LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Monday, March 16, 2026

'மியூஸிக்கல் சேர்’ - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 மியூஸிக்கல் சேர்’

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)



முதலில் வரும் முப்பது பேருக்கே
மியூஸிக்கல் சேரில் பங்குபெற
முடியுமென்றனர்
பந்தயம் நடத்தும் புரவலர்கள்

எருதோ விருதோ பிறிதோ
பணம் போடுகிறவர்களே எல்லாம்.
கல்லார்க்கும் கற்றவர்க்கும் தெரிந்த
உண்மையிதை
உள்வாங்கிக்கொண்டோர் உளரும் இலரும்
தத்தமது தேவை நிமித்தம்
கிளம்பத் தொடங்கினார்கள்.

கால்நடையாய் சிலர் கிளம்ப
காலுக்கு கழுதை பரவாயில்லை
என்று சிலர் விளம்ப
கட்டை வண்டி எத்தனையோ மேல்
என்று சிலரும்
கடன்வாங்கிக்கொண்ட கார்வண்டியில்
சிலரும் என
பந்திக்கு முந்துவதே என்றும் நன்றென
சிந்திக்கத் தெரிந்த
ஆறறிவாளர்கள், பேரறிவாளர்கள்
பந்தயம் நடக்குமிடத்திற்கு வந்துசேர்ந்தால்
அங்கே _

முன்னமே
பறக்கும் காரிலோ
பறவைகள் முதுகிலோ
காற்றுக்குக் கட்டளையிட்டோ
மாற்றுவழிகள் மற்றும பல செய்தோ
ஏற்கெனவே முப்பது பேரை
வரவழைத்திருந்த விழாக்குழுவினர்
அவர்களில் இருபது பேரை
ஆன்ற பார்வையாளர்களாக்க
அவர்களும் வேறு வழியின்றி
தரப்பட்ட இருக்கைகளே தமக்கான
அங்கீகாரமாகக் கொண்டு
ஆளுக்கு மூன்று கைகளால்
ஆரவாரத்தட்டொலிக்க
பழக்கதோஷத்தில் சிலர்
சீழ்க்கையொலியெழுப்ப
அதைக் கேட்டு ஒரு கட்சியினர்
இன்னொரு கட்சியின் ஆதரவாளர்களாய்
அவர்களை பார்த்து முறைக்க

விழாக்குழுவினர்
எஞ்சிய பத்துபேரை வட்டமாய்
ஓடவிட்டார்கள்
இறுதியில் மிஞ்சுபவர் யாராயிருக்க
வேண்டுமென்ற
திட்டவட்டமான முன்முடிவோடு.

