LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Saturday, May 9, 2026

கவிஞரும் மொழிபெயர்ப்பாளரும் லதா ராமகிருஷ்ணன்

 கவிஞரும் மொழிபெயர்ப்பாளரும்

லதா ராமகிருஷ்ணன்

இலக்கு வாசகர்களைக் கருத்தில் கொண்டு, மொழிபெயர்க்கப் படும் என்ற அனுமானத்தில் எழுதப்படும் கவிதைகள் உண்டு.
ஆனால், என்னளவில், உண்மையான கவிஞர் ஒரு கவிதையை எழுதும்போது அதை யார் படிப்பார் கள் என்பதைப் பற்றியோ, அது மொழிபெயர்க்கப் படுமா என்பதைப் பற்றியோ எண்ணத்தலைப்படு வதில்லை.
ஏதோ ஒரு அழுத்தத்தை – அது ஆனந்தம் சார்ந்த அழுத்தமாக இருக்கலாம், அல்லது, ஆற்றாமை சார்ந்த அழுத்தமாக இருக்கலாம் – அல்லது ஒரு கணம் காட்டிய காற்றின் விசுவரூபத்தை எழுத்தின் மூலம் கல்லில் வடித்துவைக்க மனம் மேற்கொள் ளும் அசாத்தியமான அழுத்தமாக இருக்கலாம் – எதுவாக இருந்தாலும் இத்தகைய அழுத்தங்களே ஒரு கவிதை உருவாகக் காரணமாகிறது என்று கருதுகிறேன்.
மூல கவிதை இல்லாமல் அதற்கான மொழிபெயர்ப் புக்கு வழியேயில்லை.
ஒரு மொழியில் எழுதும் கவிஞர்கள் ஆங்கிலத் திலோ பிறவேறு மொழிகளிலோ தேர்ச்சி பெற்றிருப் பார்கள் என்று சொல்ல முடியாது; அதற்கான தேவை யும் இல்லை.
ஆனால், அவற்றைப் படிப்பவர்கள் ஆங்கிலமும் அறிந்திருந்தால் இத்தகைய நல்ல கவிதைகள் நம் மொழியில் வருவதை மற்றவர்களும் தெரிந்து கொள்ளவேண்டும், தெரிந்துகொள்ளட்டும் என்ற ஆர்வத்தில் தாம் படிக்கும் கவிதைகள் சிலவற்றை மொழிபெயர்க்கத் தொடங்குகிறார்கள்.
மிகச் சிறந்த கவிதைகள் மொழிபெயர்க்கப் படாமலேயே போகலாம். மொழிபெயர்ப்புக் குள் அடங்க மறுக்கலாம். மொழிபெயர்ப்பாளர்களின் இருமொழி சார் தேர்ச்சியின் வரம்பெல்லைகள், அவர்களுடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள், அவர்களுக்குத் தரப்படும் பணியாக சில கவிதைகள் மொழிபெயர்க்கப் படவேண்டியிருப்பின் சம்பந்தப் பட்ட தேர்வாளர் அல்லது தேர்வுக்குழுவின் மனச்சாய்வுகள் என பல விஷயங்கள் மொழி பெயர்ப்பு சார்ந்து செயல்படு கின்றன.
தமிழே அறியாத அயல்நாடுவாழ் இளந்தலைமுறை யைச் சேர்ந்தவர் ஒருவர் தனது அப்பாவின் மேஜையில் இருந்த எழுத்தாளர் ஜெயகாந்தனுடைய புதினமொன் றின் ஆங்கில மொழிபெயர்ப்பைப் படித்து இத்தகைய அற்புதப் படைப்புகளெல்லாம் தமிழில் உள்ளனவா என்று வியந்ததாக மொழிபெயர்ப்பின் தேவை குறித்து தனது நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பின் முன்னுரை
யில் கருத்துரைத் திருந்தது நினைவுக்கு வருகிறது.
எத்தனை சிறந்த மொழிபெயர்ப்பென்றாலும் மூல மொழியிலிருந்து இலக்கு மொழிக்குப் போகும்போது தவிர்க்கமுடியாமல் சில இழப்புகள் நேரும் என்றும் மூல மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு வந்து அதிலிருந்து தமிழுக்கு வரும்போது மேற்குறிப்பிட்ட இழப்புகள் இன்னும் அதிகமாகும் என்றும் கூறப் படுவது முற்றிலும் உண்மையே.
இத்தகைய போதாமைகள், இழப்புகள் தவிர்க்க முடியா தவை என்றாலும் அதற்காக ஒரு பிரதியை அலட்சிய மாக, அரைகுறையாக மொழிபெயர்ப்பது அநியாயம்.
ஒரு பிரதியின் மீதான அடிப்படை மரியாதையோடு,
அது மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்ற உண்மை ஆர்வத் தோடு பிரதியை மொழிபெயர்க்கும் மொழி பெயர்ப்பாளர்களும் உண்டு. ஒரு பிரதியை மொழி பெயர்த்துத் தருவதன் மூலம் மூல ஆசிரியருக்கு பெரிய உதவி செய்கிறோம், அதற்கு மூல ஆசிரியர் தனக்குக் கடமைப்பட்டவராக இருக்கவேண்டும் என்ற எண்ணத் தோடு செயல்படும் மொழிபெயர்ப்பாளர்களும் உண்டு.
ஆங்கிலம் தெரிந்த ஒரே காரணத்தால் மூல ஆசிரியரை விட தன்னை உயர்வாக, அதி உயர்வாக பாவித்துக் கொள்ளும் மொழிபெயர்ப்பாளர்கள் என்னளவில் கண்டனத்துக்குரியவர்கள்.
