LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Thursday, April 24, 2025

மலையின் உயரம் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

மலையின் உயரம்

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)

*2016 இல் எழுதிய கவிதைகள் என்று நினைக்கிறேன். நான் மிகவும் மதிக்கும் கவிஞரை யாரோ கொச்சையாக மதிப்பழித்துக் கருத்துரைத்திருந்தற்காக வருந்தி அந்தத் தாக்கத்தில் எழுதிய கவிதைகள் என்று நினைக்கிறேன். எல்லா நேரங்களிலும் எல்லோருடைய நியாயமற்ற எதிர்வினைகளுக்கும் எதிர்வினைகள் புரிந்துகொண்டே யிருக்க முடிவதில்லை. அவர்களுக்கு நம்முடைய எதிர் வினைகள் நியாயமற்ற வையாகத் தோன்றக்கூடும். எனவே, இம்மாதிரி சமயங்களில் கவிதையெழுதுவதே வடிகாலாய்; வலிநிவாரணமாய்.

....................................................................................................................................................................................................

(1)
ஒருபோதும் மலைகளாக முடியாதவர்கள்,
மலைமேல் ஏறக்கூட முடியாதவர்கள்
மலையின் அடிவாரத்தில் நின்று அண்ணாந்துபார்த்தாலே
மளுக்கென்று கழுத்து சுளுக்கிக்கொள்கிறவர்கள்
மலையிலிருந்து உருளும் ஒரு கல்லைக் காட்டி
மலை மாபாதகம் செய்துவிட்டதாக
மண்ணை வாரித்தூற்றுகிறார்கள்;
காலமெல்லாம் கையில் கற்களோடு
சுற்றிக்கொண்டிருப்பவர்கள்
பாவனைக் கண்ணீர் பெருக்கிக்
கருணைக்கடலாகிவிடுகிறார்கள்.
கனியிருப்பக் காய் கவரலாமோ என்ற குறட்பாவை
மேற்கோள் காட்டி கையோடு
தனித்துவமான தமது வசைபாடலை
ஒலிக்கச்செய்கிறார் கோரஸ்களோடு.
‘கலி முத்திப் போச்சு’ என்பதாய் கவனமாய்
நவீன தமிழில் கருத்துரைத்து
எலிப்பிள்ளை என்றுரைப்பார் கிளிப்பிள்ளையாய்
வலிய சிங்கத்தை.
எத்திசையிலும் அலைபாய்ந்திருக்குமவர் கண்கள்
பித்தளையாகக் காட்டி ஒரு ஒப்புநோக்கலில்
தன்னைப் பத்தரைமாற்றுத் தங்கமாகப் பறைசாற்ற
எங்கேனுமிருப்பாரோ இளிச்சவாயர்கள்
என்று கண்காணித்தபடி.
ஒருவரிடம் காரியம் ஆகவேண்டியிருந்தால்
அவரை ஆதரிப்பார்;
இன்னொருவரிடம் இன்னொரு காரியம் ஆகவேண்டியிருந்தால்
அவரையும் ஆதரிப்பார்.
பாரபட்சமே நீதிநெறியாக
கையில் எப்போதுமிருக்கும் துலாக்கோல்
தட்டின் அடியில் ஒட்டிய புளியோடு.
எவரைப் பரிச்சயப்படுத்திக்கொண்டால் என்ன ஆதாயம்
என்ற மனக்கணக்கில்,
மருந்துக்கும் புத்தகங்களைத் தொடாமலேயே
சேருமிடம் சென்று வென்று கொன்று மென்று
பாஸ்மார்க், முதல் வகுப்பில் தேர்ச்சி, டிஸ்டிங்ஷன்
தங்கப்பதக்கம் என்று படிதாவிப்படிதாவிச்
செல்பவர்களுக்குத்தான்
குறிப்பாக மலையைக் கண்டால் வெறுப்போ வெறுப்பு.
’தட்டாமாலை தாமரப்பூ சுத்திச்சுத்தி வந்தாராம்’ என்ற
குழந்தைக்குதூகலமாய்
”விளையாட வாயேன்” என்று வெள்ளந்தி பாவனையில்
மலையை அழைப்பார்;
தலையைத் தழைத்தால் முகடு வெட்ட வாகாய்
வெட்டரிவாளை ஒளித்துக்கொண்டு.
இறங்கிவர மறுக்கும் மலையைப்
பெருமுதலாளி என்று பழிப்பார் _
இருபத்தியிரண்டு செல்லப்பிராணிகள் வைத்திருப்பார்.
இன்னும் என்னென்ன ரகங்கள் இங்கே என்றெண்ணி
புன்னகை பூக்கிறது
இயல்பே உயரமான மலை.
உயரேயிருந்து பார்க்க எல்லாம் தெரியும் மலைக்கு.
மலையை மடுவாக்கும் கனவைக்கூட
நாம் கண்டுவிட இயலாது.
முன்னே நின்று நீ உறுமுவதெல்லாம்
முனகல் மட்டுமே மலைக்கு;
முட்டிமோதினாலோ சேதாரம் உன் தலைக்கு.


