LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Monday, February 24, 2025

கண்காட்சிப்புத்தகங்கள் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 கண்காட்சிப்புத்தகங்கள்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

புத்தகங்களை வாங்குகிறவர்கள் எல்லோருமே படிக்கிறார்களா….
முதலிலிருந்து கடைசிவரை படிப்பார்களா…….
முதல் இடை கடைப் பக்கங்களில் அங்குமிங்குமாய்
சில பக்கங்கள் படிப்பவர்கள் _
மூடிய புத்தகம் மூடியேயிருக்கும்படி
அலமாரியில் பத்திரப்படுத்திவிடுபவர்கள் _
எல்லோரும் வாசகர்கள் தானே
என்றெண்ணி அமைதிகொள்ளுமோ புத்தகங்கள்….
சாலையோரம் நின்றுகொண்டிருக்கும் தேரனைய காரில் சாய்ந்து
தன்னை கோடீஸ்வரனாகக் காண்போர், காண்பிப்போர்
எங்கும் உண்டுதானே?
இருள்நிழல் படர்ந்த ஒதுக்குப்புறத்திற்காகவே கோயிலுக்குச் செல்லும் காதலர்களைப்போல
எந்தக் கண்காட்சியிலும் நுழைபவர் உண்டுதானே.
காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் நூல்களை பார்த்தபடியே
காலார நடக்கவும்
காண்டீனில் காப்பி குடிக்கவும்
நாலாறு பேர்களைப் பார்த்து நன்றி பகரவும்
நமுட்டுச் சிரிப்பு சிரிக்கவும்
வெளியாகும் நூலுக்காய் ஆசிரியர் பெருமைப்படவும்
ஆசிரியல்லாத சிலர் பொறாமைப்படவும்
அதற்கும் இதற்கும் எதற்குமாக……
பத்தரைமாற்றுத்தங்கமெனக் கூசாமல் பித்தளையைப் பேசி
நுழைவாயிலில் திரைநாயகர்களுக்கு ஈடாக ’கட் அவுட்’கள் காணக்கிடைக்கும்...
புத்தகக்கண்காட்சிக்கு
அழையாத விருந்தாளியாக வருகைதரும்
அரும்படைப்பாளிகளும் உண்டு!
இயற்கையழகே மேல் எனப் பேசி
உதட்டுக்கும் கன்னங்களுக்கும் கவனமாக சாயம் பூசி
பவனி வரும் சிற்றிதழ்ப் பெரும்படைப்பாளிகளும் உண்டு.
புத்தகங்களால் வளரும் அறிவு விவரமானதும்
வைரஸ் போன்றதும்……
புத்தகங்களை அடையாள அட்டைகளாக்க எத்தனையெத்தனை அட்டைக்கத்திகளால்
போர்வியூகங்கள் அமைக்கப்படுகின்றன .இந்தத்
தாற்காலிக சாம்ராஜ்யத்தில்…..
பல நூல்களின் ஆழம் அதை வெளியிடும் அரசியல்வாதிகளால்
திரைக்கலைஞர்களால் அளந்துதரப்படுகின்றன
அவர்கள் அந்தப் புத்தகங்களைப் படித்திருப்பார்களா
என்ற கேள்வி கேட்கப்படலாகாததாய், பதிலுக்கப்பாற்பட்டதாய்
அந்தரத்தில் அலைந்துகொண்டிருக்கிறது….
ஆத்மார்த்தமாய் புத்தகங்களை நேசிக்குமொரு ஏழை வாசகர்
வாசிக்க விரும்பும் புத்தக விலை
விவாகரத்து கோரும் அன்பு மனைவியின் நினைவுத்துயரமாக
நண்பனின் ‘காணாமல் போன பக்கங்கள்’ பெயரிலான 21ம் என்ணிட்ட அரங்கில்
தன் புத்தகம் அடுக்கில் வைக்கப்படாமல்
பெஞ்சின் கீழ் ஒடுங்கிக் கிடப்பதைப் பார்த்து
ஒரு இளம் படைப்பாளியின் கண்ணில் துளிர்க்கும் நீர்
காற்றில் கரைந்து போகும்;
கூடவே அவன் கைவசமிருந்த துளி நம்பிக்கையும்.
அரங்கில் வந்திருக்கும் பார்வையாளரிடம்
‘இவர் தான் ஆசிரியர், இவருடைய புத்தகங்கள் இதோ இருக்கின்றன”
என்று அரங்குவைத்திருப்பவர் சொல்வதைக் கேட்கும்போதே
அங்கிருக்கும் நூலாசிரியர் பிச்சைக்காரராக உணரத்தொடங்கிவிட
அதைக் கேட்டும் கேளாதவாறு
அந்தப் பார்வையாளர்கள் நகரும்போது
நிச்சயமாகத் திருவோட்டின் பாரம் அவர் அடிமனதில் இறங்கிவிடுகிறது.
ஆனாலும் அரங்கின் நுழைவாயிலில் ஆறேழு பேர் நின்று உன்னிப்பாய்க் கேட்க
தன் கவிதையை மனமொன்றி வாசிக்கும் நேரம்
ஒரு கவி மனதில் அந்த ஒவ்வொருவரும் ஒரு நூறாயிரம் பேராய்
பல்கிப் பெருகுவதையும் அண்டசராசரமெங்கும் அவருடைய கவிதை வரிகள்
அதிர்வுகளை உண்டாக்கி ரீங்கரிப்பதையும்
இல்லையென்றாக்க இங்கே யாரால் முடியும்!
எப்படியிருந்தாலும் _
புத்தகக் கண்காட்சிக்குச் செல்கிறவர்கள் எல்லோரும் புத்தகங்களுக்காகப் போகிறார்கள் என்பதை
புத்தகங்களே நம்புவதில்லை.
’பருவம் வந்த அனைவருமே காதலிப்பதில்லை’ என்னும் சந்திரபாபுவின் குரல்
இந்த இடத்தில் பொருத்தமாக இருக்குமா, அல்லது அபசுரமாக ஒலிக்குமா?
சரியாகத் தெரியவில்லை.

