LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Tuesday, June 20, 2023

PEEPING TOMகளும் பூமிஜா(சீதா)ப் பிராட்டியும்

 PEEPING TOMகளும் 

பூமிஜா(சீதா)ப் பிராட்டியும்

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)

இரவுபகலாய் இடையறாப் பட்டிமன்றங்கள் நடந்துகொண்டிருக்கின்றன.

ஐந்து நட்சத்திர விடுதிகளின் அகன்ற கூடங்களில் ஒன்றில்

ஆரண்யமாய் ஆங்காங்கேபேப்பர் மஷாய்மரங்கள் நட்டுக் கட்டமைக்கப்பட்ட அரங்கொன்றில்

ஆன்றோரென அறியப்பட்டோர் அவைகளில்

அடுக்குமாடிக்கட்டிடத்தின் மொட்டைமாடிப் பந்தலில்

இலக்கியப் பெருமான்களுக்கிடையே

இணையவழிகளில் _

இன்னும்

ஆர்ட்டிக் அண்டார்ட்டிக் துருவப் பிரதேசங்களிலும்

புவியின் தென் அரைக்கோளப்பிரதேசங்களின்

பெங்குவின்களைப் பார்வையாளர்களாகக் கொண்டும்

சீதை இராவணனோடு உறவுகொண்டாளா?

கொண்டாள்!

கொண்டாளே !!

கைத்தட்டல் விண்ணைப் பிளந்தது

[அது பதிவு செய்யப்பட்ட கைத்தட்டல் என்பது

பாவம் நிறைய பேருக்குத் தெரியாது]

தன்மானத்திற்கு இழுக்கு என்றானபோது

காதலித்த ராமனையே உதறிவிட்டுச்சென்றவள்

கடத்தியவனையா வரிப்பாள்?

விஜய் Zee Sun இன்னும் நான் பார்க்காத சேனல்களின்

மெகாத்தொடர்களில்

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய்

மாமியார் நாத்தனார், முதலாளி தொழிலாளி

மூத்த அண்ணன் இளைய அண்ணன்

வில்லியும் நல்லவளும்

ஐந்து வயதுச் சிறுமியும்

அடுத்த நாள் பிறக்கப்போகும் குறைப்பிரசவக் குழந்தையும்

மாறி மாறிச் செய்யும்

வகைவகையான சத்தியங்கள்

சடங்குகள் குறிபார்த்தல், சகுனம் பார்த்தல்

இத்தியாதிகளுக்கிடையிலிருந்து ஒரு பூக்குழியைத்

தேர்ந்தெடுத்து

கோயில் வாசலில் பரத்தி

அதில் நடந்து தன் பத்தினித்தனத்தை

நிரூபிக்கச் சொல்லும்

மெத்தப் படித்தவர்கள் மிட்டா மிராசுதாரர்கள்

மெகாத்தொடர் மாண்பாளர்களை

மெல்ல ஒரு பார்வை பார்த்து

மேலே நடக்கிறாள் பூமிஜா.

மனம்நிறை மணாளனுக்கு நிரூபிக்கவோ

மக்களுக்குப் புரியவைக்கவோ

-ஒரு முறை நெருப்பில் இறங்கி

மீண்டாயிற்று…..

முறைவைத்து மனம்பிளந்து பார்த்தவர்களாய்

மறுபடி மறுபடி

கடத்தியவனை மருவியவளாய்க்

காட்ட முனையும் குணக்கேடர்களுக்காய்

அவள் வனத்தில் தீ மூட்டினால்

அது தன்னை மட்டுமல்லாமல்

அன்னை நெருப்பையே அவமதிப்பதாகும்.

அவள் அறிவாள்தானே?