(அஞ்)ஞானம் - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 (அஞ்)ஞானம்










’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

பீடம் இடவாகுபெர்.
பீடாதிபதி பன்மையிலும் வருமென்றால்
இலக்கணப்பிழையென்போரும் இங்குளர்.
என் செய்ய...
தனித்தனிப் பீடங்களில் தனித்தனி அதிபதிகள்
குழுக்களாகவும் ஊராகவும் நகராகவும்
நாடாகவும் உலகாகவும்.....
பீடங்களும் அதிபதிகளும் மதமாச்சரியங்களைக்
கடந்த அளவில்
பல்லக்கில் ஆரோகணித்திருப்பவர்களாகவும்
பல்லக்குத் தூக்கிகளாகவும்
பசிமறந்து கண் துஞ்சாமல்
ஊர்வலத்தைப் பார்த்துக்
கொண்டிருப்பவர்களாகவும்.....
தொலைக்காட்சி அலைவரிசைகள் குண்டுமழைப்பொழிவை
வர்ணஜால வித்தையாய்
காட்சிப்படுத்திக்கொண்டிருக்க
இந்த வருடம் தீபாவளிக்கு இந்த வெடிகள்தான் வேண்டும்
என்று இப்பொழுதே அடம்பிடிக்கின்றன பிள்ளைகள்.
இருக்கும் இருகைகளின் இருபது விரல்களுக்கு
தலா ஒன்று வீதம்
இருபது விருதுகள் வாங்கியிருப்பவர்
கட்டைவிரலுக்குத் தரப்பட்ட விருதை விட
சுண்டுவிரலுக்குத் தரப்பட்டிருக்கும் விருது
சன்னமாக இருக்கிறது என்று விசனப்படுகிறார்.
அவர் விழிகளிலிருந்து வழியாத கண்ணீரைப் பற்றி
ஒட்டியும் வெட்டியும் கருத்துரைக்கும் காணொளிகள்
மட்டற்ற ஆதரவைப் பெற்றவாறு.
விட்டுவிடுதலையாகி நிற்பாயந்தச்
சிட்டுக்குருவியைப்போலே என்று
பாடிவிட்டுப்
பாதிவாழ்வோடு பரலோகம் சென்றுவிட்டவனை
எண்ணிப்பார்க்கவோ எதிர்த்துக்கேட்கவோ
குருவிகளே இல்லையின்று.
அங்கிங்கெனாதபடி யெங்கும் பிரகாசமாயொரு
கேடயத்தோடு
பத்து லட்சமோ அதற்குக் கொஞ்சம்
கூடவோ குறையவோ
பணமும் கிடைக்கப்பெற்றவரை
’ப்ரைம்’ சேனல்கள் எல்லாம் போட்டிபோட்டுக்கொண்டு
பேட்டிகண்டவாறிருக்க _
அங்கங்கே அத்துமீறல்களுக்கும் வன்முறைகளுக்கும்
ஆளாகும்
பெண்களைப் பற்றிய BREAKING NEWSகளும்
போட்டிபோட்டுக்கொண்டு தரப்படுகின்றன
தங்குதடையில்லாமல்
லைக்குகளும் கமெண்ட்டுகளும் அதிகம் வருமென்றதொரு
குத்துமதிப்பான கணக்கில்
விதந்தோதலுக்கும் வசைபாடலுக்கும்
இடைவழியில்
விருதாளரைப் பற்றியொரு பதிவைத் தட்டச்சு
செய்துகொண்டிருப்பவரை
கடிக்கப் பற்களில்லையே என்று எரிச்சலுடன்
நகர்கிறது
அவருடைய ‘மௌஸ்’.
’லவ்ஸ்’ செய், லவ்ஸ் செய்’ என்று கீச்சுக்குரலில் ஒரு சேனல்
தங்கிலீஷில் செல்லமாய் அதட்டிக்கொண்டிருக்க
‘நைஸ்! நைஸ்! யுவர் ஸைஸ்! ஸாரி, ஐஸ்!”’
என்று எதிர்ப்பாட்டு எங்கிருந்தோ
கண்ணியமாய் ஓங்கி ஒலிக்கிறது.
ஒரு பீடமென்றால் மியூஸிக்கல் சேர் தவிர்க்கமுடியாததுதானே
என்று
வழக்கம்போல் தத்துவம் பேசியபடியே
மறுபடியும் விட்ட இடத்திலிருந்து வட்டமாய்
ஓடத்தொடங்குகிறா ரொருவர்.
ஆடிய ஆட்டமென்ன பேசிய வார்த்தையென்ன
என்று என்னதான் பாடினாலும்
காடுதாண்டியும் வரும் விருது
தருமன்றோ மறுபிறவி
யென்பதுபோலுமொரு (அஞ்)ஞானப்
பீடமேறி
ஆடப்பிறந்தவர் ஆடிவர
பாடப்பிறந்தவர் பாடிவர _
அங்கே அமெரிக்க அதிபர் கையில்
விளையாட்டுப் பந்துகளாய்
எறிகுண்டுகள்
இங்கே அதிபராகவியலாத சிலர்
கைகளில்
வார்த்தைப்பந்துகள்
வெறுப்புப்பிழம்புகளாய்....
சாவோலம் சூழத் தரப்படும்
அமைதிக்கான நோபல் விருது
அறிவிக்கப்படும் நாளில்
அலங்கார விளக்குகளுக்கு அப்பால்
எங்கோ
இருளில் மூழ்கியிருக்கும்
அழுகைக்குரல்கள்.
பீடங்களுக்கான போட்டி தொடரும்
மும்முரமாய்.
தொடரும் ஒட்டியும் வெட்டியுமான
பதிவுகளும்.....

