LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Thursday, June 9, 2022

அடிவானப்பறவை - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 அடிவானப்பறவை

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
தினமொரு சிறகிழையை மட்டுமாவது
எனக்காக உயரத்திலிருந்து மிதக்கவிடு என்று
பறவையைக் கேட்பது
பைத்தியக்காரத்தனம்…..
உயரத்தே ஒரு புள்ளியாகச் செல்லும் பறவை
யெலாம் தனதாய்க் கருதி
ஒரு சிறு சிறகுதிர்த்துச் செல்லாதாவென
சதா அண்ணாந்து பார்த்திருந்து
கழுத்துவலிக்கு அமிர்தாஞ்சனைத்
தடவிக்கொண்ட இடத்தில்
சுளீரென எரிவதில்
இரட்டிப்பாகும் இழப்புணர்வு.
இறங்கிவாராப் பறவையின் காலில்
அதற்கேயானதொரு மடலைக்
கட்டியனுப்பவும் இயலாது.
பறவைக்குப் படிக்கத் தெரிந்த மொழி
யெது?
மொழியே மனிதத்துயரின் மூலம் என்றால்
வழிமொழியுமோ பறவை?
பறவையின் அழகில் மனதைப் பறிகொடுத்ததோடு
அது எனக்கேயெனக்காய் பேசுமோ என்ற
எதிர்பார்ப்பும் சேர _
சிறகடித்துக்கொண்டிருக்கும் பறவையின்
ஆகாயமோ
விரிந்துகொண்டே போகிறது.
ஒருபோது சற்றே யப் பறவை தாழப்பறந்துவர
பேரதிர்வில் மனம் பிளக்க
’பச்’சென்று எச்சமிட்டுச் சென்றது பறவை
உச்சிமண்டையில்.
பச் எச் உச் மட்டுமே நிச்சயமான
மிச்சமாக….
அலகில் குச்சிபொறுக்கிச்செல்லக்கூடக்
கீழிறங்கிவராப் பறவையின் இறக்கைகளை
உடைமைகொள்ளும் வழி தெரியாமல்
அழப்பழகும் மனதிற்கு
சிறகிலாப் பறவையை ஒருநாளும்
பார்க்கப் பிடிப்பதில்லை.

உறக்க அரசியல் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 உறக்க அரசியல்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
தூக்கத்தில்தான் எத்தனையெத்தனை
வகைகள்!
குட்டித் தூக்கம்
கோழித்தூக்கம்
கும்பகர்ணத் தூக்கம்….
அப்பிய ஒப்பனைகளோடு
வெளுப்புப்பெண்களே கதாநாயகிகளாய் _
கதாநாயகிகளின் தங்கைகளாய்
தோழிகளாய்
திடீரென பூங்காவில் தட்டாமாலை சுற்றும்
கல்லூரி மாணவிகளாய்_
கண்கொத்திப் பாம்பாய் கதாநாயகனைக்
கவ்விச்செல்லக் காத்திருக்கும்
வில்லியாய்_
காபரே நாட்டியக்காரியாய்_
கணநேரமே கூட்டத்தில் முகங்காட்டும்
கைங்கரியக்காரியாய் என _
கட்டங்கட்டிக் காட்டும்போதெல்லாம்_
பார்த்துப்பார்த்து அண்டை அயல்
மாநிலங்களிலிருந்து
அறிமுகஞ்செய்யும்போதெல்லாம் _
அக்கடா வென்று பார்த்துக்
கொண்டிருந்தவர்கள்
இத்தனை ஆண்டுகளாக
எக்கேடோ கெட்டுப்போகட்டும்
என்றிருந்தவர்கள்
இன்று
இயல்பான தேன்கருநிறப் பெண்கள்
தமிழ்ப்படக் கதாநாயகிகளாகாதது ஏன்
என்று
துடித்தெழுந்து கேட்கும் கேள்வியின்
வரியிடை வரிகளாய்
படரும்
காரியார்த்தமான
பொய்த்தூக்கமும்
பொய்விழிப்பும்
போல் வேறும்.........

