LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Thursday, June 20, 2024

அடையாளமும் அங்கீகாரமும் ......... ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 அடையாளமும் அங்கீகாரமும்

......................................................................................
‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)



இத்தனையத்தனை யெனச் சொல்லவியலா
எத்தனையெத்தனையோ காக்கைகளில்
தனித்தொரு காக்கையாகத் தன்னை யாரும் பார்க்கவில்லையே
என்ற ஏக்கம்
எந்தக் காக்கையையும் தாக்கியிருக்காது
என்றே தோன்றுகிறது.
சக பறவைகள் இரைதேடப்
பறக்கவேண்டும்.
தூண்டில்களுக்கும் துப்பாக்கிகளுக்கும்
இரையாகாமல் தப்பிக்கவேண்டும்.
நிழல் தேடி நிறைய தூரம் செல்லவேண்டும்...
தன் கூடிருக்கும் மரம் தொலையாதிருக்கிறதா
என்று தொடர்ந்து கண்காணித்துவரவேண்டும்...
தானியமென்று சிறுகல்லை முழுங்கியதில்
ஏற்பட்ட உபாதைகளை
யாரிடம் பகிர்ந்துகொள்வது?
இதில் யாரை யார் புகழ்ந்துபோற்றுவது.....
அலகுகளின் நீள அகலங்களைத்
துல்லியமாக அளப்பதாய்
ஆளுக்கொரு அளவை வைத்திருக்க
வழியில்லை காக்கைகளுக்கு.
சினிமாவில் நடிக்கவைப்பதற்கென்று
ஃபோட்டோஷூட் நடத்தி
ஒரு காக்காயைத் தேர்ந்தெடுத்து
அழைத்து வந்து
நூறு வருடத் தொன்மை வாய்ந்த
ஆறு நட்சத்திர மரமொன்றின் கிளையில்
யாரேனும் இதுவரை தங்கவைத்ததாகத்
தெரியவில்லை.
அதற்காக அங்கலாய்ப்பதெல்லாம்
காக்கைகளின் வழக்கமில்லை.
காக்கையை அழகென்று போற்றிப்
பாடுவதில்லை யுலகு.
அதன் கரும்பட்டொளிர் பூமென்மைச்
சருமம் பற்றி யொரு வரியேனும்
இதுவரை பேசி யறியோம்.
இனிமையற்ற அதன் குரலின்
கரகரப்பை
எப்படியெல்லாம் பரிகசித்திருக்கிறோம்.
ஆகாயத்தோட்டி என்று குறிப்பிடுவதிலும்
ஓர் உட்குறிப்பு இருக்கத்தானே செய்கிறது.
கிளியின் அழகை
குயிலின் குரலினிமையை
மயிலின் எழில்நடனத்தை
குருவியின் குட்டியுருவை
யெல்லாம் எடுத்துக்காட்டிக்
காட்டிக்காட்டி
காக்காயைப் பழிப்பதுமட்டும்
ஒருநாளும் வழக்கொழிந்துபோகாததாய்….
சிறுகல்லைப் போட்டுப்போட்டு
நீர்மட்டத்தை உயர்த்தி
தாகம் தீர்த்துக்கொண்டதாய்
காக்காயின் அறிவுக்கூர்மைக்கு
கைவசமிருப்பது ஒரேயொரு கதை....
ஆனால்
பாட்டி சுட்ட வடையைத் தட்டிப்பறித்த
வில்லன் காக்காய்க்கு
பட்டிதொட்டியெல்லாம்
கரும்புள்ளி செம்புள்ளி
குத்தப்பட்டவண்ணமே....
காக்கை காக்காய் காகம் – எல்லாமே
மனிதர்கள் சூட்டிய பெயர்கள்.
எனில்,
காக்கை காக்கைக்கு என்ன?
எண்ண நேரமின்றி
ஏதொரு அவசியமுமின்றி
என்றும்போல் காகங்களாகிய
காக்காய்களாகிய
காக்கைகள்
வலம் வந்தபடி வானிலும்
விளக்குக்கம்பத்தில் அமர்ந்துகொண்டும்…..
காக்கையின் வாழ்க்கைக்கு
நோக்கம் கற்பிக்க விரும்பும்
நம் அறியாமையை அறியாமலும்…..

