LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Tuesday, November 22, 2022

சொல்லடி சிவசக்தி குக்குறுங்கவிதைக்கதைகள் 11-15 ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 சொல்லடி சிவசக்தி 

குக்குறுங்கவிதைக்கதைகள் 11-15

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)


11. சந்தைப் பொருளாதாரம்
……………………………………………………………

பெருவியாபாரிகளும் சிறுவியாபாரிகளும்
பெருகிக்கொண்டிருக்கும் வாங்குவோரும்
நிறைந்ததே சந்தையாக
அன்றாடம்
அரைப்படியை ஒரு படியாக
அளந்துகொண்டிருக்கும்
அரசியல் குத்தகையாளர்களின் வியாபாரம்
அமோகமாய் நடந்துகொண்டிருக்கிறது.


12. பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா….
………………………………………………………………………................................

”பச்சை என்றுதான் சொன்னார் அவர்”
இல்லை அவர் நீலம் என்று சொன்னார்"
”இல்லை பச்சையை பச்சை என்றுதான் சொன்னார் அவர்”
”இல்லவேயில்லை - அவர் பச்சை பச்சையாகப் பேச மாட்டார்”
பச்சை என்பதற்கும் பச்சை பச்சை என்பதற்கும்
பாரிய வித்தியாசம் உண்டென்பதை அறியாமல்
அல்லது அறிந்துகொள்ள விரும்பாமல்
இறந்துவிட்டவரின் பச்சையை
நீலமாக விரிப்பவர்
நிச்சயம் மனிதநேயவாதி தான் என்பதை நம்பித்தானாகவேண்டும்!
கொச்சைவசைக்குத் தப்ப
இச்சமயம் இஃதொன்றே கச்சிதமான வழி!


13. பிறழ்மரம்
............................................................................................................
பார்வைக்கு ஆலமரம்தான் என்றாலும்
கூர்முள் கிளைகளெங்கும்
கீழ்நோக்கித் தொங்கும் விழுதுகளெங்கும்
பசிய இலைகளெங்கும்
பரவியுள்ள நிழல்திட்டுகளெங்கும்
இளைப்பாற இடம் வேண்டுமா
முள்பழகிக்கொள் முதலில் என்ற மரத்தை நோக்கி
மெல்லச் சிரித்தவாறு கூறியது சிட்டுக்குருவி:
’முதலில் நீ மரத்தின் தன்மையை அறியப் பழகு.
நிழல் பூ காய் கனி யென்றாயிரம் மரங்கள்
இங்குண்டாமென அறிதலே அழகு’.

14. மறுவாசிப்பு
........................................
முதல் வாசிப்பில் ‘அ’ ’அ’வாகவே கண்டது.
அஃ, அஃகாக.
எஃகை பித்தளையாக்குவது எப்படி என்று புரியாமல்
சற்றே தத்தளித்த பின்
திடமனதுக்காரனை மடாக்குடியனாக்கி
’பாவம் தலைக்கேறிய போதையில் அவன்
கதைத்ததைக்
கணக்கிலெடுத்துக்கொள்ளவேண்டாம்’.
என்பவரின் கருணைமனதை
அடிக்கோடிட்டுக் காட்டிப் பாராட்ட
ஆட்களை ’செட்டப்’ செய்வதும்
ஆய்வலசலின் திட்டப்படியான தொரு
நாட்பட்ட அம்சமாக…


15. கட்டுடைப்பு
.............................................................................
முண்டாசுக்கவியை முட்டி மோதி மிதித்த யானை
தானே யப்படி செய்யவில்லை
அதன் சின்ன வாலை முறுக்கிக் கோபமூட்ட
ஏவப்பட்டவர்கள்
ஆனான எட்டுபேர் என
மானே தேனேவை இடையிடையே கொண்டுவந்து
துண்டுபோட்டுத் தாண்டாத குறையாகச்
சொல்லப்பட்டதைக் கேட்டு
ஆட்டங்கண்ட
காட்டு யானைகளெல்லாம்
கதிகலங்கித்
தறிகெட்டோடத் தொடங்கின!





