LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Saturday, September 12, 2020

சமத்துவம் : ஒரு சினிமாவின் தலைப்பு -‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 சமத்துவம் : 

ஒரு சினிமாவின் தலைப்பு



‘ரிஷி’

(லதா ராமகிருஷ்ணன்)


கோவிலுக்குச் சென்றாலும்கூட

கடவுளையா தம்மையா _ யாரை அதிகம் 

பார்க்கிறார்கள்

சாமான்யர்கள் என்று

மூக்கின் அருகில் கூப்பிய கரங்களின்

 மறைவிருந்து

அரைக்கண்ணால் அவ்வப்போது பார்க்கும்

பிரபலங்கள்
 _
பிரபலங்களான பின்பு ஒருநாளும்

தர்மதரிசனத்திற்கான வரிசையில்

அதி ஏழைகளோடும் மித ஏழைகளோடும் சேர்ந்து

சில பல மணிநேரங்கள் காத்திருந்து கடவுளைக்

 காண

மனமொப்பாப் பெருந்தகைகள்
 _
அரண்மனைபோலொரு வீட்டைக்

கட்டிமுடித்த கையோடு

சித்தாள்கள் கொத்தனார்களை முன்னறையைத்

 தாண்டி

வர அனுமதிக்காத பிரமுகர்கள்
 _
தப்பாமல் ஒப்பனையுடனேயே தெரியும்

பெரியமனிதர்கள்
 _
என்றெல்லோரும் முழங்குகிறார்கள்

எங்கெல்லாமோ சமத்துவமில்லையென….

பட்டு சுற்றப்பட்ட தன் முதுகில் அழுக்கு தட்டுப்பட

வாய்ப்பேயில்லை என்று

திட்டவட்டமாய்ப் பறையறிவித்துக்
கொள்வார்க்கு
ம்,

தன் முதுகைக் காணமுடியாது தன்னால்

என்று தத்துவம் பேசுவார்க்கும்

எதிரில் உண்டு எப்போதும்

விதவிதமான நீள அகலங்களில்

நிலைக்கண்ணாடிகள்.

ஏற்ற இறக்கங்கள் - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

ஏற்ற இறக்கங்கள்

’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

முனைப்பாகப் படித்துக்கொண்டிருந்தார் கேள்விகளை

மனக்கண்ணால்.

நான்கைந்து சொற்கள், சொல்வழக்குகள் தரப்பட்டிருந்தன
வினாத்தாளில்.
ஒவ்வொன்றுக்கும் ஐந்து முதல் ஐம்பது வரை மதிப்பெண்கள்.

’மலையேறிவிட்டது காலம்’ என்ற வரியை மொழிபெயர்க்க
எத்தனை முயன்றும் முடியாமல்
மூச்சுத்திணறிக்கொண்டிருந்தார் மொழிபெயர்ப்பாளர்.

’வடக்கிருத்தல்’ என்ற சொல்வழக்கு நல்லவேளையாக தரப்பட்டிருக்கவில்லை.

அதற்காய் ஆறுதலடைய முடியாதபடி
‘அவன் சரியான சாம்பார்’
ஆறாவது கேள்வியாக இடம்பெற்றிருந்தது.

தலைசுற்றவைக்க அதுபோதாதென்று
’விழல்’ கண்ணில் பட்டு
அழத்தூண்டியது.

’கீழே விழலா’ ’விழலுக்கு இறைத்த நீரா’ என்று
contextஇல் வைத்துப் புரிந்துகொள்ளலாமென்றால்
இருபொருளையும் தருமொரு சொல்லாயிருந்த அது
அத்தனை வெள்ளந்தியாய்ச் சிரித்துக்கொண்டிருந்தது.

முதலில்,
மலையேறிவிட்ட காலத்தை இறக்கவேண்டும்.
எப்படி?
முதன்முதலில் காலம் மலையேறியது எப்போது?
எதன்பொருட்டு ஏறியது?

மலையில் வடக்கிருக்கிறதோ காலம்?

ஒருவேளை இது ஆங்கில columnமோ?

சாம்பார் ஜெமினிகணேசன் மட்டும்தானா?
வேறு யாரேனுமா?

நிஜமா நிழலா சாம்பார்?
அப்படியானால் குறியீடு நிழலா?

நிழல் shadow நிழல் shade….

ஒன்றும் இரண்டும் மூன்றென்பது
சரியும் சரியல்லவும் _
மொழிபெயர்ப்பிலும்.