என் அடையாள அட்டைகளைக் காணவில்லை - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 என் அடையாள அட்டைகளைக் காணவில்லை

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

இரண்டு மூன்று வீடுகள்
இரண்டு மூன்று அலுவலகங்கள்
இரண்டு மூன்று ஆட்டோக்கள்
இரண்டு கிலோமீட்டர் பொடிநடை
இரண்டு மூன்று கடைகள்
இரண்டு மூன்று தெருத்திருப்பங்கள்
இரண்டு மூன்று மணிநேரங்கள்
இவற்றிலெங்கோ எதிலோ
என் அடையாள அட்டைகள் பறிபோயிருந்தன.
நான் இப்போது நானே நானா
யாரோ தானா....
விடுதலையுணர்வும் ஏதிலி உணர்வும்
பாதிப்பாதியாய்.....
இன்னும் சில நாட்கள் அலையவேண்டும்
இன்னும் சில வரிசைகளில் நகர வேண்டும்
இன்னும் சில விளக்கங்களைப் பகரவேண்டும்
இன்னுமின்னும் முகக்கவசங்களுக்குள்
என்னை நானே முகர்ந்தாக வேண்டும்.
இன்னும் சில வேண்டாச் சிகரங்களைத் தாண்டியாகவேண்டும்
அடையாளமிழப்பைப் போலவே
அடையாள மீட்பும் ஆன்ற புத்துயிர்ப்பும்
ஆகக் கடினமாகவே.

