LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Saturday, August 23, 2025

கோதண்டராமன் காதையும் கிரேக்க மன்னன் நீரோ க்ளாடியஸின் ஃபிடில் இசையும் ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 கோதண்டராமன் காதையும்


கிரேக்க மன்னன் நீரோ க்ளாடியஸின்
ஃபிடில் இசையும்
’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)


”ரோமில் இருக்கும்போது ரோமானியர்களாக நடப்பதுதான் நல்லது”.
(ரோம் என்றால் மன்னனா மக்களா என்று யாரும் கேள்வி கேட்கலாகாது).
ரோம் தீப்பற்றி எரிகிறது.
கிரேக்க மன்னன் நீரோ க்ளாடியஸ் ஃபிடில் வாசித்துக்கொண்டிருக்கிறான்
இன்னமும்கூட.
காலப்போக்கில் நீரோ கிளை பிரிந்து பல்கிப் பெருகி
இன்று
அடிக்கு அடி தட்டுப்பட்ட வண்ணம்…..
‘ரோம் தீப்பற்றி யெரியட்டுமே
அதற்காக இசையை வாசிப்பதும் ரசிப்பதும் எப்படி
இங்கிதமற்றுப்போகும்’
என்று தர்க்கம் செய்யத் தெரிந்தவர்கள்
தேவையான பாதுகாப்புக்கவசங்களோடு
தலைமறைவாயிருந்தபடியே
தத்தமதான பங்காற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
சிலர் கொழுந்துவிட்டு எரியும் தீயில் எண்ணெய் வார்க்கிறார்கள்
சிலர் தீயின் வெப்பத்தை அளக்க புதுக்கருவி தயாரித்துக்கொண்டிருக் கிறார்கள்;
சிலர் தீ கருக்கிய இடங்களில் தண்ணீர் தெளித்து
கோலமிடப் பார்த்துக்கொண் டிருக்கிறார்கள்;
’நெருப்பென்று சொன்னால் நீரிலும் அணையும், நீரென்று சொன்னால் நெருப்பிலும் வேகும்’ என்று கண்ணதாசனின் வரிகளை
இரவல் வாங்கியாவது
தவறாமல் தத்துவம் பேசுகிறார்கள் சிலர்;
‘அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்’ என்று பாரதியை
மனப்பாடமாய்ச் சொல்கிறார்கள் சிலர்
(மறந்தும் பின்பற்றமாட்டார்)
துக்கிரித்தன்மாய் தீயையையும் மூட்டி ஃபிடிலையும் வாசிக்கீறானே இக்கரை இக்கால நீரோ மன்னன்
இவன் கொடுங்கோலனல்லவா என்று கேட்டுவிட்டால் போதும்
கண், காது, வாயைப் பொத்திக்கொண்டுவிடுகிறார்கள்.
காந்தியைத் தீவிரமாகக் கடைப்பிடிக்கிறார்களாம்.
இன்னும் சிலர்
‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ என்று புன்சிரித்துக் கூறி
ஃபிடிலையும் அதைப் பிடித்திருக்கும் நீரோவின் கையையும்
வருடித்தருகிறார்கள்.
ஐயோ ரோம் எரிகிறதே என்றால்
புனரபி ஜனனம், புனரபி மரணம்
காயமே இது பொய்யடா, காற்றடைத்த பையடா என்று
ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளில்
ஆறுதலளித்து அவரவர் வழி சென்றவண்ணம்
சுற்றிலும் கேட்கும் வலியோலங்களை
அலைபேசியில் படம்பிடித்தபடியே
அகன்றேகுகிறார்கள்.
நீரோ வாசிக்கும் இசைக்குத் தவறாமல் தலையாட்டியப்டி
தீயில் கருகும் சக ரோமானியர்களிடமிருந்து பார்வையை
அகற்றியபடி
சுற்றுலா செல்கிறார்கள்.
அனுமனுக்குஆச்சரியம் தாளவில்லை –
அதெப்படி இந்திரஜித்தைப் போல இவர்களால்
நினைத்த நேரத்தின் அருவமாகிவிட முடிகிறது!
அதேசமயம், போர்க்களத்தின் ஒவ்வொரு அசைவும் அவர்களுக்குத் தெரிந்தேயிருக்கிறது என்பது
அவர்கள் பாடும் இரங்கற்பாக்களிலிருந்து புலப்படுகிறது….
’நவீன தமிழ்க்கவிதையின் பொருள் போலவே
நீரோவின் தீயும்’ என்று
கவிதை யாப்பதென்ன அவர்களுக்குக்
குதிரைக்கொம்பா?
வால்நுனித் தீயைக் கடலில் முக்கி அணைத்தது தவறோ
என்று தனக்குத்தான் கேட்டபடியே அண்ணாந்த அனுமன் கண்களில்
புஷ்பக விமானம் தெரிகிறது வீங்கிப் புடைத்து.
எரியும் மக்களோடு ஸெல்ஃபி பிடித்துக்கொள்ளவும்,
கூடவே நீரோ க்ளாடியஸிடம் நலம் விசாரிக்கவுமாய்
ரோமுக்குப் புறப்பட்டுச் செல்வோர் எண்ணிக்கை
அதிகமாகிக்கொண்டே.

