LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Monday, December 1, 2025

சந்திரமுக சகமனுஷி - சிறுகதை - அநாமிகா

 சிறுகதை

 சந்திரமுக சகமனுஷி

_ அநாமிகா

(*திண்ணை இணைய இதழில் வெளியானது)


  நீண்ட நேரமாக அந்த நடைவழி சுவர் ஒரமாகவே நின்றுகொண் டிருந்தாள். பெண் என்றும் சொல்ல முடியாத பெண்மணி என்றும் சொல்ல முடியாத 30 வயதின் விளிம்பைத் தொட்டிருப்பவளாகத் தோன்றியது, கதையில், கவிதையில் ,நிலா முகம், என்று வாசிக்கநேரும்போதெல்லாம் மனதில் அறிவுபூர்வ, தர்க்கபூர்வ சிரிப்பாய் ஒன்று தோன்றும். அதெப்படி அத்தனை திருத்தமான வட்டமாய் ஒரு முகம் இருக்க முடியும்? அதுவும், நிலவின்இரண்டறக் கலந்த’ அம்சமான கறையும் இருக்க வேண்டுமே - அதுவும் அழகா என்ன....’

அறிவு என்பது எல்லாவற்றின் சகலவிதமான சாதிப்பாடுகளுக்கும் தன்னை திறந்துவைத்திருப்பது. இறுக மூடிக்கொண்ட நிலையில்இதுதான், இது மட்டும்தான் இங்கே சாத்தியம்; சாத்தியமாகும்; சாத்தியமாக வேண்டும்’ என்று மண்டையின் உள்ளெங்கும் கணமேறி அதன் விளைவாய் இறுதியில் கவிழ்ந்தே யாகவேண்டி ருப்பதா அறிவு....

 

  ”ஒரு சேர், இல்ல, ஸ்டுல் தரவா உட்காந்துக்க?”

 சட்டென்று முகத்தில் நெகிழ்வு ததும்ப என்னை நோக்கித் திரும்பி புன்சிரித்தாள். நிலவின் கறை போல் இடது கன்னத்தில் தேமல் படலம் இருந்தது போல் தோன்றியது. நடைவழியின் இந்த முனையில் இருந்த எங்கள் வீட்டில் இருந்து அந்த முனைக்கு அருகில் இருந்த அவளை பாதி நிஜ உருவாகவும் பாதி நிழல் உருவாகவும்தான் காண முடிந்தது அவள் புன்சிரித்தபோது வரிசைப்பற்கள் ஜொலித்தன. A THING OF BEAUTY IS A JOY FOR EVER’ என்ற வரி இருந்தாற் போலிருந்து ஞாபகம் வந்தது.

  ”பரவாயில்ல, வேண்டாம்மா”

  ”ரொம்ப நேரமா நிக்கிறீங்களே....”

  ”பரவாயில்லீங்கம்மா”, என்று மீண்டும் அதே  புன்சிரிப்போடு கனிவாய் மறுத்து மறுபுறம் திரும்பி, கால்மாற்றி நின்று கொண்டாள்.

  அந்தப் பக்கமாக வந்து செக்யூரிட்டி சிவநாதன் மெல்லிய குரலில் என்னிடம் கூறினார்: “வேலையிலிருக்கையில சித்தாள் உட்காரக் கூடாதுமா - மேஸ்திரி கோவிச்சுக்கவாரு”

  ’அதற்காக எத்தனை நேரம் இப்படி கையில் சிமெண்ட் சட்டியோடு கால் கடுக்க நின்றுகொண்டிருப்பது மாதவிலக்கு நாட்களிலுமா...? அந்தி சாய்ந்து வீடு திரும்பிய பின் கணவருக்கும், குழந்தை களுக்கும், குடும்பத்தைச் சேர்ந்த வேறு உறுப்பினர்கள் இருப்பின் அவர்களுக்குமாக சுடச்சுட சமைத்துப்போட்டு.... இரவில் கணவன் தினமும் உடலுறவுக்குக் கட்டாயப்படுத்துவானோ.... சே, ஏன் எல்லாவற்றையும் எதிர்மறையாகவே எண்ணவேண்டும்? வீதி யின் இருமருங்கிலும் எத்தனை சுடச்சுட பிரியாணி _ பரோட்டா கடைகள்! கணவன் எல்லோருக்குமாக அன்போடு வாங்கிவரக் கூடும்... நாளும் உழைத்துக் கனிந்த கட்டுடல்களாக இருக்கும் கணவனும் மனைவியும்செம்புலப் பெயனீர்போல அன்புடை நெஞ்சமும் தேகமுமாக கூடலில் திளைக்கக்கூடும்... அப்படியே இருக்கட்டும்.....’

அவள் இன்னமும் நின்றவாறிருந்தாள்.  அவ்வப்போது கால் மாற்றிக் கொண்டபடி. நான்கு மாடிக் கட்டிடத்தின் மேலடுக்கு சாரத் தில் இருந்து மேஸ்திரி சிமெண்ட் நிரம்பிய சட்டியை அனுப்பச் சொல்லிக் கேட்டால்கூட பரவாயில்லை என்று தோன்றியது....

இப்போதெல்லாம் சிறிது நேரம் அப்படியே நின்றுகொண்டிருந் தால், அல்லது, தெருவின் முனைவரை நடந்தால் கால்கள் மரத்துப்போய், மிதப்பது போல் தள்ளாட ஆரம்பிக்கிறது. அடுத்த அடி எடுத்துவைத்தால் அதல பாதாளத்தில் விழுந்து விடுவது போல் உணர்வு. எதையாவது பிடித்துக்கொள்ள வேண்டும், எங்காவது அமரவேண்டும் போல் ஒரு பரிதவித்து; இயலாமை. SCIATICA NERVE PROBLEM என்றார் மருத்துவர். பின்னால் முதுகுத்தண்டின் கீழிருந்து ஆரம்பித்து, கிளை பிரிந்து இரண்டு பின்தொடைகள் வழியாய் நீண்டு பாதங்கள் வரை படர்ந்திருக்கும் பெரிய நரம்பு மண்டலமாம்... இதுவரை கேள்விப்பட்டதே யில்லை. இந்த நரம்பில் பிரச்சனை என்றால் ரத்த ஓட்டம் கால்களுக்கு செல்வதில் தடங்கல் ஏற்படுமாம் விட்டமின் D3 குறைவாம். ஸியாட்டிக்காவா, ஸ்கியாட்டியாக்காவா? கூகுள் ஸியாட்டிக்கா என்று தெளிவுபடுத்தியது.

 பல நாட்களுக்குப் பிறகு மருத்துவரிடம் சென்றதில் அவர் படுக்கச் சொல்லி காலை உயர்த்தச் சொன்னபோது புடவை கட்டிக்கொண்டி ருந்த கால் கூசியது. பாவம், அவர் பக்கவாட்டில்தான் நின்று கொண்டிருந்தார். இரண்டு மூன்று மாதங்களுக்கு வெளியே எங்கும் தனியாக நடந்து செல்ல வேண்டாம் என்றவர் சில மாத்திரை மருந்துகளை எழுதித்தந்தார். ’மருத்துவர் முன்னிலை யில் நாம் முழுமையான கையறுநிலையில் இருக்கிறோம் என்று முன்பு ஒரு நண்பர் கூறியது மிகவும் உண்மைதான்... என் உடலைப் பற்றியே எனக்கு பெரிதாக ஒன்றும் தெரியாமலிருப்பது, என் உடலே என் கட்டுக்குள் அடங்காமல் இருப்பது எத்தனை நிராதர வான நிலை... கால்களின் வலி வழக்கம்போல் ‘வலி மட்டுமே அவரவருக்கேயானது; பங்குபோட முடியாதது’ என்று நினைக்கச் செய்தது.  

’மருத்துவர் கூறியது போல் இது தற்காலிகமானதுதானா...? அல்லது வயதின் காரணமான NEW NORMALஆ..? போகப்போகத் தெரியும்.... பூவின் வாசனை இயல்பே போல் வாடி வதங்கலும் இயல்புதானே என்று மனம் தத்துவம் பேசும்போதெல்லாம் கூடவே எதிரொலிக்கிறது ‘EASIER SAID THAN DONE’.... மனம் ஒரு மாபெரும் சொற்களஞ்சியம்... நினைவகராதி... நீள்பயண வழித்தடங்களின் அகழ்வாராய்ச்சித் தளம்.... ஆங்காங்கே எல்லாமேBERMUDA TRIANGLE’ போல ஏதோ ஒன்றில் மாயமாகிவிடக்கூடும்....’

 அம்மா _”

 அழைப்பு நினைவோட்டத்தைக் கலைக்க, திரும்பிப் பார்த்தேன். அந்த சந்திரமுக சக மனுஷிதான்! தயங்கித்தயங்கிக் கேட்டாள்: “ “அம்மா,கடுகு, உளுத்தம்பருப்பு சீரகம்லாம் போடறாப்பல ரெண்டு மூணு சின்ன பிளாஸ்டிக் டப்பி தாங்களேன்”

 கைவசம் ஒரு பிளாஸ்டிக் அஞ்சறைப்பெட்டி தான் இருக்கிறது அங்கேயிங்கே தேடிப் பார்த்தால் அவள் கேட்டது மாதிரி சில குட்டி டப்பிகள் கிடைக்கலாம்.