புரியுங்கவிதை - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 புரியுங்கவிதை

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

எனக்கே புரியாத ஒன்றை
எனக்குப் புரியவைக்கப் பார்க்கவும்
உங்களுக்குப் புரிகிறதா
என்று அன்போடு கேட்கவும்
உன்னை நான் புரிந்துகொள்ள
என்ன செய்யவேண்டும் என்று
நானறியாத என்னை யுன்னை
என்உன்னைக் கேட்கவும்
ஒரு சில வரிகளைக் கவிதையாக்குகிறேன்.
திருத்தமான உரு பெறாததால்
கருவுள்ளிருக்கும் சிசு பிசுபிசுத்துச்
சிதைந்துவிட்டது
என்று உருவேற்றுவோரைக்
கடவுள் மன்னிக்கட்டும்.
உண்டென்றால் உண்டு இல்லையென்றால் இல்லையென்றாகும்
அருங்காதலை புகைப்படம் எடுத்து
ஆழியில் ஆணியடித்து மாட்டுவதுபோல்
ஆழ்மனதிலொரு கவிதையென்னைச்
சூழ்ந்தவண்ணம்....
அதன் நீர்மட்டம் உயர்ந்துகொண்டேபோகிறது.
கழுத்தைக் கடந்து மூக்கிலும் வாயிலும்
காதுகளிலும் நுழைவதற்கு முன்
வெளியேறிவிடவேண்டும்;
வெளியேற்றிவிடவேண்டும்.
உயிர் பெரிது;
கவிதை காற்றுபோல்.
தீண்டக் கொடுத்துவைத்திருக்கவேண்டும்.
உள்ளங்கைக்குள் ஒரு கணம்
தேக்கிவைக்க முடிந்தால்
பின் வேறென்ன வேண்டும்?
கள்வெறி கொள்ளும் மனம்
காத்திருக்கும்.
அட, யார் கல்லெறிந்தால் என்ன?
அடங்க மறுத்தெழும்
ஆவியுருக் கவிதை.

தாமரையிலைத்தண்ணீர்ப்பற்று - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 தாமரையிலைத்தண்ணீர்ப்பற்று

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)



தாமரையிலைத் தண்ணீரை தூலமாக நேரில்
பார்த்திருக்கிறேனா, தெரியவில்லை….

அப்படிப் பார்த்தால்
தாகூரைப் பார்த்ததில்லை,
ஷேக்ஸ்பியரைப் பார்த்ததில்லை
லதா மங்கேஷ்கரைப் பார்த்ததில்லை,
மம்முட்டியைப் பார்த்ததில்லை,
இமயமலையைப் பார்த்ததில்லை.
இக்குனூண்டு முளைவிதையைப்
பார்த்ததில்லை
பார்த்தல் என்பதன் நேரில் என்பதன்
அர்த்தார்த்தங்களில்
பார்த்திராதவையே அதிகம் பார்க்கப்பட்டதாய்…..
நான் பார்த்திராத தாமரையிலைத்
தண்ணீர்த்துளிகள்
இருக்குமிடமெங்கும் உருண்டோடியவாறே…
உணர்ந்தும் உணராமலுமா யதன் ஈரம் _
காய சி்றிது நேரமாகும்.
சில நாட்கள் அலைபேசியில் 6 மணிக்கு அலாரம் வைத்து எழுந்துவிட்டால், பின்
அந்த அலாரம் எப்படியோ ஆழ்மனதில்
அடிக்க ஆரம்பித்துவிடுவது போலவே _
பழகிவிட்ட தாமரையிலைத்தண்ணீர்
வாழ்வில்
இலை நீர்த் துளிகள் மேல்
நிலைகொள் மனது _
பற்றுடைத்து என் றொரு சொல்லின்
இருபொருளுணர்த்தி.