அடுத்த விளம்பரதாரர் யார் மாட்டுவார் என்று

ஆலோசித்தபடி

அய்யனார் சிலையின் காலடியில்

வில்லனும் நல்லவனும் சேர்ந்து

மெகாத்தொடர் கதாபாத்திரங்களில் ஒருவரை

(குத்துமதிப்பாக அந்தத் தங்கையாக இருக்கலாம்

அல்லது தாத்தாவாக இருக்கலாம்)

கொலைசெய்வது குறித்து காரசாரமாக

கீழ்ஸ்தாயியில் வாக்குவாதம் நடத்திக்கொண்டிருக்கும்

அரைத்தமாவுக் காட்சிகளைக்

கச்சிதமாய் வழித்தெடுத்துமுடித்துவிட்டு

வெளியேறும்போது படக்குழுவினர்

கன்னத்தில் போட்டுக்கொண்டபடி

அல்லது கிண்டலாய்ச் சிரித்தபடி

'பொறுப்புத்துறப்பு' என்ற நொறுக்குத்தீனியை

சுவைக்கத்தொடங்கியதைக் கண்டு

துன்பம் வரும் வேளையிலே சிரிக்கப் பழகியவளாய்

புன்னகைக்கிறாள் பூமிஜா.


*

Sunday, March 19, 2023

தன்மதிப்பு - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 தன்மதிப்பு

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)




பென்னம்பெரிய வெறுப்புகள் உண்டு. என்றாலும்

அவளுக்கிருப்பதெல்லாம் சின்னதொரு விருப்பம் மட்டுமே.


கைக்கெட்டும் தூரத்தில் இருப்பதாகச் சொல்லமுடியா விட் டாலும்

கால்களை சற்று எட்டிப்போட்டாலே கொஞ்ச நாட்களில்

சென்றுசேர்ந்துவிடக்கூடிய

அந்த அதி சிங்கார நகரில் அரண்மனை உப்பரிகையில்

சிம்மாசனத்தில்

தலையில் பொருந்தியிருக்கும் கிரீடம் பார்வையை

மறைக்காமலிருக்கும்படியாக

அரசன் அமர்ந்து கண்களால் நகர்வலம் வந்து

கொண்டிருக்கும் நேரம்

அதேவழியாய் அவள் வீதியுலா வரவேண்டும்.


அந்தச் சக்கரவர்த்தியின் கண்களில் ஏதோவொரு அகாலத்தில்

வனாந்திரத்தில் ஏற்பட்ட பரிச்சயத்தின் நினைவு விரிக்கும்

இணைமனிதபாவம் பயம் பிரமிப்பு பரவசம்

பதற்றம் பழகிய ஈரம் எல்லாவற்றையும்

அந்நியமாய்ப் பார்த்தபடியே

பார்வையை சாம்ராஜ்யபதியின் தலைக்குமேலாய்

விட்டுவிடுதலையாகிப் பறந்துகொண்டிருக்குமொரு

சிட்டுக்குருவிக்காய்உயர்த்தவேண்டும்.


அதன் சிறகடிப்பைக் பார்த்தபடியே

எங்கேயும் தடுக்கிவிழுந்துவிடாமல்

அந்த மாமன்னனுடைய முகத்தின்

சுக்குநூறான துண்டங்களை

முதுகின் கண்களால் கண்டுரசித்தபடி

அந்த வழியைக் கடந்தேகிவிடவேண்டும்.

கட்டிடக்கலை வரலாறு - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 கட்டிடக்கலை வரலாறு

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)
(*15 மார்ச், 2023 அன்று பதிவுகள் இணைய இதழில் பிரசுரமான கவிதை)

