LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Thursday, April 24, 2025

’ன்’, ‘ள்’ விகுதிக்கப்பாலான உண்மைக்கவியின் மண்வாழ்க்கை -‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 //2021, APRIL 21 - மீள்பதிவு//

’ன்’, ‘ள்’ விகுதிக்கப்பாலான
உண்மைக்கவியின் மண்வாழ்க்கை

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

(*சமர்ப்பணம்: சக கவி யவனிகா ஸ்ரீராமுக்கு)

தனக்கிருக்கும் ஒரே வயிற்றை
இரு பாகங்களாக வகுத்துக்கொண்ட கவி
அவற்றிலொன்றை
நேசத்துக்குரிய நிறைய நிறைய வார்த்தைகளால்
நிரப்பிக்கொண்டிருந்தான்.

கும்பியின் ஒரு பாதி பசிச்சூடு தாளாமல்
கொதித்தெரியும்போதெல்லாம்
மறுபாதியிலிருக்கும் சொற்கள் நீராகாரமாகும்;

நிறைவான அறுசுவை உணவுமாகும்.
தனக்கிருக்கும் ஒரேயொரு தலையை
இருபாகங்களாக வகுத்துக்கொண்ட கவி
ஒரு பாதி உச்சிமண்டையில் சூரியன்
செங்குத்தாய் வந்திறங்கி
அருவப்பொத்தல்களிடும்போதெல்லாம்
மறுபாதி சிரசில்
மாயத்தொப்பியொன்றை தரித்துக்கொள்வதை வழக்கமாக்கிக்கொண்டிருந்தான்.

எரிக்கும் சூரியக்கதிர்கள் அந்தத் தொப்பியில்
பட்டுச்சிதறி
கவி நிற்கும் பக்கங்களிலெல்லாம்
சிற்றருவிகளாகும்!

தனக்கிருக்கும் ஒரே நாசியின் இரு துவாரங்களில்
இருவேறு நாற்றங்களை
ஒருங்கே உள்வாங்கவும்
பழகிக்கொண்டுவிட்ட கவி _

தனக்கிருக்கும் ஒரே மனதை
இரு பாகங்களாக வகுத்துக்கொள்ளும்
வழியறியாமல் -
அரசியல்வாதியோடும் திரைக்கலைஞர்களோடும்
வாய்கொள்ளா சிரிப்புடன் நின்றுநின்று
வெளிச்சம் தம்மீது வாகாய்ப் படரவைத்து
வரகவியாய்த் தன்னைக் கட்டமைத்துக்கொள்ளும்
எத்தனமின்றி -
பித்தாய் பிறைசூடி
எத்தாலும் கவிதைகளே நிறைதுணையாகத்
தன்னந்தனியாய்
சென்றுகொண்டிருக்கும் வழியெல்லாம்
அவன் _

(‘ன்’, ‘ள்’ விகுதியை இங்கே
முன்னிலைப்படுத்துவோரை
என்ன சொல்ல….)

எழுதிய
வாசிக்கப் பழகிய
கவிதைவரிகள்
அவனுக்காய்
சிவப்புக்கம்பளம் விரித்தபடி....


மலையும் மலைமுழுங்கிகளும் ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

மலையும் மலைமுழுங்கிகளும்
ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

................................................................................................................................................................

 *2016இல் எழுதிய கவிதைகள் என்று நினைக்கிறேன். நான் மிகவும் மதிக்கும் கவிஞரை யாரோ கொச்சையாக மதிப்பழித்துக் கருத்துரைத்திருந்தற்காக வருந்தி அந்தத் தாக்கத்தில் எழுதிய கவிதைகள் என்று நினைக்கிறேன். எல்லா நேரங்களிலும் எல்லோருடைய நியாயமற்ற எதிர்வினைகளுக்கும் எதிர் வினைகள் புரிந்துகொண்டேயிருக்க முடிவதில்லை. அவர்களுக்கு நம்முடைய எதிர் வினைகள் நியாயமற்றவையாகத் தோன்றக்கூடும். எனவே, இம்மாதிரி சமயங்களில் கவிதையெழுதுவதே வடிகாலாய்; வலிநிவாரணமாய்.

..........................................................................................................................................................................