முதல் வாசிப்பில் ‘அ’ ’அ’வாகவே கண்டது.
அஃ, அஃகாக.
எஃகை பித்தளையாக்குவது எப்படி என்று புரியாமல்

சற்றே தத்தளித்த பின்
திடமனதுக்காரனை மடாக்குடியனாக்கி
’பாவம் தலைக்கேறிய போதையில் அவன்
கதைத்ததைக்
கணக்கிலெடுத்துக்கொள்ளவேண்டாம்’.
என்பவரின் கருணைமனதை
அடிக்கோடிட்டுக் காட்டிப் பாராட்ட
ஆட்களை ’செட்டப்’ செய்வதும்
ஆய்வலசலின் திட்டப்படியான தொரு
நாட்பட்ட அம்சமாக….




சொல்லடி சிவசக்தி குக்குறுங்கவிதைக்கதைகள் 16-20 ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 சொல்லடி சிவசக்தி 

குக்குறுங்கவிதைக்கதைகள் 16-20

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)


16. வெற்றுமுழக்கங்கள்
………………………………………………….....................................

’அறிவீலி’ என்றழைத்தார்
’ஆக்கங்கெட்ட அற்பப்பதரே’ என்று
ஆங்காரமாய் மொழிந்தார்
’அட, ஒரு மண்ணும் தெரியாது உனக்கு’ என்று
உரத்த குரலில் பிரகடனம் செய்தார்.
’அடி செருப்பாலே’ என்று
அத்தனை கண்ணியமாக முழங்கினார்
’அப்படியே போய்விடு அப்பாலுக்கப்பாலே’ என்று
அருங்கனிவோடு அடியாளின் குரலில் மிரட்டினார்
’அக்கக்கோ பறவையிடம் பாடம் கேட்டுவிட்டு வா பார்க்கலாம்’, என்று அந்த விரட்டு விரட்டினார்
‘வடிகட்டின முட்டாள்’ என்று அழகிய வழுவழுப்புத் தாளில்
நற்சான்றிதழ் வழங்கினார்”
அவ்வப்போது வார்த்தைகளற்று வெறுமே பழிப்புகாட்டிக்கொண்டிருந்தார்.
நடையெட்டிப் போட்டேன் என் வழியில்.
தெருவோர டீக்கடையிலிருந்து சந்திரபாபு பாடிக் கொண்டிருக்கிறார்:
”நானொரு முட்டாளுங்க
ரொம்ப நல்லாப் படிச்சவங்க நாலுபேரு சொன்னாங்க…”

17. விழல்
....................................
இருந்தவிடத்திலிருந்தே இரண்டாயிரங்
காததூரம் பிரயாணம் செய்து
பலகாலம் பழகியவருக்கு
மெய்யாகவே இரண்டு கிலோமீட்டர்கள்
பயணம் செய்வது
இடுப்பொடியச் செய்வது இயல்பு.
இரண்டு எட்டுவைத்தால்கூட
தடுக்கிவிழுவதில்
வியப்படைய என்ன இருக்கு?


18. சுழல்
………………………………………....................................

இல்லாத சுழலில் தத்தளித்துக்கொண்டிருக்காத
நல்லவர் ஒருவருக்கு
எல்லா நேரமும் உதவிக்கொண்டிருப்பதாக
எண்ணிக்கொண்டிருப்பவள்
இன்னரும் சமூகப்பணியாளராய்த்
தன்னைத்தான் உன்னியபடி
அல்பகலாய் சுழன்றோடிக்கொண்டேயிருக்கிறாள்
சொல்ல வல்ல கிளி 'தான்' மட்டுமே யென
மெல்ல உரக்க முன்னும் பின்னும்
பன்னிப் பன்னிச் சொன்னவாறே......


19. தழல்
........................................................................

தன்னால் சாதிக்கவியலாத சிறகடித்தலை
கண்முன்னே ஒரு இக்குணூண்டு பறவை
தன்போக்கில் செய்துகொண்டிருப்பதைக்
கண்டு
அறிவுசாலியின் மனதில்
பண்டுதொட்டுக் கிளர்ந்தெழும்
வன்முறைத்தீ
அன்றுமென்றும் அவரையே
தின்றுதீர்த்துக்கொண்டிருக்கிறது.


20. கருணை புரிதல்
.................................................................

