LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Saturday, July 24, 2021

கத்திமுனைப் பயணம் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 கத்திமுனைப் பயணம்

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)

நிரந்தரம் என்பதும் தாற்காலிகம் என்பதும்

காலக்கணக்கு மட்டுமல்ல…..

காலின்கீழ் கத்திமுனை உறுத்திக்கொண்டே

யிருக்கிறது.

கணநேர சந்தோஷம் பாதங்களின் கீழ் பஞ்சை

அடர்த்தியாக நீட்டிப் பரப்பிவைக்கும் நேரங்களில்

கத்திமுனை காணாமல் போய்விடுகிறது.

சமயங்களில் கால்பதியும் குளிர்நீர்ப்பரப்பின் இதம்

முனை மழுங்கச் செய்கிறது.

இறங்கித் தான் ஆகவேண்டுமென்றாலும்

பறக்கும் பொழுதுகள் உண்டு.

தம்மைக் கிழித்துக்கொண்டு நமக்கு

மலர்க்கம்பளம் விரிக்கும் தருணங்கள்

ஆகப்பெரும் வரம்.

என்றாலும் _

எப்போதுவேண்டுமானாலும் அது சிந்தச்

செய்யலாகும் சில ரத்தத்துளிகள்

பிரக்ஞையில் ஒரு மூலையில்

சேகரமாகிக்கொண்டு.

போகப்போக பழகிப்போய்விடுமாயினும்

கத்திமுனையின் கூர்மை ஓர்மையில்

ஆழமாகக் குத்திக் கிழித்தபடியே

 

வளர்ந்த குழந்தைகளின் குட்டிக்கரணங்கள் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 வளர்ந்த குழந்தைகளின் குட்டிக்கரணங்கள்

‘ரிஷி’

(லதா ராமகிருஷ்ணன்)

ஒரு குழந்தை தத்தித்தத்தி நடக்க ஆரம்பிக்கும்போது பார்ப்பவர்கள் பரவசமடைவது வெகு இயல்பு.
இரண்டடிகள் நடந்து பின்பு குப்புற விழுந்து தவழத் தொடங்கினாலும்
திரும்பவும் எழுந்து நிற்க முயற்சி செய்யும் என்று தீர்மானமாய்ச் சொல்வது
வழி வழியாய் வழக்கம்தான்.
எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடிக்கும் கரவொலி யெழுப்பி
குழந்தையை உற்சாகப்படுத்தும் படுத்தலில்
குழந்தை தன்னை மறந்து அகலக்கால் எடுத்துவைக்க
தொபுகடீர் என்று விழுந்து அழ ஆரம்பிக்கும்.
உடனே தூக்குவதற்கு ஒருவர்,
பிஞ்சுப்பாதத்தைத் தடவிக்கொடுக்க ஒருவர்
குழந்தையின் கண்ணீரை உறுத்தாத வழுவழு கைக்குட்டையால்
ஒற்றியெடுக்க ஒருவர்
குழந்தையின் கையில் சாக்லெட்டைத் திணிக்க ஒருவர்
என்று நிறைய பேர் குழந்தையை சூழ்ந்துகொள்வார்கள்.
ஓரிருவரே இருக்கும் நியூக்ளியர் குடும்பத்தில்
அந்த ஓரிருவரே பல பேராக மாறிக்கொண்டு்விடுவார்கள்.
குழந்தையை மகிழ்விப்பதே பெரியவர்களின் குறிக்கோள்.
அப்படித்தான் அவர்கள் இன்றளவும் நம்புகிறார்கள்…..
இன்று பிறந்திருக்கும் குழந்தையொன்று இதுவரையான மிகச்சிறந்த ஓட்டப்பந்தயவீரர்களின் ரெகார்டுகளை யெல்லாம்
இரண்டடி தத்தித்தத்தி நடந்தே முந்திவிட்டதாக முழுவதும் நம்பியும் நம்பாமலும்
வளர்ந்தவர்கள் பத்திபத்தியாய் எழுதிக்கொண்டிருப்பதைப் படிக்கும்போது
எளிதாகக் கலகலவென்று சிரித்து முடித்து தூக்கம்போட்டுவிட
நாம் குழந்தையாக இருக்கக்கூடாதா என்று
ஏக்கமாக இருக்கிறது.