POET BRAMMARAJAN - BEING FAR FROM THE MADDING CROWD

 POET BRAMMARAJAN - 

BEING FAR FROM THE MADDING CROWD

https://brammarajan.wordpress.com

ஒவ்வொரு நாளும் அல்லது சில நாட்களுக்கு ஒரு முறை கவிஞர் பிரம்மராஜன் தன்னுடைய வலைப் பூவில் https://brammarajan.wordpress.com/ பதிவேற்றிக் கொண்டிருக்கும் உலகத்தரமான மொழிப்பெயர்ப்பு களைப் படிக்கும்போது எனக்கு FAR FROM THE MADDING CROWD என்ற வரி தான் நினைவுக்கு வரும்.

இன்று அவருடைய வலைப்பூவில் பதிவேற்றப்பட்டுள்ள திலிருந்து சில வரிகளை இங்கே பகிரத் தோன்றியது:

கவி பிரம்மராஜனின் WORDPRESS வலைத்தளத்திலிருந்து
....................................................................................................................................
Invisible Cities-Dialogue between Kublai Khan and Marco polo/இட்டாலோ கால்வினோ-கண்காணா நகரங்கள்-7
......................................................................................................................................
குப்ளை: ஒருவேளை நம்மிடையிலான இந்த உரையா டல் குப்ளைகான் மற்றும் மார்க்கோ போலோ என்ற பட்டப்பெயர்கள் சூட்டப்பட்ட இரண்டு பிச்சைக்காரர் களுக்கு இடையில் நடப்பதாய் இருக்கலாம். அவர்கள் அந்தக் குப்பைக் குவியல் களைச் சலித்து எடுக்கும்போது, உடைந்த கப்பல் பகுதிகளை, கிழிந்த காகிதத் துண்டுக ளைக் குவியலாய் அடுக்கியபடி, மோசமான மதுவின் சில மிடறுகளைக் குடித்ததால் போதை உண்டாகி, அவற்றைச் சுற்றி கிழக்கின் சகல செல்வங்களும் மின்னுவதாகக் காண்கிறார்கள் மற்றவர்கள்.

போலோ: ஒரு வேளை இந்த உலகில் மிஞ்சியிருப்ப தெல்லாம் குப்பைக் குவியல்களால் மூடப்பட்ட தரிசு பூமியும் மற்றும் மாமன்னர் கானின் தொங்கும் தோட்ட மும் மட்டுமே. நம் விழி மூடிகள்தான் அவற்றைப் பிரிக்கின்றன ஆனால் எது உள்ளிருக்கிறது என்றும் எது வெளியில் இருக்கிறது என்பதை நம்மால் தெரிந்து கொள்ள முடியாது.

மந்திரமாவது சொல் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 மந்திரமாவது சொல்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
நல்ல ரொம்ப நல்ல ரொம்ப ரொம்ப நல்ல
அல்ல அல்லவே யல்ல யல்ல அல்ல
மெல்ல மெல்ல சொல்ல சொல்ல
சொல்லெல்லாம் கல்லாகும் வல்வினையில்
வில்லிலிருந்து விடுபடும் அம்பு
நில்லாது செல்வதும் கொல்வதும்
நியமமாகிய மெய் இல்லாதுபோமோ
புல் கத்தியாகும் வித்தை கல்லாதிருக்கலாமோ
எல்லோருக்கும் துல்லியமாய் காணக்கிடைக்குமோ
El Doradoவை.