Sunday, February 23, 2025

குழந்தைகளைப் பற்றி சற்று சிந்திப்போம் - லதா ராமகிருஷ்ணன்

 குழந்தைகளைப் பற்றி சற்று சிந்திப்போம்

லதா ராமகிருஷ்ணன்
மே, 2018, திண்ணை (இணைய இதழ்) இதழில் பிரசுரமானது
________________________________________________________________
நிறைய பள்ளிக்கூடங்களில் மிகக்குறைவான கவனிப்பையும் பராமரிப்பையும் பெறுவது கழிப்பறையாகவே இருந்துவருவது கண்கூடு. அல்லது, ஆசிரிய சிரியைகள் பயன்படுத்தும்
கழிப்பறை மட்டும் ஓரளவு சுத்தமாக இருக்கும்.
வகுப்புநேரத்தின்போது சிறுநீர் கழிக்கவேண்டும் என்றோ,
மலம் கழிக்கவேண்டும் என்றோ குழந்தைகள் கேட்பதற்கே
மிகவும் பயந்துகொண்டிருப்பதும்,கேட்டால் ஆயாவிடம்
அல்லது ஆசிரியரிடம் திட்டும், அடியும்வாங்க வேண்டியிருப்
பதும் வழக்கமாக நடந்துவருவது….
இதில் மழலையர் வகுப்பில் ஒரு பெண்குழந்தை மற்ற குழந்தைகளை விட அடிக்கடி சிறுநீர் கழிப்பதென்றால்….
அடிக்கடி சிறுநீர் கழிக்கச்செல்வதென் றால்… அப்படித்தான்
அந்த ஐந்துவயதிற்குட்பட்ட பெண்குழந்தை அடிக்கடி
போய்வந்து கொண்டிருந்தாள். நடக்கும்போது கால்களை
சற்று அகட்டி முகம் ஏதோ சொல்லொணா வலியில் சுளிக்க, போவாள்.
அந்தக் குழந்தையின் செய்கையில் ஏதோ வித்தியாசமு
ணர்ந்த ஆசிரியை குழந்தையை அழைத்து பரிவோடு
கேட்டதில் மழலை மாறாத குரலில் அந்தச் சிறுமி கோர்வை
யற்றுச் சொன்ன விஷயம் ஆசிரியையைநிலைகுலையச்
செய்தது.
சிறுமியினுடைய வார்த்தைகளின் சாராம்சம் இதுதான்:
“எங்க சித்தப்பா ஒண்ணுக்குப்போற இடத்தை எப்பவும் அழுத்திக்கிட்டே, நோண்டிக்கிட்டே இருப்பாங்க. ரொம்ப
வலிக்குது மிஸ்”
அதிர்ந்துபோன ஆசிரியை காட்டச்சொல்லிக் கேட்டபோது
வலியை மீறிய வெட்கத்தோடு அந்தப் பெண்குழந்தைகாட்டிய
இடம் சிவந்து புண்ணாகிக் கிடந்தது. எத்தனை நாட்கள்,
எந்தெந்த வேளைகளில் அந்த வேதனையைஅந்தக் குழந்தை அனுபவிக்கும்படியாகி யிருக்கும்?
வலியோடு அந்தக் குழந்தைக்கு எத்தகைய infections ஏற்பட்டிருக்கக்கூடும்…. அந்த அத்துமீறலை தினந்தினம் மரணபயத்தோடு எதிர்பார்த்து, எதிர்க்க வழியின்றி அந்தக்குழந்தையின் உள்ளம் என்ன பாடுபட்டிருக்கும்…
குடும்பத்திற்குள்ளாக பெண்குழந்தைகள் மீது நிகழ்த்தப்
படும் இத்தகைய பாலியல் ரீதியான அத்துமீறல்கள் துன்புறுத்தல்கள் பெரும்பாலான நேரங்களில் வெளியே தெரியவராமலேயே போய்விடுகிறது. சம்பந்தப்பட்ட
ஆணின் அத்துமீறல் தெரிந்தும் தெரியாமலுமாய் அந்த வீட்டுப்பெண்கள் வாளாவிருந்துவிடுவதும் நடப்பதுதான்.
எல்லா வீடுகளிலும் இப்படித்தான், எல்லாக் குடும்பங்களிலு
முள்ள ஆண்களும் இப்படித்தான் என்பதல்ல.