சொல்லத்தோன்றும் சில லதா ராமகிருஷ்ணன்

 சொல்லத்தோன்றும் சில

லதா ராமகிருஷ்ணன்




என்ன டப்பா சினிமாவானாலும் அதில் மம்முட்டி நடித்தால் அதற்கென்று ஒரு தரம் வந்துவிடும் என்ற நம்பிக்கையுண்டு!.
இறுதியாகப் பார்த்த படம் மௌனம் சம்மதம் (அதுதான் தலைப்பு என்று நினைக்கிறேன்) மம்முட்டி நடித்தது.
அதற்குப் பிறகு பல வருடங்கள் கழித்து தியேட்டருக்குப் போய் தெனாலி பார்த்த போது தொலைக்காட்சித் திரைக் குப் பழகிய கண்களுக்கு கதாநாயகன், கதாநாயகியெல் லாம் ராட்சஸ பூதங்களாய் எங்கோ உயரத் தில் தெரிந்தார்கள்!.
கதாநாயகி அணிந்திருந்த அதிகுட்டைப் பாவாடை அத்தனை அதிர்ச்சியளித்தது! பொதுவாக அத்தகைய ‘டூ மினி ஸ்கர்ட்ட் களை’ வில்லிகள் தான் அணிந்துகொண்டு வருவார்கள்!.
அதுவும், கதாநாயகி அதை அணிந்து கொண்டு காதலனோடு போனாலாவது பரவாயில்லை. ஆனால் அவள் அண்ண னோடல்லவா போகிறாள்! உண்மையாகவே பயங்கர அதிர்ச்சி தான்!
தெனாலி படம் அந்த ஒரு காட்சி – தனக்கு எதைப் பார்த் தாலும் பயம் என்பதையும் அதற்கான காரணத்தையும் கண்கள் மருண்டு கலங்க கதாநாயகன் (கமலஹாஸன்) மனநோய் மருத்துவரிடம் தெரிவிப்பாரே – அந்த ஒரு காட்சியோடு அந்த மொத்தப் படமும் முடிந்துவிட்டது; முடிந்திருக்கவேண்டும்.
ஆனால், ஹாஸ்யம் என்ற பெயரில் எத்தனை யெத்தனை அபத்தக்காட்சிகள் நம்மீது திணிக் கப்படுகின்றன.
அவை ஒருவிதத்தில் ஒரு சீரியஸ் விஷயத் தைப் பேசுவதிலுள்ள மன நேர்மையை, ஆதாயநோக்கைத் தெரியப் படுத்திவிடுவ தாகவே தோன்றுகிறது.
ஹமாம் சோப் விளம்பரம்போல். கோவிட் காலத்தில் பாதுகாப்பாய் இருப்பது குறித்த பிரக்ஞையேற்படுத் துவது என்ற பெயரில் சின்னப் பெண்ணின் வெற்றுத் தோளைக் காண்பித்து அதில் அவள் சோப்பை உருட்டும் படி செய்திருக்கிறார்கள். கைவிரல்களை சோப்பால் அழுத்தித் தேய்த்துக் காட்டியிருக் கலாம். செய்யவில்லை.
தொலைக்காட்சியில் விளம்பரங்களுக்கு நடுநடுவே வரும் திரைப்படத்தைப் பார்ப்பது தாங்கமுடியாத துயரம்.
எது அதிக திராபை என்று பட்டிமன்றமே நடத்தலாம்.
மாஸ்டர் படம் பார்க்க நேர்ந்தது அத்தகைய துயரம்தான். சமூகப்பிரக்ஞை மிக்க கதை முடிச்சு. சிறுவர்களை, சின்ன தவறுகள் செய்து கூர்நோக்குப்பள்ளிகளில் இருப்ப வர்களை போதைப்பொருள் கடத்துதல் போன்ற சமூக விரோத நடவடிக்கைகளில், குற்றச்செயல்களில் ஈடுபடுத்தும் ஒரு நாசகார கும்பலை எதிர்க்கும் கதா நாயகன்.
அவன் எதற்கு எப்போதுமே குடிப்பதாகக் காட்டப்பட வேண்டும், தெரியவில்லை. அவன் குடிக்கும்போதெல்லாம் ‘குடி குடி யைக் கெடுக்கும்’ என்பதாக ஏதோ வாசகம் வேறு திரையில் வந்து வந்து போகிறது.
ஒரு நல்ல கதைக்கருவை இப்படி வீணாக்க இத்தனை கோடிகள் செலவழிப்பதற்கு பதில் அந்தப் பணத்தை உருப்படியாக ஏழைச் சிறுவர்களுக்கான நலத்திட்டம் எதிலாவது முதலீடு செய்யலாம்.
அதுவும், எம்.ஜி.ஆர் – சிவாஜி ஒரே நேரத்தில் 10 பேரை அடித்துவீழ்த்தி வெற்றிபெற்றார் களென்றால் ரஜினி கமலஹாஸன் 100 பேர், சூர்யா தனுஷ் விஜய் 1000 பேர் என்ற ரீதியில் போய்க்கொண்டிருக்கிறது.
விஜய் தொலைக்காட்சியில் சும்மாவே கம்பு, கத்தி, கதாயுதன் என பலவற்றால் அடுத்திருப் பவரை அடித்து விளையாடுவது அத்தனை காமெடியாகத் திரும்பத் திரும்பக் காட்சிப் படுத்தப்பட்டுக்கொண்டே.
அவர்களுடைய கத்தியும் கம்பும் பிரத்யேக மாக காகிதத் தால் செய்யப்பட்ட தாயிருக்க லாம். அதைப் பார்த்து அதேபோல் நிஜக் கத்தியால் விளையாடக் கூடும் சிறுவர்கள், வளரிளம்பருவத்தினரை நினைக்க பயமா கவே இருக்கிறது.
அதைப்பற்றியெல்லாம் சின்னத்திரைக்கோ பெரிய திரைக்கோ என்ன கவலை.