1
யாருமே நுழையமுடியாத அடர்ப்பெருங்காட்டிற்கப்பால்
ஆகாயமளாவ
அடிக்கு அடியிருந்த வழுக்குப்பாறைகளெங்கும்
படர்ந்திருந்தன பலவகை முட்கள்.
கைக்காசை செலவழித்து,
மெய்வருத்தம் பாராதொழித்து
உயிரைப் பணயம் வைத்து
கயிறு அறுந்துவிழுந்தபோதெல்லாம்
காற்றை இறுகப்பிடித்துக்கொண்டு
உள்ளங்கைகளெங்கும் சிராய்த்துக்
குருதி பெருக
உடலின் அயர்வில் உயிர் மயங்க
மலையை வாகாய் சீரமைத்ததோடு
படிக்கட்டுகளையும் செதுக்கி முடித்தான்.
ஆர்வமாய் ஏறியவர்கள்
சிகரம் தொட்ட பின் சுற்றிலும் பார்த்தால்
காணக்கிடைத்ததெல்லாம் சொர்க்கம்!
நறுமணப்பூக்களும்
மூலிகை மரங்களும்
அதியமான் நெல்லிக்கனிகளாய்க் கிடந்தன!
அரிய புள்ளினங்கள்!
பரவும் தரிசனப் பேரொளி!
மாற்றான் சிந்திய வியர்வையில்
முன்னேறுவது எப்படி என்று
முப்பதே நாட்களில் கற்றுக்கொள்வதில்
கைதேர்ந்த சிலர்
விறுவிறுவென ஏறத்தொடங்கினார்கள்.
எல்லாவற்றையும் செல்ஃபியில்
சிக்கவைத்ததோடு
அருமருந்து மூலிகைகளையும்
அள்ளித்திணித்துக்கொண்ட பின்
கடைவிரிக்கத் தோதான இடத்தைக்
கச்சிதமாய்க் கணக்குப் பண்ணியவாறே
கீழிறங்குகையில்
காலந்தாக்கி சற்றே உடைந்திருந்த
ஒரு படிக்கட்டு முனையை
கவனமாய்ப் படம்பிடித்துக்கொண்டார்கள்.
கடைசிப்படியில் காலைவைத்ததுமே
கூவத்தொடங்கினார்கள் –
கேவலம் ஒரு படிக்கட்டைக் கூட
சரியாகக் கட்டத் தெரியவில்லை யென்று.
இன்னொருவன் மாங்குமாங்கென்று உழைத்து
முதுகுடையத் தாங்கிப்பிடித்து
நிமிர்த்தி நிற்கவைத்த மலையைத்
தமக்கு வெள்ளிக்காசு தரும் சுற்றுலாத்தலமாக
மாற்றிக்கொண்டதோடு நில்லாமல்
மலையபிமானத்தோடு நடந்துகொண்டவனை
வசைபாடும் வித்தகம்
சில மெத்தப்படித்த மேல்தாவிகளுக்கே உரிய
’ஹை_ஃபை’ வர்த்தகம்.
அதுபற்றியும் பேசுமோ என்றேனும்
அவர்களின் ஏதாவதொரு ‘பென்னம்பெரிய’ புத்தகம்….?

2
எத்தனை நாட்களுக்குத்தான்
எட்டியுதைத்துக் கொண்டேயிருப்பீர்கள்
ஏறிவந்த ஏணியை?
நூலேணியாக இருந்திருப்பின்
கால்சிக்கித் தலைகீழாகி
நீங்கள் உருண்டுபுரண்டிருக்கக்கூடும்.
மரத்தாலானது என்றால்
நீங்கள் உதைக்கும் உதைக்கு
அதன் கட்டைகள் சில உடைந்தும்
கயிறு பிரிந்தும்
தெறித்துவிழுந்து
கடைசிப் படியில் நீங்கள்
கிடக்கநேர்ந்திருக்கும் இதற்குள்.
ஆனால், வெறும் ஏணியல்ல அது –
மலை.
அற்பர்களின் காணெல்லைக்கப்பாலிருக்கிறது
அதன் தலை.
காசின் சுவடறியாது அதன் விலை
என்பதே என்றுமான உண்மைநிலை.
இது வெறும் எதுகை-மோனை யில்லை.
அந்தரவெளியே அதன் தஞ்சமாக –
‘கிருஷ்ணகல்யாண’க் கச்சேரிகளுக்கும்
பொச்சரிப்புகளுக்கும்.
என்றுமிருந்ததில்லை பஞ்சம்.
உங்களால் உய்த்துணரவியலா
ஓராயிரம் சிலைகள்
அதனுள்
உயிர்த்தெழக் காத்திருக்கின்றன.
எத்தனைதான் எட்டியுதைத்தாலும்
முட்டிமோதினாலும்
நொறுங்கிமுறியப்போவது
உங்கள் எலும்புகளே
என்பதைக்கூட உணரமுடியாத அளவு
அத்தனை வீராதிவீரர்களா நீங்கள்?
கோராமையாக இருக்கிறது.
எட்டியுதைக்க மட்டுமே பணிக்கும்
உங்கள் கால்களை
நீங்கள் உண்மையிலேயே மதிப்பவராயிருந்தால்
கட்டப்பாருங்கள் அவற்றின் உதவியோடு _
குட்டிக் குன்றையாவது.

