LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Saturday, July 24, 2021

வாக்களிப்பீர்….. ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 வாக்களிப்பீர்…..

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
வாக்குச்சாவடிக்குப் போய்க்கொண்டிருந்த என்னை வழிமறித்து
யாருக்கு உங்கள் ஓட்டு என்று கேட்டார்.
எனக்குப் பிடித்த கட்சிக்கு என்றேன்.
எந்தக் கட்சி உங்களுக்குப் பிடிக்கும் என்று கேட்டார்.
நான் வாக்களிக்கவுள்ள கட்சி என்றேன்.
சாமர்த்தியமாக பதிலளிப்பதாக எண்ணமோ என்று எரிச்சலுடன் கேட்டவரிடம்
அப்படி எண்ணுவது நீங்களே என்று முன்னேகினேன்.
விடாமல் பின்தொடர்ந்தவர்
சிந்திக்கத் தெரிந்தவர்கள் இந்தக் கட்சிக்குத்தான் வாக்களிப்பார்கள்
என்று ஒரு குறிப்பிட்ட கட்சியின் பெயரைச் சொன்னார்.
நான் சிந்திக்கத் தெரியாதவள் என்றேன்.
சமூகப்பிரக்ஞை மிக்கவர்கள் இந்தக் கட்சிக்குத்தான் கட்டாயம் வாக்களிப்பார்கள் என்று
குறிப்பிட்ட அதே கட்சியின் பெயரைச் சொன்னார்.
நான் சமூகப்பிரக்ஞையில்லாதவள் என்றேன்.
சாமர்த்தியமாக பதிலளிப்பதாக எண்ணமோ என்று எரிச்சலுடன் கேட்டவரிடம்
அப்படி எண்ணுவது நீங்களே என்று முன்னேகினேன்.
விடாமல் பின்தொடர்ந்தவர்
மனசாட்சிப்படி வாக்களிப்பவர்கள் இந்தக் கட்சிக்குத்தான் வாக்களிப்பார்கள் என்று குறிப்பிட்ட அதே கட்சியின் பெயரைச் சொன்னார்.
நான் மனசாட்சியில்லாதவள் என்றேன்.
தன்மானமுள்ளவர்கள் இந்தக் கட்சிக்குத்தான் வாக்களிப்பார்கள் என்று
குறிப்பிட்ட அதே கட்சியின் பெயரைச் சொன்னார்.
நான் தன்மானமற்றவள் என்றேன்.
ஆக, இந்தக் கட்சிக்குப் போடப்போவதில்லை, அந்தக் கட்சிக்குத் தான் போடப்போகிறாய். அப்படித்தானே என்றார்.
இது ரகசிய வாக்கெடுப்பு. எந்தக் கட்சிக்கு என்று நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதில்லை என்றேன்.
சிந்திக்கத் தெரியாது, சமூகப்பிரக்ஞை கிடையாது மனசாட்சியில்லை தன்மானமும் இல்லை பின் எதற்கு
பூமிக்கு பாரமாய் வாழவேண்டும் நீ என்றவரிடம்_
எல்லாமிருந்தும் வெறுமே ஒரு கட்சியின் விளம்பரப்பதாகையாய்
வரிந்து வரிந்து எழுதிக்கொண்டிருக்கும் நீங்கள் வாழும்போது
நான் வாழ்வதால் பெரிதாய் என்ன பாழாகிவிடப் போகிறது என்று
நிறுத்தி நிதானமாய்க் கேட்க _
எரித்துவிடுவதாய் என்னைப் பார்த்தவர்
பெருகும் சினத்தில் எனக்கான மனப்பாட வசைபாடலை மறந்து
தன் விளம்பரப்பதாகையோடு விறுவிறுவெனச் சென்றுவிட்டார்.