DEAR FACEBOOK

 
DEAR FACEBOOK

There used to be a list of reasons given by you for reporting an uploading. Not that you always take prompt action if something is reported against. But, you do take prompt action sometimes.

But, of late clauses like 'Misinformation or Hate Speech ' are not there in the list of Reporting.
Why so? Are they not good enough reasons for reporting?

Don't they have any potential danger?

Encouraging all kinds of soft porno, porno shorts and long videos to have a free run in Facebook , isn't it kind of pretentious asking us to report about them?

சொல்லத்தோன்றும் சில.....

 சொல்லத்தோன்றும் சில.....

.........................................................................................................

மதமாற்றம் ஒருவருடைய தனிப்பட்ட உரிமை.
பல காரணங்களால் ஒருவர் மதம் மாறலாம்.
விரும்பியும் வலுக்கட்டாயமாகவும் வலுவான நம்பிக்கையாலும் வாழ்வியல்சார்ந்த தேவை களாலும்......
ஆனால் சமீபகாலமாக முகநூலில் மதமாற்றம் குறித்து சில படைப்பாளிகள் பரிந்துரை செய்து வருவதைப் படித்தறிய முடிகிறது.
அதற்கு அம்பேத்கரையும் துணைக்கழைத்துப் பதிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இப்படிப் பரிந்துரை செய்பவர்கள் மதம் மாறி யிருக்கிறார்களா என்று அறிய விருப்பம்.
மாறியிருந்தால் அதை தைரியமாக, வெளிப் படையாக அவர்கள் வெளியே சொல்கிறார் களா?
அம்பேத்கர் இந்துமதத்தைப் பற்றிச் சொன் னதை மட்டும் மேற்கோள் காட்டுபவர்கள் அவர் மற்ற மதங்களைப் பற்றிச் சொல்லியிருப்பதை ஏன் சௌகரிய மாகப் புறந்தள்ளிவிடுகிறார் கள்?
படைப்பாளிகள் தங்கள் எழுத்தில் நேர்மையாக இருப் பதே மற்றெல்லாவற்றையும்விட மிக முக்கியம் என்பது என் தாழ்மையான கருத்து.
Like
Comment
Send
Share

குழந்தைநலன் - குழந்தை உரிமை - பெரியவர்களாகிய நாம்

இன்னொரு டைம்லைனிலிருந்து தோழி பத்மினி கோபாலனின் FACEBOOK டைம்லைன்ல் பகிரப் பட்டிருந்த பதிவு இது. பத்திரிகைச் செய்தி.

இந்தச் செய்தி மிகவும் கவலையளிக்கிறது.

பெற்றோர்கள், ஆசிரியர்கள், மற்றவர்கள் எல்லோருக்குமே குழந்தைகளின் நலன், உரிமைகள், அவை சார்ந்த சட்டங்கள், உளவியல்சார் விவரங்கள் குறித்தெல்லாம் SENSITIZATION SESSIONS நடத்தவேண்டியது அவசர, அவசிய இன்றியமையாத் தேவை.