“நாளைக்கு வாங்களேன் - தேடிப்பார்த்து எடுத்துவக்கறேன்” என் றேன் சந்திரனுக்கு அன்பளிப்பு தரப் போகும் சந்தோஷத்தில் மனது நிறைந்து நிகழ்ந்தது

 மறுநாள் தயாராக சில குட்டி டப்பிகளை எடுத்துவைத்திருந்தேன் அவள் வரவில்லை. அதற்கு அடுத்த நாளும்.இல்லை’ என்று சொல்வதை அப்படிச் சொன்னதாக அர்த்தப்படுத்திக்கொண்டிருப் பாளோ... அதனால் தான் அவள் முகம் அப்படி ஏமாற்றத்தை மூடுமந்திரமாய் வெளிப்படுத்தியதோ... அத்தனை நேரம் நின்று நின்று உடம்புக்கு முடியாமல் போய்விட்டதோ... எத்தனை நம்பிக்கையோடு என்னிடம் கேட்டாள்....

 நான் இருப்பது வாடகை வீடு என்று அவளுக்குத் தெரிய வழி யில்லை.வெள்ளையாக இருப்பவர்கள் எல்லோருமே பணக்காரர் கள் என்று நினைப்பவர்களே அதிகம்’ தாத்தா இருபது வருடங்க ளுக்கு முன் 103 வயதில் இறந்தபோது அவரிடம் ஆஸ்தி என்று நயாபைசா கிடையாது அதற்கு முன் திருவல்லிக்கேணி ஆலங் காத்தாப்பிள்ளைத் தெருவுக்கு அருகிலிருந்த மூத்திர சந்து வாடகை வீட்டில் இருந்தபோதெல்லாம் ஆறு குழந்தைகளைப் படிக்க வைக்க ஆகும் செலவுக்கு, மாதாந்திர வீட்டுச்செலவுக்கு என அதிகாலை 4:30 மணிக்கு தலையில் முண்டாசு கட்டிக் கொண்டு பால் வாங்கச் செல்லும்போது அப்படியே அங்கே உள்ள சில வீடுகளின் கதவுகளைத் தட்டிக் கடன் கேட்பது அவருடைய தினசரி வாழ்க்கையின் தவிர்க்கமுடியாத அங்கமாக இருந்தது.  ஆனால்,  வெள்ளைத்தோலர்களிலும் வர்க்க பேதங்கள் உண்டு; செல்வந்தர்க ளிலும், கடுமையாக உழைத்து சம்பாதித்து சொத்து சேர்த்தவர்கள்,  ஏழை மக்களின் பணத்தை சுருட்டிக்கொண்டு, தில்லுமுல்லு செய்து, சக மனிதர்களைச் சுரண்டி சொத்து சேர்த்த வர்கள் என இரண்டு வகை உண்டு... ஆனால், இந்த பேதங்களைக் கணக்கிலெடுத்துக்கொள்ளாமல் மட்டையடி அடிப்பதுதான் இன்றைக்கு TRENDING ஆகிக்கொண்டேபோகும் அணுகுமுறை....

செக்யூரிட்டியிடம் கேட்டபோது கூறினார்: ”இங்க அவங்க வேலை முடிஞ்சிடுத்தும்மா – இனிமே ஏன் வரப்போறாங்க? சாரக்கட் டெல்லாம் நேத்தே பிரிச்சாச்சே – பாக்கலையா?”

 

***

 

கண்ணோட்டம் - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 கண்ணோட்டம்

’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)







காதுகளும் நாசியுமாகத் தாங்கிப்பிடித்திருக்கும்
மூக்குக்கண்ணாடி உதவியோடு
சில பல மின்விளக்குகளின் உதவியோடு
என்னால் பார்க்க முடியும்;
படிக்க முடியும்
ஆனால்,
எனக்கு பானை செய்யத் தெரியாது.
பாடத் தெரியாது.
பறவைகளின் மொழியைப்
புரிந்துகொள்ளவியலாது.
பல காதங்கள் நடந்துசெல்ல முடியாது.
பகலவனை அண்ணாந்து பார்த்து
சரியான நேரத்தைக்கணித்துச்
சொல்லவியலாது.
பசியில் வாடும் அனைத்துயிர்களுக்கும்
அட்சயபாத்திரமாகவியலாது.
பார்ப்பதால் எனக்குப் ’பார்க்க’த்
தெரியுமென்று
நிச்சயமாகச் சொல்லவியலுமா என்ன?
பார்வைகள் ஆயிரம் எனில்
எனக்குத் தெரிந்தவை
பத்துக்குள் தான் இருக்கும்.....
அவருக்குப் பார்க்கமுடியாது;
ஆனால் பாடத் தெரியும்;
அற்புதமாக கிடார் வாசிக்கத் தெரியும்;
அவர்கள் வீட்டுப்பூனையிடம்
அவர் எப்படி அளவளாவுவார் தெரியுமா!
அந்தத் தெருமுனையிலிருக்கும் ஜூஸ் கடையில்
அவர் முப்பது ரூபாய் ஜூஸ்
குடிக்கும்போதெல்லாம்
அந்தக் கடைப்பையன்கள்
அத்தனை நேர்மையாகப் பிழிந்துதரும்
ஒன்றரை கோப்பை பழச்சாறில்
அரைகோப்பையை
தொலைதூர ஊரிலிருந்து வந்து
வேலைபார்த்துக்கொண்டிருக்கும்
தன் தம்பியொத்த சிறுவனுக்கு
அத்தனை அன்போடு தந்துவிடுவார்.
பார்க்கவியலாத தன்னைப் பார்த்தபடி
பேசும் மனிதரின்
மனதிலோடும் வரிகளை மிக நன்றாகவே
படித்துவிட முடியும் அவரால்.
பார்வைகள் ஆயிரமும் அவருக்கு
அத்துப்படியில்லையாயினும்
அறுபதாவது பரிச்சயமுண்டு கண்டிப்பாய்.
அதற்கும் மேல்
அம்மா அப்பாவிடம் அன்பாக
நடந்துகொள்ளத் தெரியும்;
அடுத்தவர் மனம் நோகாமல்
மாற்றுக்கருத்துகளை முன்வைக்கத்
தெரியும்.
அவ்வளவாகத் தன்னைப் பொருட்படுத்தாத
சமூகத்தின் அறியாமையை
மன்னிக்கத் தெரிகிறது;
மறந்துவிடக்கூட முடிகிறதுஅவரால்.
சுருக்கமாகச் சொல்வதென்றால் _
அவரால் பார்க்கமுடியவில்லையெனில்
அவரைப்போலவே என்னாலும்;
என்னால் பார்க்கமுடியுமெனில்
பார்த்தபடியேதான் அவரும்.

அகமும் புறமும் கவிதையும் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 அகமும் புறமும் கவிதையும்

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

‘இதோ நான் கவிதை எழுதிக்கொண்டிருக்கிறேன் பாருங்கள்’ என்கிறார்.
’இதோ இங்கே பாருங்களேன் நான் கவிதை எழுதிக் கொண் டிருக்கிறேன்’, என்கிறார்.
’இதோ சற்றே இப்படித் திரும்பிப்பாருங்களேன். நான் கவிதை எழுதிக்கொண்டிருக்கிறேன்’, என்கிறார்.
’கண்டிப்பாகக் கவிதைதான் எழுதுகிறாயா’ என்று கேட்க வேண்டும் போலிருக்கிறது கவிதைக்கு.
ஆனால் அது கண்ணாடிக்கு அப்பாலிருக்கிறது.
அதற்கு அசரீரியாகப் பேச வராது.
வேண்டும்போது ரௌத்ரம் பழகினாலும்
பொதுவாக கவிதை கனிவானது
குட்டிப்பாப்பா போல் மென்மையானது.
புறாக்கண்களை உருட்டி உருட்டிப் பார்ப்பதே
அதற்கு மிகவும் பிடிக்கும்.
சண்டை பிடிக்கவே பிடிக்காது.
’இத்தனை சொல்லியும் திரும்பிப்பார்க்க மறுக்கிறாயே -
என்னவொரு திமிர்
எத்தனை தெனாவெட்டு
என்னோடு சேர்ந்து செல்ஃபி எடுத்துக்கொள்ள
எத்தனை பேர் காத்துக்கொண்டிருக்கிறார்கள் தெரியுமா
சுண்டைக்காய் நீ – சோப்ளாங்கி'
என்று அன்னார் உச்சஸ்தாயியில் கூவக்கூவ
கமறிய அவர் குரல்வளையிலிருந்து
இருமல் பெருகிவர
வேகவேகமாய்ச் சென்று எங்கிருந்தோ வொரு
மினரல் வாட்டர் புட்டியையும்
ஒலிவாங்கியையும்
கொண்டுவந்து கொடுத்துவிட்டுத்
தன்வழியே செல்கிறது கவிதை.

பூமராங்……! ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 பூமராங்……!