(2)

எது உன் உயரம்?
குட்டையாய் இருப்பதாய் மற்றவர்களை மட்டம்தட்டிக்கொண்டேயிருப்பதா?
எது உன் உயரம்?
அன்றொருநாள் அன்பின் மிகுதியால் கட்டிப்பிடித்து முத்தமிட்டவளை
ஆசைதீரத் தொட்டுத்தீண்டிவிட்ட பின்
தட்டுக்கெட்டவள் என்று நட்பினரிடமெல்லாம் சொல்லித் திரிவதா?
எது உன் உயரம்?
விட்டுவிடுதலையாகி நிற்கும் சிட்டுக்குருவியின் சிறகு முறித்து
சிறுகூண்டிலடைத்துவிட்டு
தட்டுச்சோறு தந்து அதன் ரட்சகன் என்று மார்தட்டிக்கொள்வதா?
எது உன் உயரம்?
மொட்டைத்தலையைப் பார்த்து
எள்ளிநகையாடிவிட்டு
உன் வழுக்கை அழுக்கை மட்டும்
எண்ணிப்பார்க்க மறுப்பதா?
எது உன் உயரம்?
களர்நிலமாய்ப் பலரைச் சுட்டி
உளறுவாயர்களாய் பட்டம் கட்டி
வளர்பிறையாய் உன்னை மட்டும்
விரிவானில் கட்டங்கட்டிக் காட்டுவதா?
உன் அளவுகோல் அறிந்ததெல்லாம்
உன் உயரம் மட்டுமே.
அதன் ஒற்றைப்பரிமாணம் மட்டுமே.
தூல உயரமே தெரியாத நிலை;
சூக்கும உயரமோ காற்றணுவலை.
தலை-கால் உயரமும், கால்-தலை உயரமும் சரிசமமானதா?
வலைமீனின் கடலுயரம் கணநேரக் கனவா?
இலைப்பச்சயத்தின் உயரம் ஏறிப்பார்க்க முடியுமா?
பள்ளத்தாக்கின் உயரம் புரிய
உள்ளிறங்கிப் பார்க்கப் பழகவேண்டும்.
உள்ளபடியே,
மலையறியாது அதன் உயரம்.
...........................................................................................................
3. அவரவர் உயரம்
உயரத்தில் உங்களை உட்கார்த்தத் தயார்
உங்களுக்குத்தான் அதற்கான உத்வேகம் இல்லை
யென்பவரிடம்
உயரம் என்றால் என்ன என்று கேட்க
உன்மத்தம்பிடித்தவரைப் பார்ப்பதுபோல்
அரையடி பின்வாங்கி
உற்றுப்பார்க்கிறார்.
பின் பயம் நீங்கி பரிகாசம் பொங்க
’உருப்பட்டாற்போல்தான்’ என்றுகூறி
படபடவென்று கைதட்டிக் கெக்கலிப்பவரைப் பார்த்து
ஒன்றும் புரியாமல் நிலம்படர்ந்தபடி
அத்தனை இயல்பாய் நகர்ந்துகொண்டிருக்கின்றன
ஆகாயமும்
அந்திச் சூரியனும்.

ஊர்வலம் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 ஊர்வலம்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
இவர் ஆக்ராவில் இன்னும் பிரம்மாண்டமான தொரு தாஜ்மகாலைத் தன் படைப்புகளின் மூலம்
கட்டியெழுப்பும் திட்டத்தை அடுத்தடுத்த பதிவுகளில் தவணைகளில் வெளியிட்டுக்கொண்டிருந்தார்.
அவர் அண்டார்ட்டிகாவில் தன் எழுத்துக்கள் மூலம் வெய்யில் வரவழைக்க முடியுமா என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டிருப்பதாக
அத்தனை தீவிர முகபாவத்துடன் புகைப்படமொன்றைப் பதிவேற்றியிருந்தார்.
இருவரைச் சுற்றிலும் நிறைய நிறைய பேர்
தட்டத் தயாராய் கைகளை ஆயத்தநிலையில் வைத்துக் கொண்டிருந்தார்கள்.
தட்டாத கைகள் இருந்தென்ன புண்ணியம் என்று சன்னமாய்ப்
பின்னணியிசை ஒலித்துக்கொண்டிருந்தது.
யாருமற்ற சிற்றூரின் சிறுவீட்டின் அத்துவானக்காட்டில்
இருந்த இடம் இருந்தபடி இடதுகையால்
அருகே சிறுகோப்பையிலிருந்த வேர்க்கடலையை அவ்வப்போது வாயில் போட்டுக் கொறித்தபடி எழுதிக்கொண்டிருப்பவரின்
எழுத்துக்கள் இனிவரும் நாளொன்றில்
ஆக்ராவையும் அண்டார்ட்டிகாவையும் இவரிருக்கு மிங்கே கொண்டுவந்து சேர்க்கும் என்பதொரு
சிதம்பர ரகசியமாக….