முன்பு, தமிழ்க் கவிஞர் ஒருவரின் கவிதைகளை நான் ஆங்கிலத் தில் மொழிபெயர்த்து அது நூல்வடிவம் பெறும் போக்கில் சம்பந் தப்பட்ட ஆங்கிலப் பதிப்பக ‘எடிட்டர்’ என் மொழிபெயர்ப்பு களை செம்மைப்படுத் துவதாகச் சொன்ன போது, நான் அதை ஏற்க மறுத்தேன். காரணம். அவருக்குத் தமிழே தெரியாது. அப்படியிருக்கும் போது அவர் எப்படி என்னுடைய மொழிபெயர்ப்புகளை செம்மைப்படுத்த முடியும்?
இப்படி, தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தின் அடிப்ப டையில் ஒரு மொழிபெயர்ப்பாளரின் ஆங்கிலத்தை மதிப்பழிக்க முயல்வோ ரும் உண்டு.
சிலர் கவிதை சார்ந்த, மொழிபெயர்ப்பு சார்ந்த உண்மை யான அக்கறையோடு மொழிபெயர்ப்பி லான குறைகளை எடுத்துச் சொன்னால் அதைக் கேட்டுக் கொள்வதில் எந்தத் தயக்கமும் ஒரு மொழிபெயர்ப்பாள ருக்கு இருக்க வேண்டியதில்லை.
ஆனால், பிழைகளைச் சுட்டிக்காட்டுவதில் பெரியமனிதத் தோரணை இருந்தால் அதற்கு சம்பந்தப்பட்டவர் தகுதியானவர் தானா என்று சரிபார்க்க வேண்டியது அவசியம்.
ஒரு முறை நுட்பமான கவிஞரொருவரின் கவிதையை மொழி பெயர்த்துப் பதிவேற்றியிருந்தேன். கவிஞரைப் பாராட்டும் வித மாய் ஒருவர் 'கவிஞரின் கவிதைகள் அதி உன்னதமானவை; அவற்றை மொழிபெயர்க்க முயல்வது அபத்தம். They are untranslatable' என்று ‘கமெண்ட்’ செய்திருந்தார். இத்தனை சிறப் பான கவிதையின் மகிமை தமிழறி யாத இலக்கிய ஆர்வலர்க ளுக்கும் தெரியவேண்டும் என்ற அவாவில்தான் மொழி பெயர்ப்பு முயற்சியை மேற்கொள்வதாகத் தெரிவித்து ’தனது கவிதையை மொழிபெயர்க்க வேண்டாமென்று கவிஞர் சொன்னால் நான் அதற்குக் கட்டுப்படுவேன்’ என்று அவருக்கு மறுமொழி அளித்தி ருந்தேன்.
தொழில்முறை மொழிபெயர்ப்பாளராக சில சமயம் வயிற்றுப் பிழைப்புக்காக சில மொழிபெயர்ப்பு வேலை களை – அ-புனைவுப் பிரதிகளை மொழி பெயர்க்கும் பணி _ ஒப்புக் கொள்ளும்போது, என்னுடைய மூலப் பிரதியை உங்கள் மொழி பெயர்ப்பில் மேம்படுத்தவும் என்று சில ‘பணம் கொடுக்கும் முதலாளிகள்’ அடிக் கோடிட்டுக் கூறுவதற்கு ‘அது என் வேலை யல்ல’ என்று மறுத்ததுண்டு.
உள்ளது உள்ளபடி மொழிபெயர்த்தல் – இதற்கு அர்த்தம் இரு மொழிகளிலும் உள்ள இலக்கண-இலக்கியார்த்த பிரத்யேகத் தன்மைகளைக் கணக்கி லெடுத்துக்கொள்ளாமல் மொழிபெயர்த் தல் என்பதல்ல. இந்தப் பிரத் யேகத் தன்மைகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டு, அதே சமயம் மூல கவிதை மொழியைக் கையாண்டி ருக்கும் விதத்தை யும் கணக்கில் எடுத்துக்கொண்டும் மொழி பெயர்ப்பதே. மூலப்பிரதியை மொழிபெயர்க்கும் போது ஒரேயடியாக, தன்னை இணை படைப்பாளி யாகக் கருதிக் கொண்டு மொழிபெயர்ப்பாளர் செயல் படுவது எந்தவிதத்திலும் சரியல்ல.
அதுவும், நவீன தமிழ்க்கவிதையைப் பொறுத்தவரை கவிஞர்கள் மொழியை, வார்த்தைகளை மிகுந்த கவனத் தோடு கையாள்கி றார்கள்; வரிசைப்படுத்துகிறார்கள்; பொருள்படுத்துகிறார்கள். பழைய ‘விக்டோ ரியன் ஆங்கில’த்தையே அடிப்படையாகக் கொண்டு இந்தக் கவிதைகளை மொழிபெயர்ப்பது அபத்தமாக இருக்கும் என்பதோடு இந்தக் கவிதைகளுக்கு எந்த வகையிலும் நியாயம் சேர்ப்பதாகாது.
ஆங்கிலத்தில் எழுதப்படும் நவீன கவிதைகளின் மொழி யும் விக்டோரியன் காலத்து ஆங்கில மொழியும் ஒன்றல்ல. மேலும், ஒரு மொழியின் இலக்கணத்தை அறிந்துகொள்ள அந்த மொழி யின் கவிதைகளைப் படிக்கவேண்டிய தேவையில்லை.
இலக்கணப்பிழைகளோடு எழுதப்படுவதுதான் கவிதைக்கு அழகு என்பதல்ல என் வாதம். ஆனால், கவிஞருக்கு, நவீன கவிஞருக்கு மொழி குறித்த உள் ளார்ந்த பிரக்ஞை இருக்கவே செய்கிறது. ஒருமை, பன்மை முதலான குழப்பங்கள் கவிதையில் தெரியா மல் நடைபெற வழியுண்டு. அதேயளவு, பிரக்ஞாபூர்வ மாகவே அவை ஒரு கவிதையில் இடம்பெறவும் வழியுண்டு.
ஆங்கில மொழிபெயர்ப்பில் இலக்கண சுத்தமான ஆங்கிலத்தை, ஆங்கில வார்த்தை, வாக்கியக் கட்ட மைப்புகளைப் பயன்படுத்து வதுதான் மேலான மொழிபெயர்ப்பு என்ற பார்வையை முன்வைப் பவர்களின் மொழிபெயர்ப்பில் மூல மொழியில் கவிஞர் பிரக்ஞா பூர்வமாக மேற்கொண்ட இந்த இலக்கணம் மீறிய வார்த்தை, வாக்கியக் கட்டமைப்புகள், பயன் பாடுகள் காணாமல் போய் விடும் வாய்ப்புகளே அதிகம்.