Friday, August 1, 2025

INSIGHT / JUNE - JULY 2025 (A BILINGUAL BLOGSPOT FOR CONTEMPORARY TAMIL POETRY)

 INSIGHT / JUNE - JULY 2025

(A BILINGUAL BLOGSPOT FOR

CONTEMPORARY TAMIL POETRY)

மகிழ்ச்சியின்மை- [BERTRAND RUSSEL’S THE CONQUEST OF HAPPINESS – அத்தியாயம் – 2]


www.puthu.thinnai.com
 

*BYRON பாணி மகிழ்ச்சியின்மை- [BERTRAND RUSSEL’S THE CONQUEST OF HAPPINESS – அத்தியாயம் – 2]

ஞானமும் விவேகமும் உள்ளவர்கள், முந்தைய காலங்களின் அனைத்துவிதமான ஆர்வங்கள் உத்வேகங்கள் எல்லாவற்றின் ஊடாகவும் வாழ்ந்து பார்த்து இறுதியில் இனி வாழ்வதற்கு என்று எதுவுமே இல்லை என்பதே கண்டுணர்ந்துவிட்டார்கள் என்றவிதமாய் அனுமானித்துக்கொள்வது உலக வரலாற்றில் ஏராளமான பல கால கட்டங்களில் இருந்தது போலவே,…

குக்குறுங்க(வி)தைகள்! ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 குக்குறுங்க(வி)தைகள்!

‘ரிஷி’

(லதா ராமகிருஷ்ணன்)

1. முன்கதை
முற்றும் போட்ட பின்பு
சற்றும் எதிர்பாராமல்
கதையின் நடுப்பகுதியிலிருந்து
எழுந்துவந்த சொல்லொன்று
என்னோடு முடித்திருந்தால்
எத்தனையோ நன்றாயிருந்திருக்குமே
எனக் கண்ணீர்மல்கச் சொன்னது
blurb ஆகாமல்
காற்றோடு கலந்துவிட்டது.


2. பின்கதை
முன்பின் உண்டோ இதுபோன்றதொரு இன்கதை என்றவரிடம்
ஏற்கெனவே இந்தக்கதையைப் படித்திருக்கிறேன் என்றொரு வாசகர் சொல்ல
உடனடியாக அதற்கு மறுப்புத் தெரிவிக்குமாறும்
அல்லது விடுபட்ட ’இதைப்போன்ற’ உடனடியாக சேர்க்கப்படவேண்டுமென்றும்
அன்பின் மிகுதியால் படைப்பாளி காட்டமாய்க் கேட்டுக்கொண்ட ஆறாவது நிமிடத்தில்
குருதிவெள்ளம் உடைப்பெடுக்கும்படியாக
அந்த நல்வாசக நெஞ்சாங்கூட்டில்
அதிரடியாக நுழைந்து துளைத்தது
துருப்பிடித்த தோட்டாவொன்று.



3.அவர் கதை
அவராகப்பட்டவரின் கதை
அவராகவும் அவராகாமலும்
அவராக்கப்பட்டும் படாமலும்
அவராகு மவரின்
அவராகா அவரின்
அருங்கதையாகாப்
பெருங்கதையாக.









4. உன் கதை
திறந்த புத்தகம் என்றாய்
மூடிய உள்ளங்கை என்றாய்
முடியும் நாள் என்றாய்
முடியாத் தாள் என்றாய்
வாடும் இலை என்றாய்
வாடா மலர் என்றாய்
வெம்பனி என்றாய்
சிம்ஃபனி என்றாய்
ஊடாடும் ஒளி என்றாய்
நாடோடியின் வலி என்றாய்
தேடும் கனி யென்றாய்
’காடா’த் துணி யென்றாய்
கருத்த இரவு என்றாய்
வறுத்த வேர்க்கடலை என்றாய்.
பிறவற்றை ஓரளவு பொருள்
கொண்டாலும்
பொறுத்துக்கொண்டாலும்
வறுத்த வேர்க்கடலை
வெறுத்துப்போய்விட்டதெனக்கு.


5. என்கதை
உன்கதையை எழுதி என்கதை யென்கிறாய்
பாவி யென்கிறாய் பாவம் என்கிறாய்
கோவித்துக்கொண்டு ஒரே தாவாய்த் தாவி
ஓங்கியறைய வருகிறாய்.
ஆவேசம் எதற்கு?.
கூவிக்கூவிக் கடைவிரித்தாலும்
கொள்வாரில்லாத ஊரில்
தாவித்திரிந்தலைந்துகொண்டிருப்பது
நீயுமல்லாத நானுமல்லாத
ஆவி!