சாபம் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 சாபம்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
சமத்துவக் கனல் பறக்கும் அவருடைய வரிகளைப் படிக்கும்போதெல்லாம்
அவரை யொரு மெய்யான சமூகவுணர்வாளரென்றே எண்ணியிருந்தேன்.
அன்றொரு நாள் அவருடைய கப்பலனைய வீட்டைப்பார்க்க நேர்ந்தது.
அதுபோலவர் மாநிலத்துக்கொரு மாளிகை வைத்திருப்பதாகத் தெரியவந்தது.
காலை நடைப்பயிற்சிக்காகக் காலாற நடந்துசென்றால் சுற்றிவர ஒரு மணிநேரம் பிடிக்கும் அவரது பண்ணைவீட்டை கூகுள் மேப் காண்பித்தது.
அடித்தட்டு மக்களைப் பார்க்கப்போகும்போதெல்லாம் எளிய ஆடையணிந்துவருபவரை யொரு நாள் அவர் நேரம் கிடைக்கும்போதெல்லாம் பழிக்கும் பெரிய தொழிலதிபரின் வீட்டுத்திருமணத்தில் பட்டும் வைரமுமாய் பளபளத்தொளிர்வதை தொலைக்காட்சி சேனல்களனைத்தும் விதவிதமான கோணங்களில் காட்டி மகிழ்ந்தன.
அதிகாரமும் செல்வ வளமும் அவருக்கு அளித்திருந்த தனிச்சிறப்பான சாதி அந்தஸ்தில்
அடுத்தவரையெல்லாம் கால்கடுக்க நிற்கவைத்தவாறே பேசிக்கொண்டிருப்பவர்
ஒருமையில் அழைத்து ஏசிக்கொண்டிருப்பவர்,
எல்லோரும் இந்நாட்டு மன்னரென்றபோது
சுற்றியிருந்தவர்களின் கைத்தட்டலில் அரங்கமே அதிர்ந்தது.
வறுமைக்கோட்டின் கீழ் இருப்பவர்களை அங்கேயே இருக்கச்செய்து
அவ்வப்போது சில எலும்புத்துண்டுகளை வீசுவதே
திருத்தமான வேட்டைக்கொரு திட்டவட்டமான
உத்தி யென்பதை
மக்கள் அறியமாட்டார்கள் என்ற மேலான நம்பிக்கையில்
மேடைதோறும் உரத்த குரலில், தொண்டை கரகரக்க
அதி தூய்மையான மினரல் வாட்டரைக் குடித்தபடி
முழங்கிக்கொண்டேயிருப்பவர்களின்
கால்களின் கீழ்
எக்காலமும் நிலநடுக்கம்போலெதுவும்
நேராதோவெனக் கலங்கிநிற்குமென்
பாழ்மனம்
கைநிறைய மண்ணள்ளி யிறைத்தவாறு….



Tuesday, April 15, 2025

சிறகு மட்டுமல்லவே பறவை! - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 சிறகு மட்டுமல்லவே பறவை!

’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
அறுந்த சிறகின் இன்மையை ஏற்க மறுத்து
சில காலம் மேலெழும்பப் பார்த்து
பொத்தென்று விழுந்து
மலங்க மலங்க விழிக்கும்….

நாள் செல்லச் செல்ல
சுவரோரமாய்த் தத்தித் தத்திச் சென்றபடி
சிறகிருந்த கால நனவோடையில்
நீந்திக்கொண்டிருக்கும்.

அடிக்கடி சொப்பனங்களில்
மீண்டும் பொருந்திய சிறகுகளோடு
ஆனந்தமாய்ப் பறக்கும்.

