LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Tuesday, August 15, 2023

கல்விக்கூடங்களும் சாதிப்பாகுபாடுகளும் லதா ராமகிருஷ்ணன்

 அரசியல் சமூகம்

கல்விக்கூடங்களும் சாதிப்பாகுபாடுகளும்


[*13.8.2023 தேதியிட்ட  இணைய இதழில் வெளியாகியுள்ளது]


11.8.2023 அன்று படித்த செய்தி இது. 


திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த வள்ளியூரில் அரசு – உதவி பெறும் அரசு உதவி பெறும் பள்ளியொன் றில் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த +2 பள்ளி மாணவரை அவருடைய சக மாணவர்கள் – அந்தப் பகுதியில் மேலாதிக்கம் பெற்று விளங்கும் இடைச் சாதியை சேர்ந்தவர்கள் மதிப்பழித்து நடத்தியதால் பள்ளி செல்லாமல் இருந்திருக்கிறார் அந்த மாணவர். பள்ளி ஆசிரியர் ஏன் வரவில்லை என்று கேட்க விஷயத்தைச் சொல்லியிருக்கிறார். தலைமையாசிரியர் அந்த மூன்று மாணவர்களையும் அழைத்து கண்டித்திருக் கிறார். 

ஆத்திரமடைந்த அந்த மாணவர்கள் தங்களைப் பற்றிப் புகார் தந்த மாணவர் வீட்டுக்குச் என்று அவரைக் கத்தியால் சரமாரியாகக் குத்தியிருக்கிறார்கள். தடுக்க வந்த தங்கையையும் குத்தியிருக் கிறார்கள். இருவரும் இப்போது மருத்துவமனையில். இந்த அவல நிகழ்வைத் தொடர்ந்து நடந்த போராட்டத் தில் பாதிக்கப்பட்ட மாணவனின் தாத்தா மயங்கி விழுந்து இறந்துபோயிருக் கிறார். மாணவரும் அவருடைய தங்கையும் கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில்.

சாதீயக் கொடுமை நடக்கும் இடங்களாக கல்விக்கூடங்களும் இருக்கின்றன.

உடனே ‘மநு’ என்று பழித்து, அல்லது சம்பந்தப்பட்ட கொடூர மாணவர்கள் சார்ந்த சாதியை ஒட்டுமொத்த மாகப் பழித்துப் பேசி முடித்து விடுவது மிகவும் சுலபம். 

ஆனால், இப்படியொரு கொடுமை இன்றும் நடப்பதற்கான காரணங்களை அகல் விரிவாக ஆராயவேண்டிய தேவையிருக்கிறது. 

அரசியல்கட்சிகள் தத்தமது ஆதரவாளர்களிடம் சாதியொழிப்பு குறித்துப் பேச வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவரின் சாதி சார்ந்த கட்சிகள் மட்டுமே இத்தகைய அவல நிகழ்வுகள் நடக்கும் இடங்களுக்குச் செல்வது என்றில்லாமல் எல்லாக் கட்சிகளும், மக்கள் நல அமைப்புகளும் அங்கே சென்று மக்களோடு பேச வேண்டும். 

வாக்குகள் போய்விடக்கூடும் என்ற எண்ணமில்லாமல் தவறு செய்யும் சாதிகளைத் தட்டிக் கேட்கவேண்டும். அவர்களோடு பேசவேண்டும். 

ஆன்மிகவாதிகள், தத்துவவாதிகள், அறிஞர்கள் என பலரும் மதம் சார்ந்த ஒற்றுமை, நல்லிணக்கம், சமத் துவம் போன்ற கருத்துகளை எடுத்துரைக்க வேண்டும். 

இதில் தன்னை முன்னிலைப்படுத்தும் நோக்கமோ, வெறுப்பை விதைக்கும் நோக்கமோ இருக்கலாகாது. 

இன்று ஊடகங்கள் மிகவும் பெருகிவிட்ட நிலை. இளம் உள்ளங்களில் அதிகார ஆசை பலவிதமாகக் கட்டமைக் கப்படுகிறது. சின்னத்திரை, பெரிய திரை களிலெல்லாம் ‘ராகிங்’ என்பதும், வன்மமான பேச்சு, ஏசல் என்பதும், வீரபராக்கிரமம் என்ற பெயரில் கொடூரமான அடிதடி களும் வெகு இயல்பாக இடம்பெறுகின்றன. இவற்றை யெல்லாம் கண்காணிப்பதும், கட்டுப்படுத்து வதும் அவசியம்.

