LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Tuesday, May 27, 2025

அனுபவம் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 அனுபவம்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
முப்பது வருட மொழிபெயர்ப்பு அனுபவம் எனக்கிருப் பதாகவும்
அது என் மொழிபெயர்ப்பில் மிளிர்கிறது என்றும்
குறுந்திறனாய்வொன்றில் குறிப்பிடப்பட்டிருக்கிறது….
முப்பது தானா? நாற்பதுகூட இருக்கலாம்....
ஆனால், அதுவொரு அளவுகோலா,
தெரியவில்லை.
சித்திரம் கைப்பழக்கமாக இருக்கலாம்;
இல்லாதுபோகலாம்.
படைப்பாளியாகா படைப்பாளியைப் போலவே
மொழிபெயர்ப்பாளராக மாட்டா மொழிபெயர்ப் பாளர்களும் உண்டு.
இகழ்வதைைப் போலவே புகழ்வதிலும்
அரசியல் இருப்பதை அறிந்திருக்கிறேன்.
இகழ்ச்சியும் புகழ்ச்சியும் சிலர் இயல்பாகக் கைக் கொள்ளும் உத்தியாவதுண்டு _
தம்மை விமர்சனாதிபதிகளாக சத்தமில்லாமல் பீடமேற்றிக்கொண்டுவிட.
முப்பது வருட மொழிபெயர்ப்பு அனுபவமுடையவர்
என்று மூன்று முறை அடித்துச்சொல்லியே
நேற்றிலிருந்து மொழிபெயர்க்கத் தொடங்கியவரை
முதுபெரும் மொழிபெயர்ப்பாளராக்கிவிடுவதும்
இங்கே நடக்கவில்லையா என்ன?
இத்தனை வருட இலக்கியவெளிப் பயணத்தில்
இன்னும் நிறையப் பார்த்தாயிற்று.
புகழுரைகளையும் இகழுரைகளையும்
பொருட்படுத்தாத அகம் ஆத்ம சுகம்.
குறும்பாக என்னைப் பார்த்துச் சிரித்தவாறு
கேட்கிறது நான்:
‘மொழிக்கடலின் ஒரு துளியாக இருக்கும் என்னால்
மொழியை எப்படி பெயர்க்க இயலும்?’.
கேள்வியை வழிமொழிகிறேன்.
இரண்டும் இரண்டு பாறைகளென்றாலாவது
பெயர்க்க முடியலாம் -
காற்றாக காலமாக
கண்ணாமூச்சிவிளையாடும்போது…?
சிறுமியின் நோட்டுப்புத்தகத்திற்குள் பத்திரப்படுத்தி வைத்திருக்கும் மயிலிறகாய்
இரு மொழிகளும் மாயம் செய்தபடி
நீவிவிட்டுக்கொண்டிருக்கின்றன என்னை.
அவை படிக்கத் தரும் வரிகள் அருள்பாலிக்கின்றன.
இருப்பைத் தாண்டி வாழ்கிறேன்.
இவ்வளவே.

Monday, May 26, 2025

புரிந்தும் புரியாமலும்…. ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 புரிந்தும் புரியாமலும்….