ஆனால், குடும்பங்களில் பெண்கள் மீது, குறிப்பாக பெண்குழந்தைகள் மீது நடத்தப்படும் இத்தகைய பாலியல்
ரீதியான துன்புறுத்தல் களிலிருந்து சம்பந்தப்பட்ட குழந்தை
களைக் காப்பாற்றவேண்டுமா இல்லையா?
குடும்பங்களில் பலநேரங்களில் பெரியவர்கள் தங்கள் கோபம், ஏமாற்றம், விருப்புவெறுப்புகள்எல்லாவற்றிற்கும் வீட்டுக்குழந்தைகளை அடித்தும் திட்டியும் வடிகால் தேடிக்கொள்வதையும் பார்க்கிறோம்தானே.
பெண்குழந்தையைக் கட்டுப்பாடாக வளர்க்கிறோம் என்று பெண்குழந்தையின் பிறப்புறுப்பில் சூடுபோட்ட‘பாசமுள்ள’
தாய், பாட்டி என்றெல்லாம் நம்மிடையே இல்லையா என்ன?
(மனித நேயத்தைப் பற்றி பக்கம்பக்கமாக எழுதும் எழுத்
தாளர் ஒருவர் குழந்தையின் கண்ணை மட்டும் விட்டு மற்ற இடங்களில் அடித்து விளாசி,தோலையுரித்துப் பாடம் கற்பிக்கவேண்டும் என்று எழுதியிருந்தார்! இது என்னவிதமான மனித நேயம், சமூகஅக்கறை என்று திகைப்பாயிருந்தது).
குடும்பங்களில் குழந்தைகள் மீது, குறிப்பாக பெண்குழந்தை
கள் மீது நிகழ்த்தப்படும் அத்துமீறல்களிலிருந்துஅவர்களைக் காப்பாற்ற நாம் செய்யவேண்டியது என்ன என்று நாம் யோசித் தாகவேண்டும்.
குழந்தைகளுக்குGood Touch, Bad Touch என்று சொல்லித்தருவ
தோடு நம் கடமை முடிந்துவிடுகிறதா? Bad Touch என்றுதெரிந்
தும் அதிலிருந்து மீளமுடியாத சூழல் குழந்தையிடம் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் எத்தனை பெரிய,காலத்திற்கு
மான பாதிப்பை ஏற்படுத்தும்….
இந்த அத்துமீறல்கள் ஆண்குழந்தைகள் மீதும் நிகழ்த்தப்
படுகிறது. பல நேரங்களில் தங்கள் வீட்டுச் சிறுவர்களின் ஆணுறுப்பை வீட்டிலுள்ள பெரியவர்களோ, வீட்டிற்கு வருகை
தரும் பெரியவர்களோ கையால் அழுத்திப்பிடிப்பதும், ஆட்டு
வதும் சகஜமாய் காணக்கூடிய காட்சிகள்.
குழந்தையிடம் செல்லமாய் விளையாடுகிறோம் என்ற போர்வையில் இத்தகைய அத்துமீறல்கள் நிகழ்த்தப்படுகின்றன.
தங்கள் வீட்டுக் குழந்தைகளிடம், அல்லது, தங்களுக்குத்
தெரிந்த குழந்தை களிடம், குறிப்பாகபெண்குழந்தைகளிடம் இத்தகைய பாலியல்ரீதியான அத்து மீறல்களில் ஈடுபடுபவர்
களில் சற்றே பெரியசிறுவர்கள், விடலைப்பருவத்தினர்,
நடுத்தர வயதினர், முதியவர்கள் என பலதரப்பினர் உண்டு.
சிறுவர்கள்,விடலைப் பருவத்தினர் பாலுணர்வின் தாக்கத்
தால், கைக்குக் கிடைத்த பெண்ணிடம் அத்துமீறுகின்ற னர்.சிறுவர்களைப் பொறுத்தவரை அது அத்துமீறல் என்பதே தெரியாமல் இருக்கவும் வழியுண்டு.
அதுவும் சமீபகாலமாய் கைபேசி, இணையதளம் முதலிய
வற்றில் பெருகி யுள்ள நீலப்படங்கள் எத்தனைஆண்களால் புணரப்பட்டாலும் அதை ஒரு பெண் அமோகமாய் விரும்புவாள் என்றவிதமாகவே விதவிதமாய் உருவேற்றிவரு கின்றன.
