சாபம்
அவரை யொரு மெய்யான சமூகவுணர்வாளரென்றே எண்ணியிருந்தேன்.
அன்றொரு நாள் அவருடைய கப்பலனைய வீட்டைப்பார்க்க நேர்ந்தது.
அதுபோலவர் மாநிலத்துக்கொரு மாளிகை வைத்திருப்பதாகத் தெரியவந்தது.
காலை நடைப்பயிற்சிக்காகக் காலாற நடந்துசென்றால் சுற்றிவர ஒரு மணிநேரம் பிடிக்கும் அவரது பண்ணைவீட்டை கூகுள் மேப் காண்பித்தது.
அடித்தட்டு மக்களைப் பார்க்கப்போகும்போதெல்லாம் எளிய ஆடையணிந்துவருபவரை யொரு நாள் அவர் நேரம் கிடைக்கும்போதெல்லாம் பழிக்கும் பெரிய தொழிலதிபரின் வீட்டுத்திருமணத்தில் பட்டும் வைரமுமாய் பளபளத்தொளிர்வதை தொலைக்காட்சி சேனல்களனைத்தும் விதவிதமான கோணங்களில் காட்டி மகிழ்ந்தன.
அதிகாரமும் செல்வ வளமும் அவருக்கு அளித்திருந்த தனிச்சிறப்பான சாதி அந்தஸ்தில்
அடுத்தவரையெல்லாம் கால்கடுக்க நிற்கவைத்தவாறே பேசிக்கொண்டிருப்பவர்
ஒருமையில் அழைத்து ஏசிக்கொண்டிருப்பவர்,
எல்லோரும் இந்நாட்டு மன்னரென்றபோது
சுற்றியிருந்தவர்களின் கைத்தட்டலில் அரங்கமே அதிர்ந்தது.
வறுமைக்கோட்டின் கீழ் இருப்பவர்களை அங்கேயே இருக்கச்செய்து
அவ்வப்போது சில எலும்புத்துண்டுகளை வீசுவதே
திருத்தமான வேட்டைக்கொரு திட்டவட்டமான
உத்தி யென்பதை
மக்கள் அறியமாட்டார்கள் என்ற மேலான நம்பிக்கையில்
மேடைதோறும் உரத்த குரலில், தொண்டை கரகரக்க
அதி தூய்மையான மினரல் வாட்டரைக் குடித்தபடி
முழங்கிக்கொண்டேயிருப்பவர்களின்
கால்களின் கீழ்
எக்காலமும் நிலநடுக்கம்போலெதுவும்
நேராதோவெனக் கலங்கிநிற்குமென்
பாழ்மனம்
கைநிறைய மண்ணள்ளி யிறைத்தவாறு….
No comments:
Post a Comment