொம்ப வருத்தப்பட்டிருக்காரே ஆட்சியிலிருக்கும் கட்சியின் முக்கியப் பிரமுகர் ?


யார் இந்தமாதிரி கேலி செய்தாலும் அது கண்டிக்கத் தக்கது. அதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், மதச் சார்பற்ற கட்சி என்று சொல்லிக்கொள்ளும் கட்சியைச் சேர்ந்த இவர், மதச்சார்பின் மையை முன்வைக்கும் அரசியல் சாஸனத்தின் மேல் உறுதி மொழியெடுத்து பதவிக்கு வந்தவர் விஸிலடிப்பதை விட மோசமாக பாரதப்பிரதமரை, இந்துமதத்தை எப்படியெல்லாம் தன் பதிவுகளில் இழிவுபடுத்தியிருக்கிறார் என்பதையும் எண்ணிப்பார்க்காமலிருக்க முடியவில்லை.

இந்தியாவின் எல்லைப்புறங்களில் உள்ள நாடுகளும், எல்லைப்புறங்களில் உள்ள இந்திய மாநிலங்களும்.

 இந்தியாவின் எல்லைப்புறங்களில் உள்ள நாடுகளும், எல்லைப்புறங்களில் உள்ள இந்திய மாநிலங்களும்.

இந்திய எல்லைப்புறங்களில் உள்ள நாடுகள்:

1. பாகிஸ்தான்.
2. சீனா,
3. நேபாளம்
4. பங்களாதேஷ்
5. பூடான்
6. மியன்மார்
7. இலங்கை
8. ஆஃப்கா னிஸ்தான்.
எல்லைப் பரப்பின் மொத்த நீளம் ஏறத்தாழ 15,200 கிலோ மீட்டர்கள். இதில் கடலோர எல்லைப்பரப்பு 7515 கிலோ மீட்டர்கள். நிலஞ்சார் எல்லைப் பரப்பு ஏறத்தாழ 15,200 கிலோ மீட்டர்கள்.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான எல்லைப் பரப்பை விண்ணி லிருந்து பார்க்க முடியும். இது மிகவும் அபாயகரமான எல்லைப்பகுதி களில் ஒன்றாக அரசு ஒலிபரப்புச் சேவையால் (Public Broadcasting Service) கொள்ளப்படுகிறது.
இந்திய எல்லைப் பகுதிகளில் அமைந் துள்ள மாநிலங் கள் பின்வருமாறு:
ஜம்மு காஷ்மீர்,
பஞ்சாப்,
ராஜஸ்தான்,
குஜராத்,
சிக்கிம்,
அசாம்,
மேற்கு வங்கம்,
திரிபுரா,
மேகாலயா,
மிசோரம்,
அருணாசலப் பிரதேசம்,
நாகாலாந்து,
மணிப்பூர்,
மினோ.
பாகிஸ்தான்: ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்கள் பாகிஸ்தானுடன் எல்லை யைப் பகிர்ந்து கொள்கின்றன.
ஆப்கானிஸ்தான்: ஜம்மு காஷ்மீர் ஆப்கானிஸ்தானுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது.
சீனா: ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தர காண்ட், சிக்கிம், அருணா சலப் பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர் ஆகிய மாநிலங்கள் சீனாவுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன.
நேபாளம்: சிக்கிம், மேற்கு வங்கம், பீகார், உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் நேபாளத்துடன் எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன.
பூடான்: அருணாசலப் பிரதேசம், சிக்கிம், அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் பூட்டானுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன.
மியான்மர்: அருணாசலப் பிரதேசம், நாகாலாந்து, மணிப் பூர், மினோ ஆகிய மாநிலங்கள் மியான்மருடன் எல்லை யைப் பகிர்ந்து கொள்கின்றன.
பங்களாதேஷ்: அசாம், மேற்கு வங்கம், திரிபுரா, மேகா லயா, மிசோரம் ஆகிய மாநி லங்கள் பங்களாதேஷுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன.
*
இந்த எல்லைப் பகுதிகள் நாட்டின் பாதுகாப்பு மற்றும் எல்லைப் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை.
தமிழகம் நாட்டின் உட்புறத்தில் இருப்பதால் நமக்கு இந்திய ராணுவத்தின் அருமை, பயங்கரவாதிகளால் மக்கள் அனுபவிக்கும் கொடுமைகள் தெரிவதில்லை. இங்கே எல்லாம் இயல்பாக, அமைதியாக, இணக்கமாக இருப்ப தாக பாவித்துக் கொள்கிறோம்.
ஆனால், ஒவ்வொரு நாளும், அல்லும்பகலும் நம் ராணு வத்தினர், கடற்படை யினர், வான்படையினர் வெகு கவனமாக எல்லையோரப் பகுதிகளை கண்காணித்து, பதுகாத்துக்கொண்டிருப்பதால்தான் நாம் இங்கே நிம்மதியாக வழ்ந்துகொண்டி ருக்கிறோம் என்பதை நாம் எண்ணிப்பார்க்க மறநதுவிடுகிறோம்.
ஆனால் இந்திய எல்லையோரப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு – அவர் எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் சரி – பயங்கரவாதிகளின் தாக்குதல்களி லிருந்து, பயங்கரவாதிகள் என்ற போர்வையில் எதிரி நாட்டு ராணுவம் மேற்கொள்ளும் அத்துமீறல்களிலி ருந்து நம்மைக் காப்பது நம் படைவீரர்களே என்பது நன்றாகவே தெரியும்.
இந்திய ராணுவத்தில் எத்தனையோ தமிழர்கள் பணியாற்றிக்கொண்டிருக்கிறார்கள் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

