மறந்துவிட்ட உண்மை
சிறிதும் பெரிதுமாய் போதனைகளைப் பொதிந்து
சொற்பொழிவாற்றிக்கொண்டிருப்பவர்கள்
மறந்துவிட்ட உண்மை
அவரவர் மனதின் மிக ஆழத்திலிருந்து துல்லியமாக எதிரொலித்துக்கொண்டிருக்கிறது:
“பிரசங்கங்களெல்லாம் மலைப்பிரசங்கமுமல்ல
பேசுவோரெல்லாம் ஏசுபிரானுமல்ல.”
தீர்ப்பளிக்காதே நாமெல்லோருமே பாவிகள்தான் என்று
திரும்பத்திரும்ப எத்தனை முறை சொல்லிக்கொண்டேயிருப்பது என்று நாவறளக் கேட்டுக்கொண்டேயிருக்கும் மேரிமைந்தனிடம்
மன்னிப்புக் கோரவும் நேரமில்லாமல்
இன்னமும் ஓங்கிக்குரலெடுத்து நியாயத்தீர்ப்பு வழங்கிக்கொண்டிருக்கும்
அவர்களின் வாதப்பிரதிவாதங்களெல்லாம்
ஆளுக்கொன்றாய் ஒலிக்கும்.
அவர்களுடைய நீதிதேவதையின் கண்களைச் சுற்றிக் கட்டப்பட்டிருக்கிறது
ஆயிரம் துளைகள் கொண்ட கருப்புப்பட்டை.
No comments:
Post a Comment