6. வன்கதை
'கன்' வேண்டும் 'கன்' வேண்டும் என்று கேட்டுக்கொண்டேயிருந்தது குழந்தை.
ஒன்றுக்கிரண்டு இருக்கிறதே கண் உனக்கு
என்று கொஞ்சினாள் தாய்
'கன்' வேண்டும் 'கன்' வேண்டும் என்று கேட்டுக்கொண்டேயிருந்தது குழந்தை
‘ன்’ அல்ல ’ண்’ சொல்லு பார்க்கலாம்
என்று திருத்தினாள் குட்டி அக்கா
கன் வேண்டும் கன் வேண்டும் என்று கேட்டுக்கொண்டேயிருந்தான் குழந்தை
இன்னும் நன்றாகப் பழகவேண்டும் தமிழ்
என்றார் தாத்தா
சின்னப்பையன் தானே போகப்போகப் பழகும்
என்றார் தந்தை
கண்ணையுருட்டி புண்ணாகிப்போன மனதுடன் தொலைக்காட்சிப்பெட்டிக்குள் பாய்ந்த குழந்தை
அங்கு சுட்டுக்கொண்டிருந்த நாற்பது கதாநாயகர்களின் இரண்டு துப்பாக்கிகளைப் பறித்து
கைக்கொன்றாய்ப் பிடித்துக்கொண்டு
வாயால்
சரமாரியாகச் சுட ஆரம்பித்தது.


7.மண்கதை
அடுத்திருந்த வீட்டை
இடித்துக்கட்டிக்கொண்டிருந்ததால்
திரட்டித் திங்க வாகாய்
விரிந்து பரந்து குமிந்திருந்தது மண்.
தினமும் குழந்தையைத் திங்கவிட்டு
பின் அதன் வாயை வலிக்குமளவு
அகல விரித்துப் பார்த்தாள்
மண் கண்டாள் மண்ணே கண்டாள்
பின்
வயிற்றுவலியில் வீறிட்டழுத குழந்தையை
இரண்டடி ஆத்திரம் தீர அடித்துவிட்டு
இடுப்பில் தூக்கிக்கொண்டு
மருத்துவமனைக்கு ஓடினாள்.


8. சுட்டிக்கதை
சுட்டி என்பது சின்னப்பையனைக் குறிக்கலாம்
நெத்திச்சுட்டியைக் குறிக்கலாம்
சட்டியிலேற்பட்ட அச்சுப்பிழையாக இருக்கலாம்
இந்தத் தலைப்பு ஒரு வரியானால்
அடுத்த வரியில் புட்டி துட்டி முட்டி
ஆகிய மூன்று சொற்களில் ஒன்று
இடம்பெறக்கூடும்
தொட்டி வட்டி மெட்டி
யென்பதாகவும் இடம்பெறலாம்....
வட்டநிலா சதுரமாகி விட்டத்தினூடாய்
இறங்கிவரக் கண்டு
Hamlet_இன் Nutshell வாழ்க்கை
அத்துப்படியானவர்கள்
கட்டங்கட்டி ஒளிரும் விளம்பரவாசகங்களை
கடந்துபோய்விடுகிறார்கள்.


9. நுண்கதை
ஆறே வார்த்தைகளில் அருமையான கதையை
என்று ஆரம்பித்தவர்
எட்டரை வார்த்தைகளில் எழுதி முடித்தார்
இரண்டு அதிகமானதைப் பற்றி
ஒருவர் அதிருப்தி தெரிவிக்க
இரண்டரை அதிகமானதே இக்கதையின்
பரிபூரணத்துவம் என்றார் இன்னொருவர்.
கேட்டுக்கொண்டிருந்த அரை
கரையத் தொடங்கியது.

10. பூதக்கண்ணாடிக்கதை
சின்னச்சின்ன எழுத்தெல்லாம்
என்னமாய் பெரிதாய்த் தெரிகிறது
பார் என்று
கண்ணை விரித்துக் கதைசொல்லும்
தகப்பனிடம்
இன்னும் பூதம் வரவில்லையே என்று
சலிப்போடு கேட்டு
கொட்டாவி விட்டுத் தூங்க ஆரம்பித்தான் குட்டிப்பையன்.


11. கால் கதை
கால் அரை முக்கால்
கணக்கிற்கப்பால்........
சர்க்கரை யாக முடியுமா
உப்பால்?
நாக்காக முடியுமோ மூக்கால்?
ஆயின், கதையாகும் கதையாகாக் கதையும்
கதைகதையெனக் கதைக்குங்கால்!





.