மொழியேறியும் இறங்கியும்
வழிபோகியபடி
இருந்தவிடமிருந்தவாறு
காத்துக்கொண்டிருக்கிறது காலம்
ஏறவும் இறங்கவுமான மலைக்காக.

காத்துக்கொண்டிருக்கிறார்கள்
மொழிபெயர்ப்பாளர்கள் சிலரும்
மிகச் சரியான இணைச்சொற்களுக்காய்.

’போயும் போயும் இதற்காகவா பொழுதை வீணடிப்பார்கள்’
என்று வேறு சிலர்
கையில் கிடைத்த வார்த்தைகளைக்கொண்டு
குத்துமதிப்பா யொரு பொருளைத் தந்து
பத்தரைமாற்று இலக்கணப் பிழைகளோடு
அயர்வென்பதறியாமல்
பெயர்த்துக்கொண்டிருக்கிறார்கள் இருமொழிகளை.

நிலை(ப்)பாடு - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 நிலை(ப்)பாடு


‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)




அதிகபட்சமாக அறுபதுபேர் கூடியிருக்கும் அரங்கில் அவர்
ஆயிரம்பேர் இருப்பதான மயக்கத்தில் இருகால்களால் உருண்டவாறிருக்கிறார்.
பொருட்படுத்திக் குனிந்து அரிய முத்து என்று கையிலெடுத்து
விறுவிறுவென அரங்கெங்கும் பொடிநடையாய் நடந்து அவரிவரெவரெவரிடமோ தன்னை அறிமுகப்படுத்தி
தன் அருமைபெருமைகளையெல்லாம்
சிறு சிறு ஹைக்கூ கவிதைகளாகவோ
அல்லது இறுதியற்ற நீள்கவிதையாகவோ
விரித்துரைப்பார் என்ற அவரது நம்பிக்கை
பொய்யாக
சுருட்டியெறியப்பட்ட காகிதக்கிழிசல்களாய்
சிறு பெரு பாதங்களால் இரக்கமற்று எத்தப்பட்டும்
திரும்பத்திரும்ப அரங்கரங்காய்ப் போய்க்கொண்டிருந்தவருக்கு
அறுபதென்பது அறுபதாயிரமாய்ப் புரியத்தொடங்கியபோது
அவருக்கு வயது அறுபத்தொன்பதுக்கு மேலாகியிருந்தது.
வருத்தமாயிருக்கிறது அவரைப் பார்க்க
கவிதைக்கான மனப்பிறழ்வின் முழுவிழிப்பை
யொருபோதுமடைய மாட்டாதவர்கள்தான்
புகழுக்கான பிரமைபிடித்தவர்களாகி
விடுகிறார்கள் என்று
அவரிடம் எப்படிச் சொல்லிப் புரியவைப்பது?

உயிர்க்கிளி இருக்கும் மறைவிடம் - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 உயிர்க்கிளி இருக்கும் மறைவிடம்



’ரிஷி’

(லதா ராமகிருஷ்ணன்)


அவர்கள் ஆளுக்கொரு பட்டியல்

 வைத்திருக்கிறார்கள்.

பல நேரங்களில் ரகசியமாகவே

 வைத்திருக்கிறார்கள்

தத்தம் பட்டியலை.


ஒரு பட்டியல் பகடைக்காயாக முடியூம்.

பெரிய துருப்புச்சீட்டாக மாற முடியும்.

பிரம்பாக பிச்சுவாக் கத்தியாக

பேரழிவை விளைவிக்கக்கூடிய அணுகுண்டாக -

இன்னும் பலப்பலவாக்க முடியும்….


சில நேரங்களில் சிலரை மட்டும் கறாராகத்

தேர்ந்தெடுத்துக்கொண்டு

தங்கள் பட்டியல்களை ஒருவரோடொருவர்

 ஒப்பிட்டுப்பார்த்துக்கொள்கிறார்கள்.


அந்த சிலர் வெகுசிலரேயானாலும்

அவர்களில் ஒருசிலர்

காலப்போக்கில் 

கடும்பகையாளியாகிவிடும்போது

சில பட்டியல் ரகசியங்கள் அம்பலமேறுகின்றன.