’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)


சுய லாபத்திற்காய் சுயநலவாதியொருவரை
சக மனிதர்களை ரட்சிக்க வந்தவராய்
சுண்டுவிரலை அல்லது கட்டைவிரலைச்
சரேலென்றறுத்து
பெருகும் செவ்விரத்தத்தால் கையெழுத்திடாத குறையாய்
சொல்லிச்சொல்லிச்சொல்லிக்கொண்டே
யிருப்பவரால்
என்றுமே ஏனோ காண முடிவதில்லை
யவ்வொரு செயலில்
தன் சாயம் வெளுத்து
சுயரூபம் சுருங்கிக்கொண்டே போவதை

குறுக்குவழிகளற்ற நெடுந்தொலைவு - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 குறுக்குவழிகளற்ற நெடுந்தொலைவு

’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
போகக்கிடைத்த நாடுகளின் பெயர்ப்பட்டியலிலோ
பேசக்கிடைத்த அரங்குகளில் குழுமியிருந்த
பார்வையாளர்கள் எண்ணிக்கையிலோ
பரஸ்பர முதுகு சொறிதலாய் பக்கம்பக்கமாக
எழுதப்பட்ட ஆஹா ஓஹோ விமர்சனக்
கட்டுரைகளிலோ
பெரிய பதவிகளிலோ
பிரமுகர்களின் அறிமுகங்களிலோ
பாரிய அரசியல்கட்சியின் அரவணைப்பிலோ
ஊர் சாதி இன மத குழு மனப்பான்மையிலோ
நேர் நிறை இலக்கணமறிந்ததிலோ
அறியாததிலோ
கார்கால மழைக்கொரு புதுப்பெயர் சேர்ப்பதிலோ
வாலைத் தலையாக்கி வித்தைகாட்டுவதிலோ
பாலையைச் சோலையென்று
அம்மியாய்க் கும்மியடித்துச் சொல்வதிலோ
அடங்காது.....
பூக்களும் பூங்காற்றும் புறாக்களும்
அலைக்கழியும் மனம் ஆற்றி
அக்கடா என்று அமர்ந்திருக்க
அன்றாடம் தேடிவரும் மனிதக்கூட்டமும்
அங்கே பூரணமாக இருந்தாகவேண்டும்.
அதுவேயாம் கவிதையும்.

பெர்ட்ராண்ட் ரஸ்ஸல் - மகிழ்ச்சிடைக் கையகப்படுத்துதல் - அத்தியாயம் - 5 - தமிழில்: லதா ராமகிருஷ்ணன்

 THE CONQUEST OF HAPPINESS By BERTRAND RUSSEL

தமிழில்: லதா ராமகிருஷ்ணன்

அத்தியாயம் 5: சோர்வு





சோர்வு பலவகையானது. அவற்றில் சில மற்றவற்றைக்  காட்டிலும் அதிகமான அளவு மகிழ்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கின்றன. முழுவதும் உடல்ரீதியான சோர்வு அது மட்டுமீறிப்போகாமலிருந்தால், மகிழ்ச்சிக்கான காரணமாகக்கூட அமைய முனையும் என்று சொல்லலாம். அத்தகைய உடல்சோர்வு நல்ல தூக்கத்திற்கும், நல்ல பசிக்கும் நம்மை இட்டுச்செல்லும். விடுமுறை நாட்களில் சாத்தியமாகின்ற ஆனந்தக்களிப்புகளுக்கு அவை உற்சாகத்தையும் உத்வேகத்தையும் அளிக்கிறது. ஆனால், அது மிகவும் அதிகமாக, , மட்டுமீறியதாகிவிடும்போது, அது அதிதீவிரமான தீமையாக மாறிவிடுகிறது.

மிகவும் முன்னேறிய சமூகங்களைத் தவிர மற்ற எல்லாவிடங்களிலும் குடியானவப் பெண்கள் மிகவும் அதிகப்படியான உழைப்பால் முப்பது வயதிலேயே வயதானவர் களாகிவிடுகிறார்கள்; உடல் நலிவடைந்துவிடுகிறார்கள். தொழில்மயமாதலின் ஆரம்ப நாட்களில் பிறந்த குழந்தைகளின் உடல்ரீதியான வளர்ச்சி முடங்கி அதிக நேரங்களில் அவர்கள் அதீத வேலைப்பளுவால் சீக்கிரமே இறந்துபோக நேர்ந்தது. இந்த விளைவுகள் இன்றளவும் சீனாவிலும், ஜப்பானிலும்  - தொழில்மயமாதல் புதிய ஒன்றாக இருக்கும் நிலங்களில் - நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஓரளவிற்கு அமெரிக்காவின் தெற்கு மாநிலங்களிலும். இந்த எதிர்மறை விளைவுகளைக் காணமுடிகிறது. ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்கு அப்பால் நீட்டிக்கப்படும்  உடல் உழைப்பு அராஜகமான சித்திரவதையாக உயிர்வாழ்தலை தாங்கமுடியாத வேதனையாக மாற்றும் அளவுக்கு வெகுவாக நீட்டிக்கப்பட்டிருக்கிறது. என்றாலும், நவீன உலகின் முன்னேறிய நிலங்கள் பெரும்பாலானவற்றில், தொழில்துறை சார் சூழ்நிலைமைகளை மேம்படுத்துவதன் மூலம் உடல் சோர்வு நிறையவே குறைக்கப்பட்டுள்ளது.

இன்றைய காலகட்டத்தில் முன்னேறிய சமூகங்களில் நிலவும்  மிக ஆபத்தான சோர்வு நரம்புரீதியான சோர்வு ஆகும். விசித்திரமான அளவில், இந்தவகை சோர்வு வசதி படைத்தவர்கள் மத்தியில்தன் மிகவும் கணிசமான அளவு நிலவுகிறது. தொழிலதிபர்கள், வர்த்தகர்கள் மற்றும் மூளை சார் உழைப்பாளர்கள் மத்தியில் நரம்புச் சோர்வு காணப்படுவதைக் காட்டிலும் மிகவும் குறைவாகவே அது வேலை செய்து சம்பளம் ஈட்டுபவர்கள் மத்தியில் காணப்படுகிறது. இது விந்தையாக, இந்த வகை, வசதி படைத்தவர்களிடையே அதிகமாகக் காணப்படுகிறது, மேலும் கூலி சம்பாதிப்பவர்களிடையே இது வணிகர்கள் மற்றும் மூளைத் தொழிலாளர்களை விட மிகக் குறைவாகவே காணப்படுகிறது.

நவீன வாழ்க்கையில் இவ்வகையான நரம்புரீதியான சோர்விலிருந்து தப்பிப்பது மிகவும் கடினமான விஷயமாக இருக்கிறது. முதலில், வேலை பார்க்கும் நேரமெல்லாம், அதைவிட அதிகமாக வேலைக்கும் வீட்டுக்கும் இடையே கழிக்கும் செலவிடப்படும் நேரமெல்லாம் நகர்ப்புற ஊழியர் சபலவிதமான இரைச்சல்களுக்கு மத்தியில் இருக்கவேண்டிய நிலை, அவற்றில் பல சப்தங்களை அவர்கவனமின்றித் தான் கேட்டுக்கொண்டிருக்கிறார். என்றாலும், அந்த சப்தங்கள் அவரை சோர்ந்துபோக வைக்கின்றன. அதுவும், அந்த சப்தங்களைக் கேட்காமலிருக்க அவரையுமறியாமல் அவரால் மேற்கொள்ளப்படும் ஆழ்மனப் பிரயத்தனங்களால் அவருடைய சோர்வு இன்னும் அதிகமாக அவரை வாட்டுகிறது.

நாம் அறியாதவாறு நம்மை மிகுந்த சோர்வுக்காளாக்கும் இன்னொரு விஷயம், எப்பொழுதுமே அந்நியர்கள் மத்தியில், அவர்களைப் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டிய நிலை. மனிதனின் இயல்பான உள்ளுணர்வு, மற்ற எல்லா மிருகங்க ளையும் போலவே, தனது இனத்தைச் சேர்ந்த ஒவ்வொரு அந்நியரையும் பற்றிய துப்பாய்வை, விசாரணையை மேற்கொண்டு அவரோடு நாம் நட்பாகப் பழகவேண்டுமா அல்லது அவரை எதிரியாக பாவிக்கவேண்டுமா என்று தீர்மானித்துக்கொள்வதற்காக மேற்கொள்ளவேண்டியது. நெரிசல் நேரத்தில் சுரங்கப்பாதைகளில் பயணம் மேற்கொள்வோர் கைக்கொள்வதான இந்த உள்ளுணர்வின் காரணமாக தாங்கள் இவ்விதமாய் தினசரி வாழ்வின் நிர்பந்தங்களால் தாம் சந்திக்கவேண்டியிருக்கும்,, சேர்ந்திருக்கவேண்டியிருக்கும் கலந்துறவாட வேண்டியிருக்கும், மேலும், காலை நேர ரயிலைப் பிடிக்க விரையவேண்டும் அதன் விளைவாக செரிமானக் கோளாறுக்காளாகி, அலுவலகம் சென்றடைந்ததுமே வேலை ஆரம்பமாகிவிடுகிறது. கருப்பு கோட் அணிந்திருக்கும் ஊழியருக்கு ஏற்கெனவே நரம்புத்தளர்ச்சி, மன அழுத்தம் ஏற்பட்டு, மனித இனத்தையே ஒரு தொந்தரவாகப் பார்க்கத் தலைப்படும் ஒரு மனப்போக்கு அவருக்கு ஏற்பட்டுவிடுகிறது..