கைவசமிருக்கும் கற்களையும் மணலையும் சிமெண்ட்டையும் ஜல்லியையும் தண்ணீரையும் கலந்து கட்டிக்கொண்டிருக்கிறாய்…
இந்தக் கற்களும் மணலும் சிமெண்ட்டும் ஜல்லியும் தண்ணீரும் தரமானவையா போதுமானவையா
என்று சரிபார்க்க உனக்கு நேரமில்லை மனமுமில்லை.
தினசரிச் சந்தையில் சுலபமாய் மலிவு விலைக்கு வாங்கவும்
விற்கவும் முடிகிறது.
அப்படிக் கட்டப்படுவதைக் கண்காட்சியாகப் பார்த்து மகிழ
அன்றாடம் சாரிசாரியாக ஆட்கள் வருகிறார்கள் எனும்போது
அதற்கான அல்லது அதைக்கொண்டு அருங்காட்சியகமும் பல்பொருள் அங்காடியும் அமைக்கப்படுவதுதானே புத்திசாலித்தனம்.
தரமற்ற அளவில் நிர்மாணிக்கப்படுமொரு கட்டிடம் இடிந்துவிழுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
அதனால் நேரும் இழப்புகளும் அதிகம்.
ஒப்புநோக்க வார்த்தைகளால் கட்டப்படுவனவற்றுக்கு
அத்தகைய அபாயங்கள் குறைவு.
எத்தனை பலவீனமாகக் கட்டப்பட்டிருந்தாலும்
உறுதியானது என்று மற்றவர்களை நம்பவைக்கும் உத்திகளை
நேர்த்தியாகக் கையாளத் தெரிந்தால் போதும்.
காலத்துக்கும் அது உறுதியாக நிற்கும்.
அவ்விதமாய் கட்டப்படுவதன் அடி முடி காணா தலைமுறையினர்
அவற்றில் வாசம் செய்தபடி
அவற்றுக்கு வாடகை செலுத்தியபடி
அவற்றினூடாய் வாழ்ந்தேகியபடி
அவர் மீது இவரும் இவர் மீது அவரும் வெறுப்புமிழ்ந்தபடி….
அவர்களைக் காட்சிப்பொருளாக்கியபடி கட்டிடவியாபாரத்தில்
கொள்ளை லாபம் ஈட்டிக்கொண்டிருப்பவர்களை
கனவான்களாக காருண்யவாதிகளாக காண்பதும்
காட்டுவதுமாய்
ஊட்டிவளர்க்கபட்டுக்கொண்டிருக்கும்
கட்டிடக்கலை வரலாறு.

'அன்பே உருவாதலு'க்கான அதி எளிய வழி - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 'அன்பே உருவாதலு'க்கான

அதி எளிய வழி

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
(* 15 மார்ச், 2023 தேதியிட்ட பதிவுகள் இணைய இதழில் இடம்பெற்றுள்ளது)
யார் என்ன எழுதினாலும் அநாயாசமாக ‘லைக்’கிட்டுத் தள்ளிக்கொண்டிருந்த கை ஒருநாள் சுளுக்கிக்கொண்டுவிட்டது.
அமிர்தாஞ்ஜன், டைகர் பாம், பிண்ட தைலம்
எதுவும் உதவிக்கு வரவில்லை.
அந்தக் கைக்குரியவருக்கு
அழுகையழுகையாய் வந்தது
ஆரேனும் தன்னை அன்பிலாக் காட்டான்,
சகமனிதவிரோதி,
மன்னிக்கத் தெரியாத மிருகம்,
அ- புரட்சியாளர்,
அசிங்கம்பிடித்த விருப்புவெறுப்புவாதி,
அநியாய சார்பாளர்,
அனுதினம் பாரபட்சம் பழகுபவர்
இன்னும் என்னென்னவோ எண்ணிவிடுவார்களே
இவருமவரும்
தெரிந்தவர்களும் தெரியாதவர்களும்
இருப்போரும் இல்லாதாரும்
கல்லாரும் கற்றாரும்
உள்ள விருப்புவெறுப்புக்கேற்ப
உற்றார் உறவினர் நட்பினர் விரோதிகள்
எல்லோரும் ….
என்ற கவலையில்
விறுவிறுவெனத் தலைசுற்றியது அவருக்கு.
மாற்றுக்கருத்திருந்தாலும் மறைத்து ’லைக்’ இட மறவாமலிருப்பதே
மகோன்னத மனிதப் பண்பு!
இடதுகையால் எழுதும் பழக்கத்தைக் கற்றுத்தராத
பள்ளிமீதும் கல்லூரி மீதும்
கடகடவென்று வசையை அள்ளியிறைக்கத்
தொடங்கிய மனதை
பிரயத்தனத்தோடு அடக்கிக்கொண்டார்.
அவருடைய ’லைக்’கிற்கு அப்பாலாகக்கூடாது அவையும்.
இத்தனை கரைபுரண்டோடும் அன்புநிறை
பத்தரைமாற்றுத்தங்க வித்தகரின்
இன்றைய லைக்குகளுக்காகக் காத்துக்கொண்டிருக்காமல்
தன்பாட்டில் இயங்கிக்கொண்டிருக்கிறது
ஃபேஸ்புக்
என்பதே அன்னாரின் இன்னாளுக்கான
ஆகப்பெரும் துக்கமாக……..