'அவா' ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 'அவா'

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)


அவாவை நானாகிய இந்தப் பிரபஞ்சத்திலிருந்து
புறந்தள்ளும் அவாவிலேயே
அவாவை அறம்பாடுகிறேன் என்றார்.

அவாவைப் புறந்தள்ளியாகிவிட்டதா
தள்ளிக்கொண்டிருக்கிறீர்களா,
தள்ளப்போகிறீர்களா என்று கேட்டதற்கு
அவா இருந்தால்தானே அவாவைத் தள்ளவோ
கொல்லவோ முடியும் என்றார்.

அவா மட்டும்தான் புறந்தள்ளப்படவேண்டியதா
என்று வினவியதற்கு
அவாவே அனைத்துத் தீமைகளுக்கும் அடிப்படை என்றார்.

அப்படியுரைப்பதொரு குத்துமதிப்பான கருத்தல்லவா,
ஒட்டுமொத்தமான பொறுப்புத்துறப்பல்லவா என்றதற்கு
அப்படியிப்படி எக்குத்தப்பாய் ஏதேனும்கேட்டாலோ
கரும்புள்ளி செம்புள்ளி அப்பிவிடுவேன் அப்பி என்று
காறித்துப்பாத குறையாய். காதில் அறைந்தார்.

தப்பித்தேன் பிழைத்தேன் என்று ஓடாமல்
அப்படியேே நின்று
அவாவுக்குத் தனித்தனி உருவமுண்டா
அல்லது அதுவொரு மொந்தையா என்று கேட்டதற்கு
வேண்டும்போது அதை மொந்தையாக்கிக்கொள்ளலாம்;
தனித்தனி உருவமாக்கிக்கொள்ளலாம்.
அவாவைப் புறந்தள்ள என்ன தேவையோ
அதை செயல்படுத்துவதே நமக்கான சவாலாகட்டும் என்றார்.

அவா புறந்தள்ளப்படவேண்டியது என்றால்
பின் ஏன் நீங்கள் அவ்வப்போது
ஓர் அவாவுடனிருக்கும் படத்தைப் பதிவேற்றுகிறீர்கள்
என்று கேட்டதற்கு
அவாவில் சின்ன அவா பெரிய அவா உண்டல்லவா
எளியதை உதறித்தள்ளி வலியதைக்
கைக்கொள்ளுவதே
அவா தொடர்பான ஆகப்பெரும் சூத்திரம்
என்றார்.

உங்கள் வாழ்வில் அவாவின் பாத்திரம்தான் என்ன
என்று கேட்டதற்கு
அவா எனக்குக் கிடைத்திருக்கும் ஜோக்கர் சீட்டு,
என்றார்.

குவா தவா சிவா ரவா போல்
அவாவும் வேண்டும்
அன்றாட வாழ்க்கைக்கு சுவாரசியம் சேர்க்க
என்று பாடிக்கொண்டே வேகமாய்ச் சென்றவரின் முதுகில் பளிச்சிட்ட கண்களில்
கண்ட
அவா மீதான வெறுப்பு
அவரை மெகா துறவியாக்க _

அவாவை சபிக்கும் அவாவில் அவர்
அவாஞானியென்ற அடைமொழிக்குரியவராக…..