மலையின் உயரம் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

மலையின் உயரம்

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)

*2016 இல் எழுதிய கவிதைகள் என்று நினைக்கிறேன். நான் மிகவும் மதிக்கும் கவிஞரை யாரோ கொச்சையாக மதிப்பழித்துக் கருத்துரைத்திருந்தற்காக வருந்தி அந்தத் தாக்கத்தில் எழுதிய கவிதைகள் என்று நினைக்கிறேன். எல்லா நேரங்களிலும் எல்லோருடைய நியாயமற்ற எதிர்வினைகளுக்கும் எதிர்வினைகள் புரிந்துகொண்டே யிருக்க முடிவதில்லை. அவர்களுக்கு நம்முடைய எதிர் வினைகள் நியாயமற்ற வையாகத் தோன்றக்கூடும். எனவே, இம்மாதிரி சமயங்களில் கவிதையெழுதுவதே வடிகாலாய்; வலிநிவாரணமாய்.

....................................................................................................................................................................................................

(1)
ஒருபோதும் மலைகளாக முடியாதவர்கள்,
மலைமேல் ஏறக்கூட முடியாதவர்கள்
மலையின் அடிவாரத்தில் நின்று அண்ணாந்துபார்த்தாலே
மளுக்கென்று கழுத்து சுளுக்கிக்கொள்கிறவர்கள்
மலையிலிருந்து உருளும் ஒரு கல்லைக் காட்டி
மலை மாபாதகம் செய்துவிட்டதாக
மண்ணை வாரித்தூற்றுகிறார்கள்;
காலமெல்லாம் கையில் கற்களோடு
சுற்றிக்கொண்டிருப்பவர்கள்
பாவனைக் கண்ணீர் பெருக்கிக்
கருணைக்கடலாகிவிடுகிறார்கள்.
கனியிருப்பக் காய் கவரலாமோ என்ற குறட்பாவை
மேற்கோள் காட்டி கையோடு
தனித்துவமான தமது வசைபாடலை
ஒலிக்கச்செய்கிறார் கோரஸ்களோடு.
‘கலி முத்திப் போச்சு’ என்பதாய் கவனமாய்
நவீன தமிழில் கருத்துரைத்து
எலிப்பிள்ளை என்றுரைப்பார் கிளிப்பிள்ளையாய்
வலிய சிங்கத்தை.
எத்திசையிலும் அலைபாய்ந்திருக்குமவர் கண்கள்
பித்தளையாகக் காட்டி ஒரு ஒப்புநோக்கலில்
தன்னைப் பத்தரைமாற்றுத் தங்கமாகப் பறைசாற்ற
எங்கேனுமிருப்பாரோ இளிச்சவாயர்கள்
என்று கண்காணித்தபடி.
ஒருவரிடம் காரியம் ஆகவேண்டியிருந்தால்
அவரை ஆதரிப்பார்;
இன்னொருவரிடம் இன்னொரு காரியம் ஆகவேண்டியிருந்தால்
அவரையும் ஆதரிப்பார்.
பாரபட்சமே நீதிநெறியாக
கையில் எப்போதுமிருக்கும் துலாக்கோல்
தட்டின் அடியில் ஒட்டிய புளியோடு.
எவரைப் பரிச்சயப்படுத்திக்கொண்டால் என்ன ஆதாயம்
என்ற மனக்கணக்கில்,
மருந்துக்கும் புத்தகங்களைத் தொடாமலேயே
சேருமிடம் சென்று வென்று கொன்று மென்று
பாஸ்மார்க், முதல் வகுப்பில் தேர்ச்சி, டிஸ்டிங்ஷன்
தங்கப்பதக்கம் என்று படிதாவிப்படிதாவிச்
செல்பவர்களுக்குத்தான்
குறிப்பாக மலையைக் கண்டால் வெறுப்போ வெறுப்பு.
’தட்டாமாலை தாமரப்பூ சுத்திச்சுத்தி வந்தாராம்’ என்ற
குழந்தைக்குதூகலமாய்
”விளையாட வாயேன்” என்று வெள்ளந்தி பாவனையில்
மலையை அழைப்பார்;
தலையைத் தழைத்தால் முகடு வெட்ட வாகாய்
வெட்டரிவாளை ஒளித்துக்கொண்டு.
இறங்கிவர மறுக்கும் மலையைப்
பெருமுதலாளி என்று பழிப்பார் _
இருபத்தியிரண்டு செல்லப்பிராணிகள் வைத்திருப்பார்.
இன்னும் என்னென்ன ரகங்கள் இங்கே என்றெண்ணி
புன்னகை பூக்கிறது
இயல்பே உயரமான மலை.
உயரேயிருந்து பார்க்க எல்லாம் தெரியும் மலைக்கு.
மலையை மடுவாக்கும் கனவைக்கூட
நாம் கண்டுவிட இயலாது.
முன்னே நின்று நீ உறுமுவதெல்லாம்
முனகல் மட்டுமே மலைக்கு;
முட்டிமோதினாலோ சேதாரம் உன் தலைக்கு.