சகவாழ்வு - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 சகவாழ்வு

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

மயிலைப் பார்த்துக் காப்பியடிப்பதாய்
வான்கோழியை வசைபாடுவோம்.
வாத்துமுட்டையைப் பரிகசிப்போம்.
நாயின் சுருள்வாலை நிமிர்த்தப்
படாதபாடு படுவோம்.
கிளியைக் கூண்டிலடைத்து
வீட்டின் இண்டீரியர் டெகரேஷனை
முழுமையாக்குவோம்.
குதிரைப்பந்தயத்தில் பின்னங்கால்
பிடரிபட பரிகளை விரட்டித் துரத்தி
யோட்டி
பணம் பண்ணுவோம்.
காட்டுராஜா சிங்கத்தை நாற்றம்பிடித்த மிருகக்காட்சிசாலையில்
போவோர் வருவோரெல்லாம்
கல்லாலடித்துக் கிண்டலடிக்கும்படி
பாழடைந்து குறுகவிரிந்திருக்கும்
புழுதிவெளியில் உழலச் செய்வோம்.
வாழைப்பழத்தில் மதுபுட்டிக் கண்ணாடித்
துண்டைச் செருகி
யானைக்கு உண்ணத் தருவோம்.
பிடிக்காதவர்களைப் பழிக்க பன்னி என்று
பன்னிப்பன்னிச் சொல்லுவோம்.
அதுபாட்டுக்குப் போய்க்கொண்டிருக்கும்
கன்றுக்குட்டியின் முதுகில்
ஒரு தடித்த கழியால் ஓங்கியடிப்போம்.
எதிரேயுள்ள நடைமேடைச் சுவரின்
விளம்பரத்தாளை வாய்க்குள் இழுக்கப் படாதபாடுபட்டுக்கொண்டிருக்கும்
தாய்ப்பசுவின் கண்களில்
நீர் ததும்பக்கூடும்.
அதைப்பற்றி நமக்கு என்ன கவலை?
மனம் கசிந்து அழுபவரையும்
பழித்து இழிவுபடுத்த
தினந்தினம் உதாரணம் காட்டுவோமே
யல்லாமல்
மற்றபடி முதலையின் ரணம், சினம் கனம்
அது அதிகமாய்க் காணப்படும் சதுப்புநில
வனம்
அதற்கு இருக்கலாகும் மனம் பற்றி
என்ன தெரியும் நமக்கு?

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் பயிர் முளையிலே தெரியும்………… ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் பயிர் முளையிலே தெரியும்…………

‘ரிஷி’

(லதா ராமகிருஷ்ணன்)
ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்
அநியாய அவதூறுகள்
அவமானகரமான வசைச்சொற்கள்
அமைதியிழக்கச்செய்யும் கெக்கலிப்புகள்
அசிங்கப்படுத்தும் அடைமொழிகள்
அக்கிரம வக்கிரச்சொலவடைகள்
பொச்சரிப்புப் பழமொழிகள்
பொல்லாங்குப் புதுமொழிகள் என
ஒருவருக்கு நாம் தந்துகொண்டிருக்கும் அத்தனையையும்
நமக்கு இன்னொருவர் தரக்கூடும்
இன்றே
இங்கே
இப்போதே
குளிர்காலம் வசந்தம் போல்
முற்பகல் பிற்பகல்
இரண்டின் இடைத்தூரம் சில மாதங்கள்
அன்றி சில நாட்கள்
அன்றி
சில மணித்துளிகள்
அன்றி சில கணங்கள்
அன்றி ஒரு கணத்திற்கும் மறுகணத்திற்கும் இடையிலான
நூலிழை அவகாசம்….
காலம் கணக்குத்தீர்க்கும்போது
அதைப் புரிந்துகொள்ளத் தவறியும்
புரியாததுபோல் பாவனை புரிந்தும்
ஆழ்ந்த யோசனையிலிருப்பதாய் அண்ணாந்துபார்ப்பதாலேயே
நம்மை ஆகாசம் என்று இன்னும் எத்தனை நாள்தான் நம்பிக்கொண்டிருக்கப்போகிறோம்….?

