LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Friday, May 22, 2026

சர்க்கஸ் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 சர்க்கஸ்

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)



ஆடு ஆடு ஆடு என்கிறார்கள் கோரஸாக.
மேரியின் ஆட்டுக்குட்டி திருமண மண்டபத்திற்குள் வந்திருக்கிறதா என்று ஆசைஆசையாக நாலாபக்கங்களிலும் திரும்பிப் பார்க்கிறாள் குழந்தை.
அதற்குள் அம்மா
அவளது சின்ன இடுப்பில் ஒரு பக்கமாக
சற்றே நிமிண்டிவிட்டு
'ஆடு' என்கிறாள்.
அவளுடைய மாமா அலற விடுகிறார் பாட்டை:
”அப்படிப் போடு போடு போடு போடு போடு......”
எதைப் போடச்சொல்கிறார் என்று
ஒருகணம் புரியாமல் குழம்பி நின்ற குழந்தை
எதுவானாலும் பெரியவர்கள் சொல்வதைக் கேட்டுத்தானே ஆகவேண்டும் என்ற எண்ணம் மேலோங்க
கையில் கிடைத்த தாம்பாளத்தை எடுத்துத்
தரையில் போட
அது ஆங்காரமாய் ரீங்காரமிட்டவண்ணம்
ஆடி அடங்கியது.
அம்மா அவமானத்தில் அடிக்கக்
கையை ஓங்குவதற்குள்
'ஆ, தாம்பாளத்தில் நின்று ஆடுமா குழந்தை?'
என்று ஆவலாகக் கேட்டபடி ஒருவர்
தன்னுடைய அலைபேசியில் ‘வீடியோப் பகுதிக்கு
வாகாய்ப் போய்நின்றார்.
அந்தக் குட்டி உடம்பை குண்டுகட்டாய்த் தூக்கி தாம்பாளத்தின் விளிம்புகளில்
அதன் பிஞ்சுப் பாதத்தைப் பதித்த பெரியப்பா
குழந்தையும் தெய்வமும் ஒன்று,
குழந்தைக்கு வலியே தெரியாது' என்று
திருவாக்கு அருள _
வலிபொறுக்காமல் துள்ளித்
தரையில் குதித்த குழந்தை
தாம்பாளத்தை எடுத்துத்
தன் தலையில் கவிழ்த்துக்கொண்டு
அங்கிருந்து ஓட ஆரம்பித்தது.
“அட, இது நல்லாயிருக்கே –
அப்படியே ஓடு ஓடு ஓடு –
இதுக்கொரு பாட்டுப் பாடு பாடு பாடு”
என்று அடுத்தவீட்டுக்காரர்
குழந்தையின் பின்னே ஓட
அவர் பின்னே அங்கிருந்த எல்லோரும் ஓட
அலறியடித்துக்கொண்டு ஓடிய குழந்தை
மண்டபத்தில் விரிக்கப்பட்டிருந்த
விலையுயர்ந்த கம்பளத்தின் கிழிசலில்
குட்டிக் கால் சிக்கித் தடுக்கிவிழ_
தலையிலிருந்த தாம்பாளம்
தெறித்துவிழுந்து
அதன் சின்னக்கையைத் துண்டித்தது.
கண்ணீரோடு தாயும் பிறரும் அலைக்கழிந்துகொண்டிருந்தார்கள்
கண்மூடிக் கிடந்த குழந்தையிடம்
ஒரே கேள்வியை
திரும்பத்திரும்பக் கேட்டபடி _
“என்ன சொன்னாலும் கேட்காம
இப்படி தலைதெறிக்க ஓடலாமா?”

கற்றது கையளவு - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 கற்றது கையளவு