(2)

எது உன் உயரம்?
குட்டையாய் இருப்பதாய் மற்றவர்களை மட்டம்தட்டிக்கொண்டேயிருப்பதா?
எது உன் உயரம்?
அன்றொருநாள் அன்பின் மிகுதியால் கட்டிப்பிடித்து முத்தமிட்டவளை
ஆசைதீரத் தொட்டுத்தீண்டிவிட்ட பின்
தட்டுக்கெட்டவள் என்று நட்பினரிடமெல்லாம் சொல்லித் திரிவதா?
எது உன் உயரம்?
விட்டுவிடுதலையாகி நிற்கும் சிட்டுக்குருவியின் சிறகு முறித்து
சிறுகூண்டிலடைத்துவிட்டு
தட்டுச்சோறு தந்து அதன் ரட்சகன் என்று மார்தட்டிக்கொள்வதா?
எது உன் உயரம்?
மொட்டைத்தலையைப் பார்த்து
எள்ளிநகையாடிவிட்டு
உன் வழுக்கை அழுக்கை மட்டும்
எண்ணிப்பார்க்க மறுப்பதா?
எது உன் உயரம்?
களர்நிலமாய்ப் பலரைச் சுட்டி
உளறுவாயர்களாய் பட்டம் கட்டி
வளர்பிறையாய் உன்னை மட்டும்
விரிவானில் கட்டங்கட்டிக் காட்டுவதா?
உன் அளவுகோல் அறிந்ததெல்லாம்
உன் உயரம் மட்டுமே.
அதன் ஒற்றைப்பரிமாணம் மட்டுமே.
தூல உயரமே தெரியாத நிலை;
சூக்கும உயரமோ காற்றணுவலை.
தலை-கால் உயரமும், கால்-தலை உயரமும் சரிசமமானதா?
வலைமீனின் கடலுயரம் கணநேரக் கனவா?
இலைப்பச்சயத்தின் உயரம் ஏறிப்பார்க்க முடியுமா?
பள்ளத்தாக்கின் உயரம் புரிய
உள்ளிறங்கிப் பார்க்கப் பழகவேண்டும்.
உள்ளபடியே,
மலையறியாது அதன் உயரம்.
...........................................................................................................
3. அவரவர் உயரம்
உயரத்தில் உங்களை உட்கார்த்தத் தயார்
உங்களுக்குத்தான் அதற்கான உத்வேகம் இல்லை
யென்பவரிடம்
உயரம் என்றால் என்ன என்று கேட்க
உன்மத்தம்பிடித்தவரைப் பார்ப்பதுபோல்
அரையடி பின்வாங்கி
உற்றுப்பார்க்கிறார்.
பின் பயம் நீங்கி பரிகாசம் பொங்க
’உருப்பட்டாற்போல்தான்’ என்றுகூறி
படபடவென்று கைதட்டிக் கெக்கலிப்பவரைப் பார்த்து
ஒன்றும் புரியாமல் நிலம்படர்ந்தபடி
அத்தனை இயல்பாய் நகர்ந்துகொண்டிருக்கின்றன
ஆகாயமும்
அந்திச் சூரியனும்.