”இல்லை நான் திருடவில்லை”யென
சொல்லிச்சொல்லிப் பார்த்தான் சிறுவன்
சல்லிப்பயலே பொய்யா சொல்கிறாய்
எனச் சொல்லிச்சொல்லி அடித்தார்கள்
வல்வினையாளர்கள்
நல்வினைப்பயனாளி அந்தச் சிறுவனை
யரவணைத்துச் சொன்னாள் –
'பாவம் பசிக்காகத் திருடியவனை யிப்படியா
வதைப்பது?'
இது என்ன கதையென்று
விதிர்த்து விலகிய சிறுவன் சொன்னான்:
’அவர்கள் சுமத்தும் குற்றத்தையே நீங்களும்
அன்பொழுக வழிமொழிகிறீர்கள்
நல்லவிதமாய்ச் சொன்னாலும்
பொய் பொய் தான்; பழி பழி தான்.
இதற்கு அவர்களே மேல்
திரும்பவும் சொல்கிறேன் நான் திருடனல்ல
மனிதாபிமானம்
வெந்த புண்ணில் வேல்பாய்ச்சுவதுபோல்
இருப்பதல்ல’.



சொல்லடி சிவசக்தி குக்குறுங்கவிதைக்கதைகள் 21-25 ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 சொல்லடி சிவசக்தி 

குக்குறுங்கவிதைக்கதைகள் 21-25

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)

21. இங்கே – அங்கே
.................................................

"இங்கே பாருங்கள் இத்தனை குப்பை"
அங்கேயும் பாருங்களேன்
"அட, கம்முனு கெட – இங்கே பாருங்கள்
இத்தனை பெரிய தொப்பை"
அங்கேயும் பாருங்களேன்
"அட கம்முனு கெட கம்முனு கெட - இங்கே பாருங்கள்
பிணந்தின்னும் சாத்திரங்கள்"
அங்கேயும் பாருங்களேன்
அட கம்முனு கெட கம்முனு கெட கம்முனு கெட-இங்கே பாருங்கள்
பிசுக்குப்பிடித்த பாத்திரங்கள்
அங்கேயும் பாருங்களேன்
அட கம்முனு கெட கம்முனு கெட கம்முனு கெட கம்முனு கெட…..


22. மேதையும் பேதையும்
..........................................................
//INKY PINKY PONKY
FATHER HAD A DONKEY
DONKEY DIED FATHER CRIED
INKY PINKY PONKY//
”எத்தனை அனர்த்தக் கவிதை யிது
என்ன எழவோ”
இகழ்ச்சியோடு உதடுகள் சுழித்து
பழித்தார் பெருந்திறனாய்வாளர்:
அவையிலிருந்த பெரியவரொருவர்
அன்று சிறுவனாய் அரசபாவனையில் ஊர்வலம் வர
தன் முதுகில் இடம்தந்து
பின்னொருநாள் இறந்துபோன கழுதையை நினைத்துக்கொண்டார்.
கசிந்த கண்ணீரை யாருமறியாமல் துடைத்துக்கொண்டார்.
HAD HAS HAVE என்று சொல்லிப்பார்த்துக்கொண்ட சிறுவன்
அவற்றிற்கான வாக்கியங்களை அமைக்கத் தொடங்கினான்.
பின் NOT சேர்த்தும்.
ஆறடிக்குச் சற்றுக் குறைவான உயரத்திலிருந்த அப்பா
தன் நண்பன் இறந்த நாளன்று அப்படி உடைந்து அழுததை
எண்ணிப்பார்த்தாள் ஒரு சிறுமி.
INKYயும் PINKYயும் PONKYயும்
வட்டமாய் நின்று ஒவ்வொருவரையாய்ச் சுட்டிப்
பாடுவதற்கானது மட்டுமல்ல
என்று புரிவதற்குள் பாதி வாழ்க்கை போய்விடுகிறது.....
என்றாலும் தன்னை மேதையென்றே
இன்னமும் நம்பிக்கொண்டிருக்குமவர்
நிச்சயம் பேதைதானே!

23. அவர் – இவர்
.................................................

அவர் அவராகவே இருக்கலாம்
அல்லது இவராகவே இருக்கலாம்
அவராகவும் இருக்கலாம்

இவராகவும் இருக்கலாம்
அவரை நீங்கள் அவரென்றால்
இல்லை இவரெனலாம்
அவரை நீங்கள் இவரென்றால்
இல்லை அவரெனலாம்
அவர் இவரை எவரெ வராகவும்
அடையாளங்கண்டும் காட்டியும்
கடைவிரிக்க மாட்டாதவர்கள்
அரசியல் கருத்துரைக்கத் துணிந்தாலோ _
அம்போவென்று போய்விடுவார்கள்
என்கிறார் அவரெனுமிவரெனு
மவரெவரேயவர்!


24. ஒளிவட்டம்
............................................