எத்தனை சிறகுகளிலிருந்தாலும்
தொடும் வான் ஆக வழியில்லாத
தொடுவானைக் கண்டு
தொலைந்த சிறகின் வலியிலிருந்து
தன்னைத் தாற்காலைகமாகவேனும் மீட்டெடுத்துக்கொள்ளும்
தருணங்களும் உண்டு.

அடிவானப்பறவை - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 அடிவானப்பறவை

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
தினமொரு சிறகிழையை மட்டுமாவது
எனக்காக உயரத்திலிருந்து மிதக்கவிடு என்று
பறவையைக் கேட்பது
பைத்தியக்காரத்தனம்…..

உயரத்தே ஒரு புள்ளியாகச் செல்லும் பறவை
யெலாம் தனதாய்க் கருதி
ஒரு சிறு சிறகுதிர்த்துச் செல்லாதாவென
சதா அண்ணாந்து பார்த்திருந்து
கழுத்துவலிக்கு அமிர்தாஞ்சனைத்
தடவிக்கொண்ட இடத்தில்
சுளீரென எரிவதில்
இரட்டிப்பாகும் இழப்புணர்வு.

இறங்கிவாராப் பறவையின் காலில்
அதற்கேயானதொரு மடலைக்
கட்டியனுப்பவும் இயலாது.

பறவைக்குப் படிக்கத் தெரிந்த மொழி
யெது?

மொழியே மனிதத்துயரின் மூலம் என்றால்
வழிமொழியுமோ பறவை?

பறவையின் அழகில் மனதைப் பறிகொடுத்ததோடு
அது எனக்கேயெனக்காய் பேசுமோ என்ற
எதிர்பார்ப்பும் சேர _

சிறகடித்துக்கொண்டிருக்கும் பறவையின்
ஆகாயமோ
விரிந்துகொண்டே போகிறது.

ஒருபோது சற்றே யப் பறவை தாழப்பறந்துவர
பேரதிர்வில் மனம் பிளக்க
’பச்’சென்று எச்சமிட்டுச் சென்றது பறவை
உச்சிமண்டையில்.

பச் எச் உச் மட்டுமே நிச்சயமான
மிச்சமாக….

அலகில் குச்சிபொறுக்கிச்செல்லக்கூடக்
கீழிறங்கிவராப் பறவையின் இறக்கைகளை
உடைமைகொள்ளும் வழி தெரியாமல்
அழப்பழகும் மனதிற்கு

சிறகிலாப் பறவையை ஒருநாளும்
பார்க்கப் பிடிப்பதில்லை.

இன்றும் தொடரும் உண்மைக்கதை!

 இன்றும் தொடரும் உண்மைக்கதை!

(*விக்கிபீடியாவிலிருந்து)

தமிழில் - லதா ராமகிருஷ்ணன்



ஆபிரகாம் லிங்க்கன் – செருப்புத் தைப்பவரின் மகனாகப் பிறந்து அமெரிக்காவின் ஜனாதிபதியானவர்– அமெரிக்காவின் 16ஆவது அதிபராக 1861 முதல் 1865 வரை இருந்தவர். சக மனிதர்களை அடிமைகளாக வைத்திருப்பதை எதிர்த்தவர். சட்டம் இயற்றி அந்த வழக்கத்தை முடிவுக்குக் கொண்டுவந்தவர்.

அமெரிக்க ஜனாதிபதியான ஆபிரகாம் லிங்க்கனின் தந்தை செருப்புத் தைப்பவர். செருப்புத் தைப்பவரின் மகன் நாட்டின் அதிபராகிவிட்டானே என்று வழிவழியாக வளவாழ்வு வாழும் பரம்பரையில் வந்தவர்கள் பலர் முகஞ்சுளித்தார்கள். உயர்குடிப் பிறப்பினரான தங்களுக்கே நாட்டை ஆளும் உயர்பதவிகளில் வகிக்க உரிமையும் தகுதியும் உண்டு என்று எண்ணுபவர்கள் அவர்கள். செருப்புத் தைக்கும் ஒருவரின் மகன் தங்களை ஆள்வதா என்று ஆத்திரப்பட்டார்கள்.

அமெரிக்காவின் அதிபராகப் பதவியேற்ற பின் ஆபிரகாம் லிங்க்கன் முதன் முறையாக உரையாற்ற நாடாளுமன்றப் பேரவைக்குள் நுழைந்தபோது அங்கிருந்தவர்களில் ஒருவர் எழுந்தார். மேற்குடிவர்க்கத்தைச் சேர்ந்த செல்வந்தர் அவர். ஆபிரகாம் லிங்க்கனைப் பார்த்து அவர், “மிஸ்டர் லிங்க்கன், உங்கள் தந்தையார் என் குடும்பத்திற்கு செருப்பு தைத்துக் கொடுத்துக்கொண்டிருந்தார் என்பதை நீங்கள் மறக்கலாகாது”, என்றார்.