இருபத்தியேழாயிரத்து முக்காலே அரைக்கால் வார்த்தைகளில் எழுதப்படவேண்டிய குறுநாவல் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 இருபத்தியேழாயிரத்து முக்காலே அரைக்கால் வார்த்தைகளில் எழுதப்படவேண்டிய குறுநாவல்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
குறுநாவல் போட்டியொன்று அறிவிக்கப்பட்டிருந்தது.
கலந்துகொள்வதற்கான நிபந்தனைகள் அழுத்தமான எழுத்துருவில் அடிக்கோடிடப்பட்டிருந்தன.
அவற்றிலொன்று குறுநாவல் மொத்தம் இருபத்தியேழாயிரத்து முக்காலே அரைக்கால் வார்த்தைகளுக்கு மேல் இருக்கக்கூடாது
என்று கறாராய் கூறியிருந்தது.
அதில் கலந்துகொள்ள ஆர்வமுற்றவன்
தனது கதையின் கதை, பாத்திரங்கள், நிகழ்வுகள்,
சந்தர்ப்பசூழல்கள், திடீர்த்திருப்பங்கள்
எல்லாவற்றையும் வார்த்தைகளின் எண்ணிக்கையாய் மட்டுமே
பார்த்தும் வார்த்தும் கோர்த்தும் போர்த்தும்
எழுதிமுடித்தான்.
பழுதடைந்திருந்தாலென்ன பரிசுவென்றால் போதும்
என்ற மனநிலை பக்குவமா பெருந்துக்கமா
என்ற வரிகளும் அவற்றின் வார்த்தைகளும்
போட்டிக்கான சட்டதிட்டங்களுக்கு அப்பால்
அந்தரத்தில் ஊசலாடியபடி…..




கதையும் விடுகதையும் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 கதையும் விடுகதையும்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
என்னை எழுதேன் என்று வேண்டிக் கேட்கிறது.
என்னை எழுத மாட்டாயா என்று கெஞ்சலாய்க் கேட்கிறது.
என்னை எழுதித் தீர்த்துவிடேன் என்று நாத்தழுதழுக்க அது கூறும்போது
என் கண்களில் நீர் குத்தாமல் என்ன செய்யும்?
’இன்னும் அருவமாகவே நிற்கும் உன்னை
என்னவென்று எழுதுவது?’ என்று கேட்கத்தோன்றியும்
கேட்காததற்குக் காரணம்
அதன் கண்களில் கொப்பளிக்கும் கையறுநிலை.
அந்த அவலநிலையைக் கண்கொண்டு காணும்
கொடுமனம் வாய்க்காததால்
அரைவட்டமொன்றை வரையத் தொடங்கினேன்.
எத்தனை அரைவட்டங்கள்!
ஒவ்வொரு அரைவட்டமும் இன்னொன்றோடு
இரண்டறப் பொருந்தி முழுவட்டமாகாமலே
இன்னுமின்னுமாய் அரைவட்டங்களையே
வரைந்தவண்ணமிருக்கும்
கையின் முழுமை
காட்டுப்பாதையில் வழிதொலைத்த
குட்டிப்பெண்ணின் அழுகையாக….
அவளைப் பின் தொடரும் வரிக்குதிரை
ஒட்டகத்தின் உயரத்திலும்
முன் இடரும் முட்புதர்
மலரின் மென் நயத்திலும்
இருக்க _
கருக்கல் கட்டியங்கூறும் பகலின் இருட்டு
பழகப்பழக _
அழமறந்து அண்ணாந்து
மரங்களையும் மந்திகளையும் விழியகலப் பார்த்து ரசித்தவாறே
காற்றில் தன் முகவரியை எழுதியனுப்பிக்கொண்டிருக்கிறாள்
சிறுமி.







சொல்லும் செயலும் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 சொல்லும் செயலும்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

நேற்று ஒரு நெடுஞ்சாலையோரம் நளினமாய் நடந்தபடியிருந்த
தன் படத்தைப் பதிவேற்றினாள்
(அல்லது) பெண் படத்தைப் பதிவேற்றினார்.

நூறுX10 லைக்குகளாவது விழுந்திருக்கும்.
நேற்று முன் தினம் அவளால் (அல்லது) அவரால்
பதிவேற்றப்பட்டிருந்த படத்தில்
நல்ல அரக்குவண்ண சேலையில்
அதி ஒயிலாய் தான் (அல்லது) அவள்
நின்றிருந்த விதம்
புதிய புடவைக்கடையொன்றின் விளம்பரத்தை நினைவுபடுத்தியது.