பட்டியலில் அடிக்கப்பட்ட பெயர்கள்

திருத்தப்பட்ட பெயர்கள்

முதலிடத்திலிருந்து முப்பதாவது இடத்திற்கும்

முன்னூறாவது இடத்திலிருந்து தொன்னூறாவது

 இடத்துக்கும்

நகர்ந்துவிட்ட பெயர்கள்

சில இடங்களில் மாய மசியால் எழுதப்பட்டதாய்

மனம் போன போகில் காணாமல்போய்விடும்

 பெயர்கள்

சில தருணங்களில் மந்திரக்கோலால்

 வரவழைக்கப்பட்டதாய்

பட்டியலில் சட்டென்று வந்து ’பச்சக்’ என்று

ஒட்டிக்கொள்ளும் பெயர்கள்

செல்லப்பெயர்கள்

புனைப்பெயர்கள்

இடுகுறிப்பெயர்கள்

ஆகுபெயர்கள்

இடவாகுபெயர்கள்

அடைமொழிகள்

வசைச்சொற்கள்…..


காலம் செல்லச்செல்ல ஒருவர் கையிலுள்ள 

பட்டியலே

அவர்கள் அடையாளமாகிவிடுகிறது.

ஒருவேளை பட்டியல் தொலைந்துவிட்டால்

அதன் ரகசிய இடத்திலிருந்து 

களவாடப்பட்டுவிட்டால்

எடுக்கப்படும் கைக்குரியவர் தன் 

தோற்றத்திற்குரியவராகிவிடுவாரோ

என்ற பெரும்பீதியும்

இறந்தபின்பும் அமரராக இருக்கும் தம்மைக்

கற்பனையில் கண்டு இறும்பூதடையும்

பேராவலுமாய்

பெருகும் குருதியும்

பொறுக்கமுடியாத வலியும்

ஒரு பொருட்டில்லையென்று

உள்வெளியெங்கும்

கூர்கல்லாலும் கத்திமுனையாலும்

செதுக்கிக்கொள்ளத் தொடங்குகிறார்கள்

தத்தமது பட்டியல்களை.

கவிஞர் ஃபிரோஸ்கான் ஜமால்தீனின் கவிதைகள் சில ஆங்கில மொழிபெயர்ப்பில் அமேஸானில்

  கவிஞர் ஃபிரோஸ்கான் ஜமால்தீனின் கவிதைகள் சில

ஆங்கில மொழிபெயர்ப்பில்

அமேஸானில்

கவிஞர் ஃபிரோஸ்கான் ஜமால்தீனின் கவிதைகள் சிலவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து நூலாக வெளியிட விரும்பி மேற்கொண்ட முயற்சி பொருளாதாரப் பற்றாக்குறையால் தாமதமாகிக் கொண்டேபோய் இப்போது அமேஸான் கிண்டில் மின் -நூலாகவும் அமேஸான் அச்சுநூலாகவும் உருப்பெற்றிருக்கிறது. சுமார் 30 கவிதைகள் இடம்பெறும் சிறு நூல் இது.


https://www.amazon.com/s?k=firoskhan&i=stripbooks-intl-ship&fbclid=IwAR0KyFwhgph5x4DfaaiocPLiXbpFKXgWQnfeEbYwBpU-p2xUEJGSVdcpKzU&ref=nb_sb_noss

வாசிப்பின் சுயம் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 வாசிப்பின் சுயம்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

அவர் ஒரு புத்தகத்தைக் குறிப்பிட்டு எவ்வாறு அது இலக்கியமாகிறது என்று
முத்துமுத்தாக சொத்தைப்பற்கருத்துக்களை உதிர்த்துதிர்த்துதிர்த்துதிர்த்து
பத்துபக்கக் கட்டுரையாக்கினாரென்றால்
இவர் கத்தித்தீர்க்கிறார் கிடைக்கும் மேடைகளிலெல்லாம்
எதிர்க்கருத்துகளையொத்தகருத்துகளை
அத்தகைய கருத்துகள் மொத்தம் எட்டுபத்திருக்குமளவில்

புத்தம்புதிய வாசகர்களுக்கு அவர்களிருவருமே
உலகம் உய்யவந்த எழுத்துவித்தகர்களாய்
விடுபடா இலக்கியப் பெரும்புதிர்களாய்

இத்தனையத்தனை யென்றில்லாமல்
அத்தனை சத்தமாய் ஆர்ப்பரிக்கும் கடலைக் குடத்திலிட்டதாய்
குத்துமதிப்பாய் ஒரு நூறு வானவிற்களை
பத்திரப்படுத்திவைத்திருப்பவர்களாய்
பித்தேறச்செய்கிறார்கள்

நித்திரையிலும் அவர்களைப் போற்றிப் பாடிக்கொண்டேயிருக்கும்
குரல்களுக்குரியவர்களுக்கு ஒருகாலை தட்டுப்படலாகும் ஆழ்கடலும் நல்முத்தும்
வாசிப்பில் ஆழ்ந்தாழ்ந்து அனுபவங்கொள்ளும்
நீச்சல்திறனும்.