எமோஜிக்களின் உரையாடல் - தமிழக அரசியல் களம்

 எமோஜிக்களின் உரையாடல் - தமிழக அரசியல் களம்



இப்போதுதான் தமிழகத்தில் புதிய முதலமைச்சரும் அவருடைய அமைச்சர்கள் சிலரும் பதவியேற்றுள்ளனர். அதற்குள் இந்த சாதியைச் சேர்ந்தவர்கள் இடம்பெற வில்லையே, அந்த சாதியைச் சேர்ந்தவர்கள் இடம்பெற வில்லையே என்று குறை சொல்ல ஆரம்பித்துவிட்டார் கள் அறிவுசாலிகளில் சிலபேர். வருத்தமா யிருக்கிறது.


நானும் அதையெல்லாம் படிச்சேன். உண்மையிலேயே வருத்த மாயிருக்கு. சாதிப்பிரிவினைகளைப் பகடைக்காயாக்கிய அரசியல்கட்சிகள் மக்கள்நலனைப் பணயம் வைத்து சூதாடிக் கொண்டிருக்கின்றன. சுய சாதிக்கார சட்ட சபை உறுப்பினர்கள் அப்படி எல்லா சுயசாதி மக்களுக் கும் நல்லது செய்கிறார்களா என்ன ? நேர்மை, கடமை யுணர்வு, திறமை, பாரபட்சமற்ற அணுகுமுறை மக்கள் நலனில் ஆர்வமும் அக்கறையும் - இதெல் லாம் மக்கள் பிரதிநிதிகளிடம் இருப்பதல்லவா முக்கியம்........

எமோஜிக்களின் உரையாடல் - HEIGHT OF VENOM, HEIGHT OF NARCISSISM .....

 எமோஜிக்களின் உரையாடல் - 

HEIGHT OF VENOM,

HEIGHT OF NARCISSISM .....


HEIGHT OF VENOM, HEIGHT OF NARCISSISM .....


எது?