வாசிப்பு - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 வாசிப்பு

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

கவிதைவாசிப்புக்காணொளியொன்றில்
யாருடையதோ ஆவியின் குரல்
கவிதையை வாசித்துக்கொண்டிருந்தது.
அரண்டுபோய் இன்னொரு கவிதைவாசிப்புக்
காணொளிக்குச் சென்றால்
அங்கே கிசுகிசுப்பாய் வாசிக்கும் பிரயத்தனத்தில்
ஒரு குரல்
நெடுநாள் நோயாளியொருவரின் பலவீனமாய்
பாதிச்சொற்களைக் காற்றுக்குத்
தத்தம் செய்து
கவிதையின் கருப்பொருளை
மொத்தமாய் காலிசெய்தது.
ஒருவரிடமுள்ள காதலின்
லயிப்பையும் உயிர்ப்பையும் பேசும்
கவிதையை
பார்க்குமெல்லோரிடமுமான காமமாக்கிக் கிறங்கிக்கொண்டிருந்தது
இன்னொரு காணொளிக்குரல்.
தெளிவு என்ற பெயரில்
ஒரு சொல்லுக்கும் மறுசொல்லுக்குமிடையே
மாமாங்கத்தை விரிப்பதான கால அளவில்
மிக மிக நிதானமாய் வாசித்துக்கொண்டிருந்த
குரலில்
ஓடிவந்து ஆரத்தழுவ முடியாதபடி காதலி முதுமையடைந்துகொண்டிருந்தாள்.
அரற்றல், கேவல், பிளிறல், வீறிடல்,
அடிவயிற்றிலிருந்தெழும் ஆங்காரவோலம்
அனைத்துமனைத்தும் பனிமூட்டத்துக்
குள்ளிருந்து
தெரியும் வடிவங்களாய்…….
அந்தரவெளிப் பயணக் கொந்தளிப்புமொரு
எந்திரத்தொனியில் வெளிப்படுவதே
நயத்தக்க கவிதைவாசிப்பாக…….
சுயமழிந்தும் சுரீர்க்கூர்மையடைந்தொரு
சூட்சுமவுயிராகியும்
ரசவாதம் நிகழவேண்டி
தனியறையோரம் அமர்ந்து
தனது வானவில்லின் மீதிருக்கும்
முள்ளிலும் மலரிலுமாய்
எதிரொலிக்கும் கவிதையை
வாசிக்கும்போது
அதெப்படியோ
அத்தனை இசைவாத்தியங்களும்
அத்தனை இயற்கைக் காட்சிகளும்
அத்தனை கனகச்சிதமாய்ப் பொருந்தி
இழைந்தோட _
நோயும் மருந்துமாகும் கவிதையில்
ஊடுபாவும் நானும்
குழைந்துருகிப் பெருகிவழிந்தோட……

சொல்லத்தோன்றும் சில லதா ராமகிருஷ்ணன்

 சொல்லத்தோன்றும் சில

லதா ராமகிருஷ்ணன்
ஆண்களில் நயவஞ்சகர்களும் உண்டு; நல்லவர்களும் உண்டு.
இப்பொழுதெல்லாம் நாளிதழைத் திறந்தால் தந்தை, மாமா, தாத்தா, சித்தப்பா, அண்ணன் என்று வீட்டிலுள்ள சிறுமியை, வளரிளம்பெண்ணைப் பாலியல்ரீதி யாகத் துன்புறுத்தியிருக்கும் செய்திகளை அடிக்கடி படிக்க நேர்கிறது.