சொப்பனவாழ்வு ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 சொப்பனவாழ்வு

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
கனவாய்ப்போன கனவு
கனவாகிப்போகாமலிருக்கும் கனவில்
கனவாய்ப்போவதுதான் கனவின்
விதியும் நியதியுமென
கனவில் ஒலித்த அசரீரியின் கனவுப்
பாதையில் பின்னோக்கிச் செல்லத் தொடங்கும்
கால்களின் கனவில் தொலைவு தொலைந்துபோக
கருக்கலில் அலைமேல் நடந்துகொண்டிருக்கும்
நானெனும் ஆனபெருங்கனவின் ஒருமுனை
விழிப்பின் வெளிர்பழுப்பில் சிக்குண்டுகிடக்க
மறுமுனையொரு நெடுங்கனவாய் நீளும்
வானவில்லின் வர்ணஜாலங்களில்.

நாமாகிய நாம் ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 நாமாகிய நாம்

’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

நாமுக்கு நிறையவே நியாயமான சந்தேகங்கள்.
நாம் எல்லா நேரமும் நாமாகத்தான் இருக்கிறோமா
நாம் நாமாகவும் அவர்கள் அவர்களாகவும்
நாம் அவர்களாகவும் அவர்கள் நாமாகவும்
நாம் நானாகவும் அவர்கள் தானாகவும்
ஆன போதுகள் ஆகும்போதுகள்
அன்றுமின்றுமென்றுமாய்
அங்கிங்கெனாதபடி……
நாமாகிய நாம் எப்போதெல்லாம் ஒருமையிலிருந்து
பன்மையாகிறோம்?
பன்மையிலிருந்து ஒருமையாகிறோம்?
நாம் என்பது அன்பு நிறைந்ததா?
அதிகாரம் நிறைந்ததா?
நாமுக்குள் அடங்கியோர்
தாமாக வந்தவர்களா _
திணிக்கப்படுபவர்களா?
நாமாகிய நாமிருப்பதுபோலவே
நாமாகாத நாமும் இருப்பதுதானே இயல்பு?
நாம் நயத்தகு நாகரிகப் பிறவியா?
நரமாமிசபட்சிணியா?
நாம் நானாகும் தருணங்களில் தம்மை அரியணைகளில் அமர்த்திக்கொண்டுவிடுபவர்கள்
அதற்குப்பின் கிடைக்கும் அவகாசத்தில்
மீண்டும் நாமை அருகழைத்து சாமரம் வீசச் செய்கிறார்கள்
என்றால் நாமாகிய அவர்கள் சண்டைக்கு வந்துவிடுவார்களோ?
எந்த சாமியைக் கும்பிடுகிறவர்களாயிருந்தாலும்
ஆசாமியைக் கும்பிடுகிறவர்களாயிருந்தாலும்
ஆமாம்சாமி போடும்வரை தான்
-அவர்கள் நாமுக்குள் நாமா
நாம் – அவர்கள் எனும் எதிர்நிலைகளில்
நாமை சிறைப்பிடித்து ஆயுள்கைதியாக்கி
அவர்களாகிய நாமின் அடிமையாக்கிக்
கசையடி தந்தவண்ணம்
நாமாகிய அவர்களுக்கு அதிகம் வலிப்பதாய்
நாளும் நெட்டுருப்போடுவதாய் சொல்லிக்கொண்டிருப்பது
நாமுக்குத் தெரிந்தும்
நாமால் ஏதும் செய்ய இயலாத கையறுநிலையில்
நாம்..
நாமின் சாதிமதபேதமற்ற நிலைக்கு
சந்தோஷப்பட வேண்டுமா சோகப்பட வேண்டுமா
நாம்?

வாக்களிப்பீர்….. ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 வாக்களிப்பீர்…..