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
எல்லாவற்றையும் கற்றுக்கொண்டுவிடவேண்டும் என்ற தீரா ஆர்வம் அவருக்கு.
ஒன்றை அரைகுறைக்கு அதலபாதாளம் கீழே கற்றுக்கொண்டதும் உடனே அடுத்ததைக் கற்றுக்கொள்ளப்போய்விடுவார்.
அதற்குப்பிறகு முதலில் கற்றுக்கொள்ள ஆரம்பித்து பாதாளத்தில் கைவிட்டதன் பக்கம் எட்டிக்கூடப் பார்க்கமாட்டார்.
ஆனால், பாதாளத்தில் கைவிடுமுன்னர் தவறாமல்
அந்த ஒன்றின் அருகில் நெருங்கி நின்றபடியோ
அல்லது அதன் மீது ஒயிலாய் சாய்ந்தபடியோ அல்லது அதைப் பார்த்துப் பிரியாவிடையளிப்பதாய் உலகத்துத் துயரையெல்லாம் கண்களில் தாங்கிய பாவங்காட்டி ஒற்றைக்கண்ணீர்த்துளியை கவித்துவத்தோடு ஒற்றிவிட்ட படியோ
ஒரு செல்ஃபி எடுத்து அல்லது இன்னொருவரை புகைப்படம் அல்ல அல்ல ஒளிப்படம் எடுக்கச்செய்து அதைத் தனது அனைத்து இணைய அக்கௌண்டு களிலும் பதிவேற்றிவிடுவார்.
அப்படித்தான் ஓவியம் கற்றுக்கொள்ள ஆரம்பித்தவர் முட்டையை வரைந்ததோடு போதும் என்று கோழியை வரையாமல் அதன் சிறகென்று ஒரேயொரு கோட்டையிழுத்துத் தன் ஓவிய ஆர்வத்தைக் காணொளியாக்க _
அந்தச் சிறுகோட்டிற்கான அர்த்தத்தைப் பொருள்பெயர்க்க இந்தத் தொற்றுநோய்க் காலத்திலும் ‘ஜூம்’ கருத்தரங்கம் ஜாம் ஜாம் என்று நடந்தது.
எளிய மாங்காய் ஊறுகாய் போட்டுக்கொள்ளக் கற்றுக்கொள்ள ஆரம்பித்து ஆளுயர ஜாடிமீது சாய்ந்து ஒயிலாய் சாய்ந்து கையில் ஒரு மாங்காயை ஏந்தி அதை வாயை நோக்கி எடுத்துச்செல்லும் நிலையில்
புகைப்படமெடுத்துப் பதிவேற்றியவர் அதற்குப் பிறகு ‘அம்பிகா’ கடையில்தான் மாங்காய் ஊறுகாய் வாங்கியிருப்பார் என்பது என் கணிப்பு.
போட்டிருந்தால் அது பற்றி குறைந்தபட்சம் நான்கு அகல்விரிவான கட்டுரைகளாவது வந்திருக்கும். வந்ததாகத் தெரியவில்லை.
ஒலிம்பிக்கில் கலந்துகொள்வதற்காய் நீளந்தாண்டுதல் பயிற்சியெடுத்துக் கொண்டிருக்கிறேன் என்றார்.
சுற்றிலும் நீலநிறப்பூக்களொடு மையத்தில் நின்றிருந்ததைப் பார்த்தால்
நீலந் தாண்டுதலா நீளந் தாண்டுதலா என்ற நியாயமான சந்தேகமெழுந்தது.
பின்,
‘ஒலிம்பிக் பதக்கத்தைவிட அதன் வளையங்கள்தான் எனக்கு மிகவும் பிடித்தது. அவை கிடைக்க வழியேயில்லை என்பதால் பயிற்சியில் ஆர்வம் போய்விட்டது என்று வண்ண வண்ண வளையங்களின் மத்தியில் நளினமாய்ப் படுத்தவாறு அண்ணாந்து வானத்தைப் பார்த்தபடி அழகாய்ச் சிரித்தபடி அவர் சொல்லியிருந்த பேட்டி சமீபத்தில்தான் வெளியாகியது.
பியானோ கற்றுக்கொள்ளத் தொடங்கியிருப்பதாகத் தெரிவித்திருந்தவர் பியானோக் கட்டைகளைத் தன் கட்டைவிரல்களால் மட்டும் தொட்டுத்தொட்டு மீட்டுவதாய் ஒரு குறும்படம் யூ-ட்யூபில் வெளியாகி அது வைரலாகியிருப்பதாய் மெகா தொலைக்காட்சி காப்டன் தொலைக்காட்சி ஜெயா ப்ளஸ் தொலைக்காட்சியில் மட்டும் அவரவர் தலைவர் பற்றிய செய்திகள் வெளியாவதே போல் சில நாட்கள் இவருடைய முகநூல் டைம்லைனில் மட்டும் ஒரு ’ப்ளாஷ் நியூஸ்’ திரும்பத்திரும்ப வந்து கொண்டிருந்தது.
’அருமையான அந்தக்கால மீனாகுமாரி பாடல்களின் அர்த்தம் புரிவதற்காய் இந்தி கற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கிறேன்’ என்று சுற்றிலும் பல்வேறு இந்தி நாவல்களும் கவிதைத்தொகுப்புகளும் கேஸட்டுகளுமாக இந்தி கற்றுக் கொள்ளும் குழந்தையாய் தன்னை பாவித்து ‘ஹம் ஆப்கே ஹே கோன்?” என்று கேட்டு கலகலவென்று கைகொட்டிச் சிரித்து மகிழும் தன் ஸெல்ஃபியை வெளியிட்டவர் அதற்குப் பின் சில நாட்களிலேயே ‘வட இந்தியர்களின் அடிவருடிகளல்லர் தென்னிந்தியர்கள் என்று கோபாவேசமாக முழங்கிய கையோடு மீனாகுமாரி கருப்பு-வெள்ளைப் படம் இருந்த கேஸட் மேலட்டைகளுக்கு தீவைக்கும் காட்சியை இன்னொரு திறமையான புகைப்படக்கலைஞரைக்கொண்டு எடுக்கச் செய்து அதை தன் ப்ரொஃபைல் படமாகப் பதிவேற்றினார்.
சில நாட்களுக்கு முன்புதான் அம்பு-வில் பழகத் தொடங்கியிருக்கிறார்.
உச்சந்தலையில் இல்லாத ஆப்பிளைக் குறிபார்க்கிறது என்னிரு விழிகள் என்று கவிதைபோல் ஒன்றை எழுதத் தொடங்கியவர் நெஞ்சில் என்றும்போல் அந்த வருத்தம் பொங்கியது _
’சே, கவிதையை அரவணைத்துக்கொண்டு நிற்பதாய் ஒரு படம் வெளியிட வேண்டுமென்ற விருப்பம் நிறைவேற வழியில்லாதபடி கவிதை பிடிபடாது அருவமாய் நிற்கிறதே….’