திரைப்படங்கள் பெண்களை போகப்பொருளாகக் காட்டுவதை இணையமும், கைபேசியும் பன்மடங்கு அதிகமாக மிக அப்பட்டமாகக் காட்டுகின்றன.
இவற்றைப் பலவழிகளிலும் பார்க்க முடிந்த சிறுவர்கள், இளைஞர்கள் மனங்களில் இதன் மூலம் பெண்ணுக்கு நேரும்
அக புற வலியைப் பற்றித் தெரிந்துகொள்ள வாய்ப்பில்லாமலும், விருப்பமில்லாமலும் தங்களால் சுலபமாகத் தொடமுடிந்த பெண்குழந்தைகளிடம் தங்கள் அத்துமீறல்களை நிகழ்த்து
கிறார்கள்.
எல்லாம் தெரிந்த பெரியவர்கள் சிலரும் வீட்டிலுள்ள பெண்குழந்தையை பாதுகாப்பான போகப்பொருளாகக்
கையாளும் அவலமும் நடக்கிறது.
‘பெண்ணைத் தொட்டால் இன்பம், நாம் தொட்டாலே அவளுக்கு இன்பம்’ என்ற மனப்பான்மையோடு, யாரைத் தொட்டால் மாட்டிக்கொள்ள மாட்டோம் என்ற மனக்கணக்கோடு தங்கள் வீட்டுப்பெண்குழந்தையை, சிறுமியை பாலியல் தொந்தரவு செய்பவர்கள் – தங்கள் வீட்டிலுள்ள மற்ற பெண்களுக்குத் தெரியாமலும், தெரிந்தேயும் கூட இத்தகைய காரியத்தில் ஈடுபடுவது நடக்கிறது.
(சில வருடங்களுக்கு முன்னால்ஒரு படித்த பெண்மணி தன் மகளிடம் தன் கணவர் தவறாக நடந்ததுண்டு என்றும் குடும்ப கௌரவத்தை நினைத்துஅதை மனதிற்குள்ளேயே பூட்டிவைத்ததாகவும் கூறியிருந்ததைப் படித்தது நினைவுக்கு வருகிறது).
”சீ – சீ, இப்படியெல்லாம்கூட நடக்குமா என்ன? எங்கோ ஒரு
வீட்டில் நடப்பதை இப்படி எல்லோர் வீடுகளிலும்நடப்பதாக எழுதுவது எத்தனை அநியாயம்? வீணாக குழந்தைகள் மனங்
களில் பீதியைக் கிளப்புவதாய் எழுத லாமா?” என்றெல்லாம் அதிர்ந்துபோவதிலோ ஆவேசப்படுவதிலோ, அங்கலாய் ப்பதிலோ பயனில்லை.
இத்தகைய அத்துமீறல்கள் ஒரு வீட்டிலும் நடக்கலாகாது;
ஒரு குழந்தைக்கும் நடக்கலாகாது என்பதுதான் நம் குறிக்
கோளாக இருக்கவேண்டும்.
கல்விக்கூடங்களின் பங்கு:
1)பெண்குழந்தைகளுக்கு வீட்டில் நேரக்கூடிய பாலியல்
ரீதியான அத்துமீறல்களைத்தெரிந்துகொண்டு அந்த அநியாயத்
தைத் தடுத்து நிறுத்துவதில் கல்விக்கூடங்கள் பெரும்பங்காற்ற முடியும்.வீட்டில் தங்களுக்கு நேரும் பாலியல்ரீதியான துன்புறுத்தல்களை பயமின்றி யாரிடமேனும் எடுத்துரைக்க வும்,அந்த பாதிப்பிலிருந்து விடுபடவும் உரிய வழிகளை பள்ளிக்கூடங்கள் உருவாக்கித் தரவேண்டும்.
2)தொடர்ந்தஇடைவெளி களில் பள்ளிக் குழந்தைகளுக்கு – மழலையர் வகுப்பு முதல் – Good Touch, Bad Touch சொல்லிக்
கொடுப்பதோடு, அவர்களை வீட்டிலோ, அக்கம்பக்கத்திலோ ‘அசிங்கமாகத் தொடுபவர், துன்புறுத்துபவர் யார்என்று கேட்டு, சம்பந்தப்பட்ட நபரை அணுகி அவர்களிடம் இனி அவ்வாறு நடக்கலாகாது என்று அறிவுறுத்தலாம்.
3)குழந்தையின் மீது தான் நிகழ்த்திவரும் பாலியல்சீண்டல்