மகளிர் தின சிறப்புமலர் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 மகளிர் தின சிறப்புமலர்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

முதல் பக்கத்தில் மகளிர் தின வாழ்த்து (பெண் அமைச்சர் கள், பெண் விமான ஓட்டிகள், பெண் ஆட்டோ ஓட்டிகள், மாணவிகள் – ஆரம்பப்பள்ளி முதல் பொறியியல் கல்லூரி வரை முகம் மலரச் சிரித்தபடி நின்றுகொண் டிருந்தார்கள்).

இரண்டாம் பக்கத்தில் முக்கால் மார்பு தெரியும்படி யான ஒரு நடிகையின் படம் (அந்தப் பக்கத்தில் தரப்பட்டிருக் கும் Peeping Tom கிசுகிசுக்களுக்கும் இந்தப் படத்திற்கும் எந்தவொரு சம்பந்தமு மில்லை. அதனாலென்ன?).

மூன்றாம் பக்கத்தில் மூக்குத்தியம்மன் (அவளுக் கான படை யல், பாடல், செய்யவேண்டிய நேர்த்திக்கடன், அவளுக்கு எங்கெல்லாம் கோயில்கள் இருக்கின்றன என்ற விவரங்க ளோடு).

நான்காம் பக்கத்தில் கபடி விளையாடும் பள்ளி மாணவி களின் படமும் பாராட்டும் (பாவம், வெயி லும் புழுதியும் மண்டிக்கிடக்கும் மைதானத்தில் ஏன் அந்த நிகழ்வை வைத்தார்களோ – பார்க்க வருத்தமாயிருக்கிறது).

ஐந்தாம் பக்கத்தில் மனோரஞ்ஜிதப்பூவை காதலி யோடு ஒப்பிட்டு ஒரு காதலன் எழுதும் கவிதை.(நேற்று – இன்று – நாளைக்கானது; காலத்திற்கு மான அரதப்பழசுக் கவிதை).

ஆறாம் பக்கத்தில் ஒரே சமயத்தில் ஒருவனின் நல்ல மனைவியும் இன்னொருவனின் கள்ளக் காதலியுமான பெண்ணின் கணவன் தூங்கும் போது கடப்பாரையால் அவன் மண்டையில் ஓங்கியடித்துக் கொலைசெய்த செய்தியின் விரிவாக்கம். (பின் எப்படி கணவன் தற்கொலை செய்துகொண்டதாகக் காவல்துறையினரிடம் சொன்னாள் என்ற உங்கள் கேள்வி தர்க்கபூர்வமா னதே. தெரிந்துகொள்ள நாற்பத்தியெட்டாவது பக்கத்திற்குச் செல்லவும்).

ஏழாம் பக்கத்தில் ஒரு கையின் ஐந்து விரல்க ளால் ஒரே சமயத்தில் ஐந்துகோலங்கள் போடும் சாதனைப்பெண் ணின் கதை.( இது எப்படி சாத்தி யம் என்று கேள்விகேட்ப வர்கள் பெண்ணின விரோதிகளாகக் கொள்ளப்படுவார்கள்).

எட்டாம் பக்கத்தில் தன்னுடைய குடிசையின் வாசலோர மாய் வடை பஜ்ஜி சுட்டு விற்றுக் கொண்டிருக்கும் மூதாட்டி (பிறந்ததிலிருந்தே ஏழையாக இருக்கிறாரே – இது ஏன் என்று யாரும் கேள்வி கேட்டுவிடலாகாது – அவருடைய அயரா உழைப்பைப் பாராட்டி கைதட்டி னாலே போதுமா னது).

ஒன்பதாவது பக்கத்தில் ஒரு பெண் இந்தக் கையால் விமானமோட்டி அந்தக் கையால் விளம்பரத்திற்கான சோப்பை எடுத்துத் தோளில் தேய்த்துக்கொள்ள ஆரம் பிக்கிறார். (ஏன் விளம் பரங்களில் வரும் பெண்கள் எல்லோருமே உள்ளங்கைகளில் சோப்பைக் குழைக்கா மல் நேரடியாக ஆடையற்ற தோள்களில் மயக்கும் பார்வையோடு தேய்க்கத் தொடங்குகிறார்கள்?)