இரக்கம் வராமல் போனதென்ன காரணம்.......

இரக்கம் வராமல் போனது என்ன காரணம்.......

- எழுதியது : கோபாலகிருஷ்ணபாரதி

பாடியது : ஸ்ரீவல்சன் ஜெ மேனன்

எனக்கு கர்நாடக சங்கீதம் தெரியாது.
எனக்குத் தெரிந்த தெல்லாம் தமிழ், ஆங்கிலம் - இரண்டு மொழி மட்டுமே. தெரிந்த மொழிகளி லும் கூட பாண்டித் யம் பெற்றவர் என்று யாரும் இருக்கமுடியுமா என்ன!

பாலகிருஷ்ண பாரதியைப் பற்றி மிகக்குறை வாகவே தெரியும் (என் தோழி பத்மினி மேடம் சொல்லக் கேட்டது) .

இந்த அருமையான பாடகர் ஸ்ரீவல்சனையும் கேட்டதில்லை.

புராண இதிகாசங்களில் உகந்த கருத்துகளை எடுத்துக் கொண்டு மற்றவற்றைப் புறந்தள்ளி விடுவது வழக்கம்.

கடவுள் இருக்கிறாரா? இல்லையா? நான் யார் அதை அறுதியிட்டு உறுதியாகச் சொல்ல ?
என்னவாக இருந்தாலும் இந்தப் பாடலைக் கேட்கும் போது - எத்தனை முறை கேட்டாலும் சரி - மனதில் அமைதி நிறைவதும் கண்களில் நீர் திரள்வதும் தொடர்ந்தபடியே.......