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

எக்கச்சக்கமான நல்ல படைப்புகள்
இருபது வருடங்களுக்குப் பிறகும்
கண்டுபிடிக்கப்படாத
கொலைசெய்யப்படவன் பிணமாக
கிணற்றுக்குள் மூழ்கடிக்கப்பட்டுவிடும்
காலகட்டத்தில்
ஒரு கவிதைப்புத்தகத்திற்கு
விமர்சனம் கிடைப்பது என்றால்
அது எத்தனை பெரிய வரம்!
அந்த விமர்சகர் என்னவொரு
பெருந்தன்மையாளர்….!
அதுவும்,
விமர்சனம் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுவிட்ட
தென்றால் (அதாவது பாராட்டுரையாக)
அது கவிக்குத் தரப்பட்ட
மில்லியன் டாலர் பொற்கிழியல்லவா!
ஆனாலும் அந்தக் கவியின் முகம்
களையிழந்தேயிருந்தது.
விமர்சனம் என்ற பெயரில் எழுதப்படும்
முழுமொத்தப் புகழுரையானாலும்
சொற்கள் எப்போதுமே தப்பாமல்
காசுகளாவதில்லைதான்….
ஆனால், அதுகூடப் பெரிதாகத் தெரியவில்லை
அந்தக் கவிக்கு.
”அந்த விமர்சனம் என் கவிதையைப் பற்றி
என்ன சொல்கிறதென்றே புரியவில்லை”
என்று ஆதங்கத்தோடு கவி சொன்னதைக்
கேட்டு
”அதுவொரு பெரிய விஷயமில்லை.
ஆங்கிலம் தெரிந்தவரை அணுகிக்
கேட்டால் போயிற்று”
என்ற நண்பனிடம்
”இது மொழிப்பிரச்சனையில்லை.
அவர் என்ன சொல்கிறார் என்றே
புரியவில்லை”,
என்று கவி சொல்ல
”புரியாக்கவிதை எழுதும் கவியெனப்படும்
நீயா இப்படிச் சொல்வது?” என்று
பெரிதாகச் சிரித்துக்கொண்டே கேட்ட நண்பன்
”விமர்சனத்தை ஆராயக்கூடாது;
அனுபவிக்கவேண்டும்
என்று ’வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்’ குரலில்
சொல்ல
”வசூலில்லாத ராஜாவானாலும் நான்
இதுவரை புரியாக்கவிதையைத்தான் படி(டை)த்திருக்கிறேனே தவிர
புரியா விமர்சனத்தை இப்போதுதான்
முதல் தடவையாகப் படிக்கிறேன்
என்பதைப் பதிவுசெய்தேயாகவேண்டும்”
என்ற கவி
அதுகுறித்து புரியும் கவிதையொன்றை
எழுதத் தொடங்கினார்.

சொல்லத்தோன்றும் சில….. latha ramakrishnan

 சொல்லத்தோன்றும் சில…..