உதாரணத்திற்கு ’வருகிறேன் கொண்டு’ என்று கவிஞர் (பிரம்ம ராஜனின் ’பிரயாணத்திலிருந்து ஒரு கடிதம்’ கவிதை) பயன் படுத்தியிருப்பதில் ’ நான் கொண்ட வைகளை (அனுபவங் கொண்டவைகளை, உள்வாங் கிக் கொண்டவைகளை, எடுத்துக் கொண்டுவருகி றேன் – அனுபவங்கொண்டு, உள்வாங்கிக் கொண்டு, வருகிறேன் – எடுத்துக் கொண்டுவருகிறேன் என்ற அர்த்தங்கள் கூடுதல் துலக்கம் பெற வழியுண்டு. இதை இலக்கண சுத்தமாக கொண்டுவருகிறேன் என்ற பொருளில் I WILL BRING என்று மொழிபெயர்ப்ப தில் அந்த நுட்பங்கள் காணாமல்போய் விடுகின்றன. இதற்கு மொழிபெயர்ப்பு சற்று சிக்கலாகத்தான் அமையும். I WILL COME BRINGING, COME I WILL, BRINGING சரியல்ல.
ஒரு கவிதையின் முழுவாசிப்பில் வருகிறேன் கொண்டு எதைக் குறிக்கிறது என்று பார்த்து அதற்கேற்ப ஆங்கில வார்த்தைகளைத் தெரிவு செய்து வரிசைப்படுத்த வேண் டும்.
//மஞ்சளால் நிரம்பி வழியும்
காலைநேரத்தின் பாதைகளில்
தூரத்து மெல்லிய மெலோடி இசையொன்றுடன்
தன் வீட்டின் முகடுகளை பற்றி
சிறிதும் அலட்டிக்கொள்ளாத சிலந்திகள்
இரு புறங்களும்
குறுக்குமறுக்காக அலையாததால்
அமைதியாக இருக்கின்றது பாதை//
_ Ahamath M Sharif எழுதியுள்ள கவிதையின் ஆரம்ப வரிகள் இவை. கவிஞர் தன் மனதிலோடும் ஒருவகை முன்னுரிமைப் பிரக்ஞைப் படி ஒவ்வொன்றாக வரிசைப் படுத்துகிறார். இந்த முன்னுரிமை சார் வரிசையை ஆங்கில இலக்கணத்தை, மரபான ஆங்கிலக் கவிதை யைக் காரணங்காட்டி தனக்குத் தோன்றியவாறு மொழி பெயர்ப்பாளர் மாற்றுவது சரியில்லை என்றே தோன்றுகிறது.
இதற்கென மெனக்கெடுகிறவர்கள்தான் சீரிய மொழிபெயர்ப் பாளர்கள். மெனக்கெடவே மாட்டேன், குத்து மதிப்பாக கவிதை யைப் பொருள் கொண்டு, அந்தப் பொருளைக் குத்துமதிப்பாக பிரதிபலிக்கும் வார்த்தை களைப் பயன்படுத்தி சுத்தமான ஆங்கி லத்தில் மொழிபெயர்த் துத் தருவதே கவிஞருக்கும் இலக்கு மொழிக்கும் என் அளப்பரிய கொடை என்பதாக ஒரு மொழி பெயர்ப்பாளர் இயங்குதல் சரியல்ல.
உதாரணமாக மூலமொழியில் பாடபுத்தகம் (TEXT BOOK) என்றிருப் பது இலக்குமொழியில் TEXT (பிரதி) என்று தரப்படுதல் எப்படி சரியாகும்? இதுவே மேலான மொழிபெயர்ப்பு என்று திரும்பத் திரும்ப சிலரைக் கருத்துரைக்கவைக்கும் உத்தியைக் கையாண்டு சிலர் சாதிக்கப் பார்ப்பதும் நடக்கிறது. என்னளவில் இது சம்பந்தப்பட்ட கவிஞருக்கு இழைக்கப்படும் அநீதி.
ஒரே கவிதையை ஒன்றுக்கு மேற்பட்ட மொழி பெயர்ப்பாளர்கள் மொழிபெயர்க்கும் போது அவர்கள் தெரிவு செய்யும் வார்த்தை கள் வேறுவேறாக இருக்கும் வாய்ப்புகளே அதிகம்.
ஒரு கவிதையை ஒரு மொழி பெயர்ப்பாளரே இருமுறை மொழி பெயர்க்கும் போதுகூட இதுவே நேரும். அதே சமயம், வேறுவேறு வார்த்தை களைப் பயன்படுத்தி யிருந்தாலும் கவிதையின் பொருள் – நேரிடை யானதோ, பூடகமானதோ – அது மொழி பெயர்ப்பாள ரின் வாசகப்பிரதியாகவே இருந்தாலும் கூட (அதா வது, கவிஞரிடம் அவருடைய கவிதையின் பொருளைக் கேட்டு மொழிபெயர்க்காத போதும்) ஒரேயடியாக அர்த்தம் மாறிவிடலா காது.
அதேபோல், மூலமொழியில் பூடகமாக எழுதப் பட்டிருக்கும் கவிதை இலக்குமொழியில், அதாவது ஆங்கிலத்தில் ‘பொழிப் புரை’த்தன்மையோடு மொழி பெயர்க்கப்பட லாகாது.
A BOOK OF VERSE என்ற உமர் கய்யாம் கவிதையின் வரியை (ஆங்கி லத்தில் படித்த வரியை) கையில் கம்பன் கவியுண்டு என்று தமிழில் படிக்க நேர்ந்த போது கம்பன் மீதும் மொழிபெயர்ப்பாளர் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை மீதும் மிகுந்த மரியா தையும் அபிமானமும் இருந்தாலும் என் கையில் கம்பன் கவிதைதான் இருக்கவேண்டும் என்று மொழிபெயர்ப்பாளர் எப்படி தீர்மானிக் கலாம் என்று கோபம் வந்தது எனக்கு.
ஒரு கவிஞருக்கு இலக்குமொழி (இங்கே ஆங்கிலம்) தெரியாததால் அவருடைய பிரதியை எப்படிவேண்டுமானாலும் மொழி பெயர்த்துவைக்கலாம் என்ற மனப் போக்கு ஒரு மொழிபெயர்ப் பாளருக்கு இருக்க லாகாது.

