LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Tuesday, November 8, 2022

புகைப்படத்தில் உருண்டுகொண்டிருக்கும் கண்ணீர்த்துளி - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 புகைப்படத்தில் உருண்டுகொண்டிருக்கும் கண்ணீர்த்துளி

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

அந்தவொரு புகைப்படத்தில்
உருளக் காத்திருக்குமொரு கண்ணீர்த்துளி
உண்மையில் பெரிய கதறலாகாது போயிருக்கும் சாத்தியங்களே அதிகம்.
அது உண்மையான கண்ணீர்த்துளிதானா
என்பதே சந்தேகம்.....
இரண்டாந்தோலாகிவிட்ட பாவனைகளில்
இதுவும் ஒன்றாயிருக்கலாம்;
அல்லது
இருமியபோது கண்ணில் துளிர்த்திருக்கலாம்;
அல்லது
கவனமாய் முன்கூட்டியே தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த சாலையோர கொத்துபராத்தாக் கடையில்
காமராக்கள் காணத் தோதாய் நின்றவண்ணம்
சற்றுமுன் சாப்பிட்ட கொத்துபராத்தாவின் காரம் காரணமாயிருக்கலாம்;
அல்லது நடக்கையில் ஏற்பட்ட சன்ன தூசிப்படலத்தின் ஓர் அணுத்துகள் பறந்துவந்து நாசித்துவாரத்தில் புகுந்து கிச்சுகிச்சு மூட்டியிருக்கலாம்;
அல்லது
அவசர அவசரமாய்க் குடித்த தண்ணீரின் ஒரு துளி வாய்க்குள் புகத் தவறியிருக்கலாம்;
அல்லது
சிறிதாய்த் திரளச்செய்து உருளும்போது அதைப் படம் பிடித்துப் பல கால விம்மலாக்கத்
தம்மாலான தொழில் நுட்ப நுணுக்கங்கள் கையாளப்பட்டிருக்கலாம்;
அல்லது
குடிநீர்க்கோப்பையிலிருந்து ஒரு துளியைக்
கன்னத்தில் வாகாய் ஒட்டவைத்துப் படம்பிடித்திருக்கலாம்.
அல்லது….. அல்லது…… அல்லது…… அல்லது……
நல்லது _
உள்ளது உள்ளபடி யெனில்
இருட்டறைகளில் பெருகும் கண்ணீர் புகைப்படத்தில் தெரிவதில்லை.
கருணையின் செயல்வடிவம் பெறாக் கண்ணீர் விரயமாகும் நீர்த்துளிகளன்றி வேறில்லை.
திரும்பிப்பார்க்கும்போது அவருக்கே கூடத் தெரியக்கூடும்
அவருடைய புகைப்படத்தில் அவருடைய கண்களிலிருந்து உருளும் நீர்த்துளி எத்தனை கலப்படமானது என்று;
அன்றாடம் பார்த்துப்பார்த்து அரற்றியழும்
அந்தக் கண்ணீர்த்துளி யுருள்
கன்னத்துக்குரியவர்
‘என்னமாய் நடித்தேன் என்று புன்முறுவலித்திருக்கக்கூடும்….
உதட்டளவாகுமாம் சிலர் சொற்கள்
ஊறுங் கண்ணீரும் அம்மட்டே
சிலரிடத்து....
சின்னத்திரை வெள்ளித்திரையோடு
முடிந்துபோய்விடுவதில்லை
மெகா சீரியல்கள்
என்றுணர்தலே ஏற்புடைத்து.

No comments:

Post a Comment