பெண் களுக்கெதிரான வன்கொடுமைகளுக்காகக் களத் தில் போராடுபவர்கள், இது குறித்த ஆய்வலசல்கள் மேற் கொள்வோர் குடும்பங்களுக்குள், உறவுக்காரர்களால் பெண்கள் மீதான பாலியல் அத்துமீறல்கள் அதிகம் என்று சுட்டிக் காட்டுகிறார்கள்.
ஆணவத்தால் நிகழ்த்தப்படும் பாலியல் வன்புணர்வுக ளைப் போல் இப்போது அதைப் படம்பிடித்து விற்றுக் காசுபார்க்கும் காரணத்திற் காகவும் நிறைய வன்புணர்வு கள் அந்நிய ஆண்களாலும், அந்நியோன்யக் காதலர்களா லும், அக்கம்பக்கத்துக் காமுகர்களாலும், வீட்டுப்பெரிய வர்களாலும்(?) நிகழ்த்தப்படுகின்றன என்று செய்திகள் வருகின்றன.
அதேசமயம். இதைப் பொதுமைப்படுத்திப் பேசிவிட முடி யாது; பேசிவிடலாகாது. வீட்டு ஆண்களே இப்படித்தான் என்று காமாலைக் கண்களோடு எல்லா ஆண்களையும் பார்ப்பதோ, அப்படிப் பார்த்து அஞ்சும்படி வீட்டிலுள்ள சிறுமிகளைச் செய்துவிடுவதோ சரியல்ல.
எனக்குத் தெரிந்த தபால்காரர் ஒருவர் தனது மூன்று குழந்தைகளையும் – அவர்களில் இருவர் பெண்கள், தனது 95 வயதுத் தாயையும் அத்தனை அக்கறையாகப் பார்த்துக்கொள் கிறார்.
சில வருடங்களுக்கு முன்பு மனைவி இறந்துவிட்டார். அவர் நோய்வாய்ப் பட்டிருந்தபோது செலவை சமாளிக்க வெற்றுக் காசோலைகளில் கையெழுத்திட்டு வாங்கிய கடன் இன்று அவரை அப்படி வாட்டிக்கொண்டிருக்கிறது.
எல்லா சம்பளத்தையும் வட்டி, முதலை வசூலிக்கிறோம் என்ற பெயரில் எப்போதோ அடைந்துவிட்ட கடனுக்காக இப்போதும் வெற்றுக் காசோலைகள் மூலம் அவருடைய சம்பளத்தை நினைத்தபோதெல்லாம் வழித்தெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த மாதிரி சமயங்களில் இரவில் எங்காவது பெயிண்ட் அடிக்கும் வேலை என்று ஏதாவது செய்வது வழக்கமாம்.
கேசு, கோர்ட்டு என்று அலைந்துகொண்டிருக்கிறார். தெலுங்கு அவருடைய மொழி. குழந்தைகளை ஆந்திரா வில் உள்ள பள்ளி விடுதியில் சேர்த்திருக்கிறார்.
தாய்க்கு 95 வயது. இப்போதும் ஊரில் இட்லி சுட்டு விற்கி றாராம்!.
தபால்காரத் தோழருக்கு சென்னையிலிருந்து மாற்றல் கிடைக்கவில்லை. தெலுங்குப் பள்ளி அதிகம் சென்னை யில் இல்லையென்பதால் அவருடைய பிள்ளைகளை இங்கே படிக்கவைக்கமுடியாத நிலை.
கடந்த வருடம் விடுமுறையில் சென்னைக்கு வந்திருந்த பெரிய மகள் வயதுக்கு வந்துவிட, ஊரிலிருக்கும் தாயாரி டம் தொலைபேசி இல்லையென்பதால் இரவு எனக்கு போன் செய்து என்ன செய்வது என்று கேட்டார். சில ஆலோசனைகள் கூறினேன். சென்னையில் அவர் வீடு எங்கேயோ தொலைவில். அங்கிருந்த பெண்கள் வந்து உதவினார்களாம்.
பிள்ளைகளைப் பார்க்க ஆறுமாதங்களுக்கு ஒருமுறை அவர் ஊருக்குப் போகும்போதெல்லாம் தெருவிலுள்ள சில வீடுகளில் புதிய, பழைய துணிமணிகள், முடிந்த பணம் என்று கொடுத்தனுப்புவோம்.
பலவீனமான உடல் அவருக்கு. ஆனால், ஒரு மகனாக, தகப்பனாக அவருடைய பாசமும் நேசமும் அத்தனை உறுதியானது!
அவருடைய கடன் தொல்லை தீர்ந்து அவருக்கு எப்படி யாவது ஆந்திராவுக்கு மாற்றல் கிடைக்கவேண்டும் என்பது என் என்றுமான பிரார்த்தனைகளில் ஒன்றாய்…...