எந்தவிதத்திலும் பொதுமக்களுக்குப் பயனில்லாத, தம்மை முன்னிறுத்திக் கொள்ள மட்டுமே பயன்படுகின்ற தேசிய சர்வதேசிய கலை இலக்கிய சமூகக் கருத்தரங்குகளுக்கு வாரம் ஒருமுறை ஆகாயமார்க்கமாகப் பயணிப்பவர்கள், போகுமிடத்தி லெல் லாம் அங்கேயிங்கே நின்று நடந்து புகைப்படங்களாக எடுத்துக்கொண் டிருப்பவர்கள் 140 கோடி மக்களின் பிரதமர் நாட்டுநலனுக்கான கருத்தரங்குகளில் கலந்துகொள்ள தனி விமானத்தில் பயணிப் பதைப் பரிகசிப்ப தும், பழிப்பதும்தான். பெட்ரோல் முதலான எரிபொருள் பயன் பாட்டை முடிந்தவரை கட்டுப்படுத்துங்கள் என்று அவர் நாட்டு மக்களிடம் வேண்டுகோள் விடுத்ததற்கு இந்த எள்ளல், 'வெறுப்புப் பேச்சு....

என்ன இருந்தாலும் அவங்க பெருந்தன்மையானவங்க தான். பிரத மரை கால்நடையாவோ அல்லது கட்டவண்டி யிலோ ஆப்பிரிக்கா வுக்குப் போகச்சொல்லலியே!


எமோஜிக்களின் உரையாடல் பெண்ணியமும் தங்கமும்

எமோஜிக்களின் உரையாடல்
பெண்ணியமும் தங்கமும்

என்ன, உனக்கு நீயே சோகமா சிரிச்சுக்கறே?
இல்லே - எங்க காலத்தில நகை நட்டை மறுதலிக்கிறது பெண்ணியவாதிகளின் ஒரு கொள்கையாக இருந்தது. ஆனா, இப்ப, உரிமைவாதிகள்னு சொல்லிக்கறவங்களே ஒரே ஒப்பனையும் தங்க அணிமணி களுமா தான் வராங்க. நாட்ல தங்கம் தான் அதிக அளவு பெருஞ் செலவுல இறக்குமதியாகிறதுங்கறதைச் சொல்லி இப்போ இருக்கற உலகளாவிய போர்ச்சூழல், அது சார்ந்த நெருக்கடிகளை மனதில் வைத்து இந்தியப் பிரதமர் ஒரு வருடம் நகை வாங்கறதை நிறுத் துங்கன்னு நாட்டுமக்கள்கிட்ட வேண்டுகோள் விடுத்திருப்பதை இந்த உரிமைவாதிகளே கரிச்சுக்கொட்டறாங்க.... இதையெல்லாம் பார்க்கும்போது சிரிக்கத்தான் தோணுது....
(பின்னணியில் பாட்டு ஒலிக்கிறது)
'சிலர் அழுவார், சிலர் சிரிப்பார் - நான் சிரித்துக் கொண்டே அழுகின்றேன்...............'
S
·

எமோஜிக்களின் உரையாடல் - எல்லாவற்றைப் பற்றியும் - 3

 எமோஜிக்களின் உரையாடல் - எல்லாவற்றைப் பற்றியும் - 3




எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்….. டாட்டா டீ சக்ரா கோல்ட் விளம்பரமொன்றில் போக்கு வரத்து நெரிசலில் ஒரு கார்க்காரர் ‘ராங் சைடில்’ சாலையின் அந்தப்புறமாய் வண்டியை வளைத்து ஓட்டுவார். எதிரில் ஒரு டூ-வீலர் பெண் சரியான வழியில் வண்டியை ஓட்டிக்கொண்டுவர, அவளை வழியை விட்டு நீங்கும்படி எரிச்சலாக சைகை செய்வார். அந்தப் பெண் அசராமல்’ நீ சரியான வழியில் செல்’ என்று சைகை செய் வாள். வேறுவழியின்றி அந்த கார் பின்வாங்கும்.