(*El Dorado ¬_ ஸ்பானிய தொன்மக் கதையில் இடம்பெறும் 'தங்க மனிதன்'. காலப்போக்கில் இந்தச் சொல் பல மாற்றங்களைக் கண்டு இன்று தொலைந்துபோன அரியவற்றைக் குறிப்பதான சொல்லாட்சியாக விளங்கு கிறது.

தினம் மகளிர்……… ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

//2020, MARCH 12, - மீள்பதிவு//
தினம் மகளிர்………
‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)



நான்கு நாட்களுக்கு முன் ஆங்கில நாளிதழில்
நான்காம்பக்கத்தில் வந்த செய்தியொன்றில்
நாலு வயதுப் பெண் குழந்தையை
அண்டை வீட்டைச் சேர்ந்த
நாற்பது வயது ஆணொருவன்
பாலியல் வன்கொடுமைக்காளாக்கி
யிருந்தான்.
மூன்று நாட்களுக்கு முன் தமிழ் நாளிதழில்
எட்டாம்பக்கத்தில் வந்த செய்தியொன்றில்
காதலித்த பதினான்கு வயதுப் பெண்ணை
அவள் காதலன் சிநேகிதர்களோடு சேர்ந்து
அசிங்கமாகப் படம் பிடித்திருந்தான்.
இரண்டு நாட்களுக்கு முன் ஆங்கில நாளிதழில்
ஐந்தாம் பக்கத்தில் வெளியான செய்தியில்
சிறுநீர் கழிக்க வீட்டின் பின்பக்கம் சென்ற
பனிரெண்டு வயதுச் சிறுமியின் வாயைப்
பொத்தி இழுத்துச் சென்ற இரண்டு பேர்
பெண்டாண்டு முடித்துத் துண்டாக்கிப்
போட்டிருந்தார்கள்.
நேற்றைய தமிழ் நாளிதழில்
நினைவிலிருந்து நழுவிவிட்ட எண்ணிட்ட
பக்கமொன்றில்
தாய் வேலைக்குப் போன பின்
தனியாயிருந்த ஒன்பது வயது மகளை
அச்சுறுத்திப் புணர்ந்து முடித்தான்
பாவி அப்பா.
படித்துப் படித்து மனதில் பரவிய
சொல்லொணா வலியில்
துடித்துத் துவண்டவர்கள்
பெண்கள் மட்டுமல்லர்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் சாதி சார்ந்து
அவளை ஆதரித்த, அவதூறு செய்த
பெண்களும் இங்குளர்.
தன் மகளிடமே தவறு செய்த கணவனைக்
கைதுசெய்யவைத்த மனைவியைக்
கையெடுத்துக் கும்பிடத் தோன்றுகிறது.
மனைவியை இழந்த பின் தனது மூன்று
மகள்களுக்காக
மாடாய் உழைத்து ஓடாய்த் தேயும்
அந்தத் தபால்காரர்
தவறாமல் நினைவுக்கு வருகிறார்.
வீட்டில் கோபித்துக்கொண்டு வந்து
செண்ட்ரல் ரயில்நிலையத்தில்
வந்திறங்கிய
வளரிளம்பருவப்பெண்ணை
பத்திரமாக அழைத்துவந்து
நான்கு பெண்களாக நின்றிருந்த எங்களிடம்
நம்பிக்கையோடு ’ஒப்படைத்த மனிதரை
எப்படி மறக்க முடியும்?
எல்லாவற்றுக்குமாய்,
ஒரு கையறுநிலையில்,
உறங்க மறுத்துப்
பேதுற்று அழும் மனது.
நிறைய நிறைய சிறுவர் சிறுமிகள்
வளரிளம்பருவத்தினர்,
யுவதிகள் இளைஞர்கள் சூழ
நீள்கிறது
தெருவீதி
ஊருலகு.