நிழலரசர்களின் நீதிபரிபாலனம் ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 நிழலரசர்களின் நீதிபரிபாலனம்

’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)



அன்றன்றைய காலைக்கடன்கள்
மதியக்கடன்கள்
மாலைக்கடன்களை
முழுவதுமாய் முடித்தவர்கள்
அரைகுறையாய் முடித்தவர்கள்
அன்றைய இரவுக்கடன்களில் ஒன்றான
இணையவழிக் கலந்துரையாடலுக்காய்
அவரவர் வீட்டுத்திண்ணையில்
அமர்ந்துகொண்டனர்.
திண்ணையில்லாத வீடுகளிலிருந்தவர்கள்
சிறிதும் பெரிதுமான மர, மூங்கில்,
ப்ளாஸ்டிக் நாற்காலிகளில்....
சிலர் வீட்டினுள்ளிருந்த தூணோரங்களில்
சிலர் வெளிவாயிலிலிருந்த மரத்தடிகளில்
சிலர் கட்டிலின் தலைமாட்டில்
சிலர் காம்பவுண்டை அடுத்திருந்த
ஓரளவு பெரிய கருங்கற்களில்
அடுத்திருந்த பூங்காக்களின்
சிமெண்டுபெஞ்சுகளில்....
எதிலமர்ந்திருந்தாலுமது
ஆன்றஅரியணையாய்….
செங்கோலைப் பிடித்திருப்பதாய்
கீழே கிடந்த சுள்ளியைக் கையிலெடுத்து
ஆட்டியாட்டிப் பேசிக்கொண்டிருந்தார்கள்
அல்ல, கோலோச்சிக்கொண்டிருந்தார்கள்.
’கையில் கிடைத்தவர்களை சிரத்சேதம்
செய்வதில்தான் எத்தனை சுகம்!’
என்று தனக்குள் சொல்லிக்கொண்டார்
ஒரு சிற்றரசர்
சத்தமாய் சிரித்தவாறே
சலாம் போடாத பறவைகளின் சிறகுகளையும்
அறுத்தெறிய வேண்டும்
என்றார் அண்டை சமஸ்தானத்து மன்னர்.
ஆமாம், ஆனால் பறவைகளைச்
சிறைபிடிப்பது எப்படி
என்று புரியாமல் கேட்டார்
ஒரு குறுநில மன்னர்.
வலையில்லையா வில்லில்லையா
கவண் இல்லையா கல் இல்லையா
கவலையெதற்கு என்றார்
பரிவோடொரு பேரரசர்.
காலத்திற்கேற்றார்ப்போல் நம் உத்திகளை
மாற்றிக்கொண்டாகவேண்டும்
பறவைபோல் வேடம் தரித்து
பறவைகளிடம் நட்புறவாடி
பின் வெட்டிவீழ்த்தல் எளிதல்லவா
என்று புருவமுயர்த்திப் பேசிய
புத்திசாலி ராஜாவிடம்
’பறக்கமுடியாதே’ என்று நியாயமாகக் கேட்ட
சக அரசனை
அருகிலிருந்தவர்கள் அரியணையிலிருந்து
தள்ளிவிட்டு
வெளியே இழுத்துச்செல்லுமாறு
வாயிற்காவலருக்கு
உத்தரவு பிறப்பித்தனர்.
புத்தியால் தப்பிப்பிழைத்தேன் என்று
கத்திக்கொண்டே ஓடிமறைந்தா ரவர்.
அத்தனை நேரமும் பறவைகள்
பறந்துகொண்டேயிருந்தன.
அவற்றை சிறைபிடிக்கமுடியாமல்
இல்லாத நாடுகளின் சக்கரவர்த்திகள்
அழகு காட்டினார்கள்
அசிங்கமான வார்த்தைகளால்
திட்டித் தீர்த்தார்கள்
ஆங்காரமாய் கைகளை யுயர்த்திக்
காற்றில் அறைந்தார்கள்
அவலட்சணமாய் பறவையை
கேலிச்சித்திரம் வரைந்தார்கள்.
ஒரு தூதுமடலையும் எடுத்துச்
செல்லத் தோதாய்
கீழிறங்கிவராத பறவைக்கு
எத்தனை மண்டைகனம் என்று
கீழ்க்குரலில் கறுவினார்கள்.
’பாழ்வெளியில் பறந்தலையும் ஃபாஸிஸ்ட்’
என்ற பட்டத்திற்குரியது பறவையே
எனச் சொன்னவரிடம்
அவைநீக்கம் செய்யப்பட்டுவிடக்கூடிய
அபாயம் விளைவித்த
நடுக்கத்தோடு
விளக்கம் கேட்டார் அடுத்திருந்தவர்.
தன்பாட்டில் சற்றே தாழப்பறந்து
கொண்டிருந்த
ஒரு பறவையின் கீச்சுக்குரல்
அசரீரியாய் முழங்கியதில்
அரியணைகள் அரசிழந்துபோக _
எஞ்சியுள்ள இரவுக்கடன்களைக்
கழிக்க
எல்லோரும் கலைந்துசென்றனர்.