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
வாக்குச்சாவடிக்குப் போய்க்கொண்டிருந்த என்னை வழிமறித்து
யாருக்கு உங்கள் ஓட்டு என்று கேட்டார்.
எனக்குப் பிடித்த கட்சிக்கு என்றேன்.
எந்தக் கட்சி உங்களுக்குப் பிடிக்கும் என்று கேட்டார்.
நான் வாக்களிக்கவுள்ள கட்சி என்றேன்.
சாமர்த்தியமாக பதிலளிப்பதாக எண்ணமோ என்று எரிச்சலுடன் கேட்டவரிடம்
அப்படி எண்ணுவது நீங்களே என்று முன்னேகினேன்.
விடாமல் பின்தொடர்ந்தவர்
சிந்திக்கத் தெரிந்தவர்கள் இந்தக் கட்சிக்குத்தான் வாக்களிப்பார்கள்
என்று ஒரு குறிப்பிட்ட கட்சியின் பெயரைச் சொன்னார்.
நான் சிந்திக்கத் தெரியாதவள் என்றேன்.
சமூகப்பிரக்ஞை மிக்கவர்கள் இந்தக் கட்சிக்குத்தான் கட்டாயம் வாக்களிப்பார்கள் என்று
குறிப்பிட்ட அதே கட்சியின் பெயரைச் சொன்னார்.
நான் சமூகப்பிரக்ஞையில்லாதவள் என்றேன்.
சாமர்த்தியமாக பதிலளிப்பதாக எண்ணமோ என்று எரிச்சலுடன் கேட்டவரிடம்
அப்படி எண்ணுவது நீங்களே என்று முன்னேகினேன்.
விடாமல் பின்தொடர்ந்தவர்
மனசாட்சிப்படி வாக்களிப்பவர்கள் இந்தக் கட்சிக்குத்தான் வாக்களிப்பார்கள் என்று குறிப்பிட்ட அதே கட்சியின் பெயரைச் சொன்னார்.
நான் மனசாட்சியில்லாதவள் என்றேன்.
தன்மானமுள்ளவர்கள் இந்தக் கட்சிக்குத்தான் வாக்களிப்பார்கள் என்று
குறிப்பிட்ட அதே கட்சியின் பெயரைச் சொன்னார்.
நான் தன்மானமற்றவள் என்றேன்.
ஆக, இந்தக் கட்சிக்குப் போடப்போவதில்லை, அந்தக் கட்சிக்குத் தான் போடப்போகிறாய். அப்படித்தானே என்றார்.
இது ரகசிய வாக்கெடுப்பு. எந்தக் கட்சிக்கு என்று நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதில்லை என்றேன்.
சிந்திக்கத் தெரியாது, சமூகப்பிரக்ஞை கிடையாது மனசாட்சியில்லை தன்மானமும் இல்லை பின் எதற்கு
பூமிக்கு பாரமாய் வாழவேண்டும் நீ என்றவரிடம்_
எல்லாமிருந்தும் வெறுமே ஒரு கட்சியின் விளம்பரப்பதாகையாய்
வரிந்து வரிந்து எழுதிக்கொண்டிருக்கும் நீங்கள் வாழும்போது
நான் வாழ்வதால் பெரிதாய் என்ன பாழாகிவிடப் போகிறது என்று
நிறுத்தி நிதானமாய்க் கேட்க _
எரித்துவிடுவதாய் என்னைப் பார்த்தவர்
பெருகும் சினத்தில் எனக்கான மனப்பாட வசைபாடலை மறந்து
தன் விளம்பரப்பதாகையோடு விறுவிறுவெனச் சென்றுவிட்டார்.

'அவா' ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 'அவா'

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)


அவாவை நானாகிய இந்தப் பிரபஞ்சத்திலிருந்து
புறந்தள்ளும் அவாவிலேயே
அவாவை அறம்பாடுகிறேன் என்றார்.

அவாவைப் புறந்தள்ளியாகிவிட்டதா
தள்ளிக்கொண்டிருக்கிறீர்களா,
தள்ளப்போகிறீர்களா என்று கேட்டதற்கு
அவா இருந்தால்தானே அவாவைத் தள்ளவோ
கொல்லவோ முடியும் என்றார்.

அவா மட்டும்தான் புறந்தள்ளப்படவேண்டியதா
என்று வினவியதற்கு
அவாவே அனைத்துத் தீமைகளுக்கும் அடிப்படை என்றார்.