அத்தருணம் முதல்
அவர்களுடைய எல்லைகள் விரிய ஆரம்பிக்க
அடிமுடியறிந்த முழுவிழிப்பில்
விசுவரூபங்கொள்கிறது அவர்களுடைய
வாசிப்பின் சுயம்.

விரி கதை - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 விரி கதை


‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

குக்குறுங்கதைக்குக்கூட குறைந்தபட்சம்
எட்டு முதல் பதினைந்துவரிகள் தேவைப்படும்போது
விரி கதையை ஒரு வரியில் எழுதுவதாவது
என்று சுற்றிலும் குழுமியிருந்தவர்கள் குழம்பித் தவிக்க _

கவிழ்த்துவைத்திருந்த கூடையை நேராக நிமிர்த்திய
படைப்பாளி
கீழே குவிந்துகிடந்த சொற்களிலிருந்து இரண்டேயிரண்டை யெடுத்து
ஒரு வரியாக (அன்றி ஒரு வார்த்தையாக)க் கட்டமைத்ததில் _

எல்லையற்று நீண்டுகொண்டே போன
விரிகதை யில்
கவி விதை கதை தை கரி யெனக் கிடைத்த
சொற்கள் போதாமல்
கதை யெங்கே எனக் கேட்கும்
அதிகப்பிரசங்கி வாசகரை
’நாசமாய்ப்போ’ என்று சபித்தபடி_

கால் வரியில் காவியம் போல் ஒன்றைத்
தன் ஆவி கட்டாயம் எழுதும் என்று அறிவித்து
தன் ஆத்ம வாசகர்களின் கலிதீர்க்கிறார்
(கிலிசேர்க்கிறார்) அவர்!

நேர்காணல் - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 நேர்காணல்

’ரிஷி’ 

(லதா ராமகிருஷ்ணன்)


தரப்பட்ட கேள்விகளை ஒருசில வாசிப்பில் மனப்பாடம் செய்துகொண்டுவிடுவதில்
மகா திறமைசாலி அந்தப் பெண் என்று
பார்த்தாலே தெரிந்தது.

மேலும்,
அவளுடைய காதுக்குள்ளிருக்கும் கருவி
அவளிடம் அடுத்தடுத்த கேள்விகளை
எடுத்துக்கொடுத்துக்கொண்டிருக்கக்கூடும்.

அழகாகவே இருந்தாள்.
அவளுடைய அடுத்த இலக்கு
வெள்ளித்திரையாக இருக்கலாம்.
அதில் எனக்கென்ன வந்தது?

கேட்ட கேள்விகளுக்கான பதில்களை
அவள் பொருட்படுத்தவேயில்லை.
அப்படி எதிர்பார்ப்பது நியாயம்தானா என்று தெரியவில்லை.

அந்தப் பெண்ணின் முகம் எதற்குப் புன்னகைக்கவேண்டும்
எதற்கு ஆர்வமாகத் தலையசைக்கவேண்டும், எதற்கு ‘அடடா ‘பாவ’த்தைத் தாங்கவேண்டும், எதற்கு உச்சுக்கொட்டி கன்னத்தைக் கையிலேந்த வேண்டும் என்று எல்லாமே ‘ப்ரோகிராம்’ செய்யப்பட்டிருந்தன.

அவள் பணி கேள்விகள் கேட்பது.

அறுபதாயிரத்திற்கு கூடக்குறைய இருக்கும்

மாதவருமானம்.

”எப்போது கவிதை எழுதத் தொடங்கினீர்கள்?”

”கி.மு. 300”

”நல்லது. உங்களுடைய அடுத்த கவிதை?”

”பி.கி 32”

”நீங்கள் இதுவரை எவ்வளவு கவிதைகள் எழுதி யிருக்கிறீர்கள்?”

ஒரு லட்சம்.

”மிக்க மகிழ்ச்சி. ஒரு கவிதைக்கு உங்களுக்குக் கிடைக் கும் அதிகபட்ச சன்மானம்?”

”ஆறு கோடி”.

