LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Monday, January 16, 2017

பறவைப்பார்வை ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

பறவைப்பார்வை
‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)


புள்ளினம் பேசாது;
புதுக்கண்டுபிடிப்புகள் அதற்கில்லை;
ஆறாம் அறிவில்லை;
அந்த நாள் ஞாபகம் வந்ததில்லை
யார் சொன்னது சகவுயிரே….
எம் ஒரு சிறகடிப்பு உங்கள் ஓராயிரம் வார்த்தைகளைப் பொருளற்றதாக்கும்;
எங்கள் ஞாபக விரிவு வாமனனின் மூவடித்திறம்.
இருந்தும் நாம் ஒருங்கிணைந்த வெளியொன்றில்
என் சிறகை உனக்கு உயில் எழுதவும்
உன் குரலில் உருகிக் கரையவும்
ஏங்கும் என் மனதின் கனாவில்
நாமொரு உடலின் முதலும் முடிவுமாய்.

* * * * *

உணவுக்கான இரையாக கணப்பொழுதில்
சுட்டுவீழ்த்திவிட்டால்கூடப் பரவாயில்லை.
காலில் நூல் கட்டி வானத்தில் பறக்கவிட்டு
ஒரேநேரத்தில் அத்தனை பேரும்
கைத்துப்பாக்கிகளை உயரே குறிபார்த்து நீட்டும்போது
என்னமாய் நடுங்கித் துவள்கிறது என் சின்ன மனம்….
வலுவிழந்துபோகும் இறக்கைகளுடன்
வானக்கூரையின் கீழ் என்னைக் காப்பாற்றிக்கொள்ள வழிதெரியாமல் எப்படியெல்லாம் பரிதவித்துப்போகிகிறேன்…..
அவர்கள் கையிலிருப்பது பொம்மைத்துப்பாக்கிகளாம்
ஆனால் என் உயிர்வலி எத்தனை உண்மையானது.

சில நேரம் Sea-gull;
சில நேரம்சிட்டுக்குருவி;
சில நேரம் காகம்;
சில நேரம் சக்கரவாகம்;
சில நேரம் கொக்கு;
சில நேரம்…….
எக்குத்தப்பாய் போட்டுவிட்ட எதுகைக்கு
மோனை கிடைக்காத துக்கத்தில்
உனக்குள்ளிருக்கும் நீ பார்த்தறியாபுல்புல்பறவை
இசைக்க மறக்க,
இன்றோ என்றோ இன்றான என்றோ
என்றான இன்றோ
இந்தக் கவிதை தொடர்வதும்,
காலாவதியாவதும்
கவிதை யாவதும்
ஆகாததுமான யாவுமே
ஆன வாழ்வின்
ஆகச்சிறந்த கொடுப்பினை

(நீயே)தானாக.

நன்றி நவிலல் (சக கவிஞர்களுக்கு) - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

உரித்தாகும் நன்றி
ரிஷி 
(லதா ராமகிருஷ்ணன்
தேன்மொழியைப்
பொருள்பெயர்ப்பதறியா

கிறக்கமும் தடுமாற்றமுமே
உள்ளுறை சாரமெனத் தெளியும் திறம்
உறுவாழ்வின் அருவரமாய்.



(To: THENMOZHI DAS AND ALL OTHER FELLOW-POETS)


நன்றி நவிலல்


(சக கவிஞர்களுக்கு)

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

மொழிபெயர்க்கும்கவிதைகளெல்லாம்
என் மனவழியின் கிளைபிரியும் பாதைகளாய்….
மேசையின் இருபுறமும் அமர வாராமலேயே
தேனீர் அருந்துபவர்கள்,
இரவில் வலி மிக எழுதிய கவிதையை
பகலில் படித்து நெருப்புக்காயம் பெறுபவர்கள்,
கனவில் காதலியை அரவணைத்து
களிப்பா, கலக்கமா என்று புலனாகா
அந்தரவெளியில்
மனம் கனத்திருப்போர்,
கானகத்துளிநிலக் கண்ணாடியில்
தன் விசுவரூபம் கண்டு தவிப்போர்,
குழந்தைத் தொழிலாளியாய் அழுதிருப்போர்,
இறுதி யாத்திரை செல்லும் உடலில் தன்னைப்
பொருத்திக்கொள்வோர்,
அதுவேயாய், குறியீடாய் பொழிமழையின் அழகில்
தானழிந்திருப்போர்....

ஆன அனைவரிலும் தானாய் முளைக்கின்றன
என் பாதங்களும், காதங்களும்
!

சரியும் தராசுகள் ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)

சரியும் தராசுகள்

ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)



















1.தொழில்நுட்பம்
 காசுள்ளவர்க்கும்
 காவல்படை வைத்திருப்ப
வர்க்கும்
 காலால் எட்டியுதைத்துக் களித்து மகிழ
எப்போதும் தேவை
எளிய கவிஞர்களின் தலைகள்.
தன் கால்களால் எட்டியுதைத்தால் வலிக்கும் என்று
விலைக்கு வாங்கிக்கொள்வார் சில மண்டைகளை.

2. ரசனை
பாந்தமாயுள்ள வாய்கள் சிலவற்றை ஏந்திவந்தார்
நீந்தத் தெரிந்தவனை மூழ்கடிப்பதே குறியாய்
வண்டை வண்டையாய்
தொண்டைத்தண்ணீர் வற்ற
ஏசிமுடிக்க.
கூசாத மனசாட்சி வாய்த்த நீசர்கள்
கூலிக்குப் போட்டுத்தள்ளுகிறவர்களைக் காட்டிலும்
மோசமானவர்கள்.