பத்தாவது பக்கத்தில் ’பெண் நுகர்பொருளல்ல’ என்று கட்டுரையின் ஆரம்பத்தில் ஆவேசமாகக் கைகளை உயர்த்தியபடிக் கூவும் பெண்ணைக் காட்டித் தன் ஆபரணங்களை வாங்கச்சொல்லிக் கொண்டிருந்தது நகைக்கடை விளம்பரம்.

பதினைந்தாம் பக்கத்தில் துப்பாக்கிச் சுடும் போட்டியில் முதல் பரிசு வென்ற பெண் கையி லுள்ள ஆயுதத்தால் வாசகர்களில் யாரையோ குறிபார்த்துக்கொண்டிருந்தாள்.

பதினெட்டாம் பக்கத்தில் எட்டாம் வகுப்பு மாணவி யொருத்தி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டத்தை அத்தனை ரசித்து ருசித்து அக்குவேறு ஆணிவேறாக அலசிக்கொண்டிருந் தார் கட்டுரையாளர்.

இருபதாம் பக்கம்..... முப்பதாவது பக்கம்...... ஐம்பத்தியெட்டாவது பக்கம்....எண்பதாவது பக்கம்……

நூறாவது பக்கத்தில் மீண்டுமொரு மகளிர் தின வாழ்த்து. இம்முறை அந்தப் பத்திரிகையில் பணிசெய்யும் பெண்கள் – முகம் மலரச் சிரித்தபடி நின்றுகொண்டிருந்தார்கள்)

ஒரே பாதை வெவ்வேறு கால்கள் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்

 ஒரே பாதை வெவ்வேறு கால்கள்

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)
(*15 மார்ச், 2023 பதிவுகள் இணையட் இதழில் பிரசுரமான கவிதை)
அவரவர் பயணங்களுக்காகப் பாதையின் நீள அகலங்களும்
இருமருங்கிலுமான மரங்களும் மைல்கற்களும்
தெருவோரக் கடைகளும் திருப்பங்களும்
மறுசீரமைக்கப்பட்டுக்கொண்டேயிருக்கின்றன.
அவர் நடக்கும்போது அந்தச் சாலையோரங்களிலிருந்த
அருநிழற் தருக்கள்
அடுத்தவர் நடக்கும்போது மாயமாய் மறைந்துபோய்விடுகின்றன.
அதற்கு பதில்
அங்கே கூர்முனைக் கற்கள் இறைந்துகிடக்கின்றன.
அவர் நடக்கும்போதெல்லாம் அங்கே நாள்தவறாமல் இளநீர் வெட்டிக்கொண்டிருக்கும் வியாபாரி
அடுத்தவர் அவ்வழியே செல்லும்போது
வெடிகுண்டு வண்டியில் கூவிக்கொண்டே செல்கிறார்.
அவர் நடக்கும்போது வீசும் தென்றல்
அடுத்தவர் நடக்கும்போது சூறாவளியாகிவிடுகிறது.
அவர் நடக்கும்போது ஆயிரத்தெட்டு யோசனைகளோடு சென்றாலும்
வழுக்கிவிட அங்கேயிருக்காத சாணிமொந்தையும் போட்டுடைத்த பூசணிக்காயும்
நாறும் சாம்பார்ப் பொட்டலமும் செத்த எலியும்
குழியும் குண்டும் வழியெலாம் உருண்டோடும் கோலிகுண்டுகளும்
யாவும் அடுத்தவர் செல்லும்நேரம்
அங்கே ஆஜராகிவிடுகின்றன.
அப்படியுமிப்படியும் ஆடித் தள்ளாடித் தத்தளிக்கும் ஒருவரை
யடுத்தவர் தம்பிடி பெறாதவர் என்று எக்களிப்பதும்
வம்படியாய்ப் பிடித்திழுத்துத் தள்ளிவிடுவதும்
சாலைவிதிகளிலேயே மீறப்படாமல் மிக கவனமாய்ப்
பேணப்படுவதாகிறது.
அடிக்கடி விபத்துகள் நேரும் அந்த அபாயகரமான வளைவு
மட்டும் இருந்தவிடத்திலேயே இருந்துவிடுமா என்ன….