தாய்மண் அன்னா அக்மதோவாவின் கவிதை ஆங்கிலத்திலிருந்து தமிழில் : லதா ராமகிருஷ்ணன்

தாய்மண்

 அன்னா அக்மதோவாவின் கவிதை

ஆங்கிலத்திலிருந்து தமிழில் : லதா ராமகிருஷ்ணன்



நாம் அதை அலங்காரப் பேழைகளில் நம்
இதயத்தின் மீது சுமந்துகொண்டிருப்ப
தில்லை.
அது குறித்து கவிதைகளில் கரைவதில்லை,
அது நம்மைக் கசப்பான ஓய்விலிருந்து எழுப்புவ தில்லை
உறுதியளிக்கப்பட்ட ஈடன் தோட்டம்போல்
இல்லை அது.
நம்முடைய மனங்களில் பேரத்திற்கான பொருளாய்
அதை பாவிக்க ஒருபோதும் முயற்சிப்பதில்லை நாம்.
நோயுற்றிருக்கும்போது, மகிழ்ச்சியற்றிருக்கும்போது,
அதன்மீது அலுப்புற்றிருக்கும்போது
அதைப் பார்க்கவோ அறியவோ கூட அறியத் தவறிவிடுகிறோம்.
ஆம், பாதத்திலான இந்தப் புழுதி
நமக்கு ஏற்றதாயிருக்கிறது,
ஆம், பற்களின் இந்த விசைகூடிய அரைவு
மிக வாகாயிருக்கிறது நமக்கு,
எனவே இரவும் பகலும் மிதித்தேகிக்கொண்டிருக்கிறோம் _
அந்தக் கலவையாகா, கட்டுமான நேர்த்தியற்ற, புழுதியை.
ஆனால் நாம் அதனுள் படர்ந்துகிடக்கிறோம்,
அதுவேயாகிறோம்
ஆகவே அழைக்கிறோம் வெகு இயல்பாய் –
எனது மண் என்று.

வாய்ச்சொல் வீரர்களும் ”வாழ்க வாழ்க” வாயர்களும் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 வாய்ச்சொல் வீரர்களும்

”வாழ்க வாழ்க” வாயர்களும்

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)



ஒரு குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் குறுகிய காலத்திற்கு சமத்துவம் பேணுபவர்கள் மறவாமல் அதைக் காணொளிக்காட்சிகளாக்கிப் பகிரத் தவறுவதேயில்லை.
உறைந்தும் ஊர்ந்தும் அந்தக் காட்சிகள் அவரை சமத்துவசாலியாகவும்
சாட்சாத் சமூகப்பிரக்ஞையாளர்களாகவும்
காலத்திற்குமாகக் காட்டிக்கொண்டேயிருக்க
அண்ணாந்து பார்க்கவைக்கும் அவர்களுடைய மாடமாளிகைகளும் கூடகோபுரங்களும்
அதிகரித்துக்கொண்டேபோகின்றன.
அதனாலென்ன ? ஒருதரப்பு அன்னாடங்காய்ச்சிகளை
இன்னொரு தரப்பு அன்னாடங்காய்ச்சிகளுக்கெதிராகத் திருப்பிவிட்டால் பின்
பரபரப்பாய்த் தங்களுக்குள் அடித்துக்கொள்வார்களேயல்லாது
பதுக்கியிருக்கும் கருப்புப்பணத்தின் பக்கம் கவனம் திரும்பாது.
அடிப்பதற்கு
ஆக்ரோஷமாக முழங்குவதற்கு
அசிங்கசிங்கமாகத் திட்டுவதற்கு
அப்பிராணிகள் சிலபலரைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்.
அவர்கள்
ஆயிரங்காலத்திற்கு முன்னான புராண நாயகநாயகியராயிருந்தால் இன்னும் நல்லது.
அவர்கள் பேசாத வார்த்தைகளையெல்லாம் பொருள்பெயர்த்துச்சொல்ல வசதியாயிருக்கும்.
அவர்களைக் கடித்துக்குதறி காலால் எட்டியுதைத்து
காறித்துப்பித்துப்பி நம்மை நலிந்தவர் நாயகர்களாகக் காட்டிக்கொள்வது சுலபம்.
வாயற்றவர்களின் வாயாக நம்மை நிலைநாட்டிக்கொண்டுவிட்டால் பின்
வக்கிரமாக விஷமத்தனமாக வண்டைவண்டையாக என்னவேண்டுமானாலும் பேசலாம்.
அலையலையாய் அழைப்பு வரும்
நிலையாய் பேர் புகழ் காசு புழங்கும்
உலைபொங்கமுடியாமல் அழுதுகொண்டிருப்போருக்கான உங்கள் முழக்கத்திற்குக் காத்திருக்கும் உள்நாட்டு வெளிநாட்டு அரங்குகள்.
சிரங்கும் சொறியும் சேத்துப்புண்ணும் சீதபேதியும்
நிரந்தரமாகிவிட்ட மக்கட்பிரிவினருக்காகப் பேசிப்பேசியே
விருந்துகளில் குறைந்தபட்சம்அறுபது உணவுவகைகளை
இருபது உணவுமேடைகளில் ருசித்துச் சாப்பிடலாம்.
கைகழுவப் போகும் வழுவழு வாஷ்பேஸினின் மேற்புறம்
பிரம்மாண்ட ஓவியத்தில் யாருடைய கண்களேனும் நெருப்பைக் கக்கிக்கொண்டிருக்கட்டும்.
அல்லது, குறைந்தபட்சம் கருத்தைக் கவரும் முத்திரை வாசகம் ஒன்று தீப்பொறிகள் பறக்கத் தரப்பட்டிருக்கட்டும்.
காகிதத்தீ கருக்கிவிடாது எதையும் என்ற அரிச்சுவடியை அறிந்துவைத்திருந்தால் போதும்.
ஆம், அதுவே போதும்.