 

 

 

அதே மனநிலையில் வரும் லுவலகம் வந்துசேரும் அவருடைய முதலாளி, தன் ஊழியரின் அந்த மனப்போக்கைஅவரது முதலாளி, ஊழியரிடம் இருக்கும் அந்த எண்ணத்தை/ மனோபாவத்தை தகர்த்து அகற்றுவதற்கு எதுவுமே செய்வதில்லை. வேலையை விட்டு எடுத்துவிடுவார்களோ என்ற பயம் முதலாளியிடன் மரியாதையாக நடந்து கொள்ளச் செய்கிறது. ஆனால், இந்த இயல்பு மீறிய நடத்தை ஊழியரின் நரம்புத்தளர்ச்சியை, மன அழுத்தத்தை அதிகரிக்கவே செய்கிறது. வாரத்திற்கு ஒரு முறை முதலாளியின் மூக்கைத் திருகியோ அல்லது வேறு விதமாகவோ அவரைப் பற்றித் தாம் என்ன நினைக்கிறோம் என்பதைத் தெரிவிக்க வாய்ப்பளித்தால் ஊழியர்களின் மன அழுத்தம் குறையலாம் அல்லது காணாமல் போகலாம், ஆனால், அந்த முதலாளியைப் பொறுத்தவரை, அவருக்கும் பிரச்சனைகள் இருக்கின்றன என்பதால், ஊழியரின் இந்த நடத்தையால் விஷயம் சரியாகிவிடப்போவதில்லை.சில முதலாளிகள் இத்தகைய பயங்களைக் கடந்த வலுவான நிலையில் இருப்பவர்கள் என்பது உண்மைதான். ஆனால் பொதுவாக அவர்களும் இந்தவகையான ஓர் உயரிடத்தை எட்டிப்பிடிக்க வருடக்கணக்காக அயராமல் கடுமையாகப் பிரயத்தனப்படவேண்டியிருகிறது. இந்த சமயத்தில் அவர்கள் உலகின் எல்லாப் பகுதிகளிலும் நடந்துகொண்டிருக்கும் முக்கிய நிகழ்வுகளை கூர்ந்து கவனித்துக்கொண்டிருக்கவேண்டியுள்ளது; அவற்றைப் பற்றிய தகவல்களை முனைப்பாக அறிந்துகொள்ளவேண்டியிருக்கிறது. தங்களுடைய போட்டியாளர்கள் தமக்கு எதிராகத் தீட்டும் சதித்திட்டங்களை தொடர்ந்து முறியடிக்கவேண்டியுள்ளது. இவையெல்லாவற்றின் விளைவு, மிக உறுதியான, பெரிய வெற்றி அந்த முதலாளிக்குக் கிட்டும்போது அவர் ஏற்கெனவே அத்க மன அழுத்தத்திற்காளானவராக, நரம்புத்தளர்ச்சியுடையவராக மாறியிருக்கிறார்.  கவலை என்பதும் மன அழுத்தம் என்பதும் அவருடைய இரண்டாம் இயல்பாகிவிட்ட நிலை. அவற்றிற்கான தேவையில்லாமல் போய்விட்டபோதும் அவரால் அவற்றைத் தன்னிடமிருந்து உதறிவிட முடிவதில்லை. சில செல்வந்தர்களின் மகன்கள்  இருக்கிறார்கள். பணக்காரர்களாகவே பிறந்திருந்த போதிலும் அவர்கள் பணகாரர்களாகப் பிறக்காதவர்கள் அனுபவிக்கும் அத்தனை மன அழுத்தங்களையும், நரம்புத்தளர்ச்சிகளையும் அனுபவிக்குமளவு புதிது புதிதாகத் தங்களுக்குக் கவலைகளையும் பரிதவிப்புகளையும் உண்டாக்கிக்கொள்வதில் வெற்றி பெறுகிறார்கள். சூதாட்டம், பந்தயம் கட்டுவது போன்ற செயல்பாடுகளால் அவர்கள் தமது தந்தையரின் அதிருப்திக்கு ஆளாகிறார்கள்.; தங்கள் கேளிக்கைகளுக்காக தூக்கத்தைக் குறைத்துக்கொள்கிறர்கள். அதனால் அவர்களுடைய உடல்நலன் வலுவிழக்கிறது; சீர்குலைகிறது.  ஒருவழியாக அவர்கள் வாழ்க்கையில் தங்களை நிலைநிறுத்திக்கொள்ளும்போது அவர்கள் தமது தந்தையர்கள் இருந்ததைப் போலவே வாழ்வில் மகிழ்ச்சியை அனுபவிக்கமுடியாதவர்களாகிவிடுகிறார்கள். தாமாக மனமுவந்தோ, அல்லது தம்மையும் மீறிய நிலையிலோ, தங்கள் விருப்பத்தேர்வாகவோ அல்லது அவசியத்தேவையினாலோ பெரும்பாலான நவீன மனிதர்கள் நரம்புத்தளர்ச்சியை உண்டுபண்ணுவதான, மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடியதான பதற்றமான வாழ்க்கைமுறையைப் பின்பற்றுகிறார்கள். தொடர்ந்த ரீதியாக மிகவும் களைத்துச் சோர்வின் பிடியில் இருக்கும் அவர்களால் மதுவின் உதவியின்றி மகிழ்ச்சியை உணரமுடிவதில்லை.

அப்பட்டமான முட்டாள்களாக இருக்கும் பணக்காரர்களை ஒருபுறம் விலக்கிவைப்போம், வாழ்வதற்காக அயராது உடலுழைப்பை நல்கவேண்டியிருக்கும் சாதாரண மனிதரைப் பற்றிப் பார்ப்போம். இத்தகைய மனிதர்களின் விஷயத்தில் சோர்வு என்பது பெருமளவு கவலையால் ஏற்படுகிறது. இந்தக் கவலையை வாழ்வு குறித்த இன்னும் மேலானதொரு தத்துவத்தாலும், சற்று அதிகமான மன ஒழுக்கத்தினாலும் தவிர்க்கலாம். பெரும்பாலான ஆண்களும் பெண்களும் தங்கள் எண்ணங்களை எந்தவிதத்திலும் கட்டுக்குள் வைத்திருக்க முடியாதவர்களாகவே இருக்கிறார்கள். கவலையளிக்கக் கூடிய விஷயங்களையே அவர்கள் எப்போதும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவை குறித்து எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள வழியில்லை என்ற நிலையிலும் அவற்றைப் பற்றியே எண்ணிக்கொண்டிருக் கிறார்கள். மீண்டும் மீண்டும் தங்களுடைய பிரச்சனைகள், கவலைகளையே மண்டைக்குள் ஒடவிட்டுக்கொண்டிருக்கிறார்கள். மறுநாள் அவற்றை திருத்தமாக எதிர்கொண்டு சமாளிக்கும் அளவில் அவற்றைப் பற்றி யோசிக்காமல், தூங்கவிலாமலிருப்பவர்களின் இயல்பான நடவடிக்கையாக அமைகின்ற கவலை யிலாழ்ந்த சிந்தித்தலாக, பாதி – சித்தங்கலங்கிய நிலையிலான நினைவோட்டமாக அவர்கள் சிந்திக்கிறார்கள். அந்த நள்ளிரவு சித்தங்கலங்கிய நிலையின் ஒரு பகுதி காலையிலும் அவர்களிடமே தங்கிவிடுகிறது. அவர்களுடைய தெளிவான சிந்தனையை மங்கலாக்கி அவர்கள் சரியானபடி சிந்திப்பதை, மதிப்பிடுவதை மழுங்கடித்துவிடுகிறது.  அவர்களுடைய அமைதியைக் குலைத்து அவர்களுக்குக் கோபமும் எரிச்சலும் ஏற்படுத்துகிறது, எதிர்ப்படும் எந்தத் தடங்கலும் ஒரேயடியாக அவர்களுடைய சமன்நிலையைக் குலைக்கும்படி செய்கிறது. மனப்பக்குவமுள்ள மனிதன் தனது பிரச்சனைகளைப் பற்றி சிந்திப்பதற்கென ஏதாவது குறிப்பான நோக்கம் அல்லது இலக்கு இருக்கும்போது மட்டுமே அவற்றை எண்ணத் தலைப்படுகிறான். மற்ற நேரங்களில் அவன் வேறு விஷயங்களைப் பற்ரி நினைக்கிறான், அல்லது, அது இரவு நேரமாயிருந்தால் அவன் எதைப்பற்றியுமே சிந்திப்பதில்லை. இப்படி நான் சொல்வதால், ஒரு மிக அவசரமான காலகட்டத்தில், மிக நெருக்கடியான நேரத்தில், உதாரணத்திற்கு, ஒருவருடைய உயிருக்கே ஆபத்து என்கிற நிலையில் தனது மனைவி தனக்கு துரோகம் செய்கிறாள் என்று ஒரு மனிதர் தகுந்த காரணங்களின் அடிப்படையில் சந்தேகப்படுகிறார் என்கிற நிலையில், வெகு சில மிக உயரிய மனக்கட்டுப்பாடு உடைய வெகு சிலரைத் தவிர, மற்றவர்கள் அது குறித்து எதுவுமே சிந்திக்காமல், தங்களால் அது குறித்து எதுவும் செய்யவியலாது என்ற புரிதலில் வாளாவிருந்துவிட முடியும் என்று நான் சொல்வதாக அர்த்தமல்ல. ஆனால், வழக்கமான நாட்களின் வழக்கமான பிரச்சனைகளை, அவற்றை எந்தவகையிலாவது கையாண்டாகவேண்டும் என்ற அவசியம் ஏற்பட்டாலொழிய சிந்திக்காமலிருந்துவிடுவது சாத்தியமே. ஒரு பிரச்சனையை உரிய நேரத்தில் உரிய அளவாக எண்ணிப்பார்ப்பதை வழக்கமாகக் கொண்ட, அவசியமில்லாதபோதும் எல்லாப் பிரச்சனைகளையும் எண்னிக்கொண்டேயிருக்காத ஒருவித ஒழுங்கமைவு கொண்ட கட்டுப்பாடுடைய சிந்தனைப்போக்கை வளர்த்துக்கொண்டால் நம்முடைய மகிழ்ச்சியும், செயல்திறனாற்றலும் பன்மடங்கு பெருகும் என்பது மலைக்கவைக்கும் உண்மை. கவலையளிக்கும் அல்லது கடினமான முடிவு அல்லது தீர்வை எட்டியே ஆகவேண்டும் என்ற கட்டாயமிருப்பின், தேவையான தரவுகள் எல்லாம் கிடைத்தவுடன் கையிலுள்ள பிரச்சனைக்கு உங்களுடைய ஆகச்சிறந்த கூரிய, தெளிந்த சிந்தனையை அளித்து அதன் அடிப்படையில் ஒரு தீர்வை எட்டவும். அப்படியொரு முடிவை எடுத்துவிட்ட பிறகு, பிரச்சனை குறித்த புதிய உண்மை ஏதாவது தெரியவரும் வரை உங்கள் முடிவை மறுபரிசீலனைக்கு உட்படுத்தாதிர்கள். முடிவெடுக்க முடியாத நிலையை விட மிகவும் மனச்சோர்வளிக்கும் விஷயம் ஏதுமில்லை. முடிவெடுக்கவியலாததை விட மோசமான அளவு அர்த்தமற்ற, பயனற்ற வீண்விரய விஷயம் வேறெதுவும் இல்லை.