அப்படியுரைப்பதொரு குத்துமதிப்பான கருத்தல்லவா,
ஒட்டுமொத்தமான பொறுப்புத்துறப்பல்லவா என்றதற்கு
அப்படியிப்படி எக்குத்தப்பாய் ஏதேனும்கேட்டாலோ
கரும்புள்ளி செம்புள்ளி அப்பிவிடுவேன் அப்பி என்று
காறித்துப்பாத குறையாய். காதில் அறைந்தார்.

தப்பித்தேன் பிழைத்தேன் என்று ஓடாமல்
அப்படியேே நின்று
அவாவுக்குத் தனித்தனி உருவமுண்டா
அல்லது அதுவொரு மொந்தையா என்று கேட்டதற்கு
வேண்டும்போது அதை மொந்தையாக்கிக்கொள்ளலாம்;
தனித்தனி உருவமாக்கிக்கொள்ளலாம்.
அவாவைப் புறந்தள்ள என்ன தேவையோ
அதை செயல்படுத்துவதே நமக்கான சவாலாகட்டும் என்றார்.

அவா புறந்தள்ளப்படவேண்டியது என்றால்
பின் ஏன் நீங்கள் அவ்வப்போது
ஓர் அவாவுடனிருக்கும் படத்தைப் பதிவேற்றுகிறீர்கள்
என்று கேட்டதற்கு
அவாவில் சின்ன அவா பெரிய அவா உண்டல்லவா
எளியதை உதறித்தள்ளி வலியதைக்
கைக்கொள்ளுவதே
அவா தொடர்பான ஆகப்பெரும் சூத்திரம்
என்றார்.

உங்கள் வாழ்வில் அவாவின் பாத்திரம்தான் என்ன
என்று கேட்டதற்கு
அவா எனக்குக் கிடைத்திருக்கும் ஜோக்கர் சீட்டு,
என்றார்.

குவா தவா சிவா ரவா போல்
அவாவும் வேண்டும்
அன்றாட வாழ்க்கைக்கு சுவாரசியம் சேர்க்க
என்று பாடிக்கொண்டே வேகமாய்ச் சென்றவரின் முதுகில் பளிச்சிட்ட கண்களில்
கண்ட
அவா மீதான வெறுப்பு
அவரை மெகா துறவியாக்க _

அவாவை சபிக்கும் அவாவில் அவர்
அவாஞானியென்ற அடைமொழிக்குரியவராக…..

இருபத்தியேழாயிரத்து முக்காலே அரைக்கால் வார்த்தைகளில் எழுதப்படவேண்டிய குறுநாவல் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 இருபத்தியேழாயிரத்து முக்காலே அரைக்கால் வார்த்தைகளில் எழுதப்படவேண்டிய குறுநாவல்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
குறுநாவல் போட்டியொன்று அறிவிக்கப்பட்டிருந்தது.
கலந்துகொள்வதற்கான நிபந்தனைகள் அழுத்தமான எழுத்துருவில் அடிக்கோடிடப்பட்டிருந்தன.
அவற்றிலொன்று குறுநாவல் மொத்தம் இருபத்தியேழாயிரத்து முக்காலே அரைக்கால் வார்த்தைகளுக்கு மேல் இருக்கக்கூடாது
என்று கறாராய் கூறியிருந்தது.
அதில் கலந்துகொள்ள ஆர்வமுற்றவன்
தனது கதையின் கதை, பாத்திரங்கள், நிகழ்வுகள்,
சந்தர்ப்பசூழல்கள், திடீர்த்திருப்பங்கள்
எல்லாவற்றையும் வார்த்தைகளின் எண்ணிக்கையாய் மட்டுமே
பார்த்தும் வார்த்தும் கோர்த்தும் போர்த்தும்
எழுதிமுடித்தான்.
பழுதடைந்திருந்தாலென்ன பரிசுவென்றால் போதும்
என்ற மனநிலை பக்குவமா பெருந்துக்கமா
என்ற வரிகளும் அவற்றின் வார்த்தைகளும்
போட்டிக்கான சட்டதிட்டங்களுக்கு அப்பால்
அந்தரத்தில் ஊசலாடியபடி…..