ஒருவர் - இன்னொருவர் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 ஒருவர் - இன்னொருவர்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
அவரைத் தூற்றிக்கொண்டேயிருந்தார் இவர்....
அவர் அல்ட்டாப்பு என்றார்;
அவர் அராஜகவாதி என்றார்;
அவரால்தான் பறவைகளால் பேசமுடியாமல் போனது என்றார்;
அவரால்தான் மீன்களால் தரையில் துள்ளிக்குதித்து விளையாட முடியவில்லை யென்றார்;
அவரால்தான் நட்சத்திரங்கள் பகலில் வெளிப்படுவ தில்லை யென்றார்;
அவரால்தான் முதுமையில் ஒருவருக்கு தோலில் சுருக்கங்களும் ஞாபகமறதியும் ஏற்படுகின்றன என்றார்.
அவர் அசிங்கம்பிடித்தவர் என்றார்;
அவர் ஆணவக்காரர் என்றார்;
அவர் நட்டு கழண்ட கேசு என்றார்;
அவர் நிராகரிக்கப்படவேண்டியவர் என்றார்;
'நன்றி நண்பரே – நாள்தோறும் என்னைப் பற்றியே எண்ணிக்கொண்டிருப்பதற்கும் பேசிக்கொண்டிருப்பதற்கும்' என்றபடி
தன்வழியே செல்லலானார்
அந்த இன்னொருவர்.

All reactions:

நேர்கொண்ட பார்வை - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 நேர்கொண்ட பார்வை

’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)


அவள் நல்லவளாகவே இருக்கக்கூடும்;
வல்லவளாகவும்கூட.
நடுவகிடு எடுத்துத் தலைவாரினாலும் சரி
கோணவகிடு எடுத்துத் தலைவாரினாலும் சரி
அவள் அழகென்றே அறியப்படத் தகுதிவாய்ந்தவளே.
அத்தனை சீக்கிரம் அழாத திட மனது வாய்க்கப்பெற்றவளாயிருக்கலாம் ;
அவரிவருக்கு அனேக உதவிகள் செய்பவளாயிருக்கலாம்;
முத்துமுத்தான கையெழுத்து வாய்த்திருக்கலாம் அவளுக்கு;
முதல் மதிப்பெண் பெற்றிருக்கக்கூடும் பள்ளி கல்லூரிகளில்.
பெற்ற குழந்தைகளுக்கு நற்றவத்தாயாயிருக்கக்கூடும்;
கற்ற வித்தைகளை காசு வாங்காமல் நாலுபேருக்கு சொல்லிக்கொடுக்கக்கூடும்;
கோனார் நோட்ஸ்ஸின் உதவியில்லாமலேயே பரிட்சைகளில் தேறியிருக்கக்கூடும்;
கோஹினூர் வைரத்தில் ஒட்டியாணம் அவள் நகைப்பெட்டியில் இருக்கக்கூடும்;
குழலிசைக்குரலுக்குச் சொந்தக்காரியாக.
இருக்கக்கூடும்;
கூடுவிட்டுக்கூடுபாயும் வித்தையைக்
கற்றிருக்கக்கூடும்;
ஆடலும் பாடலும் அறிந்திருக்கக்கூடும்;
அநாயாசமாய் ஆறுக்குமேல் பெரிய தோசைகளை சாப்பிடக்கூடும்.....
எப்படியிருந்தாலும் சரி _
தயவுசெய்து இப்படி எல்லாப் புகைப்படங்களிலும்
ஒருபுறமாய் தலையை சாய்த்து
சகிக்கமுடியாதவொரு கிறக்கப்பார்வை வீசியவாறே
’போஸ்’ கொடுக்கவேண்டாம்
என்பதே
மண்டியிட்டு தெண்டனிட்டு
அவருக்கு நான் சமர்ப்பிக்கும்
பணிவான கோரிக்கை.

ஓர் அதிசாதாரணக் கவிதையை அசாதாரணக் கவிதையாக்கும் வழிமுறைகள் சில…. 'ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 ஓர் அதிசாதாரணக் கவிதையை அசாதாரணக் கவிதையாக்கும் வழிமுறைகள் சில….

'ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
......................................................................................................