நமக்குக் கவலையையும் பதற்றத்தையும் உண்டாக்கும் விஷயத்தின் முக்கியத்துவ மின்மையைப் உணர்ந்துகொள்வதன் மூலம் பெருமளவு கவலைகளையும் அலைக் கழிப்புகளையும் இல்லாமலாக்கிவிட முடியும். எனது வாழ்நாளில் நான் நிறைய உரைகள் ஆற்றியிருக்கிறேன். ஆரம்பத்தில் பார்வையாளர்களைப் பார்த்து மிகவும் பயந்தேன். அந்த பயமும் பதற்றமும் என் உரைகளைப் பெரிதும் பாதித்தன. சொற்பொழிவாற்றுவது என்பது எனக்கு அத்தனை அச்சமூட்டியதால் நான் பேசப்போவதற்கு முன்பு என் கால் உடைந்துவிட்டால் நன்றாக இருக்குமே என்ற எதிர்பார்ப்பு எனக்குள் எப்போதுமே இருந்தது. சொற்பொழிவாற்றி முடித்தவுடன் அதில் ஏற்பட்ட மன அழுத்தத்தால் நான் மிகவும் சோர்ந்துபோவேன்.சிறிது சிறிதாக , நான் நன்றாகப் பேசுகிறேனோ, மோசமாகப் பேசுகிறேனோ – அஹ்டனால் உலகுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிடாது. இந்தப் பிரபஞ்சம் எப்போதும் இருப்பதைப்போலவே தான் இருக்கும் என்று நினைக்கும்படி என்னை நானே பழக்கப்படுத்திக்கொண்டேன். நான் நன்றாகப் பேசினேனா அல்லது மோசமாகப் பேசினேனா என்பதை பற்றி நான் கவலைப்படாமல் இருந்தால், என் பேச்சு மோசமாகிவிடுவதில்லை என்பதை கண்டுகொண்டேன். என் மன அழுத்தம் படிப்படியாக மறைந்து ஏறத்தாழ இல்லாமலாகிவிட்டது. நம்முடைய மன அழுத்தத்தின் பெரும்பகுதியை இவ்விதமாகக் கையாளமுடியும். நாம் செய்வதெல்லாம் மிக முக்கியமானவை, முக்கியத்துவம் வாய்ந்தவை என்று நாம் அனுமானித்துக்கொள்கிறோம். ஆனால், உண்மையில் அப்படியொன்றுமில்லை. நம்முடைய வெற்றிகளும், தோல்விகளும் அப்படியொன்றும் முக்கியத்துவம் வாய்ந்தவையல்ல.

மிகப்பெரிய துயரங்களைக்கூடக் கடந்துவாழ முடியும்; நமது வாழ்க்கையில் இனி மகிழ்ச்சியே இல்லாமல் செய்துவிடும் என்று தோன்றும் பிரச்சனைகள் கூட காலப்போக்கில் மங்கி மறைந்துவிடும். ஒரு கட்டத்தில்  அவற்றின் தீவிரத்தை நினைவுபடுத்திப்பார்ப்பதுகூட நம்மால் முடியாத காரியமாகிவிடும். ஆனால், இத்தகைய சுயஞ்சார் அக்கறைகளைக் காட்டிலும் பெரிது, ஒருவருடைய ‘ஈகோ’ உலகத்தின் பெரிய பகுதியெல்லாம் கிடையாது என்ற உண்மை. ஒரு மனிதர் சுயத்தைக் கடந்துசெல்லும் ஒன்றிடம் தனது எண்ணங்களையும் நம்பிக்கைகளையும் ஒருமுகப்படுத்தியிருப்பாரேயானால் அவனால் வாழ்வின் சாதாரணமான பிரச்சனைகளில் ஒருவித அமைதியை கண்டறிய முடியும். அப்பட்டமான தன்முனைப்புவாதிக்கு அது முடியாத காரியம்.

 

நம் நரம்புகளுக்கு மிகவும் சுகாதாரமானது என்று அழைக்கப்படக்கூடியவற்றைப் பற்றி ஆய்வலசல்களே இல்லையெனலாம். தொழிற்துறை சார் உளவியல் இந்த உடல்நோர்வு, உளச்சோர்வு குறித்து அகல்விரிவான விசாரணைகளை மேற்கொண் டுள்ளது என்பது உண்மைதான். அந்த ஆய்வலசல்கள் மூலம், நாம் ஒன்றை நீண்ட நேரம், நீண்ட காலம் செய்துகொண்டே யிருந்தால் இறுதியில் நாம் மிகுந்த சோர்வுக்காளாவோம் என்பதை கவனமாய்த் திரட்டிய புள்ளிவிவரங்களிலிருந்து நிரூபித்திருக்கிறது – இந்த விளைவை, அறிவியலின் ஆடம்பரமான அணிவகுப்பில் லாமலே அனுமானிக்க முடியும்.  உளவியலாளர்களால் மேற்கொள்ளப்பட்ட சோர்வு குறித்த ஆய்வுகள், கணிசமான அளவு பள்ளிக்கூடக் குழந்தைகளிடம் காணப்படும் சோர்வு குறித்த ஆய்வலசல்களும் இருந்த போதிலும்,   முக்கியமாக தசைசார் சோர்வையே கவனத்தில் எடுத்துக் கொண்டிருப்பவை. ஆனால் இவற்றில் எதுவுமே முக்கியமான பிரச்சனையைக் கையில் எடுத்துக்கொள்ளவில்லை.

 

நவீன வாழ்க்கையில் முக்கியமான வகை சோர்வு என்பது எப்போதுமே உணர்வுரீதியான, மனரீதியான சோர்வாகவே இருக்கிறது; முற்ற முழுக்க அறிவுத்திறன் சார் சோர்வு, முற்ற முழுக்க தசை சார்ந்த சோர்வைப்போலவே, அதனுடையதேயான நிவாரணத்தைத் தூக்கத்தில் உற்பத்திசெய்கிறது. அறிவுத்திறன் சார்ந்த கடின உழைப்பை, உணர்ச்சிகளுக்கு வேலையற்ற உழைப்பை, மேற்கொள்ளவேண்டிய நிலையிலிருக்கும் எந்த நபரும் – எடுத்துக்காட்டாக, அகல்விரிவான எண்கணிதக் கணக்கீடுகளைச் செய்யவேண்டியிருப்பதுபோல் – அந்த நாள் வரவாக்கிய சோர்வை ஒவ்வொரு நாளின் முடிவிலும் தூங்கிச் சரியாக்கிக்கொள்வார். ஏற்பட்ட சோர்வு என்னும் பாதிப்பு அதிகமாக வேலை செய்ததன் காரணமாக உண்டாவதாகச் சொல்லப்பட்டாலும். அது அரிதாகவே நிகழ்கிறது. ஆனால், ஏதோ கவலை அல்லது பதற்றம் காரணமாகவே அந்த சோர்வு உண்டாகிறது. உணர்வுரீதியான சோர்வின் பிரச்சனை அது ஓய்வில் குறுக்கிடுகிறது. ஒரு மனிதர் எத்தனைக்கெத்தனை சோர்ந்துபோகிறாரோ அத்தனைக்கத்தனை அவரால் வேலை செய்வதை நிறுத்த முடியாமல் போய்விடுகிறது. நரம்புத்தளர்ச்சியின் / உச்சமான nervous breakdown (மன அழுத்தம், மனமுறிவு)ஐ ஒருவர் நெருங்கிக் கொண்டிருப்பதற்கான அறிகுறிகளில் ஒன்று, அவருடைய வேலை அதிமுக்கியமானது என்ற நினைப்பும், வேலையிலிருந்து சவிடுமுறை எடுத்துக்கொண்டால் பேரழிவுக்கு அது வழிவகுக்கும் என்ற நம்பிக்கையாகும்