எமோஜிக்களின் உரையாடல் - 50

 எமோஜிக்களின் உரையாடல் - 50

இப்போதுதான் தமிழகத்தில் புதிய முதலமைச்சரும் அவருடைய அமைச்சர்கள் சிலரும் பதவியேற்றுள்ளனர். அதற்குள் இந்த சாதியைச் சேர்ந்தவர் கள் இடம்பெறவில் லையே, அந்த சாதி யைச் சேர்ந்தவர்கள் இடம்பெற வில்லையே என்று குறை சொல்ல ஆரம்பித்துவிட்டார் கள் அறிவுசாலிகளில் சிலபேர். வருத்த மாயிருக்கிறது.

நானும் அதையெல்லாம் படிச்சேன். உண்மையிலேயே வருத்த மாயிருக்கு. சாதிப்பிரிவினைகளைப் பகடைக் காயாக்கிய அரசியல்கட்சிகள் மக்கள்நலனைப் பணயம் வைத்து சூதாடிக் கொண்டிருக்கின்றன. சுய சாதிக்கார சட்ட சபை உறுப்பினர்கள் அப்படி எல்லா சுயசாதி மக்களுக் கும் நல்லது செய்கிறார்களா என்ன ? நேர்மை, கடமை யுணர்வு, திறமை, பாரபட்சமற்ற அணுகு முறை மக்கள் நலனில் ஆர்வமும் அக்கறையும் - இதெல்லாம் மக்கள் பிரதிநிதிகளிடம் இருப்பதல்லவா முக்கியம்........

எமோஜிக்களின் உரையாடல் - ATTENTION AND ALL THE BEST!



அட்டென்ஷன்! தொண்டர்களே! தலைவர்களே! ஆதரவாளர்களே! அருமை வாக்காளப் பெருமக்களே! இன்று நீங்கள் செயல்களத் திற்குச் சொல்லப்போகிறீர் கள். நல்வாழ்த்துகள். உங்களிடம் நான் சொல்வதெல்லாம் இதுதான்.


யெஸ் ஸார்?

நீங்கள் தேர்ந்தெடுத்த அரசு நிலைத்திருப்பதில் உங்கள் ஒவ்வொருவருக்கும் பொறுப்பு இருக்கிறது. உங்களு டைய சின்னத் தவறும் உன்னிப்பாக கவனிக்கப்படும். எச்சரிக்கை யாயிருங்கள். உங்களுடைய பணி தன்னல நோக்கங்கள் கொண்ட தாக இருக்கலாகாது. மக்கள் நலனுக்காகவே பணியாற்ற வேண்டும். அவர்கள் வாழ்வை, வாழ்வுரிமைகளைப் பேணிப் பாதுகாக்கவேண்டும். மேலும் -

யெஸ் ஸார்

மக்களுக்குப் பணியாற்றவே நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக் கிறீர்கள். அது உங்கள் கடமை. அதற்காக உங்களை நீங்களே பாராட்டிக்கொள்ளலாகாது.

யெஸ் ஸார்.

ஆல் தி பெஸ்ட்

 

எமோஜிக்களின் உரையாடல் (*அரசியல் களம்) .............................................

 எமோஜிக்களின் உரையாடல்

(*அரசியல் களம்)

.............................................

ஆட்சிக்கு வரப்போகும் கட்சியின் தொண்டர்கள் கேலியா சுத்தி சுத்தி வந்து விசிலடிச்சாங்க ளாமே - இனி எல்லாமே நாசம் தான்னு ரொம்ப வருத்தப்பட்டிருக் காரே ஆட்சியிலிருக்கும் கட்சியின் முக்கியப் பிரமுகர் ?

யார் இந்தமாதிரி கேலி செய்தாலும் அது கண்டிக் கத் தக்கது. அதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், மதச் சார்பற்ற கட்சி என்று சொல்லிக் கொள்ளும் கட்சியைச் சேர்ந்த இவர், மதச்சார் பின்மையை முன்வைக்கும் அரசியல் சாஸனத் தின் மேல் உறுதிமொழியெடுத்து பதவிக்கு வந்தவர் விஸிலடிப்பதை விட மோசமாக பாரதப்பிரதமரை, இந்துமதத்தை எப்படியெல் லாம் தன் பதிவுகளில் இழிவுபடுத்தியிருக்கிறார் என்பதையும் எண்ணிப்பார்க்காமலிருக்க முடிய வில்லை......