கல்விக்கூடங்களில் உள்ள வளரிளம்பருவ மாணாக்கர் களின் மனப்போக்கு கள், செயல்பாடுகளைத் தொடர்ந்த ரீதியில் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டி யது அவசியம். அப்படிச்செய்வதன் மூலம் வன்முறையைக் கையிலெடுத்து சக மாணவர்களை அச்சுறுத்தும், அடி பணிய வைக்கும் மாணவர்களை அடையாளங்கண்டு அவர்களுக்கு உரிய ஆலோசனைகள் தர முடியும். 

மாணாக்கர்களுக்கு உளவியல் மருத்துவம் அவர்களு டைய உடல்நலன், நலவாழ்வு சார் மருத்துவ ஆலோச னைகள், சிகிச்சைகளின் ஓர் அங்கமாக கிடைக்க வழி செய்யப்பட வேண்டும். மனநல மருத்துவத்தைப் பொருட் படுத்தாத, புறமொதுக்கும் மனோநிலை மாறவேண்டும்.

ஒரு கொடூர நிகழ்வு நடந்தபிறகுதான் கவனத்தை மாணவர் பக்கம் திருப்பு வோம் என்றிருப்பது சரியல்ல. 

ராகிங் குறித்தும், சாதியின் பெயரால் மாணவர்கள் மதிப்பழிக்கப்படுவது குறித்தும், அவற்றைக் கையாள வேண்டிய வழிமுறைகள் குறித்தும் அந்தத் துறை சார்ந்த அதிகாரிகளுக்கும், கல்விக் கூடங்களுக்கும், நிர்வாகி களுக்கும், ஆசிரியப் பெருமக்க ளுக்கும், மாணாக்கர் களுக்கும் உரிய ஆலோசனைகளும் வழி காட்டி விதிமுறைகளும் தொடர்ந்த ரீதியில் தரப்பட வேண்டியது இன்றியமையாதது.


C:\Users\computer\Desktop\364182566_2103033286708931_6854264369044201487_n (1).jpg

நான் முழு நேர வேலைக்குப் போய்க்கொண்டிருந்த சமயத் தில் – 1977 முதல் 2005 – அரசு அலுவலகங்களில் தொழிற் சங்கங்கள் வலிமையோடு இருந்தன. 

அவை பிரதானமாக கம்யூனிஸ்டுகள் கையில் இருந்தன. வர்க்கம் சார்ந்து சாதி கடந்து தொழிலாளர்கள் ஒருங்கி ணைந்திருந்தனர். 

அப்போதே வர்க்கத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து சாதிய ஏற்றத்தாழ்வு களைக் கணக்கிலெடுக்காமலிருந்துவிடலாகாது என்ற கருத்தும் இருந்தது. 

இரண்டு கம்யூனிஸ்டுப் பிரிவுகளுக்கிடையே கூட அதிகார ரீதியாக நட்புறவைக் காட்டிலும் போட்டிமனப் பான்மையே அதிகமாக இருந்தது. 

அரசியல்கட்சி சார்ந்த தொழிற்சங்கங்கள் அதிகமாக இல்லை யென்றாலும் அறவே இல்லையென்று சொல்லவியலாது. பிரதான தொழிற்சங்கங்களில் இடம்பெற்றிருந்த உறுப்பினர்கலெல்லாம் இடதுசாரிக் கட்சியினர் என்று சொல்லிவிட இயலாது. தலைவர்கள் இடதுசாரிக் கட்சிகளைச் சேர்ந்தவர்க ளாக இருந்தார்கள்.

ஒருமுறை தொழிலாளர்களிடையே உரையாற்றிக் கொண்டிருந்த தலைவ ரொருவர் காங்கிரஸ் கட்சியைத் திட்டிக்கொண்டே போக உறுப்பினர்களிலிருந்த காங்கிரஸ் அபிமானி ஒருவர் மறுப்புத் தெரிவித்து எதிர்ப்புக்குரல் எழுப்பினார். இதை எதிர்பார்க்காத அந்தத் தலைவர் திடுக்கிட்டுப் போனாலும் நொடியில் சமாளித்துக்கொண்டு பேச்சை மடை மாற்றினார்.

இன்று வர்க்கஞ்சார்ந்த ஏற்றத்தாழ்வு குறித்த பிரக்ஞையைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு சாதிரீதியான வேறுபாடுகள் முன்னிலைப்படுத்தப்படுகின்றன என்று தோன்றுகிறது. 

இதில் உள்ள முக்கியக் குறைபாடாக நான் கருதுவது – ஒரே சாதி யில் வர்க்க ரீதியாக நிலவும் ஏற்றத்தாழ்வு களை நாம் கணக்கிலெடுக்காமலிருந்து விடுவது. 