கேட்கமுடியாத, கேட்காமலிருக்கமுடியாத கேள்விகள் சில….

 கேட்கமுடியாத,

கேட்காமலிருக்கமுடியாத
கேள்விகள் சில….



_ லதா ராமகிருஷ்ணன்

நிர்பயா கூட்டுப்பாலியல் வன்முறைக்கு ஆளான நிகழ்வு ஆறாத்துயரம்.

நேற்றோ, இன்றோ நாளையோ ஒரு பெண் இத்தகைய கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு அவருக்கு நீதி கிடைக்க வில்லையானால் அது குறித்துக் கண்டனம் எழுப்பலாமே தவிர, நிர்பயா மேல்சாதியினப் பெண் என்றும்(இது உண்மை யல்ல) அதனால்தான் அவருக்கு நீதி கிடைத்தது என்றும் ‘வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாய்’ திரும்பத்திரும்ப நிர்பயாவுக்கு நேர்ந்த கொடுமை யைப் புறந்தள்ளிப் பேசுவது என்னவிதமான சமூகப் பிரக்ஞை? என்னவிதமான பெண்ணியப் பிரக்ஞை?

ஆபாசமாக எழுதுகிறார் என்று ஓர் எழுத்தாள ரைக் கட்டங்கட்டி ‘ஆள்காட்டிக்’ கொடுப்பதாய் அந்த எழுத்தா ளரின் ஒரு புதினத்தில் இடம் பெறும் பகுதிகளை ‘out of context’இல் நிலைத் தகவலில் பகிர்வதும், அப்படிப் பகிர்வதன் மூலம் ஆபாசமெனக் கட்டங்கட்டிய அதே பகுதிகளைத் தன் நிலைத்தகவலில் தந்து அதைப் பலரும் படிக்கச் செய்வதும் என்னவிதமான சமூகப் பிரக்ஞை? என்னவிதமான பெண்ணியப் பிரக்ஞை?

குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை சாதி பார்த்து கட்டங்கட்டி அடிப்பது என்னவிதமான சமூகப்பிரக்ஞை? என்னவிதமான பெண்ணியப் பிரக்ஞை?