latha ramakrishnan


Poetry is the spontaneous overflow of powerful feelings:
it takes its origin from emotion recollected in tranquility.
- William Wordsworth
வில்லியம் வர்ட்ஸ்வர்த் என்ற உலகம் புகழும் கவிஞர் இப்படிச் சொல்லி யிருக்கிறார் என்பதாலேயே நாம் இந்தக் கூற்றை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கட்டாயமில்லை. ஆனால், சற்று யோசித்துப் பார்த்தால் இது உண்மை யென்று புரியும்.
நான் கோபமாக இருக்கிறேன் என்ற நினைப்பு வந்தாலே நான் கோபத்தி லிருந்து அகன்றுவிட்டேன் என்று அர்த்தம் என்று சொல்வதுண்டு. அதுபோலத் தான் எத்தனை கொந்தளிப்பான விஷயத்தையும் அது நடக்கும்போதே எழுதுவதென்பது நடவாத காரியம்.
(ஒரு முறை 102 அல்லது 103 டிகிரி ஜுரம் அடித்துக் கொண்டிருந்த சமயத்தில் நான் ’புயல்கரையொதுங் கியபோது’ என்ற கவிதையெழுதினேன். ஆனாலும், அதை எழுதக் கூடிய அளவு எனக்கு பிரக்ஞையும் தெம்பும் இருந்தது என்பது தான் உண்மை.
( பின்னர் அத்தகைய விஷப்பரிட்சைகளில் இறங்க லாகாது என்று முடிவுசெய்து கொண்டேன்.)
கவிதையெழுதுதலே இப்படியென்றால் மொழிபெயர்ப்பு என்பது இன்னும் பிரக்ஞாபூர்வமாகச் செய்யவேண்டியது.
நாம் மொழிபெயர்க்கும் பிரதி நமக்கு எத்தனை பிடித்தி ருந்தாலும் அதிலேயே மூழ்கிப்போய்விட்டால் ஒழுங் காக மொழிபெயர்க்கவே இயலாது.
ஒருவகை Detached attachment அல்லது பிரதியிலிருந்து முழுவதும் விலகிய நிலையில்தான் ஒவ்வொரு இணை வார்த்தையையும் தேர்ந்தெடுத்து மொழிபெயர்க்க வேண்டும்.
நாம் தேர்ந்தெடுக்கும் சொற்கள் மூல கவிதையில் இடம் பெறும் வார்த்தை களுக்கு இணைச்சொற்களாக இருக்க வேண்டும் – கவிதையின் சாராம்சத்தைக் குறிப்புணர்த்து வதாகவும் இருக்கவேண்டும்.
மூல கவிதையில் ஒரு சொல் திரும்பத்திரும்ப வந்தால் அதேயளவாய் மொழிபெயர்ப்பில் வரச்செய்யலாம். இலையென்றால் முடிந்தவரை ஒரே சொல் திரும்பத் திரும்ப வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
சரியான இணைச்சொற்களுக்காக கூகுள் முதல் கைவச மிருக்கும் எல்லா அகராதிகளிலும் முழுவிழிப்போடு தேடியாகவேண்டும்.
நாம் தேர்ந்தெடுக்கும் சொல் ஒரேயடியாக எப்போதும் பயன்படுத்தும் சொல்லாகவும் இருக்கக்கூடாது; அதற் காக ஒரேயடியாக புதிதாக, புரியாததாகவும் இருக்கக் கூடாது.
இப்படி நிறைய DOS AND DON’TS மொழிபெயர்ப்பில் உண்டு. இவை மொழிபெயர்ப்பாளருக்கு மொழிபெயர்ப் பாளர் மாறுபடவும் வழியுண்டு.
மொழிபெயர்க்கப்படவேண்டிய பிரதியின் பால் மொழி பெயர்ப்பாளருக்கு மரியாதை இருக்கலாம். அபிமானம் இருக்கலாம்.
இல்லாவிடினும் இருமொழித்திறனும் வாசிப்பு அனுபவ மும் இருப்பின் வாழ்க்கைத்தொழிலாக ஒரு பிரதியை நல்ல முறையில் மொழிபெயர்க்கவும் இயலும்.
முழுக்க முழுக்க முழுவிழிப்போடு செய்யவேண்டிய காரியம் மொழிபெயர்ப்பு.
ஆனால் சிலருக்கு எல்லாவற்றையும் romanticize செய்யப் பிடிக்கும். POP MAGAZINE எனப்படும் மசாலா பத்திரிகை களில் சாண்டில்யன் கதைக ளைப்போல் அங்கங்கே தேவையில்லாமல் பாலியல் வர் ணணை, காதல் வர்ணணை இடம்பெறும் என்று குறை சொல்பவர்கள் கூட (தேவை என்பதும் ஒருவகையில் highly relative term தானே) making love போல், orgasm போல் என்று எழுத்தாக் கப் பணிகளைப் பற்றி (ஒருவித புரட்சிகரச் செயல்பாடு போன்ற பாவனையில்)க் கருத்துரைப்பது இங்கே அவ்வப்போது நடந்தேறுகிறது.
அப்படி சமீபத்தில் மொழிபெயர்ப்பு குறித்து முன்வைக்கப் பட்டிருந்த ஒரு கருத்தை வாசிக்கநேர்ந்தது. வேடிக்கை யாக இருந்தது.