கவிஞர் மொழிபெயர்ப்பாளரை நம்பி தனது கவிதையை மொழி பெயர்க்க அவருக்கு அனுமதி தருகிறார். அந்த நம்பிக்கையை மொழிபெயர்ப்பாளர் காப்பாற்ற வேண்டும்.
தனது கவிதை சரியாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறதா என்று சரிபார்க்க கவிஞர் ஆங்கிலம் தெரிந்த வேறு சிலரை நாடும் போது அவர்களும் ஆங்கிலம் தெரிந்ததால் தம்மை கவிஞரைக் காட்டிலும் உயர்வானவராக பாவித்து ஆளுக்கொரு கருத்து ரைக்க வாய்ப்பி ருக்கிறது.
ஆங்கிலம் தெரிந்த ஒரே காரணத்தாலேயே தமிழ்-ஆங்கில மொழிபெயர்ப்பின் தரத்தைப் பேசத் தகுதியுடைய வர்கள் என்று நினைப்பவர்களும் இருக்கிறார்கள்.

அதே போல், ஒரு படைப்பாளியை மொழிபெயர்ப்பதா லேயே அந்தப் படைப்பின் இணை-படைப்பாளியாகவும், படைப்பாளி யை விட உயர்ந்த வராகவும் தம்மை பாவித்துக்கொள்ளும் மொழி பெயர்ப்பாளர்களும் இருக்கிறார்கள். இரண்டுமே சரியல்ல.
எனவே, இத்தகைய இக்கட்டுகளுக்கு ஆளாக்காமல் கவிஞருடைய WRITERLY TEXT(எழுத்தாளர் பிரதிக்கு முடிந்தவரை மொழிநடையிலும் அர்த்தாக்கத் திலும் மொழிபெயர்ப்பாளரின் வாசகப்பிரதி READERLY TEXT) ஒத்திருக்கும்படியாக மொழிபெயர்ப்பு அமைவதே தனது கவிதையை மொழிபெயர்க்க முழுமனதோடு அனுமதியளிக்கும் கவிஞருக்கு மொழிபெயர்ப்பாளர் செய்யக் கூடிய குறைந்தபட்ச நன்றி நவிலல்; பதில்மரியாதை.
இதன் காரணமாகவே நான் மொழிபெயர்க்கும் கவிஞர்கள் எனக்கு நன்றி தெரிவிக்கும்போது எனக்கு உண்மை யிலேயே மிகவும் தர்மசங்கடமாக இருக்கிறது.
ஏனெனில், அப்பழுக்கற்றதென்று அடித்துச்சொல்லவியலாத என்னுடைய மொழி பெயர்ப்புக்குத் தங்களு டைய கவிதைகளை அவர்கள் மனமுவந்து தருவதற்காக அவர்களுக்கு நான்தான் நன்றி சொல்லவேண்டும். அதுவே நேர்மையும் நியாயமும்.
//2020, MAY 3 - மீள்பதிவு//

Friday, May 1, 2026

அப்பால்….. ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 அப்பால்…..