நான் ஒரு மருத்துவம் சார்ந்த நபராக இருப்பின், தனது வேலை மிக மிக முக்கியம் என்று நம்பும், பாவிக்கும் எல்லா நோயாளிகளுக்கும் விடுமுறை தேவை என்று பரிந்துரைப்பேன். அதிக வேலைப்பளுவினால் ஏற்பட்டிருப்பதாகத் ஹ்டோன்றும் மன அழுத்தம் என்பது, எனக்குத் தனிப்பட்ட அள்வில் மிகவும் பரிச்சயமாயிருக்கும் எல்லோர் விஷயத்திலும், வேறு ஏதோ உணர்வு சார்ந்த பிரச்சனை காரணமாகவே உருவானதாக இருக்கிறது. அதிலிருந்து தப்பிக்க அதீதமாக உழைக்கிறார் நோயாளி. தனது வேலையைத் தாமதப்படுத்துவதையோ, தவிர்ப்பதையோ அவர் தீர வெறுக்கிறார். காரணம், அவர் அப்படிச் செய்தால், பின் அவருடைய அந்தப் பிரச்சனையிலிருந்து, அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்,  கவனத்தைத் திருப்ப அவருக்கு வேறு எதுவுமே இல்லாமல்போய்விடும்.  அவருக்கிருக்கும் இக்கட்டு நிலை, வங்கிக்கணக்கு காலாவதியாகிவிட்டதாக, அவர் போண்டியாகி விட்டதாக இருக்கலாம். அத்தகைய விஷயங்களில் அவருடைய கவலை என்பது அவருடைய பணியோடு நேரடியாக சம்பந்தப்பட்டிருக்கிறது. ஆனால், அதுவும் கூட, அவரது பிரச்சனை அவரை நீண்ட நேரம் பணியாற்றச் செய்யும் சாத்தியப்பாடு உண்டு. அதன் விளைவாய்,  அவரால் விஷயத்தைத் தெளிவாக அலசிப்பார்க்க முடியாமல் போகும் நிலையும், அதன் காரணமாய், அவர் குறைவாகவே வேலை செய்திருந்தாலும்கூட சீக்கிரமே அவர் போண்டியாகியிருக்கவும் வழியுண்டு. எப்படிப்பார்த்தாலும், இத்தகையோர் ஒவ்வொருவர் விஷயத்திலும், உணர்வுரீதியான பிரச்னை தான் மன அழுத்தத்திற்கும் நரம்புத்தளர்ச்சிக்கும் வித்திடுகிறதே தவிர வேலைப்பளு அல்ல,

 கவலையின் உளவியல் என்பது எந்த வகையிலும் சுலபமான ஒன்றல்ல.  நான் ஏற்கனவே மன ஒழுங்கு குறித்துப் பேசியிருந்தேன். அதாவது, விஷயங்களை சரியான நேரத்தில் சிந்தித்தல். இதற்கு அதனுடையதேயான முக்கியத்துவம் இருக்கிறது. முதலில், இது குறைந்த அலவு சிந்தித்தலிலேயே ஒரு நாளின் வேலையைச் செய்துமுடிக்க வழிவகுக்கிறது. இரண்டாவது, இது தூக்கமின்மையைக் குணப்படுத்த வழிசெய்கிறது. மூன்றாவதாக, இது முடிவெடுத்தலில் ஆற்றலையும் விவேகத்தையும் வளர்க்கிறது. ஆனால், இவ்வகையான வழிமுறைகள் ஆழ் மனதையோ, நனவிலி மனதையோ தொடுவதில்லை.  இரண்டாவது, இது தூக்கமின் மையைக் குணப்படுத்த வழிசெய்கிறது. மூன்றாவதாக, இது முடிவெடுத்தலில் ஆற்றலையும் விவேகத்தையும் வளர்க்கிறது.வுகளில் செயல்திறன் மற்றும் ஞானத்தை ஊக்குவிக்கிறது. ஆனால் இந்த வகையான முறைகள் ஆழ்மனதையோ அல்லது நனவிலி மனதையோ தொடுவதில்லை, மேலும், பிரச்ச்னை மிகவும் ஹ்டீவிரமானதாக இருந்தால், எந்த வழிமுறையும், அந்த வழிமுறை பிரக்ஞை மட்டத்திற்கு அடியில் ஊடுருவிச் சென்றாலொழிய அதனால் நேரிய பயனிருக்காது. நனவிலி மனம் பிரக்ஞையின் மீது செலுத்தும் தாக்கம், ஆதிக்கம் குறித்தெல்லாம் உளவியலாலர்கள் நிறைய ஆராய்ச்சி மேற்கொண்டிருக்கிறார்கள். ஆனால், நனவிலி மனதின் மேல் பிரக்ஞை எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து மிக மிகக் குறைவாகவே உளவியலாய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. .

எனினும், மன சுகாதாரம் என்பதில் பின்னது அளப்பரிய முக்கியத்துவம் வாய்ந்தது. தர்க்கபூர்வமான உறுதிப்பாடுகள் நனவிலி வெளியில் செயல்பட வேண்டுமென்றால். இதைப் புரிந்துகொள்ளவேண்டியது இன்றியமையாதது. கவலை என்ற விஷயத்தில் இது மிகவும் பொருந்தும். அத்தகையதொரு துரதிர்ஷ்டம் நடந்தால் அது அவ்வளவு பயங்கரமானதாக இருக்காது என்று ஒருவர் தனக்குத்தானே சொல்லிக்கொள்வது சுலபம். ஆனால் இதுவொரு பிரக்ஞாபூர்வமான உறுதியான எண்ணமாக இருக்கும்வரை அது இரவின் கண்காணிப்புகளில் செயல்படாது, அல்லது அது பீதிக்கனவுகள் தோன்றுவதைத் தவிர்க்கும்.

என்னுடைய நம்பிக்கை என்னவென்ரால், ஒரு பிரக்ஞாபூர்வமான எண்ணத்தை, போதுமான அளவு வீரியத்தோடும், தீவிரத்தன்மையோடும்,  நனவிலி மனதுக்குள் ஊன்ற முடியும். நனவிலி மனதின் பெரும்பான்மைப் பகுதியில் இடம்பெறுவன ஒரு சமயம் நம்மிடத்தில் மிக வலுவாய், உணர்வுபூர்வமாய் பிரக்ஞாபூர்வமாய் இருந்து தற்போது புதையுண்டுவிட்ட எண்ணங்களே. அத்தகைய எண்ணங்களைப் புதைப்பது வேண்டுமென்றே செய்யப்படலாம். இந்த வழியில் நனவிலி மனம் நிறைய பயனுள்ள வேலைகளைச் செய்யும்படி வழிநடத்தப்பட முடியும். உதாரணமாக, ஒரு கடினமான கருப்பொருளில் எழுதவேண்டுமென்றால் அதற்கான சிறந்த திட்டம் அதை பற்றி மிகத் தீவிரமாக, எனக்கு சாத்தியமான உச்சபட்ச தீவிரத்தன்மையோடு சில மணி நேரங்கள் அல்லது சில நாட்கள் சிந்தித்துக்கொண்டிருப்பது, அப்படி சிந்தித்து அதன் முடிவில் அதை எழுதும் பணி வெளியே தெரியாத அளவு உருப்பெறவேண்டும் என்று கட்டளையிடுவதுதான் தான் என்று நான் கண்டுபிடித்துக்கொண்டிருக்கிறேன்.

 

 

 