Sunday, May 18, 2025

முறிந்துவிழும் மந்திரக்கோல்கள் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 முறிந்துவிழும் மந்திரக்கோல்கள்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
முதலிலேயே சொல்லிவிடத்தோன்றுகிறது _
மகத்தானவை எவை என்று உங்களுக்கு மிக நன்றாகவே தெரிந்திருக்கிறது.
அதற்காக என் மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அதனால்தான் மகத்தானவைகளுக்கே முன்னுரிமையளித்து
மட்டந்தட்டிக்கொண்டிருக்கிறீர்கள்.
முழுநிலவைப் பழுதடைந்த பாதி உடைந்த நியான் விளக்காய்
மூச்சுவிடாமல் பழித்துக்கொண்டிருக்கிறீர்கள்.
மலரின் மென்மடல்களின் மீது அத்தனை மூர்க்கமாய் ஊதியூதி
அவற்றைப் பிய்த்தெறிந்து பெருமிதப்பட்டுக்கொள்கிறீர்கள்.
கைவசப்படா காற்றை கரங்களில் இறுக்கிக்கசக்கிப் பிழிவதாய்
திரும்பத் திரும்ப பாவனை செய்து பரவசப்பட்டுக்கொள்வதோடு
காற்று கதறியழுவதாய் படம் வரைந்து அதைப் பார்த்துக் கண்சிமிட்டிக் கெக்கலிக்கிறீர்கள்.
கங்காருவின் வயிற்றிலிருக்கும் குட்டியின் தலையில் ஓங்கிக் குட்டுகுட்டி
கைகொட்டிச் சிரித்தபடி ஓடிவிடுகிறீர்கள்.
தெளிந்த நீரோடையில் காறித்துப்பி
நீர்வழி என் உமிழ்நீர்வழி
யென்று நெஞ்சுநிமிர்த்திக்கொள்கிறீர்கள்.
நாயின் வாலை நிமிர்த்தியே தீருவேன் என்று
அந்த நன்றியுள்ள பிராணியிடம் உச்சபட்ச நன்றிகெட்டத்தனத்தோடு நடந்து அதற்கு
விதவிதமாய் வலிக்கச் செய்கிறீர்கள்.
கல்லை வணங்குவதாக மற்றவர்களை எள்ளிநகையாடியபடியே
கல்லின் துகள் ஒன்றின் முன் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து பணிந்து
மெய் பொய் பொய் மெய் என்று சொற்சிலம்பமாடித் தீரவில்லை உங்களுக்கு.
அடுத்தவர் கனவை மனநோயென்று பகுத்தபடியே
உங்களுடையதை இலட்சியக்கனவென்று ஆனந்தக்கண்ணீர் உகுக்கிறீர்கள்.
கடலின் கரை மணல், மணலின் கரை கடல் எனில் கடல் நடுவில் தாகமெடுத்தால் இல்லாத நல்ல தண்ணீரின் நிழலில்தான் தாகம் தணிக்கவேண்டும்
என்று ஆயிரத்தெட்டு பேர் ஏற்கெனவே சொல்லிச்சென்றிருப்பதை
பன்னிப்பன்னிச் சொல்லி உங்களுடையதே உங்களுடையதாகப் பண்ணிவிடுகிறீர்கள்.
வில்லியை நல்லவளாக்கி நல்லவனை நபும்சகனாக்கி
என்னவெல்லாம் செய்கிறீர்கள் _
இன்னும் என்னவெல்லாமோ செய்யப்போகிறீர்கள்.
என்றாலும்
மலையடிவாரத்திலிருந்து அண்ணாந்து பார்த்து
அதன் மிகு உயரத்தை மடக்கிப்போட
மலையை எலியாக்கிப் பார்வையாளர்களைக்
கிச்சுகிச்சுமூட்டிச் சிரிக்கவைக்க
கனகச்சிதமாய் நீங்கள் சுழற்றும்போதெல்லாம்
உங்கள் மந்திரக்கோல்தான் முறிந்துவிழுகிறது.