அவையிலிருந்தவர்கள் எல்லோரும் சத்தமாகச் சிரித்தார்கள். ஆபிரகாம் லிங்க்கனை அத்தனை பேர் முன்னிலையிலும் முட்டாளாக்கி அவமானப் படுத்திவிட்டோம் என்று அவர்கள் எண்ணினார்கள்.

ஆனால் லிங்க்கன் கூனிக் குறுகவில்லை. அவருடைய தரமும் திறமும் அடியோடு வேறு. தன்னை அவமானப்படுத்துவதாய் பேசிய மனிதனை நேருக்குநேராகப் பார்த்தவர், “சார், உங்கள் வீட்டில் உங்கள் குடும்பத்தாருக்கு என் தந்தை வழக்கமாக செருப்பு செய்துகொடுப்பது எனக்குத் தெரியும். இங்கேயுள்ள வேறு பலரும் கூட அதை அறிந்திருப்பார்கள். அவர்களுக்குக் கூட என் தந்தை செருப்பு செய்துகொடுத்திருப்பார். ஏனென்றால், என் தந்தை செய்வதுபோல் வேறு யாராலுமே அத்தனை அருமையான பூட்சுகளைத் தயாரிக்க முடியாது. அவர் ஒரு சிருஷ்டிகர்த்தா. அவர் தயாரிக்கும் பூட்சுகள் வெறும் பூட்சுகள் மட்டுமல்ல. அவர் அத்தனை ஆத்மார்த்தமாய் அவற்றை உருவாக்கினார். உங்களிடம் கேட்க விரும்புகிறேன். அவர் தயாரித்துத் தந்த பூட்சுகளைப் பற்றி உங்களுக்கு அதிருப்தி ஏதேனும் உண்டா? அவை குறித்த புகார் எதேனும் உண்டா? ஏனெனில், எனக்கும் பூட்சுகள் தயாரிக்கத் தெரியும். என் தந்தை செய்துதந்த பூட்சுகள் சரியில்லை என்று நீங்கள் எண்ணினால் வேறு பூட்சுகளை உங்களுக்கு என்னால் தயாரித்துத்தர முடியும்! ஆனால், எனக்குத் தெரிந்தவரை, என் தந்தையார் உருவாக்கிய பூட்சுகளைப் பற்றி எவரும் ஒருபோதும் குறைசொல்லியதில்லை. அவர் ஒரு மேதை, ஒரு படைப்பாளி; என் தந்தையை எண்ணி நான் பெருமைப்படுகிறேன்!” என்றார்.

அவர் பேசியதைக் கேட்டு அவையே மௌனமாகிவிட் டது. யாருக்கும் பேச்செழவில்லை. அவர்களால் ஆபிரகாம் லிங்க்கன் என்னமாதிரியான இரும்புமனிதர் என்பதைப் புரிந்துகொள்ள இயலவில்லை. அவர் பூட்சு-தயாரித்தலை ஒரு கலைவடிவமாக்கி னார், ஒரு படைப்புத் திறனாகப் பேசினார்! அவருடைய தந்தையின் தொழிலில் கூனிக் குறுக எதுவுமே யில்லை என்றும், அப்பழுக் கற்ற, கலைநயம் மிக்க பூட்சுகளை தன் தந்தை உருவாக்கிய விதத்தை, அவை குறித்து யாரும் ஏதும் குறைசொல்லவியலாத அளவு செய்நேர்த்தியோடு தன் தந்தை தயாரித்ததை எண்ணி தான் பெருமைப்படுவதாகவும் அவையோர் முன் தலைநிமிர்ந்து தெரிவித்தார். அமெரிக்காவின் அதிபராக இருந்தாலும், தனக்கும் பூட்சுகள் செய்யத் தெரியும் என்றும், தன் தந்தை செய்துதந்த பூட்சுகளில் குறையிருந்தால் வேறொரு ஜதை காலணிகளை செய்துதர தான் தயாராயிருப்ப தாகவும் தெரிவித்தார்!

ஆபிரகாமை அவையோர் முன் முட்டாளாக்கிக்காட்ட, மதிப்பழிக்க முற்பட்டவர்(கள்) இறுதியில் தலைகவிழ்ந்து நின்றார்(கள்).

(*நன்றி: விக்கிபீடியா)