தேவைப்படும் பொருட்கள்:
• கொஞ்சம் சாம்பிராணி
• நான்கைந்து ஊதுபத்திகள்
• எதிரிலிருப்பவர் முகம் தெளிவாகத் தெரியாத
அளவு நிழலார்ந்த பகுதி
• பின்னணியில் நிறைய இலைத்திரள்களுடனான பெரிய மரம் அல்லது நீண்டுகொண்டே போகும் கடற்கரை மணற்பரப்பு
கூடுதல் குறிப்புகள்:
மரம் பட்டுப்போய்க்கொண்டிருக்கும் நிலையில் உள்ளதாக இருந்தால் மிகவும் நல்லது.
அல்லது
கடற்கரை மணற்பரப்பில் ஒரு குறிப்பிட்ட தொலைவிற்குக் கண்ணெட்டும்படியாக காலடித்தடங்கள் தெரியவேண்டும் –
தெளிவாகவும், மங்கலாகவும், இரண்டும் கலந்தும்.
புரியாத மொழியில் ஒரு பாட்டு சன்னமாக ஒலித்துக்கொண்டிருக்கட்டும்.
(புரிந்த மொழி என்றால் ஒருவேளை அது உங்கள் கவிதையை விட மேம்பட்டதாகப் புலப்பட்டுவிட வழியுண்டு. எதற்கு வம்பு).
திடீர்திடீரென்று உங்கள் தோள்களில் சிறகுகள் முளைத்து நீங்கள் பறக்கவேண்டும் (பயப்படவேண்டாம். நிஜமாக அல்ல; காணொளித் தொழில்நுட்பத்தின் உதவியுடன்).
ஒரு விஷயத்தில் நீங்கள் வெகு கவனமாக இருக்கவேண்டும் _
தரையில் நின்றிருந்தாலும் சரி, அந்தரத்தில் மிதந்துகொண்டிருந்தாலும் சரி உங்கள் கண்கள் மட்டும் அரைக்கிறக்க ‘பாவ’த்தில் அண்ணாந்து பார்த்தபடியே இருக்கவேண்டும்.
ஒரு வரியை வாசித்தவுடன் அரங்கிலுள்ளோர் பக்கமாகப் பார்வையைச் சுழலவிடுவது பழைய கவியரங்க பாணி.
நீங்கள் ஒரு வரியை வாசித்துமுடித்தவுடன் கைகளைக் கோர்த்துக்கொண்டு தலைகுனிந்து மௌனமாயிருத்தல் வேண்டும்.
கைத்தட்டலுக்கான இடைவெளி பலவிதம் என்று இத்தனை வருடங்களாக வாசித்துக்கொண்டிருப் பவர்களுக்குத் தெரியாதா என்ன?
இவர்களில் சிலருக்கு இன்னும் சிலபலவும் தெரியும் என்பதுதான் இங்குள்ள சிக்கல்.
இலக்கியத்தின்பால் உள்ள மெய்யான அக்கறையோடு இருக்கும் அவர்களுக்கு
தன்னை மறந்த பாவத்தை முழுப் பிரக்ஞையோடு தாங்கி என்னதான் அழகிய ‘prop’களோடு நீங்கள் இயங்கினாலும்
உங்கள் கவிதையில் எந்த அசாதாரணக் கவித்துவமும் இல்லையென்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக விளங்கிவிடும்.
அதைப் பெரிதுபடுத்தி வெளியே சொல்லாமலிருக் கும்வரை அவர்களைப் பொருட்படுத்த வேண்டாம்.
சொன்னாலோ அதிசாதாரணம் என்பதில் உள்ள ’தி’, ’சா’வுக்கு பதிலாக வந்துவிட்ட அச்சுப்பிழை என்று கூறத் தெரிந்திருக்கவேண்டும் எப்போதும்.
அதைவிட எளிதாக _
இன்று இலக்கியவாதிகளிடையே பெருகிவரும் எதிர்மறை முத்திரைகளில் ஒன்றைக்
(வலதுசாரி, அதிகார வர்க்கம், சாதித்திமிர், ஃபாசிஸம், நார்ஸிஸம் அன்னபிற பிற பிற பிற….)
கொண்டு அவர்களுக்குக் கரும்புள்ளி செம்புள்ளி குத்திவிடத் தெரிந்திருந்தால் போதும்.

பிரதி - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 பிரதி

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
.......................................................................


”எதற்கு ?
வேண்டாம் _
போதும்.”
உறவு முறிவின் அறுதிப்புள்ளியாய்
எழுத்தாளர் பிரதி;
கலவியின்பக் கிறக்கச்சிணுங்கலாய்
இருபதாயிரம் மைல்களுக்கப்பால்
சுயமைதுனஞ்செய்யும்
வாசகப்பிரதி;
கண்சிமிட்டிப் புன்சிரிக்கிறது
கவிதை
கன்னங்களில் நீர் படிய.