ஒரு சமூகப் பிரக்ஞையாளர் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 ஒரு சமூகப் பிரக்ஞையாளர்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
சகல ரோக காரணியாக ஒருவரையும்
சகல ரோக நிவாரணியாக ஒருவரையும்
முன்முடிவு செய்துகொண்ட பிறகே
அவரது சமூகப் பிரக்ஞை
சுற்றிவரத் தொடங்குகிறது உலகை.
நான்கு சுவர்களுக்குள்ளான வெளியைப்
பிரபஞ்சமாக்கி
நட்சத்திரங்களிடம் உதவிகோருகிறார்
தன் நாட்டின்
நலிந்த பிரிவினருக்காக.
பரிவோடு அவை தரும்
ஒளிச்சிதறல்களைக் கொண்டு
தன் அறைகளுக்கு வெளிச்சமூட்டியபடி
மீண்டும் சகல ரோகக் காரணியாகவும்
சகல ரோக நிவாரணியாகவும்
முன்முடிவு செய்திருந்தவர்களைப்
படம் எடுத்துப்போட்டு
அவர்களில் முதலாமவரை எட்டியுதைத்தும்
இரண்டாமவரைக் கட்டித்தழுவியும்
இன்றைக்கும் என்றைக்குமாய்
சகல காரணியாக முன்முடிவு செய்தவரை
கட்டங்கட்டி மட்டந் தட்டியும்
சகலரோக நிவாரணியாக முன்முடிவு செய்தவரை
பட்டமளித்துப் பாராட்டியும்
நோகாமல் இட்ட அடியும்
கொப்பளிக்காமல் எடுத்த அடியுமாக
ஆகாகா எப்பேர்ப்பட்ட சமூகப்பிரக்ஞையாளர்
அவர்
கட்டாயமாய்
எம்மைச் சுற்றி உம்மைச் சுற்றி
தம்மைச் சுற்றி
வேகாத வெய்யிலிலும்
தட்டாமாலைத் தாமரைப்பூவிளையாட்டில்….

ஓருடல் ஈருயிர் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 ஓருடல் ஈருயிர்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

அத்தனை அன்பாகக் கரைந்துருகுகிறார்கள்
அத்தனை வலிக்க வலிக்க அழுதரற்றுகிறார்கள்
அத்தனை இன்முகத்தோடு
தத்துவம் பேசுகிறார்கள், தர்க்கம் செய்கிறார்கள்
மனிதநேயம் பேசுகிறார்கள்
வாழ்வின் மகத்துவம் பேசுகிறார்கள்
இனிய உளவாக என்ற வள்ளுவரை
முடிந்தபோதெல்லாம் மேற்கோள் காட்டுகிறார்கள்....
அத்தனைக்கத்தனை வெறுப்புமிழ்கிறார்கள்
அவதூறு செய்கிறார்கள்
அச்சமில்லாமல் உச்சஸ்தாயியில்
கத்தித்தீர்க்கிறார்கள்
கலப்பற்ற அப்பட்டப் பொய்களை
பொறுப்புத்துறந்தபடி கண்ணில்படுபவரை
யெல்லாம் கொள்ளைக்காரர்களாக்கிக்
கழுமேடைக்கு இழுத்துச்செல்கிறார்கள்.
வேண்டியவரின் பெருந்தவறைக் கண்டுங் காணாமலும்
அல்லது மென்சிரிப்போடு செல்லமாய்க்
கண்டித்தும்
பிடிக்காதவரென்றால் அவரைக்
கொச்சையாய் மதிப்பழித்தும்
அடுக்கடுக்காய் அவர் மீது பழிபோடும்
வழி தேடியும்
சாமான்ய மக்களிடமிருக்கும் சொல் நேர்மை
செயல் நேர்மை
சிறிதுமின்றி சாய்கிறார்கள் சிலர் பக்கம்
சுய ஆதாயத்திற்காய்
சாய்க்கிறார்கள் நியாயத்தராசை.
சத்தியமாய்ச் சொல்கிறேன் - அத்தனை அருமையான
வாழ்க்கைத் தத்துவங்களை உதிர்க்கிறார்கள்
வாழ்வின் தரிசனங்களைப் பதிவுசெய்கிறார்கள் _
அதே கையால் அத்தனை தடித்தனமாய்
பயன்படுத்துகிறார்கள் எழுதுகோலை
அடியாளாய்.