ஊர்வலம் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 ஊர்வலம்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
இவர் ஆக்ராவில் இன்னும் பிரம்மாண்டமான தொரு தாஜ்மகாலைத் தன் படைப்புகளின் மூலம்
கட்டியெழுப்பும் திட்டத்தை அடுத்தடுத்த பதிவுகளில் தவணைகளில் வெளியிட்டுக்கொண்டிருந்தார்.
அவர் அண்டார்ட்டிகாவில் தன் எழுத்துக்கள் மூலம் வெய்யில் வரவழைக்க முடியுமா என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டிருப்பதாக
அத்தனை தீவிர முகபாவத்துடன் புகைப்படமொன்றைப் பதிவேற்றியிருந்தார்.
இருவரைச் சுற்றிலும் நிறைய நிறைய பேர்
தட்டத் தயாராய் கைகளை ஆயத்தநிலையில் வைத்துக் கொண்டிருந்தார்கள்.
தட்டாத கைகள் இருந்தென்ன புண்ணியம் என்று சன்னமாய்ப்
பின்னணியிசை ஒலித்துக்கொண்டிருந்தது.
யாருமற்ற சிற்றூரின் சிறுவீட்டின் அத்துவானக்காட்டில்
இருந்த இடம் இருந்தபடி இடதுகையால்
அருகே சிறுகோப்பையிலிருந்த வேர்க்கடலையை அவ்வப்போது வாயில் போட்டுக் கொறித்தபடி எழுதிக்கொண்டிருப்பவரின்
எழுத்துக்கள் இனிவரும் நாளொன்றில்
ஆக்ராவையும் அண்டார்ட்டிகாவையும் இவரிருக்கு மிங்கே கொண்டுவந்து சேர்க்கும் என்பதொரு
சிதம்பர ரகசியமாக….

சாபம் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 சாபம்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
சமத்துவக் கனல் பறக்கும் அவருடைய வரிகளைப் படிக்கும்போதெல்லாம்
அவரை யொரு மெய்யான சமூகவுணர்வாளரென்றே எண்ணியிருந்தேன்.
அன்றொரு நாள் அவருடைய கப்பலனைய வீட்டைப்பார்க்க நேர்ந்தது.
அதுபோலவர் மாநிலத்துக்கொரு மாளிகை வைத்திருப்பதாகத் தெரியவந்தது.
காலை நடைப்பயிற்சிக்காகக் காலாற நடந்துசென்றால் சுற்றிவர ஒரு மணிநேரம் பிடிக்கும் அவரது பண்ணைவீட்டை கூகுள் மேப் காண்பித்தது.
அடித்தட்டு மக்களைப் பார்க்கப்போகும்போதெல்லாம் எளிய ஆடையணிந்துவருபவரை யொரு நாள் அவர் நேரம் கிடைக்கும்போதெல்லாம் பழிக்கும் பெரிய தொழிலதிபரின் வீட்டுத்திருமணத்தில் பட்டும் வைரமுமாய் பளபளத்தொளிர்வதை தொலைக்காட்சி சேனல்களனைத்தும் விதவிதமான கோணங்களில் காட்டி மகிழ்ந்தன.
அதிகாரமும் செல்வ வளமும் அவருக்கு அளித்திருந்த தனிச்சிறப்பான சாதி அந்தஸ்தில்
அடுத்தவரையெல்லாம் கால்கடுக்க நிற்கவைத்தவாறே பேசிக்கொண்டிருப்பவர்
ஒருமையில் அழைத்து ஏசிக்கொண்டிருப்பவர்,
எல்லோரும் இந்நாட்டு மன்னரென்றபோது
சுற்றியிருந்தவர்களின் கைத்தட்டலில் அரங்கமே அதிர்ந்தது.
வறுமைக்கோட்டின் கீழ் இருப்பவர்களை அங்கேயே இருக்கச்செய்து
அவ்வப்போது சில எலும்புத்துண்டுகளை வீசுவதே
திருத்தமான வேட்டைக்கொரு திட்டவட்டமான
உத்தி யென்பதை
மக்கள் அறியமாட்டார்கள் என்ற மேலான நம்பிக்கையில்
மேடைதோறும் உரத்த குரலில், தொண்டை கரகரக்க
அதி தூய்மையான மினரல் வாட்டரைக் குடித்தபடி
முழங்கிக்கொண்டேயிருப்பவர்களின்
கால்களின் கீழ்
எக்காலமும் நிலநடுக்கம்போலெதுவும்
நேராதோவெனக் கலங்கிநிற்குமென்
பாழ்மனம்
கைநிறைய மண்ணள்ளி யிறைத்தவாறு….