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

’கடவுளையே கதிகலங்கச்செய்துவிட்டது பார் கொரோனா’ என்று கெக்கலிப்பார் சிலர்.
’கடவுளே கொரோனா’ என்று கும்பிடுவார் சிலர்.
கண்பொத்தி யுள்ளே பூஞ்சையாய் ஒடுங்கிக் கிடக்கிறார் பார்’ என்பார் சிலர்.
’கணக்கற்றோரின் கனவுகளையும் கவலைகளையும்
சுமந்து சுமந்து களைத்துப்போயிருப்பார்
கொஞ்சம் களைப்பாற்றிக்கொள்ளட்டும்’ என்று
கதவடைத்திருக்கும் கோயிலின் முன் நின்று
கன்னத்தில் போட்டுக்கொண்டே வாஞ்சையோடுசொல்லிக்கொள்வார் சிலர்.
’Collective Spirit இன் முழுமையான அர்த்தத்தைப் புரிந்துகொள்ள கிடைத்த அரிய பெரிய வாய்ப்பு’
என்பார் சிலர்.
’விலங்குகளுக்கும் பறவைகளுக்குமான
விடுமுறை’ யென்பார் சிலர்.
’மனிதனின் தான் என்ற அகங்காரம் குறையவும்
திமிர் அடங்கவும்
தீ நுண்மி உதவினால் போதும்’ என்பார் சிலர்.
’உதவுமா’ என்பார் சிலர்;
’போதுமா’ என்பார் சிலர்.
’வீதிகளெல்லாம் எத்தனை சுத்தமாயிருக்கின்றன’
என்பார் சிலர்.
’மீதி நாட்களிலும் இப்படி வைத்திருந்தால் என்ன’
என்று காட்டமாய் விமர்சிப்பார் சிலர்.
முகத்திற்கான 'மாஸ்க்' தெருவின் அந்த முனைக் கடையில் பதினைந்து ரூபாயும்
இந்த முனையில் முப்பது ரூபாயும் விற்பதைப் பார்த்து
'அது அத்தியாவசியப் பொருளா இல்லையாவென
யாரிடம் கேட்க' என்று அலுத்துக்கொள்வார் சிலர்.
’இப்பொழுது உணவுக்கு வழியேயில்லையே’
என்று அழுதிருப்பார் சிலர்.
'இப்போது கிடைக்கும் உணவு எப்போதும் கிடைத்தால் எத்தனை நன்றாயிருக்கும்'
என்று நினைத்துக்கொள்வார் சிலர்.
இன்னும் ஒரு வாரத்தில் கடையைத் திறந்துவிட லாம் என்று நிம்மதிப் பெருமூச்செறிவார் சிலர்.
திறந்தபின் எதிர்கொள்ளவேண்டியவைகளை எண்ணி வருந்தியிருப்பார் சிலர்.
’இந்த கோர நாட்களில் கவிதையெழுதுதல்
சரியா தவறா’ என்று கேள்வியெழுப்புவார் சிலர்;
குற்றவுணர்வுகொள்வார் சிலர்..
’கட்டாயமாக எழுதவேண்டும்’ என்று
உறுதியெடுத்துக்கொள்வார் சிலர்…..
மனிதவோட்டத்தைக் கட்டுப்படுத்தலாம் தீநுண்மி.....
அவர் மனவோட்டப் புதிர்வட்டப்பாதைகள் என்றேனும் தட்டுப்படுமோ அதற்கு?.

//*கொரோனா காலகட்டக் கவிதை
2020 APRIL 19 - மீள்பதிவு//

நன்றிக்குரியவர்கள்…… ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 நன்றிக்குரியவர்கள்……

’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

ஆளரவமற்று நீண்டுகொண்டிருந்த தெருக்களும் சாலைகளும்
பாலைவனமாய்க் காய்ந்திருக்க
ஆங்காங்கே நிரம்பிவழிந்துகொண்டிருந்த குப்பைத்தொட்டிகளைத்
துழாவிக்கொண்டிருந்த தூய்மைப்பணியாளர்களின் கைகளில்
மரகத மாணிக்க வைர வைடூரியங்கள் கிடைக்கச் செய்ய
வக்கில்லாத என் கவிதைகள்
வெளியே வர வெட்கப்பட்டு
மனதின் குரல்வளைக்குள் மூச்சுத்திணறிக் கிடந்தன.
தெருவோரத் திருப்பத்தில் சோர்ந்து அமர்ந்திருந்த பெரியவரிடம் _
பெரிதாக எதையும் தரமுடியாத என்னை மனதாரச் சபித்தவாறே _
தண்ணீர்புட்டியையும் மாரி பிஸ்கெட் பாக்கெட்டையும்
பத்து ரூபாயையும் நீட்டினேன்.
நன்றி கூறி வாங்கிக்கொண்டதோடு
’பத்தாவது வரை படித்திருக்கேம்மா – படிக்க ஏதாவது புத்தகம் தரமுடியுமா?’
என்று கேட்ட மாத்திரத்தில்
என்னை குபேரனாக்கிவிட்ட வள்ளன்மைக்கு
என்னவென்று நன்றி சொல்வது!
//*கொரோனா காலகட்டக் கவிதை
2020, ஏப்ரல் 16 - மீள்பதிவு//