இதில் என்ன பிரச்சனை ? சரியாத்தானே காட்டி யிருக்காங்க.

ஆனா, கூடவே ஒரு குரல் ’தமிழர்கள் மன உறுதி வாய்ந்தவர்கள்’ என்பதுபோல் ஏதோ சொல் கிறது. உறுதியாக இருந்த அந்தப் பெண் தமிழ ரென்றால் ராங்க் சைடில் காரை ஓட்டி வந்த அந்த நபர் வேறு மாநிலமா? எந்த மாநிலம்?

???????????????????????????????????????????

எமோஜிக்களின் உரையாடல் - எல்லாவற்றைப் பற்றியும் - 2

எமோஜிக்களின் உரையாடல் - எல்லாவற்றைப் பற்றியும் - 2


 என்ன இது – என் கட்டுரையில் எழுதியவர் என்று என் பெயரைப் போட்டு கீழே யாரோ ஒருவருடைய படம் போட்டிருக்காங்க?


இல்லீங்க – அது பதினைந்து வருடங்களுக்கு முன்னா லிருந்த உங்களுடைய படம்!

[’நானே நானா – யாரோதானா’ பாடல் பின்னணியில். கீறல் விழுந்த ரெகார்டாய் முதல் நான்கு வார்த்தைகள் மட்டுமே மீண்டும் மீண்டும் ஒலித்தவாறு!]



டிவி மெகாத்தொடர்களில் மதுவருந்தும் காட்சி வரும்போதெல் லாம் ‘குடி குடியைக் கெடுக்கும்’னு கீழே மங்கலா, குட்டி குட்டி எழுத்துக்களில் போடுகிறார்கள். புகைபிடிக்கும் காட்சி வரும் போதெல்லாம் அதேமாதிரி குட்டிகுட்டியா மங்கலா கீழே எழுத்து ஓடுது. அப்ப, கொலை செய்யற காட்சிகள், வரதட்சணைக் கொடு மைக் காட்சிகள், வர்க்கம் சார்ந்து ஒருவரை இழிவுபடுத்தும் காட்சிகள், இதெல்லாம் வர்ரப்ப ஏன் எந்த வாசகமும் கீழே தரப் படுவதில்லை?

???????????/????????????????






நீங்கள் அவரை எப்போதுமே பரிகசிக்கிறீர்கள், பழித்துப் பேசுகிறீர்கள், காறித்துப்புகி றீர்கள், கெட்ட கெட்ட வார்த்தை களால் திட்டித் தீர்க்கிறீர்கள். ஆனால், இவரை ஒரே முறை தான் அப்படிப் பேசினீர்கள். அதற்குப் பிறகு வாயே திறக்கவில்லையே – ஏன்?”

’அவர் பதிலுக்கு எதுவும் சொல்லா மல் புறக்கணித்து விடுவார். இவர் என்னுடைய வார்த்தைகளை விடப் பன்மடங்கு கேவலமான வார்த்தைகளால் எனக்கு ‘பதிலுக்கு பதில்’ தருவார். அதனால் தான்.’





‘ஓரு நல்ல விமர்சனம் என்று எதைச் சொல்வீர்கள்?’

‘ நான் மற்றொருவருடைய படைப்பைப் பற்றி எழுதிய விமர்சனமென்றால் - சம்பந்தப்பட்ட படைப்பைக் கிழிகிழியென்று கிழிப்பது. இன்னொருவர் என் படைப்பைப் பற்றி எழுதிய விமர்சனமென்றால் - பாராட்டுமழை பொழிவது’







’உங்களுடைய படைப்பு குறித்து எழுதப்பட்ட மிகச் சிறந்த விமர்சனம் என்று இம்மாத இதழில் வெளியாகி யிருப்பதைக் குறிப்பிடுவதற்குக் குறிப்பான காரணம் என்ன?’

