நகர்வலம்
நான் கட்டப்பட்டிருக்கிறேன்’,
என்று
ஆஸ்கார் விருதுபெற்ற
முகபாவத்தில்
கூறுகிறார் அரசர்
அல்லது
அரசி.
அவை பதற்றமடைகிறது.
அய்யய்யோ என்று அழத்
தொடங்குகிறார்கள் சிலர்.
’அதோ என்னை எரிக்கத்
தீப்பந்தத்தைக்கொண்டுவரும்
அந்தக் கூட்டத்தைப் பாருங்கள்
அவர்கள் நெருங்கிவிட்டார்கள்
அவர்கள் என்னை எரிக்கத்
தொடங்குகிறார்கள்.’
என்று அரசர்
அல்லது அரசி
குரலெடுத்துக்கூவ _
அவையோர்
அழத்தொடங்குகிறார்கள்.
அடுத்திருந்தவர்களைத்
தள்ளிவிட்டு
தடுக்கிவிழுந்தவர்களை
மிதித்துக்கொண்டு
ஓடத்தொடங்குகிறார்கள்.
அவர்களில் சிலர்
கைக்குக் கிடைத்த சிலரைக்
கடைந்தெடுத்த எதிரியாக்கிக்
கொன்று தீர்க்கிறார்கள்.
இன்னும் சிலர்
அவசர அவசரமாக
இரங்கற்பா எழுத
முற்படுகிறார்கள்.
இல்லை, நானே வாசிக்கிறேன்
என்று அந்த அரசர்
அல்லது அரசி
அவையோர் முன்
நடவாத தன் மரண நிமித்தம்
மனதையுருக்கும் ஒரு கவிதை
வாசிக்கத் தொடங்குகிறார்.
’மக்கள் நாம் ஒற்றுமையாக
இருக்கவேண்டும்’ என்றும்
’மற்றவர்களெல்லோருமே
கற்றுக்குட்டிகள்,
வெத்துவேட்டுகள்
மொத்தப்படவேண்டியவர்கள்
என்றும்
கெட்ட வார்த்தையில்
திட்டித்திட்டி
அன்பைப் புகட்டும்
அந்த வரிகளைக் கேட்டு
அழாதவர் இருக்கமுடியுமா?
அப்படியிருக்கும்போது
சொன்னால் சிரச்சேதம்
_ உண்மையாகவே எனத் தெரிந்தும்
ஓரிருவர் மட்டும்
‘நீங்கள் உயிரோடிருக்கிறீர்கள்,
உங்களை யாரும் எதுவும்
செய்துவிடவில்லை’
என்று உண்மையை
முணுமுணுப்பாய்க்கூடச்
சொல்லிவிடமுடியுமா?
அரசரிடம்
அல்லது
அரசியிடம்.
அப்படி வாயைத் திறப்போரை
வெட்டிப்போட
வாட்படை காலாட்படை
முதல்
சகலமும் உண்டு _
முகநூலிலும்.
No comments:
Post a Comment