Dr Jekyll and Mr Hyde என்றுமாய்
புத்தக விளிம்புகளைக் கடந்தவாறு
பாலினங் கடந்தவாறு………..
.......................................................................................................................................

**Dr Jekyll and Mr Hyde : 1886இல் பிரசுரமான, ராபர்ட் லூயி ஸ்டீவென்ஸன் எழுதிய குறுநாவல். கதைநாயகன் Dr. ஜெக்கிள் இயல்பாக இருக்கும் போது நல்லவராகவும், பரிசோதனைக்காக ஒரு மருந்தை உட்கொள்ளும் போது குரூரமானவராகவும் நடந்துகொள்வார்.

கற்றது கையளவு - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 கற்றது கையளவு

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)


எல்லாவற்றையும் கற்றுக்கொண்டுவிடவேண்டும் என்ற தீரா ஆர்வம் அவருக்கு.
ஒன்றை அரைகுறைக்கு அதலபாதாளம் கீழே கற்றுக்கொண்டதும் உடனே அடுத்ததைக் கற்றுக்கொள்ளப்போய்விடுவார்.
அதற்குப்பிறகு முதலில் கற்றுக்கொள்ள ஆரம்பித்து பாதாளத்தில் கைவிட்டதன் பக்கம் எட்டிக்கூடப் பார்க்கமாட்டார்.
ஆனால், பாதாளத்தில் கைவிடுமுன்னர் தவறாமல்
அந்த ஒன்றின் அருகில் நெருங்கி நின்றபடியோ
அல்லது அதன் மீது ஒயிலாய் சாய்ந்தபடியோ அல்லது அதைப் பார்த்துப் பிரியாவிடையளிப்பதாய் உலகத்துத் துயரையெல்லாம் கண்களில் தாங்கிய பாவங்காட்டி ஒற்றைக்கண்ணீர்த்துளியை கவித்துவத்தோடு ஒற்றிவிட்ட படியோ
ஒரு செல்ஃபி எடுத்து அல்லது இன்னொருவரை புகைப்படம் அல்ல அல்ல ஒளிப்படம் எடுக்கச்செய்து அதைத் தனது அனைத்து இணைய அக்கௌண்டு களிலும் பதிவேற்றிவிடுவார்.
அப்படித்தான் ஓவியம் கற்றுக்கொள்ள ஆரம்பித்தவர் முட்டையை வரைந்ததோடு போதும் என்று கோழியை வரையாமல் அதன் சிறகென்று ஒரேயொரு கோட்டையிழுத்துத் தன் ஓவிய ஆர்வத்தைக் காணொளியாக்க _
அந்தச் சிறுகோட்டிற்கான அர்த்தத்தைப் பொருள்பெயர்க்க இந்தத் தொற்றுநோய்க் காலத்திலும் ‘ஜூம்’ கருத்தரங்கம் ஜாம் ஜாம் என்று நடந்தது.
எளிய மாங்காய் ஊறுகாய் போட்டுக்கொள்ளக் கற்றுக்கொள்ள ஆரம்பித்து ஆளுயர ஜாடிமீது சாய்ந்து ஒயிலாய் சாய்ந்து கையில் ஒரு மாங்காயை ஏந்தி அதை வாயை நோக்கி எடுத்துச்செல்லும் நிலையில்
புகைப்படமெடுத்துப் பதிவேற்றியவர் அதற்குப் பிறகு ‘அம்பிகா’ கடையில்தான் மாங்காய் ஊறுகாய் வாங்கியிருப்பார் என்பது என் கணிப்பு.
போட்டிருந்தால் அது பற்றி குறைந்தபட்சம் நான்கு அகல்விரிவான கட்டுரைகளாவது வந்திருக்கும். வந்ததாகத் தெரியவில்லை.