சில மாதங்களுக்குப் பிறகு நான் அந்தக் கருப்பொருளுக்குப் பிரக்ஞாபூர்வமாகத் திரும்புவேன். அந்த வேலை நிறைவுபெற்றிருப்பதை உணர்வேன். இந்த உத்தியை நான் கண்டறிவதற்கு முன்பாக, இடைப்பட்ட மாதங்களில் நான் மிகவும் கவலையோடிருப்பேன். எழுதவேண்டிய விஷயத்தில் நான் எந்த முன்னேற்றமும் அடையவில்லையே என்று மிகவும் கவலைப்படுவேன். அந்தக் கவலை சம்பந்தப்பட்ட பிரச்சனைக்கு சீக்கிரமே தீர்வையெட்ட எந்தவகையிலும் உதவாது.;. அந்த இடைப்பட்ட மாதங்கள் வீண்விரயமாகிவிடும், ஆனால், இப்போது என்னால் அவற்றை என்னுடைய பிற தேடல்களுக்குப் பயன்படுத்திக்கொள்ள முடியும். .கவலைகள் தொடர்பாய் நான் மேற்குறிப்பிட்ட எடுத்துக்காட்டுக்குப் பலவகையிலும் ஒத்த வேறொரு வழியையும் நாம் மேற்கொள்ளலாம். ஏதாவதொரு துரதிருஷ்டம் அச்சுறுத்தும்போது உச்சபட்ச மோசமாக என்ன நடக்கும் என்பதை தீவிரமாக, நிதானமாக யோசியுங்கள். அப்படி நேருக்கு நேரே இந்த சாத்தியமாகக்கூடிய துரதிருஷ்டத்தைப் பார்த்தபிறகு, இது அப்படியொன்றும் படுபயங்கரமான பேரழிவு இல்லை என்று எண்ணிக்கொள்வதற்கான வலுவான காரணங்களை உங்களுக்கு நீங்களே தரவும். அத்தகைய காரணங்கள் எப்போதுமே இருக்கும் – அதாவது, உச்சபட்ச மோசமாக ஒருவருக்கு நடக்கக்கூடிய எதுவுமே பிரபஞ்ச அளவில் எந்தவொரு முக்கியத்துவமும் வாய்ந்ததாக இருப்பதில்லை. அப்படி உச்சபட்ச மோசமான சாத்தியப்பாட்டை சிறிதுநேரம் பார்த்தபிறகு. உங்களுக்கு நீங்களே உறுதியோடு திட்டவட்டமாக, “அட, பார்க்கப்போனால்ம் அது அப்படியொன்றும் பெரிதாகப் பொருட்படுத்தத் தக்கதல்ல” என்று சொல்லிக்கொண்டால், உங்களுடைய கவலை அசாதாரணமான அளவு மங்கிவிடுவதை உங்களால் உணர முடியும். இந்த வழிமுறையை ஒரு சில தடவைகள் சொல்லிக்கொள்வது அவசியமாக இருக்கக்கூடும், ஆனால், முடிவில், அந்த மோசமான சாத்தியப்பாட்டை நேரடியாக முகத்துக்கு நேராக இந்ன்று பார்ப்பதை எந்தவிதத்திலும் நீங்கள் தவிர்க்காதிருந்திருப்பின், உங்களுடைய கவலை முற்றிலுமாக மறைந்து அந்த இடத்தில் ஒருவிதக் களிப்பும் கிளர்ச்சியும் வந்துசேர்ந்திருப்பதையும் உங்களால் உணரமுடியும்.

இது பயத்தைத் தவிர்ப்பதற்கான ஒரு பொதுவான செயல்நுட்பத்தின் ஒரு பகுதியாகும். கவலை என்பது ஒருவகை அச்சம். எல்லாவகையான அச்சமும் சோர்வை ஏற்படுத்துகிறது. அச்சத்தை உணராமலிருக்கக் கற்றுக்கொண்டுவிட்ட மனிதன் தினசரி வாழ்வு வரவாக்கும் சோர்வு பெருமளவு குறைந்துவிட்டதை உணர்வான் நாம் நேருக்கு நேர் சந்திக்க அஞ்சும்படியான ஓர் ஆபத்து இருக்கும் போதுதான் . பயம் என்பது அதன் மிகவும் அழிவாக்கத்தன்மையோடு ஏற்படுகிறது. சில எதிர்பாராத தருணங்களில் படுமோசமான எண்ணங்கள் நம் மனதுக்குள் சரேலெனப் பாய்ந்து நுழைகின்றன. அவை என்ன என்பது சம்பந்தப்பட்ட நபரைப் பொறுத்தது. ஆனால், ஏறத்தாழ எல்லோருக்குமே சில பயங்கள் உள்ளார்ந்து இருக்கும். ஒரு மனிதருக்கு அது புற்றுநோயாக இருக்கலாம். இன்னொருவருக்கு அது நிதிசார் சரிவாக இருக்கலாம், மூன்றாமவருக்கு அது இழிவுண்டாக்குவதான ஒரு ரகசியத்தை அறிந்துகொள்வதாக இருக்கலாம். நான்காமவர் பொறாமையில் பிறக்கும் சந்தேகங்களால் அலைக்கழிக்கப்படுபவராக இருக்கலாம், ஐந்தாமவர் இரவுகளில், தனது இளம் வயதில் தனக்கு நரகத்தின் நெருப்புக்குழிகள் குறித்துச் சொல்லப்பட்ட கதைகள் உண்மையாக இருக்கக்கூடும் என்ற நினைப்பால் இரவில் அலைக்கழிக்கப் படுபவராக இருக்கலாம்.

ஒருக்கால் இந்த மனிதர்கள் தங்களுடைய அச்சத்தைக் கையாள்வதில் தவறான உத்தியைக் கடைப்பிடிப்பவர்களாக இருக்கக்கூடும்.’ அவர்களை ஆட்டுவிக்கும் அந்த பயம் அவர்கள் மனதில் நினைக்கப்படும்போதெல்லாம் அவர்கள் ஏறு எதையாவது நினைக்க முயற்சி செய்கிறார்கள்; வேலை செய்வதிலோ, பொழுதுபோக்கி மகிழ்வதிலோ, வேறு எதிலாவதோ அவர்கள் தங்களுடைய கவனத்தையும் எண்ணங்களையும் திசைதிருப்ப முயற்சிக்கிறார்கள். ஒவ்வொரு பயமும் அதைப் பார்க்காதிருப்பதன் மூலம் மேலும் மோசமடைகிறது; தீவிரமடைகிறது. ஒருவர் தனது எண்ணத்தை ஒரு விஷயத்திடமிருந்து அப்பால் திருப்பிக்கொள்ளப் பிரயத்தனப்படுவது உண்மையில், அவர் எந்த அவலமான, மோசமான காட்சியிலிருந்து கண்களை அப்பால் திருப்பிக்கொள்கிறாரோ அந்த பயங்கரத்திற்குத் தரப்படும் பாராட்டாகும்; எந்தவொரு பயத்திற்கும், எல்லா பயங்களுக்கும் சரியான வழிமுறை என்பது அந்த பயத்தைத் தர்க்கபூர்வமாகவும், அமைதியாகவும், ஆனால் அதி கவனத்தோடும், அந்த பயம் நமக்கு முழுக்கப் பரிச்சயமானதாகப் பழகிப்போகும் வரை, சிந்தித்துப்பார்ப்பது. முடிவில், அந்த பரிச்சயத்தன்மை என்பது அந்த பயத்தின் பயங்கரங்களை கூர்மழுங்கச்செய்துவிடும்’ அந்த மொத்த விஷயமுமே அலுப்பூட்டுவதாக மாறிவுடும். நம்முடைய எண்ணங்கள் அவற்றை விட்டு அப்பால் திரும்பிவிடும். – முன்பு போல் ,அப்படியாகவேண்டும் என்று நாம் முனைப்பாக முயற்சி மேற்கொள்வதால் அல்ல. மாறாக, அந்த விஷயத்தில் நமக்கு ஆர்வம் குறைந்துவிடுவதால். நீங்கள் எதைப் பற்றியும் அது என்ன விஷயமாக இருந்தாலும் சரி, கவலைப்பட்டுக்கொண்டேயிருக்கத் தலைப்பட்டால், அத்தகையதொரு போக்கு உங்களிடமிருப்பதை உணர்ந்தால், அதற்கான சரியான செயல்திட்டம் கவலையளிக்கும் அந்த விஷயத்தை நீங்கள் இயல்பாக எண்ணத் தலைப்படுவதைக் காட்டிலும் அதிகமான அளவு எண்ணிப்பாருங்கள். அந்த பயம் குறித்து உங்களிடமுள்ள சாவனைய ஈர்ப்பு முற்றிலுமாக மங்கி மறையும் வரை அதைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருங்கள்.

 நவீன ஒழுக்க நெறி மிகவும் பழுதுபட்டதாக இருக்கும் விஷயங்களில் ஒன்று இந்த அச்சம் என்ற ஒன்று. உடல்ரீதியான துணிச்சல், குறிப்பாக போரில், ஆண்களிடம் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்பது உண்மையே, ஆனால், வேறுவிதமான துணிச்சல்கள் அவர்களிடம் எதிர்பார்க்கப்படுவதில்லை. பெண்களிடம் எந்தவகையான துணிச்சலும் எதிர்ப்பார்க்கப்படுவதில்லை. தைரியசாலிப் பெண்ணை ஆண்கள் விரும்பவேண்டும் என்றால் அவள் தனது துணிச்சலை மறைக்க வேண்டியதாகிறது. உடல்ரீதியான ஆபத்தைத் தவிர வேறு எந்த விஷயத்திலும் தைரியமாக உள்ள ஆணும்கூட மோசமானவனாகவே பார்க்கப்படுகிறான். உதாரணமாக, வெகுஜன அபிப்பிராயத்தைப் பொருட்படுத்தாமலிருப்பது ஒரு சவாலாகப் பார்க்கப்படுகிறது. வெகுஜன மேலாதிக்கத்தை எதிர்க்கத் துணியும் ஆணைத் தண்டிக்க பொது சமூகம் தன்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்கிறது. இவையெல்லாமே அது அவசியமாக இருக்கவேண்டிய நிலைக்கு நேர் எதிர் நிலை.

