LIFE GOES ON.....

LIFE GOES ON.....
Showing posts with label எழுத்ததிகாரம் - ரிஷி. Show all posts
Showing posts with label எழுத்ததிகாரம் - ரிஷி. Show all posts

Saturday, January 16, 2016

எழுத்ததிகாரம் - ரிஷி


எழுத்ததிகாரம்

ரிஷி

காற்றும் கடலும் வானும் மண்ணும் நீரும் நெருப்பும்
நாய் நரி பூனை எலி மான் ஆண் பெண் பிள்ளை
மூத்தவர் இளையவர் மரம் செடி புல் பூண்டு –
எல்லாவற்றுடனும் கைகோர்த்து
எல்லாமாக உருமாறி
உயிர்த்தெழுவன என் கவிதைகள்.
கருப்பும் வெண்மையும் நீலமும் மஞ்சளுமாய்
கணமொரு கோலம் தீட்டும் என் கவிதைகள்.

கவிதையின் அரிச்சுவடிகளை எனக்குக் கற்றுக்கொடுப்பதற்கு
வாழ்க்கை இருக்கிறது. நீ யார்?
உன்னுடைய கவிதைகளின் பொய்மை, போதாமைகளை
உய்த்துணர முடியுமா பார்.

கற்காலச் சாம்பலைக் காட்டி தற்கால நெருப்பைத்
தரைவிரிப்பின் கீழ் ஒளிக்கப் பார்க்கும் உன் துக்கிரித்தனம்
வக்கிரம் என்பதோடு அண்டை அயலில் தீவிபத்தை ஏற்படுத்தக்கூடும்
விபரீதம். அறிவாய் நீ. தெரியும்.
அடுத்தவரை அடுப்பாக்கிக் குளிர்காய்வதே உன் மனிதநேயம்;
உனக்குப் பிடித்திருக்கும் மதம்…..

அதிகாரமும் சுரண்டலும்
இறந்தகாலத்திற்கு மட்டுமானவையா என்ன?

படைப்புவெளியின் போக்குவரத்துக் காவலராக
உன்னை நீயே நியமித்துக்கொண்டு
அபராதச்சீட்டுகணக்காய் எதையோ கிறுக்கித்தள்ளிக்கொண்டிருக்கிறாய்
பொறுக்கித்தனங்களில் இதுவும் ஒருவகை – புரிந்துகொள்.
தரம் அறம் பற்றியெல்லாம் மற்றவர்க்கு வகுப்பெடுக்குமுன்
அவரவர் தராதரம் பற்றித் தெரிந்துகொள்ளல் உத்தமமல்லவா.

சூரியனைப் பார்த்து நாய் குரைத்து நான் கண்டதேயில்லை.
[அப்படியே செய்தாலும் அது சூரியனோடு சங்கேத மொழியில்
பேசிக்கொண்டிருக்கக் கூடும்; நம்மால் பொருள்பெயர்க்க இயலுமா என்ன?]
ஆனால் அதையே நாமும் செய்தால் அனுதாபத்திற்குரியதாயிற்றே!



[*17 ஜனவரி 2016 திண்ணை இணையதளத்தில் இடம்பெற்றுள்ளது]