அவரவர் அந்தரங்கம் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 அவரவர் அந்தரங்கம்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
காதல் எப்படி நிகழும்
காதலில் என்ன நிகழுமென்று
காதலிப்பவர்களுக்கும் தெரியும்
காதலைக் காதலிப்பவர்களுக்கும் தெரியும்
இருந்தும்
குறுகுறுவென்று பார்த்தாரா
குறும்புப்பேச்சுகள் பேசினாரா
கட்டியணைத்தாரா
கன்னத்தில் முத்தமிட்டாரா
கட்டுக்கட்டான கடிதங்களில் கலவிசெய்தாரா
என்று கேட்டுக்கொண்டே போன தோழியை
குறுக்கிட்டுத் தடுத்தவள்
”அந்தரங்கம் புனிதமானது” என்றாள்.
காலங்கடந் தொரு நாள்
தன் காதலன்
குறுகுறுவென்று பார்த்ததை
குறும்புப்பேச்சுகள் பேசியதை
கட்டியணைத்தை
கன்னத்தில் முத்தமிட்டதை
கட்டுக்கட்டான கடிதங்களில்
கலவிசெய்ததை
கட்டுரைகளாக
நினைவுக்குறிப்புகளாக
Autofictionகளாக
கிடைத்தவெளிகளிலெல்லாம்
அம்பலமேற்றத் தொடங்கியவளைப் பார்த்து
அப்படியானால் இப்போது என் புனிதம் கெட்டுப்போய்விட்டதாவென
அப்பிராணியாய்க் கேட்கிறது
அந்தரங்கம்.
//2022, APRIL 22 - மீள்பதிவு//

மாறுவேடப்போட்டிகளும் மகோன்னத ஞானவொளிகளும் -‘ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 மாறுவேடப்போட்டிகளும்

மகோன்னத ஞானவொளிகளும்
‘ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)
தூதனுப்பவும் மடலனுப்பவும்
புறாக்களைத் தேடவேண்டிய தேவையில்லை.
மன்னர் மட்டும்தான் இரவில் மாறுவேடமணிந்து
நகர்வலம் வரவேண்டுமா என்ன?
சிசிடிவி இருப்பது தெரிந்தும் ஏடிஎம்களில்
கொள்ளைகள் நடந்தவாறே -
இல்லையா?
கிழக்கே போகும் ரயில்கள் திசைமாறக்கூடும் எனவும்
பாஸஞ்ஜர் ரயில்கள் துரித வண்டிகளாகிவிடக்கூடும் எனவும்
ஞானத்தைப் பெற
போதிமரங்களைத் தேடி அலையவேண்டியதில்லை.
பட்டறிவே போதுமானது.
பாதரசமொரு மகோன்னதக் குறியீடு
என்றாலும்
பூனை கண்ணை மூட இருண்டுவிடும் உலகம்போல்
சுலக்ஷணா சுவர்ணலட்சுமியாவதும்
சுத்தமாய் தன் பாலடையாளம் மாற்றிக்கொள்வதும்
பிறந்த தேதி அதுவேயாகவும்
பிறந்த மாதம் வேறாகவும்
தனக்குத்தானே புதிய பிறப்புச்சான்றிதழ் அளித்துக்கொள்வதும் –
அறிவாளிகளும் முட்டாளாகவும்
அறிவாளிகளை முட்டாளாக்கப் பார்க்கவும்
விரிவெளி அமைத்துத் தருவதற்கு
இருக்கவே இருக்கிறது ஃபேஸ்புக்.
//2022, APRIL 25 - மீள்பதிவு//

இடமுணர்த்தல் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 இடமுணர்த்தல்


ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)


ஒவ்வொன்றின் இடமும் அளவும்
ஒவ்வொன்றைக் குறிப்புணர்த்துகிறது
உணவுமேஜையில் அந்தப் பெரிய நாற்காலியின் இடம்
அதில் அமர்பவர் அந்த வீட்டுத்தலைவர்
என்பதை உணர்த்துகிறது.
அந்த மேஜையின் மீதிருந்த தண்ணீர்க்கோப்பைகள்
எல்லாமே கண்ணாடியில் செய்யப்பட்டதாயிருக்க
பிடிவைத்த செம்புக்கோப்பையிருந்த
மேசைப்பக்கமிருந்த கைப்பிடிகொண்ட நாற்காலி
வீட்டிலிருந்த பாட்டிக்கானது.
சுவற்றில் அலைபேசியை வைக்கக்கூடிய
அகலத்திலிருந்த கைப்பிடிக்கு அருகே
வைக்கப்பட்டிருந்த நாற்காலி
சதா கைப்பேசி வைத்திருக்கவேண்டிய ஸாஃப்ட்வேர் நிறுவன
உயர் அதிகாரிப் பிள்ளைக்கானது.
பளபளவென்றிருந்த இருக்கை அதிகம் சம்பாதிக்கும்
மகளுக்கானது
முதுகு சாயுமிடத்தில் நிறம் மங்கியிருந்த நாற்காலி
மூச்சு வாங்க நடந்துவரும் பெருத்த உடலுக்கானது
பெரிய நாற்காலியும் அடுத்திருக்கும் சிறிய நாற்காலியும்
விவாகரத்தான முப்பத்தியிரண்டு வயதுத் தந்தைக்கும்
அவருடைய ஆறு வயதுப் பிள்ளைக்குமானது.
அத்தனையையும் கவனித்தவாறே அங்கு வந்தவள்
உணவுமேசையைச் சுற்றியிருந்த இருக்கைகளில்
இரண்டு மட்டும்
ஒன்றையொன்று தொட்டபடிநெருக்கமாக இருந்ததைக்
கவனித்தும் கவனிக்காத பாவனையில்
விழுங்கத் தயாராய் எடுத்துவந்திருந்த
வைட்டமின் E மாத்திரை Evion 400இன் நெகிழ்வை
உள்ளங்கையில் உணர்ந்தபடி
தனக்கான இருக்கையை நோக்கிச் சென்றாள்.
//2022, APRIL 25 - மீள்பதிவு//