ஒலிம்பிக்கில் கலந்துகொள்வதற்காய் நீளந்தாண்டுதல் பயிற்சியெடுத்துக் கொண்டிருக்கிறேன் என்றார்.
சுற்றிலும் நீலநிறப்பூக்களொடு மையத்தில் நின்றிருந்ததைப் பார்த்தால்
நீலந் தாண்டுதலா நீளந் தாண்டுதலா என்ற நியாயமான சந்தேகமெழுந்தது.
பின்,
‘ஒலிம்பிக் பதக்கத்தைவிட அதன் வளையங்கள்தான் எனக்கு மிகவும் பிடித்தது. அவை கிடைக்க வழியேயில்லை என்பதால் பயிற்சியில் ஆர்வம் போய்விட்டது என்று வண்ண வண்ண வளையங்களின் மத்தியில் நளினமாய்ப் படுத்தவாறு அண்ணாந்து வானத்தைப் பார்த்தபடி அழகாய்ச் சிரித்தபடி அவர் சொல்லியிருந்த பேட்டி சமீபத்தில்தான் வெளியாகியது.
பியானோ கற்றுக்கொள்ளத் தொடங்கியிருப்பதாகத் தெரிவித்திருந்தவர் பியானோக் கட்டைகளைத் தன் கட்டைவிரல்களால் மட்டும் தொட்டுத்தொட்டு மீட்டுவதாய் ஒரு குறும்படம் யூ-ட்யூபில் வெளியாகி அது வைரலாகியிருப்பதாய் மெகா தொலைக்காட்சி காப்டன் தொலைக்காட்சி ஜெயா ப்ளஸ் தொலைக்காட்சியில் மட்டும் அவரவர் தலைவர் பற்றிய செய்திகள் வெளியாவதே போல் சில நாட்கள் இவருடைய முகநூல் டைம்லைனில் மட்டும் ஒரு ’ப்ளாஷ் நியூஸ்’ திரும்பத்திரும்ப வந்து கொண்டிருந்தது.
’அருமையான அந்தக்கால மீனாகுமாரி பாடல்களின் அர்த்தம் புரிவதற்காய் இந்தி கற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கிறேன்’ என்று சுற்றிலும் பல்வேறு இந்தி நாவல்களும் கவிதைத்தொகுப்புகளும் கேஸட்டுகளுமாக இந்தி கற்றுக் கொள்ளும் குழந்தையாய் தன்னை பாவித்து ‘ஹம் ஆப்கே ஹே கோன்?” என்று கேட்டு கலகலவென்று கைகொட்டிச் சிரித்து மகிழும் தன் ஸெல்ஃபியை வெளியிட்டவர் அதற்குப் பின் சில நாட்களிலேயே ‘வட இந்தியர்களின் அடிவருடிகளல்லர் தென்னிந்தியர்கள் என்று கோபாவேசமாக முழங்கிய கையோடு மீனாகுமாரி கருப்பு-வெள்ளைப் படம் இருந்த கேஸட் மேலட்டைகளுக்கு தீவைக்கும் காட்சியை இன்னொரு திறமையான புகைப்படக்கலைஞரைக்கொண்டு எடுக்கச் செய்து அதை தன் ப்ரொஃபைல் படமாகப் பதிவேற்றினார்.
சில நாட்களுக்கு முன்புதான் அம்பு-வில் பழகத்தொடங்கியிருக்கிறார். உச்சந்தலையில் இல்லாத ஆப்பிளைக் குறிபார்க்கிறது என்னிரு விழிகள் என்று கவிதைபோல் ஒன்றை எழுதத் தொடங்கியவர் நெஞ்சில் என்றும்போல் அந்த வருத்தம் பொங்கியது _
’சே, கவிதையை அரவணைத்துக்கொண்டு நிற்பதாய் ஒரு படம் வெளியிட வேண்டுமென்ற விருப்பம் நிறைவேற வழியில்லாதபடி கவிதை பிடிபடாது அருவமாய் நிற்கிறதே….’