இதனால் சில சாதிகளில் பொருளாதாரரீதியாய் வளர்ந்து முன்னேறியிருப் பவர்கள், அவ்வகையில் தமது சாதி களுக்குள்ளே அதிகாரபீடங்களாயிருப் பவர்கள், சாதிரீதி யாய் தங்களை ஒடுக்கப்படுபவர்க ளாகக் காட்டி அதன் மூலம் ஒரு சாதிக்குள் வர்க்கரீதியாய் நிலவும் ‘அதிகார நுண்பரிமாணங் களை’ சுலபமாக மறைத்து விடுவது. சுலபமாய் தங்களை வளமாக்கிக் கொண்டுவிடுவது.

சாதி – வர்க்கம் (CASTE – CLASS) ஆகிய இரண்டும் குறிப் பான அளவு வேறு வேறாக இருந்தாலும் அவை இரண்ட றக் கலக்கும் இடங்களும் கணிசமாகவே இருக்கின்றன. 

சமீபத்தில் வெளியாகிய திரைப்படம் மாமன்னனின் மையக் கரு “அப்பா, உட்காருப்பா” என்று திரும்பத் திரும்பச் சொல்லும் மகனின் குரலும் அதன் வலியும் என்று ஒருவர் எழுதி யிருந்தார். சாதி ரீதியாக இப்படி உயர்வு தாழ்வு பார்க்கப்படுகிறது என்ற உண்மையோடு கூட, வர்க்க ரீதியாகவும் இது நிகழ்கிறது என்பதையும் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ளவேண்டியது அவசியம்.

எடுத்துக்காட்டாக, எங்கள் அலுவலகத்தில் உயர் அதிகாரி என்பவர் தனக்குக் கீழேயுள்ள அலுவலரை எதிரே நிற்க வைத்துக்கொண்டேதான் பேசுவாரே தவிர உட்காரச் சொல்லமாட்டார் – இருவருமே ஒரே சாதிக்காரராக இருந்தாலும்.

சாதிகள் ஒழிய கலப்புத்திருமணம் தான் ஒரே வழி என்ற கருத்தை சில அரசியல் தலைவர்கள் முன்வைக்கிறார் கள். இது ஒரு வழியே தவிர ஒரே வழியல்ல. இதை அளவுக்கதிகமாக வலியுறுத்தும்போது அவரவர் சாதிப் பெண்களையும், ஆண்களையும் அவரவரே குறைத்து மதிப்பது போலவும், விலக்கிவைப்பது போலவும் அவ்வச் சாதியைச் சேர்ந்த எதிர்பாலினர் எண்ணுவதற்கும் வழி வகுப்பதாகிவிடுமோ என்று தோன்றுகிறது. 

காதல் என்று வரும்போது மிக இளம் வயதில் இருவர் காதல் வயப்பட்டால் அதற்கு பெற்றோர்கள் சுலபமாகப் பச்சைக்கொடி காட்டிவிட வேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியல்ல. ஒரே சாதியிலான காதலுக்குப் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும்போது அதை பெற்றோரின் அக்கறை அல்லது அதிகாரம் என்ப தாக மட்டுமே பார்க்கப்படுவது, வேறு வேறு சாதிகளைச் சேர்ந்த இருவரின் காதல் பெற்றோர்களால் எதிர்க்கப்படும்போது சாதிவெறியாகப் பகுக்கப்படு வதும் நடைமுறையாக உள்ளது.

எங்கு சாதிய ரீதியான மோதல்கள் நடந்தாலும் அங்கே போய் சம்பந்தப்பட்ட இருதரப்பு மக்களோடும், மோதல் போக்கைக் கையாளாமல், இணக்கமாகப் பேசி மனிதர் கள் சாதிமதபேதமற்ற சக உயிர்கள் என்று புரியவைக்க ஏன் எந்த அரசியல் தலைவர்களுமே சம்பந்தப்பட்ட இடங்களுக்குச் செல்வதில்லை?

ஏட்டுச்சுரைக்காயாக இல்லாத, சுய மரியாதையையும், தன்னம்பிக்கை யையும் வளர்க்கும், வாழ்க்கைக்கான கல்வி, சாதிப்பிரிவுகளையும், பிளவுகளையும் தங்கள் அதிகார வளர்ச்சிக்கான துருப்புச்சீட்டுகளாக பாவிக்காத, எளிமைக்கும் நேர்மைக்கும் முன்மாதிரியாக வாழ்ந்து காட்டும் மக்கள்தலைவர்கள் இன்றைக்கான, என்றைக்குமான இன்றியமையாத் தேவை.

No comments:

Post a Comment