ஆண்களோ, பெண்களோ அவர்களிடம் உள்ள எல்லாவகையான தைரியமும். ஒரு படைவீரனின் தைரியம் பாராட்டப்படுவதே போல் பாராட்டப்படவேண்டும்.. இளைஞர்களிடையே காணப்படும் தைரியம் சார் பொதுத்தன்மை, ஒரேமாதிரித்தன்மை , பொது சமூகம் எவ்வகையான தைரியத்தைக் கோருகிறதோ அது  குறித்து முன்வைக்க்கப்படும் பொதுக்கருத்திற்கு எதிர்வினையாகவே தயாரிக்கப்படுவதாகலாம் என்பதற்கான ஒரு நிரூபணம். அதிகத் துணிச்சல் இருந்தால் அங்கே கவலை குறைவாக இருக்கும்,, எனவே, சோர்வு குறைவாக இருக்கும். தற்காலத்தில் ஆண்களும் பெண்களும் துன்புறும் நரம்புசார் சோர்வுகளின் மிகப் பெரும்பாலானவை, பயங்களினால் - பிரக்ஞாபூர்வமானவையும், நனவிலி மனம் சார்ந்ததுவையும் – ஏற்படுபவை.,

சோர்வு ஏற்பட மிகப்பல நேரங்களில் காரணமாவது ஆர்வப் பரவசத்திற்கான ஆவல்; பெருவிருப்பு. ஒரு மனிதன் தனது ஓய்வுநேரத்தை தூக்கத்தில் செலவழித்தால் அவனுடைய உடல் நலம் சிறப்பாக இருக்க முடியும். ஆனால், அவனுடைய பணிநேரம் ஒரேமாதிரியாக இருந்தால் அவன் தனது வேலைநேரம் முடிந்தபின் ஆனந்தம் அனுபவித்து மகிழ்வடையவேண்டிய தேவையை உணர்வான். இதில் பிரச்சனை என்னவென்றால், மிக எளிதாக அடையக்கூடிய இன்பங்கள், குதூகலங்கள் உச்சபட்சமாக மேலோட்டமான ஈர்ப்புத்தன்மை வாய்ந்தவை. நரம்புகளைக் களைத்துப்போகச் செய்பவை. ஆர்வப் பரவசத்திற்கான ஆர்வமும் விருப்பமும் ஒரு கட்டத்திற்கு மேல் ஒன்று ஒருவித முறுக்கிவிடப்பட்ட மனநிலையின் அல்லது உள்ளார்ந்த ஒருவித அதிருப்தியின் அறிகுறியாக அமைகிறது. ஒரு மகிழ்ச்சிகரமான மணவாழ்வின் ஆரம்பநாட்களில் பெரும்பாலான ஆண்கள் வேறு ஆனந்தக் கிளர்ச்சிக்கான தேவையை உணர்வதில்லை, ஆனால், நவீன உலகில் திருமணம் என்பது மிகவும் ஒத்திப்போடப்பட்டு மிகத் தாமதமாக  பொருளாதார ரீதியாக சாத்தியமாகக்கூடிய ஒன்றாக மாறும்போது ஆர்வக்கிளர்ச்சி என்பது மனிதனின் ஒரு பழக்கமாகவே மாறிவிடுகிறது. குறுகிய காலத்திற்கு மட்டுமே அதை விட்டு விலகியிருப்பது சாத்தியப்படுகிறது. இப்போது திருமண நிகழ்வுக்கு ஆகும் பொருளாதாரச் சுமை இல்லாமலே ஆண்கள் இருபத்தியோரு வயதில் திருமணம் செய்துகொள்ளலாம் என்றிருந்தால் பல ஆண்கள் தங்கள் பணியைப் போல் அத்தனை சோர்வுண்டாக்கும் இன்பக்கிளர்ச்சிகளைக் கோரும் வழியைத் தேர்ந்தெடுக்கவே மாட்டார்கள். இது சாத்தியமாக்கப்படவேண்டும் என்று குறிப்புணர்த்துவது ஒழுக்கக்கேடானது – நீதிபதி லிண்ட்ஸே (LINDSEY)யின் விதியிலிருந்து - அவர் நீண்டதொரு மதிப்பார்ந்த பணிக்காலத்தைக் கடந்துமுடித்திருக்கிறார் என்றாலும் பெரியவர்களின் மதவெறியினால் ஏற்படும் அவலங்களிலிருந்து இளைய தலைமுறையினரைக் காப்பாற்றவேண்டும் என்று அவர் விரும்பிய ஒரே குற்றத்திற்காக அவதூறுக்காளானார் - இதை நம்மால் கண்டறிய முடியும். எப்படியும், தற்சமயம், இந்த விஷயம் பற்றி நான் மேலும் பேசப்போவதில்லை. ஏனெனில், இது பொறாமை என்ர தலைப்பின் கீழ் வருகிறது. பொறாமை குறித்து இனி வரும் அத்தியாயத்தில் நாம் கவனம் செலுத்துவோம்.

எந்த சட்டங்களின், அமைப்புகளின் கீழ் வாழ்கிறாரோ அவற்றை மாற்ற முடியாத, திருத்தியமைக்க முடியாத நிலையில் உள்ள தனிநபரைப் பொறுத்தவரை ஒடுக்குமுறையைக் கையாளும் ஒழுக்கவியலாளர்களால் உருவாக்கப்பட்டு வளர்த்துவிடப்படும் சந்தர்ப்பசூழலைக் கையாள்வது மிகவும் கடினமான காரியம். அதிக அளவு திருப்தியளிக்கும் ஆனந்தங்களை அடைய வழியில்லாதபோது ஒரு மனிதனுக்கு இந்தவிதமான இன்பக்கிளர்ச்சியில்லாமல் வாழ்க்கையை சகித்துக்கொள்ளவியலாது என்றபோதும், இன்பக்கிளர்ச்சிகள் என்பவை மகிழ்ச்சிக்கான பாதையல்ல என்பதை உணர்ந்துகொள்வது நன்மைபயக்கும் விஷயம். இத்தகைய சூழலில் விவேகமுள்ள மனிதன் செய்யக்கூடியது தன்னைத்தான் கட்டுப்படுத்திக்கொள்வது. தன்னுடைய உடல்நலனை பாதித்து தனது வேலையில் குறுக்கிடுவதாய் அமையும் அளவு சோர்வூட்டும் இன்பங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொள்ளாமலிருப்பது.தான்.

 

இளைய தலைமுறையினரின் பிரச்சனைகளுக்கான முழுமொத்த நிவாரணம் பொது சமூக ஒழுக்கநெறிகளில் மாற்றம் ஏற்படுவதில் இருக்கிறது.  இடைப்பட்ட காலத்தில் ஒரு மனிதன் தான் மணம் செய்துகொள்ளத் தகுதியானவன் என்ற நிலை கண்டிப்பாக ஏற்படும், அந்த சமயத்தில் மகிழ்ச்சியான வாழ்க்கையை அசாத்தியமானதாக்குவதாய் அதற்கு முந்திய அவனது வாழ்க்கைமுறை அமைந்திருக்கலாகாது என்பதை சிந்தித்துப் புரிந்துகொள்வதுதான் அவனுக்கு நன்மை பயக்கும். ஏனெனில் தனது வாழ்க்கைமுறையினால் நைந்து நலிந்த நரம்புகள் வழியாகவும், மென்மையான இன்பங்களைத் துய்க்க முடியாமல் போவதாலும் அத்தகையதொரு நிலைமை, மகிழ்ச்சியான மணவாழ்க்கையை அனுபவிக்க முடியாத அவலநிலை, எளிதில் ஏற்பட வழியுண்டு.

 

நரம்புசார் சோர்வின் மிக மோசமான அம்சங்களில் ஒன்று அது மனிதனுக்கும் வெளியுலகுக்கும் இடையிலான ஒருவகைத் திரையாய் செயல்படுகிறது. பதிவுகள் கம்மிய குரலில் அல்லது குரலெழும்பாத நிலையில் அவனை வந்தடைகின்றன. அவன் சகமனிதர்களை கவனிப்பதே அற்ப தந்திரங்களினால் அல்லது பழக்கவழக்கங் களினால் எரிச்சலுறுவதற்காக மட்டுமே என்றாகிறது; அவன் தனது உணவிலோ, சூரியவொளியிலோ இன்பங்காண்பதில்லை. ஆனால் ஒரு சில பொருட்கள் மீதே அவனது முழுகவனமும் ஒருவித பதற்றத்தோடு குவிகிறது. மற்ற எதையுமே அவன் பொருட்படுத்துவதில்லை.இந்தவிதமான மனப்போக்கு அவனை ஓய்வெடுக்கவே அனுமதிப்பதில்லை, எனவே, சோர்வு தொடர்ச்சியாக அதிகமாகிக் கொண்டே போய், ஒரு கட்டத்தில் மருத்துவ சிகிச்சை இன்றியமையாததாகிறது. இவையெல்லாமே அடிப்படையில் இதற்கு முந்தைய அத்தியாயத்தில் நாம் பேசிய புவியுடனான அந்தத் தொடர்பைப் பறிகொடுத்ததற்கான ஓர் அபராதமாகும். ஆனால், இந்தத் தொடர்பை  நவீன நகர்ப்புறப்பகுதிகளின் மக்கட்தொகைப் பெருக்கத்தில், நெரிசலில் எப்படிப் பேணிப் பராமரிக்க முடியும். இதை எண்ணிப்பார்ப்பது மிகவும் கடினம். என்றாலும், இங்கும் நாம் பெரிய, சமூகஞ்சார் கேள்விகளின் எல்லைக்கோடுகளில் நாம் இருப்பதைக் கண்டறிய முடியும். இந்த நூலில் அந்தக் கேள்விகளைக் கணக்கில் எடுத்துக்கொள்வது என் நோக்கமல்ல.

*