எளிய பொய்சொல்லலும் எளிதாகப் பொய்சொல்லலும் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 எளிய பொய்சொல்லலும்

எளிதாகப் பொய்சொல்லலும்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
மும்முரமாகத்தலையாட்டிக்கொண்டே
சொன்னாள் சிறுமி:
“உண்மையாகவே என் குருவி பொம்மை
பறக்கும் தெரியுமா!”
இருபது வருடங்களாக ‘எழுதி’க் கொண்டிருக்கிறார்
என்று நண்பரை அவையோருக்கு அறிமுகப்படுத்தியவர்
இத்தனை காலமும் ‘இ’யைத்தான்
சரியாக எழுதப் பழகிக்கொண்டிருக்கிறார் என்பதை
பத்திரமாக மறைத்துவிட்டார்.
அவருடைய அந்த நண்பரின் பேரன்
அடிக்கடி கண்ணை விரித்துக் கையை விரித்துக்
கதை சொல்வான்.
கூடைகூடையாய் நட்சத்திரங்களைத்
தனக்கு நிலவு கொட்டியதாக.
அப்போது அந்தக் குழந்தை முகம்
தூய்மையே உருவாய் என்னமாய் மின்னும்!
இருபது வருடங்களாக எழுதிக்கொண்டிருக்கிறார்
என்று அறிமுகப்படுத்தப்பட்ட பெருமை பொங்க
மேடையேறி ‘மூத்த எழுத்தாளர்’ பதக்கம் பெற்றுக்கொண்ட
அவன் தாத்தா
இத்தனை வருடங்களில் உருவாகாத
தன் படைப்புகளை
மொத்தமாய் அள்ளிக்கொண்டார்
வெட்கங்கெட்ட கற்பனையில்.
தெரிந்தே ஒரு பொய்யை சுலபமாக
மெய்யாக்கிவிட்ட
தமது சாமர்த்தியத்தை மெச்சியபடி
இன்னமும் கைதட்டிக்கொண்டிருக்கிறார்கள்
சில இலக்கியக் காவலர்கள்.
(*25, APRIL 2025 - மீள்பதிவு)

சாபம் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 சாபம்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
சமத்துவக் கனல் பறக்கும் அவருடைய வரிகளைப் படிக்கும்போதெல்லாம்
அவரை யொரு மெய்யான சமூகவுணர்வாளரென்றே எண்ணியிருந்தேன்.
அன்றொரு நாள் அவருடைய கப்பலனைய வீட்டைப்பார்க்க நேர்ந்தது.
அதுபோலவர் மாநிலத்துக்கொரு மாளிகை வைத்திருப்பதாகத் தெரியவந்தது.
காலை நடைப்பயிற்சிக்காகக் காலாற நடந்துசென்றால் சுற்றிவர ஒரு மணிநேரம் பிடிக்கும் அவரது பண்ணைவீட்டை கூகுள் மேப் காண்பித்தது.
அடித்தட்டு மக்களைப் பார்க்கப்போகும்போதெல்லாம் எளிய ஆடையணிந்துவருபவரை யொரு நாள் அவர் நேரம் கிடைக்கும்போதெல்லாம் பழிக்கும் பெரிய தொழிலதிபரின் வீட்டுத்திருமணத்தில் பட்டும் வைரமுமாய் பளபளத்தொளிர்வதை தொலைக்காட்சி சேனல்களனைத்தும் விதவிதமான கோணங்களில் காட்டி மகிழ்ந்தன.
அதிகாரமும் செல்வ வளமும் அவருக்கு அளித்திருந்த தனிச்சிறப்பான சாதி அந்தஸ்தில்
அடுத்தவரையெல்லாம் கால்கடுக்க நிற்கவைத்தவாறே பேசிக்கொண்டிருப்பவர்
ஒருமையில் அழைத்து ஏசிக்கொண்டிருப்பவர்,
எல்லோரும் இந்நாட்டு மன்னரென்றபோது
சுற்றியிருந்தவர்களின் கைத்தட்டலில் அரங்கமே அதிர்ந்தது.
வறுமைக்கோட்டின் கீழ் இருப்பவர்களை அங்கேயே இருக்கச்செய்து
அவ்வப்போது சில எலும்புத்துண்டுகளை வீசுவதே
திருத்தமான வேட்டைக்கொரு திட்டவட்டமான
உத்தி யென்பதை
மக்கள் அறியமாட்டார்கள் என்ற மேலான நம்பிக்கையில்
மேடைதோறும் உரத்த குரலில், தொண்டை கரகரக்க
அதி தூய்மையான மினரல் வாட்டரைக் குடித்தபடி
முழங்கிக்கொண்டேயிருப்பவர்களின்
கால்களின் கீழ்
எக்காலமும் நிலநடுக்கம்போலெதுவும்
நேராதோவெனக் கலங்கிநிற்குமென்
பாழ்மனம்
கைநிறைய மண்ணள்ளி யிறைத்தவாறு….
//2024, APRIL 18 - மீள்பதிவு//