”அவ்வளவா? வாழ்த்துகள்.” ”உங்களுக்குப்
பிடித்த கவிஞர் யார்?”

”நான் தான்”.

”அந்தப் புனைப்பெயரில் எழுதும் கவிஞரை நான் இதுவரை படித்ததில்லை” என்று அழகாகப் புருவத்தைச் சுளுக்கிய பேட்டியாளரிடம்
'உங்களுக்குப் பிடித்த கவிஞர் யார்?' என்றேன்.

'நிச்சயமாக நீங்களில்லை' என்று சொல்லியிருந்தாலும் பரவாயில்லை.

'நிலாமுகக்கதிர்ச்சக்ரவர்த்தி நீலாம்பரன்' என்று
ஒரு நாலாந்தரத் திரைப்பாடலாசிரியரைச் சொன்னபோது அந்த முகத்தில் தெரிந்த விகசிப்பைக்
காண சகியாமல்
அரங்கிலிருந்து எழுந்தோடிய என்னை
அன்போடு துரத்திவந்து
என் கையில் நீலாம்பரனின் (அ)கவிதைத் தொகுப்பொன்றை
அன்பளிப்பாகத் திணித்துவிட்டுத்
நன்றி நவின்று திரும்பிச் சென்றார் அந்தப் பெண்.

ஓர் அதிசாதாரணக் கவிதையை அசாதாரணக் கவிதையாக்கும் வழிமுறைகள் சில….'ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 ஓர் அதிசாதாரணக் கவிதையை அசாதாரணக் கவிதையாக்கும் வழிமுறைகள் சில….

'ரிஷி’

(லதா ராமகிருஷ்ணன்)



தேவைப்படும் பொருட்கள்:

• கொஞ்சம் சாம்பிராணி
• நான்கைந்து ஊதுபத்திகள்
• எதிரிலிருப்பவர் முகம் தெளிவாகத் தெரியாத
அளவு நிழலார்ந்த பகுதி
• பின்னணியில் நிறைய இலைத்திரள்களுடனான பெரிய மரம் அல்லது நீண்டுகொண்டே போகும் கடற்கரை மணற்பரப்பு

கூடுதல் குறிப்புகள்:

மரம் பட்டுப்போய்க்கொண்டிருக்கும் நிலையில் உள்ளதாக இருந்தால் மிகவும் நல்லது.

அல்லது
கடற்கரை மணற்பரப்பில் ஒரு குறிப்பிட்ட தொலைவிற்குக் கண்ணெட்டும்படியாக காலடித்தடங்கள் தெரியவேண்டும் –
தெளிவாகவும், மங்கலாகவும், இரண்டும் கலந்தும்.

புரியாத மொழியில் ஒரு பாட்டு சன்னமாக ஒலித்துக்கொண்டிருக்கட்டும்.
(புரிந்த மொழி என்றால் ஒருவேளை அது உங்கள் கவிதையை விட மேம்பட்டதாகப் புலப்பட்டுவிட வழியுண்டு. எதற்கு வம்பு).

திடீர்திடீரென்று உங்கள் தோள்களில் சிறகுகள் முளைத்து நீங்கள் பறக்கவேண்டும் (பயப்படவேண்டாம். நிஜமாக அல்ல; காணொளித் தொழில்நுட்பத்தின் உதவியுடன்).

ஒரு விஷயத்தில் நீங்கள் வெகு கவனமாக இருக்கவேண்டும் _
தரையில் நின்றிருந்தாலும் சரி, அந்தரத்தில் மிதந்துகொண்டிருந்தாலும் சரி உங்கள் கண்கள் மட்டும் அரைக்கிறக்க ‘பாவ’த்தில் அண்ணாந்து பார்த்தபடியே இருக்கவேண்டும்.

ஒரு வரியை வாசித்தவுடன் அரங்கிலுள்ளோர் பக்கமாகப் பார்வையைச் சுழலவிடுவது பழைய கவியரங்க பாணி.

நீங்கள் ஒரு வரியை வாசித்துமுடித்தவுடன் கைகளைக் கோர்த்துக்கொண்டு தலைகுனிந்து மௌனமாயிருத்தல் வேண்டும்.

கைத்தட்டலுக்கான இடைவெளி பலவிதம் என்று இத்தனை வருடங்களாக வாசித்துக்கொண்டிருப் பவர்களுக்குத் தெரியாதா என்ன?

இவர்களில் சிலருக்கு இன்னும் சிலபலவும் தெரியும் என்பதுதான் இங்குள்ள சிக்கல்.