பொம்மிக்குட்டியின் கதை! ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 பொம்மிக்குட்டியின் கதை!

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

[I]
தலையாட்டி பொம்மைகளை யாருக்குத் தான் பிடிக்காது?
அதுவும், சின்னக்கண்ணனின் பொம்மை அத்தனை கலைவண்ண கைநேர்த்தியோடு
கிடைக்கோடாய் அசைவதைத் தவிர்த்து
மேலுங்கீழுமாய் மட்டும் முகம் ஆட்டிக் காட்டும்!
எதைச் சொன்னாலும் கண்சிமிட்டிப் புன்சிரிக்கும்.
கைகால் இயக்கங்களெல்லாம் குழந்தைக் கண்ணனின் மனம் போன போக்கில்;
அல்லாது தலையாட்டி பொம்மைக்கு
ஏது தனிப்பட்ட இயக்கம்...?
குறும்புச் சிறுவனின் கைகளிலும், மடியிலும்
தயக்கமில்லாமல் பொருந்தியமர்ந்திருக்கும்.
தனக்குப் பிடித்தமான பெயரை தலையாட்டி பொம்மைக்குத் தந்து
அதைத் திரும்பத் திரும்பக் கூவியழைத்துக்
குதூகலிக்கும் குழந்தை...
"பொம்மிக்குட்டீ வா.. வா.. பூ பூவாய் முத்தம் தா..."
பஞ்சுப்பொதியாய் பொம்மையின் உடல்.
பிஞ்சுக் கைகள் மென்மையாய் வருடித் தரும்.
துஞ்சும் நேரமெல்லாம் பொம்மிக்குட்டியைத்
தன்னருகே பத்திரப்படுத்திக் கொள்வான் சின்னக் கண்ணன்.
ஆனா- ஆவன்னா, A B C, 1 2 3...
அவனுக்குத் தெரிந்ததெல்லாமும்
சொல்லித் தரப்படும் பொம்மிக்குட்டிக்கும்.
II
பள்ளிக்குப் போய் வந்து கொண்டிருந்த
சின்னக்கண்ணன்
கூடப் படிப்பவர்களைப் பற்றியெல்லாம் தினமும்
வீடு திரும்பிய பிறகு
வண்டிவண்டியாய் பொம்மிக்குட்டிக்குக் தவறாமல் கதை சொல்வான்.
கண்கொட்டாமல் கேட்டுக் கொண்டிருக்கும் பொம்மிக்குட்டி.
அடிக்கொரு தரம் தலையை ஆட்டும் - மேலுங்கீழுமாய்.
"அச்சுதன் அடித்தான், அவனைத் திருப்பியடித்தேன் - சரிதானே?"
"ஆம், ஆம்". ஆனால்...
"முகுந்தன் என்னுடைய பென்சிலை உடைத்துவிட்டான் என்பதால்
அவனை நையப் புடைத்து விட்டேன்" என்று சின்னக் கண்ணன்
சொன்னபோது
செய்த குற்றத்திற்கு தண்டனை அதிகம் என்றுதோன்றியது
பொம்மிக்குட்டிக்கு. சற்றே தயக்கமாய்
தலையை ஆம் - இல்லையாய் ஆட்டியது பொம்மை.
உயிருள்ளது பொம்மை என்று நம்பும் சிறுவன் கொஞ்சம்போல்
திகைத்துச் சினந்தான்.
தகப்பன்சாமி தான் என்றாலும்
"எனக்குப் பிடிக்கவில்லை என்பதற்காய் தருணுடைய கையைக்
கடித்துக் குதறி விட்டேன், கத்தியாலும் வெட்டி விட்டேன்"
என்று பெருமைபீற்றிக்கொண்டபோது
பொம்மிக்குட்டியின் தலை தவிர்க்கமுடியாமல் இடவலமாய்
ஆட ஆரம்பித்ததைக் கண்டு
மட்டுமீறிப் புகைந்த கோபத்தில் சிறுவனின் கரம்
பொம்மிக்குட்டியின் சிகையைக் கொத்தாய்ப் பிடித்து
கதவிற்கு அப்பால் வீசியெறிந்தது.
'பதிலுக்கு புதிய பொம்மைகள்