பைத்தியம் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 பைத்தியம்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
சிலருக்கு காதுகூசும் வசைச்சொல்.
சிலருக்கு அதுவொரு கூர் ஆயுதம்
சிலருக்கு அது எதிராளியை விழச்செய்ய
எறியும் வாழைப்பழத்தோல்.
சிலருக்கு அது தம்மை சரியென்பதாகவும் பிறரை தவறென்பதாகவும் ஸ்தாபிக்கக் கிடைத்த strategy
சிலருக்கு தன்னை அறிவாளியாகக் காட்டிக்கொள்ள
பிறருக்கு எளிதாகத் தரக்கிடைத்த ஆயத்த அடைமொழி.
சிலருக்கு எதிராளியின் மூளைக்குள் காட்டுத்தீயைப் பற்றவைத்துப்
பெரும் நாசம் விளைவிக்கக் கிடைத்த அப்பிராணி வார்த்தை.
ஒருவருக்கொருவர் இந்த வார்த்தையை எறிந்துவிளையாடி
உறவுகொண்டாடிக்கொண்டிருப்பவர் பெருந்திரளாய்.
வைத்தியம் என்ற சொல்லுக்காகவே
பைத்தியத்தைப் பிடித்துக்கொண்டிருப்பவர்களும் நிறையவே.
அவசரத்திற்கு ’த் தி ய ம் இடம்பெறும் மூன்றாவது வார்த்தை ஏதும் கிடைக்கவில்லை.
மூளையைக் கசக்கி யோசித்துப் பார்க்கையில்
நினைவுக்கு வருகிறது.
கோபிகிருஷ்ணனின் ஒரு கதாபாத்திரம்
அவ்வப்போது தன் பேச்சுக்கிடையில்
அனர்த்தமாய் உதிர்த்தவாறிருக்கும்
‘RELAXATION’
(மே 2, 2021 - மீள்பதிவு)

வீழ்ச்சி 'ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

வீழ்ச்சி
'ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
வானுயரக் குவியலாய் மனக்கிடங்கில்
சொற்களையும் அவற்றின் பல்பொருள்களையும்
சேமித்துவைத்திருக்கும்
கானடர் கவி
நேற்று முளைத்த அரசியல் காளானின்
தோளோடு தோள் சேர்த்து நின்று
தன்னையொரு எழுத்தாளராய்
அடையாளங்காட்டி நிற்கும் படம்
காற்றுவாக்கில் என் கண்ணில் பட்ட கணம்
கிட்டத்தட்ட மரணம்.
//2 May 2021 - மீள்பதிவு//

புத்தகங்கள் ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 புத்தகங்கள்

’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)



ஒரு புத்தகத்திடம் நம் பிரியத்தை எப்படிச் சொல்வது?
மயிலிறகைப் போல் மிருதுவாய்த் தடவிக்கொடுக்கலாம்.
சுற்றுமுற்றும் பார்த்தபடி சிறு முத்தம் தரலாம்.
படுக்கையில் அருகில் வைத்துக்கொண்டு தூங்கலாம்.
போகுமிடமெல்லாம் அதையொரு குழந்தைபோல் கையிலேந்திக்கொண்டிருக்கலாம்.....
புரியவைக்கமுடியுமோ புத்தகத்திடம் நம் அன்பை?
புத்தகம் உயிருள்ளதா அற்றதா?
தனக்குள் காலத்தையும் காலாதீதத்தையும் ஒருங்கே உள்ளடக்கியிருக்கும்
புத்தகத்தின் உயிர் ஒன்றல்ல, பலப்பல
என்றொரு அசரீரி ஒலிப்பது என்னுள்ளிருந்தா புத்தகத்திலிருந்தா?
வினாக்களுக்கு பதில்களையும் பதில்வினாக்களையும்
வரிவரியாய்ப் பொதிந்துதந்தவாறு _
”விலைகொடுத்துவாங்கி யென்னைப் படி
வாங்கமுடியாதவர்களுக்குப் படிக்கக்கொடு
வெறும் தாள்களிலிருந்து என்னை படைப்புநிலைக்கு உயர்த்திய
கர்த்தாவைக் கொண்டாடு.
என்னைப் படித்து சிறிதேனும் உன் மனது
திறந்துகொண்டால் போதும்
வசமாகிவிடும் உன் பிரியமெல்லாம் எனக்கு”,
என்றபடி சிரிக்கும் புத்தகத்தின்
இல்லாத கன்னத்தில் விழும் குழியை
என்றும்போல் இன்றும் அதிசயமாய்ப்
பார்த்துக்கொண்டிருக்கும் வாசக மனம்
தீராக்காதலில் வேர்விட்டபடி….
//2021 - APRIL 22 - மீள்பதிவு//