போன வாரம் அவள் (அல்லது) அவர்
பதிவேற்றியிருந்த படத்தில்
அண்ணாந்து வானத்தைப் பார்த்தபடி
காதல்பொங்கச் சிரித்துக்கொண்டிருந்த
தன் (அல்லது) பெண் படத்தில்
பக்கவாட்டு முகம் ஒளிவட்டமொன்றில்
ஆளை மயக்கும் ஆயத்தச் சிரிப்பொன்றை
கவனமாய் அப்பிக்கொண்டிருந்தது.

’மேக்கப்
தூக்கலாகவே….

இரண்டுநாட்களுக்கொருமுறை சிகையைக்
கலைத்தும் முடிந்தும்
சிறு சிறு பிரிகளாக நெற்றிப்பொட்டுகளில்
அலைபாயவிட்டும்
தோள்களிலிருந்து ஆரமாகத்
தொங்கவிட்டுமிருக்கும்
தன்னுடைய ஏராள பிம்பங்களைத்
துல்லியமாக்கிப் பதிவேற்றத் தவறுவதில்லை அவள்
(அல்லது) பெண்ணுடைய ஏராள பிம்பங்களைத்
துல்லியமாக்கிப் பதிவேற்றத் தவறுவதில்லை அவர்.

தவறேதுமில்லைதான்……
இருந்தும்
திறந்தவெளி அரங்கத்திலோ
திரையிட்டு மூடிய கதவங்களுக்குள்ளாய்
விரிந்துபரந்திருக்கும் மேடையிலோ
’பெண் என்பவள் வெறும் அழகுப்பொருளல்ல’
என்று திரும்பத்திரும்ப
அவள்
(அல்லது)
அவர்
(அல்லது)
அவர்கள்
உரக்க முழங்குவதைக் கேட்க
ஏனோ அவமானமாய் உணர்கிறது மனது.

கேள்வியும் பதிலும் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 கேள்வியும் பதிலும்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

தன்னிடம் எழுப்பப்படும் கேள்விகளுக்காய்
தவமியற்றாத குறையாய்
காத்திருக்கத் தொடங்கினார்.
சத்தமாய் தன்னை நோக்கிக் கேட்கப்படும் கேள்விகள்
சத்தற்றவையாக இருந்தால் என்ன?
பொத்தாம்பொதுவாய் இருந்தால் என்ன?
மொத்த விற்பனைத்தனமாயும் சில்லறைவிற்பனை ரீதியிலும்
வாழ்க்கைத் தத்துவங்களாய் வெத்துமுழக்கங்களைத்
தந்துபெறும் விதமாய் கேட்கப்பட்டால்தான் என்ன?
அந்தரத்தில் வந்தமர்வதாய் ஆன் – லைனில்
அவரிடம் அனுப்பப்பட்டுக்கொண்டேயிருக்கும் வினாக்களில்
அவரே சில பெயர்களில் ஒளிந்துகொண்டிருப்பவை
அதிகம் போனால் நாற்பது இருக்கும்.
அதனாலென்ன?
ஒரு மனிதருக்குள் குறைந்தபட்சம் இருவராவது இருப்பார்களல்லவா?
குகைக்குள் சிறைவைக்கப்பட்டிருக்கும் கிளியில் இருக்கும்
ராஜகுமாரியின் உயிர்போல்
தன்னிடம் எழுப்பப்படும் கேள்விகளின் எண்ணிக்கையில்
தனதுயிர் அழுகுவதும் துளிர்ப்பதும் அடங்கியிருப்பதாகக்
கருதியவருக்குப் புரிந்தது ஒருநாள் _
தன்னால் தொடுக்கப்படும் கேள்விகளின் எண்ணிக்கையில்
தனதுயிர் அழுகுவதும் துளிர்ப்பதும்
அடங்கியிருப்பதாக
வினா தொடுப்பவரும் நினைத்துக்கொண்டிருப்பது.


Malini Mala, Marimuthu Sivakumar and 11 others