LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Friday, November 8, 2019

வள்ளுவர் வாய்மொழி – 5 ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)


வள்ளுவர் வாய்மொழி – 5

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)



(*முன் குறிப்பு)

இன்றிருப்பின் யான் எழுதியிருக்கலாகும்
பின்வரும் அதிகாரத்தை.

பத்திருந்த இடத்தில் பதினொன்று; என்றும்
உத்தரவாதமில்லை யெதுவும்.

ஒன்று பலவாகப் பொருள்படு மொன்றுக்கு
நன்றாமோ ஒன்றுணர்த்தும் தலைப்பு?

பதிலாகலாம் கேள்வியே சிலநேர மென்றபோதும்
அதுவேயாகலாகா தெப்போதும்.
________________________________________________

1

கவிதை யாத்தல் காற்பந்தாட்டமா? உணர்வுகளை
உதைத்துருட்டித் தள்ளுகிறார் சிலர்.


2

கவிதை உன்னிலிருந்து வந்தாலும் உன்னுடையதல்ல என்பார்;
எனதல்லவென்றாலும் என்னிலிருந்தே வந்ததென் பேன்.


3

இக்கவிதை கடலல்ல; வெறும் கடற்கரை யென்றார்’ –
அக்கக்கோ பறவை அதுபாட்டுக்குச் சென்றது.


4

இக்கிணியூண்டு கவிதையையும் படிக்காமலே அதைப்பற்றி
பக்கம்பக்கமா யெழுதுவார் உக்கிரமாய்.


5

பரிசளிப்பார் தகுதியைப் பொறுத்ததே யாகுமாம்
பெறுவார் தகுதியும்.


6

உரிய காலத்தே யவரை அங்கீகரிக்காமல் பயனென்கொல்
அரிய உயிர் பிரியும்போ தளித்தல்.


7

ஹாம்லெட்டும் ஆம்லட்டும் ஒலிக்கும் ஒருபோல வெனில்
நாமறிவோம்() வெவ்வேறென.


 8

அருமையா யொரு கவிதை உருவாகப் பெறு மின்பம்
அறுநூறுகோடிக்குச் சமமாம்!


9

அறுநூறு கோடியல்லகோடிகள்என்பார்
சிறிதும தன் பெறுமதி யறியார்.


10

உறுமீனாகுமாம் கவிதை ஓடுமீ னோட
வருமளவு வாடியிருக்கும் வாசிப்போருக்கு.


11

நிழலின் அருமை வெய்யிலில் புரியும்;
மொழியின் அருமை கவிதையில்.


No comments:

Post a Comment