காசு கொடுத்தால் கிடைத்துவிட்டுப் போகிறது...
அதுவும், ஓசியில் கிடைத்ததுதான் பொம்மிக்குட்டி.
போதாக்குறைக்கு, நிறைய நைந்துபோய் விட்டது.
ஆய் பொம்மை; பீத்த பொம்மி..'
III
காரிருள் கவிய விழுந்தது விழுந்தவாறு
கிடந்தது பொம்மிக்குட்டி.
முதுகெலும்பு முறிந்ததுபோல் ஒரு சுளீர் வலி படர
உயிர்ப்பின் அடையாளம் பொம்மைதானோ வென
தனக்கெட்டிய பட்டறிவில் படித்துக் கொண்ட
விடையே கேள்வியாக அனத்திக் கொண்டிருந்தது நெடுநேரம்.
பின், கனவே போல் காற்றுத் தடத்தில் கிளம்பிச் சென்று
கதவிடுக்கில் மனம்நுழைத்துப் பார்த்தது.
பரிச்சயமான அறை.
பழகிய சின்னக்கண்ணன் வழக்கம்போல்
கைகொட்டிச் சிரித்தவாறு கட்டளையிட்டுக் கொண்டிருக்க,
எதிரே
சாவிகொடுத்தால் ஓடும் பொம்மை_
சல்யூட் அடிக்கும் பொம்மை_
சிரியென்றால் சிரிக்கும் பொம்மை_
சீறிபாயச் சொல்லி தள்ளிவிட்டால்
சரவென்று நெளிந்தோடும் நாகப்பாம்பு பொம்மை_
குத்தினாலும், எத்தினாலும் சத்தமெழுப்பாமல்
சிறுவனின் வீரசாகச் செயல் என்பதாய்
பெருமையில் பூரிக்கும் கைதட்டி பொம்மை_
'வெல்கம்' பொம்மை,ரிம்-ஜிம் நாட்டிய பொம்மை_
பெருந்தனக்காரர் பரிசளித்த பொம்மை_
பல வருடங்களுக்குப் பிறகு சாவகாசமாய் ஊரைப்
பார்க்கத் திரும்பி வந்திருக்கும் உறவொன்று
வாங்கிவந்த பொம்மை_
விரல்சொடுக்கிற்கேற்ப விரைந்தோடி
சுவற்றில் முட்டி நிற்கும் பொம்மை_
அலங்கார பொம்மைகள்,அவதார பொம்மைகள்_
வைக்கோல் பொம்மைகள், வெண்கல பொம்மைகள்_
பைக்குள் போட்டுக் கொள்ளுவதற்கேற்ற சிறிய பொம்மைகள்_
பூதாகார கரடி பொம்மைகள்...
அறையில் ஒரே நெரிசலாயிருந்தது.
IV
பிடிக்கவில்லை யென்று கடித்துத் துப்பியிருந்த பொம்மை
பரணிலிருந்து கீழே இறங்கி வந்திருந்தது.
பல ஆண்டுகளுக்கு முன் இன்னொரு குழந்தையின்
கைக்குப் போய்ச் சேர்ந்துவிட்ட பொம்மையும்
அருகமர்ந்து கொண்டிருந்தது.
கிழிந்த பொம்மைகள் சிலவற்றிற்கு
ஆயத்தஆடைகள் அணிவித்து
அழகுபார்த்துக் கொண்டிருந்தான் சின்னக்கண்ணன்.
சிறுவனின் கண்களே உதடுகளாய், வெளிப்பட்ட கூற்றுக்கு
மாற்று குறையாமல்
ஆடிக் கொண்டிருந்த தலைகள்
பொம்மைகளின் மேலும், கீழுமாய்.
காரியார்த்தமாய் வால்களைச் சுருட்டிக் கொண்டு
கூர்வளைநகங்களை செல்லப்பிராணிகளாய்
உள்ளிழுத்துக் கொண்ட வாக்கில்
அமர்ந்துகொண்டிருப்பவைகளைக்
காட்டும் அடையாளம் காலம்
எனப் பின்னேகி
பஞ்சுப் பிரிகளாய்
வெளியில் கலந்து திரியும்
பொம்மிக்குட்டியின் குரல் எட்டுமோ
உன்னை என்னை நம்மை...?
"நீயும் பொம்மை, நானும் பொம்மை,
நினைத்துப் பார்த்தால் எல்லாம் பொம்மை"
//2019, ஆ 9 - மீள்பதிவு//