அவரவர் அந்தரங்கம் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 அவரவர் அந்தரங்கம்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)


காதல் எப்படி நிகழும்
காதலில் என்ன நிகழுமென்று
காதலிப்பவர்களுக்கும் தெரியும்
காதலைக் காதலிப்பவர்களுக்கும் தெரியும்
இருந்தும்
குறுகுறுவென்று பார்த்தாரா
குறும்புப்பேச்சுகள் பேசினாரா
கட்டியணைத்தாரா
கன்னத்தில் முத்தமிட்டாரா
கட்டுக்கட்டான கடிதங்களில் கலவிசெய்தாரா
என்று கேட்டுக்கொண்டே போன தோழியை
குறுக்கிட்டுத் தடுத்தவள்
”அந்தரங்கம் புனிதமானது” என்றாள்.
காலங்கடந் தொரு நாள்
தன் காதலன்
குறுகுறுவென்று பார்த்ததை
குறும்புப்பேச்சுகள் பேசியதை
கட்டியணைத்தை
கன்னத்தில் முத்தமிட்டதை
கட்டுக்கட்டான கடிதங்களில்
கலவிசெய்ததை
கட்டுரைகளாக
நினைவுக்குறிப்புகளாக
Autofictionகளாக
கிடைத்தவெளிகளிலெல்லாம்
அம்பலமேற்றத் தொடங்கியவளைப் பார்த்து
அப்படியானால் இப்போது என் புனிதம்
கெட்டுப்போய்விட்டதாவென
அப்பிராணியாய்க் கேட்கிறது
அந்தரங்கம்.

மாறுவேடப்போட்டிகளும் மகோன்னத ஞானவொளிகளும் ‘ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 மாறுவேடப்போட்டிகளும்

மகோன்னத ஞானவொளிகளும்
‘ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

தூதனுப்பவும் மடலனுப்பவும்
புறாக்களைத் தேடவேண்டிய தேவையில்லை.
மன்னர் மட்டும்தான் இரவில் மாறுவேடமணிந்து
நகர்வலம் வரவேண்டுமா என்ன?
சிசிடிவி இருப்பது தெரிந்தும் ஏடிஎம்களில்
கொள்ளைகள் நடந்தவாறே -
இல்லையா?
கிழக்கே போகும் ரயில்கள் திசைமாறக்கூடும் எனவும்
பாஸஞ்ஜர் ரயில்கள் துரித வண்டிகளாகிவிடக்கூடும் எனவும்
ஞானத்தைப் பெற
போதிமரங்களைத் தேடி அலையவேண்டியதில்லை.
பட்டறிவே போதுமானது.
பாதரசமொரு மகோன்னதக் குறியீடு
என்றாலும்
பூனை கண்ணை மூட இருண்டுவிடும் உலகம்போல்
சுலக்ஷணா சுவர்ணலட்சுமியாவதும்
சுத்தமாய் தன் பாலடையாளம் மாற்றிக்கொள்வதும்
பிறந்த தேதி அதுவேயாகவும்
பிறந்த மாதம் வேறாகவும்
தனக்குத்தானே புதிய பிறப்புச்சான்றிதழ் அளித்துக்கொள்வதும் –
அறிவாளிகளும் முட்டாளாகவும்
அறிவாளிகளை முட்டாளாக்கப் பார்க்கவும்
விரிவெளி அமைத்துத் தருவதற்கு
இருக்கவே இருக்கிறது ஃபேஸ்புக்.

Tamil serials are horrible and highly anti-woman.

                Tamil serials are horrible 

and highly anti-woman.


Tamil serials are horrible and highly anti-woman. But these days no voice is raised against these even by feminist groups. 

Serials are more dangerous than cinema, for cinemas at least if only we go to the theatre we can see or even if seeing it at home it will be over in two hours, but serials go on and on and on - this is sheer hell and it impacts the adolescents at home in every possible manner. 

And, they determine the equations between men and women and between various relationships. These serial-makers have no social consciousness or social responsibility at all and they churn out stories highly detrimental to a healthy society. 

They decry women's liberation, they decry equality, they uphold all kinds of age-old unwanted social values. It is high time some serious thought was given about these social maladies called serials, nay, mega serials. 

They are a menace to the growth and development of human race, so to say.