‘குறிப்பான காரணம், சிறப் பான காரணம் எல்லாமே இதுதான்: என்னுடைய படைப்பை ஓஹோஹோன்னு புகழ்ந்திருக்கு. இரண்டு பக்க விமர்சனத்தில ’இதுவல்லவோ இலக்கியம்’னு 10 இடங்கள்ள வந்திருக்கு.





இப்ப நீங்க சொன்னதைத் தானே நான் நேத்து சொன் னேன்? அப்ப எனக்கு அறிவே கிடையாதுன்னு சொன் னீங்க – ரொம்ப தப்பா நான் யோசிக்கிறதா சாடையா திட்டித் தீத்தீங்க. இப்ப நீங்க அதையே சொல்றீங்க – என்னங்க இது?”


’இதுதான் அறிவுடைமை; ஜனநாயகப் பண்பு. மானே, தேனேன்னு இன்னும் நாலைஞ்சு சேத்துக்கலாம் – பரவா யில்லை. ஆனா, நீங்க சொன்னா தவறு. அதையே நான் சொன்னா அறிவு. அதை மட்டும் தெளிவா புரிஞ்சுக்கங்க’.

அரசியல் கட்சிகள் .......................................................................

 அரசியல் கட்சிகள்

.......................................................................



மிகப் பெரிய மக்களாட்சி நாடான இந்தியாவில் பெரிய தும் சிறியதுமாக பல கட்சிகள் உண்டு.


இத்தனை நாட்களாக பெருங்கட்சிகள் சிறுகட்சிகளைப் புரந்து காக்கின் றன என்றிருந்த பிம்பம் – குறிப்பாக தமிழகத்தில் அத்தகைய பிம்பமே பரவலாக நிலவியது – இப்போதைய தேர்தலில் தகர்ந்துவிட்டது.

அத்தகைய அரசியல் கட்சிகளின் உண்மையான மதிப்பு இப்போது புலப்பட்டிருக்கும்.

குறிப்பான சில நோக்கங்களுக்காக பெருங்கட்சிகளில் இணையாமல் தனித்து கட்சி அமைப்பவர்கள் அந்த நோக்கங் களுக்காக ஜனநாயகரீதியாக முனைப்பாகச் செயல்படாமல், சுயநல நோக்கங்களுக்காக பெருங்கட்சிகளின் கைப்பாவை யாகச் செயல்படும் போது அந்தக் கட்சிகள் தங்கள் கடமை யிலிருந்து தவறிவிடுகின்றன என்றே கூறலாம்.

எமோஜிக்களின் உரையாடல் -

 எமோஜிக்களின் உரையாடல் -


சொல்லவந்த சேதியை கனகச்சிதமாய் சொல்வதற்கு ஓர் உதாரணம் – ‘கண்டேன் சீதையை’ இதையே சீரியல்தனமாய் சொல்வதென்றால் ?


‘அதாவது ராமா – நான் என்ன சொல்ல வருகிறேனென் றால் …. இருங்கள், என் தொண்டையடைக்கிறது. ....கண்ணீர் கரை புரளுமோ என்று பயமாயிருக்கிறது… கொஞ்சம் பொறுங்கள் ராமா – இப்போது சோப்பு சீப்பு கண்ணாடி விளம்பரம் வரப் போகிறது….. சரி, இப்போது சொல்கிறேன் – சீதையைத் தேடிச் சென்ற நானாகிய அனுமன் – சீதையைக் கண்டேனா என்றால்…. காண்ப தெல்லாம் காட்சிப்பிழை, தோற்ற மயக்கம் என்றால் சீதையை நான் கண்டேனா, காணவில்லையா – இருங்கள் - பின்னணியிசை வீணையிலிருந்தால் அது நல்ல செய்தியா, கெட்ட செய்தியா என்பதை ’மதரா, மம்மியா’ அல்லது ’அவையா சபையா’விவாத நிகழ்ச்சியில் வரும் ஞாயிற்றுக் கிழமை தெரிந்துகொண்டுவிடுவீர்கள்…