நீதிக்கதை - 1 வருகை _ லதா ராமகிருஷ்ணன்

 நீதிக்கதை - 1

வருகை
_ லதா ராமகிருஷ்ணன்

திடீரென்று ஒரு நாள் தற்போதைய அகில உலகப் புகழ் கவிஞர் தன் வீடு தேடி வந்ததும் அந்த மூத்த கவிஞருக்கு ஒன்றும் புரியவில்லை.
சிறிதுநேரம் அந்த மூத்த கவிஞரின் ஒன்றிரண்டு கவிதை களைப் பற்றிப் பேசிய பின் வந்திருந்தவர் “ நீங்கள் அந்த நாட்டில் உங்கள் பிள்ளைகளுடன் தான் இருக்கப்போகி றீர்கள் என்று கேள்விப் பட்டேன். அங்கே உங்களுக்காக தமிழ் இலக்கி யக் கவிதா நிகழ்வு ஒன்று ஏற்பாடாகியிருக்கி றதாமே - எனக்கும் உங்களைப் பாராட்டிப் பேச மிகவும் விருப்பம்’ என்று சொன்னபோது அவர் இன்னும் போகாத நாட்டுக்கான கடவுச்சீட்டாகத் தான் தன்னைப் பார்க்க வந்திருக்கிறார் என்பது புரிந்தது பெரியவருக்கு.

P.சுசீலாக்களின் பெருங்கருணை! - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 //மீள்பதிவு - 2020, மார்ச் 16//

P.சுசீலாக்களின் பெருங்கருணை!
‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
குரல் வழி பரவும் கனிவினிமையில்
ஒவ்வொரு மனதிலும்
காலத்தின் அதலபாதாளத்திலிருந்து
அல்லது, கைக்கெட்டா உயரத்திலிருக்கும்
பரணிலிருந்து
சில தருணங்கள் துடித்தெழுந்து
தரையிறங்கிவருகின்றன.
சில பாதி மூடிய,
இறுக்கமாகத் தாழிட்ட
கதவுகள்
தாமாகவே விரியத் திறந்துகொள்கின்றன.
விஸ்வநாதன் - ராமமூர்த்தி
கண்ணதாசன் தேவிகா கல்யாணகுமார்
ஸ்ரீதர் இன்னும் எத்தனையோ பேருமான
ஒரு சுசீலாவின் வாய்திறந்து
அத்தனை சுசீலாக்களும் பாடுகிறார்கள்.
ஆனாலும் சேர்ந்திசையாகாது,
அவரவருக்கு மட்டுமானதாக
மிகத்தனியாக
இசைத்துக்கொண்டிருக்கிறது பாடல்.
தடையரண்களெல்லாம் தகர்ந்துபோக
ஒரே சமயத்தில் தானாகவும் பிறனாகவும்
வாழக் கிடைக்கும் வாழ்க்கை
இந்த ஏழை மனதை
தொட்டதெல்லாம் பொன்னாக்கும்
ரசவாதியாக்குகிறது!
அரங்கமொரு பிரபஞ்சவெளியாகிறது!
ஒரு பிறவிக்குள் எத்தனையெத்தனை
மறுபிறவிகள்!
அத்தனையையும் வாழ்ந்துபார்க்கும் ஆர்வமும்
வாழ்ந்தாகவேண்டிய அயர்வுமாய்
அமர்ந்திருக்குமவர்களை
அந்தப் பெண்ணின் குரல் அத்தனை பிரியமாய்
வருடித்தரத் தர
அவர்கள் ஏழைக் குசேலனின் அவிலாய்
தங்கள் கைத்தட்டல்களையும் கண்ணீர்த்துளிகளையும்
பரிசளிக்கிறார்கள்.
பாடல் முடிந்து
கதவுகள் ஒன்றன்பின் ஒன்றாய்
மீண்டும் மூடிக்கொண்டபின்னும்
விட்டகுறை தொட்டகுறையாய்
சன்னமாய் மென் காற்று வீச,
இன்னும்
மனமெங்கும் ரீங்கரித்துக்கொண்டிருக்கும்
சுநாதம்.
(சமர்ப்பணம்: பாடகி பிரியங்காவுக்கு)