கள், துன்புறுத்தல் கள், அத்துமீறல்கள் வெளியேே தெரிந்து
விட்டதென்றாலே, அதை குடும்பத்தினர் கண்டுங் காணாமலும் இருந்தாலும் பள்ளி, சமூகத்திலுள்ள மற்றவர்கள் சும்மாயிருக்க மாட்டார்கள், கேள்வி கேட்பார்கள் என்று தெரியவந்தாலே சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அச்சம் வந்துவிடும்.
தேவைப்பட்டால் அத்தகை யோர் மீது சட்டரீதியான நடவடிக்கையும் எடுக்கப்பட ஆவனசெய்யப்பட வேண்டும்.
4)பள்ளிகளில் உளவியல் ஆலோசகர்கள், மருத்துவர்கள் ஆகியோரை வரவழைத்து பள்ளிக் குழந்தைகளிடம் இந்தகுழந்தைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.
இது தொடர்பாக அவர்களிடம் விவரங்களைக் கேட்டறிய
லாம்.
5)மாணாக்கர் களின் பெற்றோர்களுக்கு இது தொடர்பான கலந்தாலோசனைக் கூட்டங்கள் நடத்தலாம்.
6)துண்டுப்பிரசுரங்கள் மூலம் இந்த அத்துமீறல்கள்
தொடர்பான விழிப்பு ணர்வை சமூகத்தில் ஏற்படுத்தலாம்.
7)ஊடகங்கள் இந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் பெரும்
பங்காற்ற முடியும்.
மிக முக்கியமாக, பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு,
சிறுவர் சிறுமிய ருக்கு தொடர்ந்த இடைவெளிகளில்நடத்தப்
படும் மருத்துவப் பரிசோதனைகளில் அவர்கள் மீது நிகழ்த்தப்
படக் கூடிய பாலியல் அத்துமீறல்களைக் கண்டறியத் தக்க மருத்துவப் பரிசோதனைகளும் இடம்பெறவேண்டியது இன்றி யமையாதது.
குழந்தைகள் குறைகேட்பு மையங்கள், அவசர உதவிக்கான தொலைபேசி எண் ஆகியவையும் தேவையானவையே.
என்றாலும், சிறு குழந்தைகள் தைரியமாக அந்த மையங்களை அணுகி குடும்பத்தினரால்,அக்கபக்கத்தில் உள்ளவர்களால் தங்களுக்கு நேரும் பாலியல் துன்புறுத்தல்களை எடுத்துரைத்து நிவாரணம் தேடமுன்வருவார்கள் என்று எதிர்பார்க்கவியலாது. பலவகையாக அவர்கள் அச்சுறுத்தப் பட்டிருப்பார்கள்.
எனவே, அவர்கள் தினமும் Home away from Home ஆக
பாவித்துச் சென்றுவரும் பள்ளிக் கூடங்களில் மேற்குறிப்
பிட்ட முன்முயற்சி கள் மேற்கொள்ளப்பட வேண்டியது அத்தியாவசியமாகிறது.
இது குறித்து மத்திய, மாநில அரசுகள் முனைப்பாக கவனம் செலுத்துவதும், காலதாமதமின்றி செயல்பட வேண்டியதும்
மிக மிக அவசியம்.

Saturday, February 22, 2025

காலக்கணக்கு - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 காலக்கணக்கு

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

அப்பொழுதுக்கும் இப்பொழுதுக்கும் இடையிலான
கால வெளியில்
காணாமல்போய்விடலாகும் சில
பலவாக
முப்பொழுதும்
இருபொழுதும் நிலைபிறழக்
குழறும் மனதின் குரல்வளை
நினைவுமுள் குத்திப் பழுதடைய
எப்பொழுதும்போல்
தப்பாமல் விடிந்துகொண்டிருக்கும் பொழுதும்