3. வாசிப்பு
அடிக்க அடிக்க அம்மியும் நகரும்
என்ற நம்பிக்கையில்
படித்துப் படித்துச் சொல்லிக்கொண்டேயிருக்கிறார்கள்
அது படிக்கவேண்டிய புத்தகம் என்று.
பக்கம்பக்கமாய் பெருகியோடும் அபத்தத்தின் அழுகலில்
அக்கம்பக்கமெங்கும் புழுத்தவாறு.

4. புவியியல்
இருந்தாற்போலிருந்து திடீரென்று முளைத்த காளான்
தானொரு கோள்தான் என்று காட்டிக்கொள்ளும் முனைப்பில்
நீட்டிமுழக்கிக்கொண்டிருப்பதைக் கேட்டு
நகைத்துமாளவில்லை
நட்சத்திரங்களுக்கு.

5. தமிழ்க்கவியின் தலைவிதி
எண்பது பக்கக் கவிதைத்தொகுப்பிற்கு
எண்ணூறு பக்க விமர்சனம் எழுதுவதென்பது
எத்தனை பெரிய காருண்யம் என்பார்
கல்லறையிலிருந்து எழுந்துவந்து
கவிஞர் நன்றிதெரிவிக்கவேண்டும் என்றும் சொல்லக்கூடும்.

6. இடிபாடு
நட்பை விடுங்கள்
கெட்டுப்போய்விட்டதே நன்னெறி…
பட்டுப்போய்விட்டதோ மனசாட்சி?
அந்த எட்டு பேர் காலாட்டியமர்ந்தபடி
கெக்கலிக்கும் குட்டிச்சுவரின்
அடித்தளம் உட்குழிந்தவண்ணம்.

7. விற்பனைக்கு
பெறவுள்ள பட்டமே குறியாய்,
நிறுத்தற்குறிகளுக்கப்பாலான
கவிமனதை
வதைத்துச் சிதைத்து
வாழ்த்துப்பா பாடுபவர்
விழுமியம் கிலோ என்ன விலை?

8.ஈரும் பேனும்
எட்டுப்பக்கங்களில்
கட்டவிழ்க்கப்பட்டிருந்த
சட்டாம்பிள்ளைத்தனத்தின்
முட்டாள்தனம்
ஒரு பானை சோறும்
ஒரு சோறும்….

9. உரமும் திறமும்
அந்த விரிவுரையாளருக்காகப் பரிந்துபேசுபவர்
வரிந்துகட்டிக்கொண்டு வழக்காடுபவர்
இந்த விரிவுரையாளரைப் புறக்கணிப்பதும்
புறம்பேசுவதும் சரியோ சரியா?
சிரியோ சிரியென்று சிரிக்கிறாரே
சான்றோனைக் கண்டு.
அறிந்தே இவர் செய்யும் சிறுமையைப்
பொறுத்தருளப்
பைத்தியமல்லவே பராசக்தி.



சீதைக்கும் பேசத் தெரியும் ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

சீதைக்கும் பேசத் தெரியும்
ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)



ராமன் என் அன்பன்.
அவனோடு நான் அற்புதமான பொழுதுகளைக் கழித்திருக்கிறேன்.
நாங்கள் என்னவெல்லாம் பேசியிருக்கிறோம் தெரியுமா?
ஒவ்வொன்றும் அட்சரலட்சம் பெறும்!
எப்படியெல்லாம் கூடிக்களித்திருக்கிறோம் தெரியுமா?
ஆரண்ய மரங்கள் கதைப்பாட்டுப் படிக்கும்!
அவன் என்னை சந்தேகப்பட்டது ஒரு சறுக்கல்;
அதற்காய், என்னைக் கடத்திச்சென்றவனை நான்
காதலிப்பேன் என்று கிறுக்குவதா?
பெண்ணை வலுக்கட்டாயப்படுத்துபவன் கயவனல்லவா?
கதாநாயகன் என்கிறீர்களே?
எனதுரிமையைப் பேசுவதாய் என்னை ஏன் இன்னுமின்னும் சிறுமைப்படுத்துகிறீர்கள்?
கடத்திச் சென்றவனுக்குக் கெடுக்கத் தெரியாதா என்ன?
கிட்டே நெருங்கினால் தலை வெடித்துச் சிதறும் என்பதால்
எட்ட நின்றே ஏங்கிப் பார்த்தான்.
கையெட்டும் தூரத்தில் மண்டோதரி இருக்க
என்னென்ன கெட்ட வார்த்தைகளைப் பேசினான் தெரியுமா?
என்னைப் பொறுத்தவரை துட்டனே யவன்.
அவனுக்கும் வழக்குரைஞர் வைத்துக்கொள்ளும் உரிமையுண்டு.
ஆனால், நான் அவனை உள்ளூர நேசித்தேன் என்று பொய்பேசி
பாதிக்கப்பட்ட என்னைக்கொண்டே பாதகன் அவன் விடுதலையை வாங்கித்தரப் பார்க்கவேண்டாம்.
உங்கள் மனைவி, மகள் கடத்தப்பட்டால்
இப்படித்தான் மனிதநேயம் பேசுவீர்களா?
என் அன்பன் ராமபிரான் என்னை சந்தேகப்பட்டான்.
யாரால்? யார் செய்த காரியத்தால்?
சந்தேகப்பட்டதற்காய் எத்தனை அலைபாய்ந்திருக்கும் என் அன்பன் மனம் என்று எனக்குத் தெரியும்.
ஆறாக்காயம்தான், 
அதற்காய் ராவணன் கையாலா மருந்திட்டுக்கொள்வேன்?
ஏன் எல்லோருமே என் விஷயத்தில் வெவ்வேறுவிதமாய்
ராவணனாகவே நடந்துகொள்கிறீர்கள்?