விண்டவர் கண்டிலர் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 விண்டவர் கண்டிலர்

ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
தேடித்தேடி இளைக்கச்செய்து
அவளை ஹரி மோசம் செய்துவிட்டதாக
கரும்புள்ளி செம்புள்ளி குத்த
காலந்தோறும் பரபரத்துக்கொண்டிருப்போருக்கு
சூடிக்கொடுத்த சுடர்க்கொடி யொரு பேதை;
காதலனால் வஞ்சிக்கப்பட்டவள்;
கண்ணீர்பெருக அவனை நினைத்துப்
பாடல்கள் எழுதியெழுதி இளைத்தவள்;
இன்(ல்)வாழ்க்கையைத் தொலைத்தவள்…..
நாச்சியார் திருமொழி பாய்ச்சும் அன்பெல்லாம்
விழலுக்கு இறைத்த நீராகிவிட்டதாய்
இறுதித்தீர்ப்பு எழுதி
கழுமேடைக்கு ஹரியெனும் காற்றை
கரகரவென்று இழுத்துச்செல்லப் பார்ப்பவர்களின்
விசாரணை வளையத்திற்கு அப்பாலானது
காற்றைக் காதலனாக அடைந்தே தீருவது என்ற
அவளின்
அசாதாரண ஊற்றனைய போதமும்
பிறவிப்பெரும் பேறாய்
காற்றோடு அவள் ஆனந்தமாய் அலைந்துதிரிந்த
அரிதரிதாம் காதமும்
உருவறு விசுவரூபக் காற்று
அவளைச் சரண் புகுந்ததும்
அதுகாலை கேட்ட சுநாதமும்
மீதமும்.

க்ருஷ்ணார்ப்பணம் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 க்ருஷ்ணார்ப்பணம்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

அவரிவருடைய கண்ணீரின் அர்த்தங்களை யெல்லாம்
தன் கண்ணீருக்கானதாக முன்வைத்துக் கொண்டிருப்போரிடம்
மென்சிரிப்போடு ஒன்றை மட்டுமே
திரும்பத்திரும்பக் கூறிக்கொண்டிருக்கிறாள் ஆண்டாள்:
”என் ஒரேயொரு கண்ணீர்த்துளியைத் தருகிறேன் –
திரியாமல் முறியாமல் திறந்து
உள்ளேயிருக்கும் உணர்வின் உணர்வை
உள்ளது உள்ளபடி
கையிலேந்திக் கொண்டுவரமுடியுமா பாருங்கள்.”
அவளறிவாள் _
அதன் வட்டம் நம் உள்ளங்கைகளில் அடங்காது.
அதன் குளிர்ச்சி சுட்டெரிக்கும்.
அதனுள்ளே தெரியும் வானவிற்கள் நம் பார்வைக்குக்
காணாதொழியும் வாய்ப்புகளே அதிகம்.
அந்த ஒற்றைக் கண்ணீர்த்துளிக்குள்
புல்லாங்குழல் உண்டு;
பிரிய குசேலர் உண்டு;
உரலில் கட்டிவைக்கப்பட்டிருக்கும்
குறும்புக் குழந்தையின் குட்டி வாய்க்குள்ளான
அகில உருண்டை உண்டு.....
ஒரு கணம் யுகமாகவும்
ஒரு யுகம் கண்ணிமைப்போதாகவும்
அந்தக் கண்ணீர்த்துளிக்குள் இயங்கும்
காலம் வேறு;
காலக்கணக்கு வேறு;
காலப்பிரக்ஞை வேறு.
வேண்டாத வேலை யிது -துண்டுபோட்டுத் தாண்டாத குறையாய் அவள் காதலைத் தோற்றதாக்குவது.
மாண்டாலும் மாறாதது ஆண்டாளின் அன்பு.
தீக்குள் விரலை வைத்தால்
நந்தலாலாவைத் தீண்டும் இன்பம் தோன்றுவது
எத்தகைய திருக்கனவு!
ஒருவகையில் உலகையே புரட்டிப்போடுவது!
விரலும் தீயும் இன்பமும் தோன்றலும் நந்தலாலாவும்
ஒருங்கிணைந்திருக்குமிந்த
ஒற்றைக் கண்ணீர்த்துளி
நேற்று பாடினாலும் நாளை பாடினாலும்
வரிகளை மீறிப்பரவும்
காற்றின் வருடல்;
குரலற்ற விளி;
பொருள் மீறிய பிரபஞ்சவெளி...
//2020, மே 12 - மீள்பதிவு//