இலக்கியத்தின்பால் உள்ள மெய்யான அக்கறையோடு இருக்கும் அவர்களுக்கு
தன்னை மறந்த பாவத்தை முழுப் பிரக்ஞையோடு தாங்கி என்னதான் அழகிய ‘prop’களோடு நீங்கள் இயங்கினாலும்
உங்கள் கவிதையில் எந்த அசாதாரணக் கவித்துவமும் இல்லையென்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக விளங்கிவிடும்.

அதைப் பெரிதுபடுத்தி வெளியே சொல்லாமலிருக் கும்வரை அவர்களைப் பொருட்படுத்த வேண்டாம்.

சொன்னாலோ அதிசாதாரணம் என்பதில் உள்ள ’தி’, ’சா’வுக்கு பதிலாக வந்துவிட்ட அச்சுப்பிழை என்று கூறத் தெரிந்திருக்கவேண்டும் எப்போதும்.

அதைவிட எளிதாக _

இன்று இலக்கியவாதிகளிடையே பெருகிவரும் எதிர்மறை முத்திரைகளில் ஒன்றைக்
(வலதுசாரி, அதிகார வர்க்கம், சாதித்திமிர், ஃபாசிஸம், நார்ஸிஸம் அன்னபிற பிற பிற பிற….)
கொண்டு அவர்களுக்குக் கரும்புள்ளி செம்புள்ளி குத்திவிடத் தெரிந்திருந்தால் போதும்.

தந்தை சொல் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 தந்தை சொல்









‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

கவிஞர்களை அப்பாக்களாகப் பெற்றிருக்கும் பிள்ளைகளே _

உடனடியாக உங்கள் தந்தையால் நீங்கள் கேட்டும் பணத்தைத் தரமுடியாமலிருக்கலாம்....

உங்கள் வகுப்புத்தோழர்களின் சொந்த வீடு கார் பங்களா போல்
உங்களுக்கும் வாங்கித்தர பெருவிருப்பமிருந்தாலும்
உங்கள் தந்தையால் அதைச் செய்யமுடியாதிருக் கலாம்....

ஆனால், உங்கள் தந்தை காற்றைப்போல!

மொழியெனும் மூன்றாங்கரத்தால் ஊருக்கெல்லாம் அள்ளித்தருபவர் உங்கள் தந்தை.

மொழியெனும் ஞானக்கண் கொண்ட அவர் உலகின் எந்தவோரத்தில் யார் துயருற்றுத் தவித்துக் கிடந்தாலும் அந்த வலிவேதனைகளையெல்லாம் அதேவிதமாய் அனுபவித்துத் தன் கவிதைவழியே பிரதிபலன் ஏதும் எதிர்பாராமல் நிவாரண மளித்துக்கொண்டேயிருப்பவர்.

இன்று இருபது அல்லது இருநூறுபேரால் மட்டுமே வாசிக்கப்படும் உங்கள் தந்தையின் எழுத்துகள்
இனிவருங்காலத்தில் இவ்வுலகின் வேறொரு மூலையில் வாழ்க்கையைக் கற்பிக்கக்கூடும்.

இன்று வெறும் புத்தகக்கட்டோடு வரும் அவரை கேலியாய் கோபமாய்ப் பார்க்காதீர்கள்.

மலையைக் கூனிக்குறுக வைப்பது மாபாவம்.

இதமாகப் பேசுங்கள் உங்கள் தந்தையிடம்.

’பணம் கொண்டுவருவது வழக்கமான அப்பாக்கள் செய்வது;
நீங்கள் எனக்கு மொழியின் மகத்துவத்தை,
வாழ்வின் மகத்துவத்தை உங்கள் எழுத்தின் வழி விதவிதமாக எடுத்துக்காட்டுகிறீர்களே – இதற்கு நான் என்ன கைம்மாறு செய்வேன்’
என்று மனமார உங்கள் தந்தையிடம் கூறுங்கள்.

நாளை யொருவேளை உங்கள் தந்தையின் எழுத்து உங்களுக்கு அட்சயபாத்திரமாகும்போது
குற்றவுணர்வு கொள்ளாமல் கண்களில் நீர் நிரம்பாமல் நீங்கள் உறுபசியாறவேண்டுமல்லவா?

அட, ஒருவேளை சோறு தரவில்லையானாலும் சிட்டுக்குருவியை நம்மால் வெறுக்கமுடியுமா என்ன?