பீடத்தின் மீதேறி நின்றவண்ணம் பிரசங்கம் செய்துமுடித்து
கையோடு கொண்டுவந்திருந்த
ஜெல் பேனாவால்
பட்டிமன்றத் தீர்ப்பளிப்பாய் முடிவொன்றைப் பறையறிவித்த பின் ”இன்னொரு நாள் நான் எதிர்பார்க்கும் பதில்களைத் தரமுடிந்த அளவில் உன்னைத் தயார்ப்படுத்திக்கொண்டு
உரையாட வா”, என்று
அதிகார தோரணையில் அழைப்பு விடுத்தவரிடம்
’அடடா, உன் தலைக்குப்பின்னால் சுழலவேண்டிய ஒளிவட்டத்தைக் காணவில்லையே’
என்று சொன்னவாறே
விட்டு விடுதலையாகி வெளிபரவும் களியில்
கிளம்பிச்சென்றது சிட்டுக்குருவி.
வெலவெலத்துப் போனவர் அவசர அவசரமாய்
கத்திரிக்கோலைத் தேடியவாறே
கையில் கிடைத்த அட்டைத்துண்டில்
கோணல்மாணலாய் வட்டம் வரைய ஆரம்பித்தார்.



25. சொல்லடி சிவசக்தி
......................................................
...........................................................
'பெருமானின் பாதி உடலாய்
கருவறைக்குள் உறைந்திருப்பவள்
காலைக்கடன்களைக் கழிக்க என்ன செய்வாள்
பாவம்'
என்று பரிகாசமும் பாவனைக் கரிசனமுமாய்க்
கேட்ட தர்க்கவியலாளரிடம்
புன்னகையோடு பதிலளித்தாள் பராசக்தி:
”பாதியுடலாய் இருக்கமுடிந்தவளுக்கு
மீதியையும் செய்யமுடியாதா என்ன?
உங்கள் வீதிகளெங்கும் வாகான
பொதுக்கழிப்பறையே இல்லை - அதற்கு
ஏதாவது செய்யமுடியுமா பாருங்களேன்”.

*பத்மினி கோபாலன் - ஒரு சிறு அறிமுகம்

......................................................................................................

 *பத்மினி கோபாலன் -

ஒரு சிறு அறிமுகம்




பத்மினி கோபாலன் அவர்கள் கல்விதான் ஒருவருக்கு நிலையான முன்னேற்றத்தை சாத்தியமாக்கும் என்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டவர். 30 வருடங் களுக்கும் மேலாக அவரைத் தெரியும்.
பல வருடங்களுக்கு முன்பு அவருடைய வீட்டின் வெளி வராந்தா வில் எப்போதும் பிள்ளைகள் உட்கார்ந்து படித்துக் கொண்டிருப் பதைப் பார்த்திருக்கிறேன்.
அவருடைய முன்முயற்சியில் ஸ்ரீ ராம சரண் கல்வி அறக்கட்டளை ஆரம்பிக்கப்பட்டது. அதன் மூலம் அர்ப்பணிப்பு மிக்க பெண்கள் 50 பேர் போல் வாழ்வின் அடித்தட்டிலிருந்து வந்தவர்கள் அருமை யான மாண்டி சோரி அசிரியைகளாக உருவாகி கற்பித்துக் கொண்டிருக்கிறார்கள்.
மேற்குடிப் பிள்ளைகளுக்கே மாண்டிசோரி கிடைப்பது சாத்திய மாக இருந்த நிலை மாறி இன்று சென்னை மாநகராட்சிப் பள்ளிகள் சிலவற்றில் இந்த அமைப்பின் செயல்பாடுகளுக்கு வழியமைக்கப் பட்டு அதன் மூலம் சமூகத்தின் அடித்தட்டுக் குழந்தை களுக்கு மழலையர் வகுப்புகளில் மாண்டிசோர் கல்வி முறையின் பயன் கிடைத்துவருகிறது.
குழந்தைகள் மதிக்கப்படவேண்டியவர்கள் என்ற மாண்டிசோரி அம்மையாரின் கூற்று பத்மினி கோபாலன் அவர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று. குழந்தைகளை அடித்துத் துன்புறுத்தல், அவமதித் தல் ஆகியவை அவர்க ளுடைய ஆளுமையை வாழ்நாளுக்கும் பாதிக்கக்கூடிய விஷயங்கள் என்பது குறித்த விழிப்புணர்வு சமூகத்தில் பரவலாக்கப்படவேண்டியது மிகவும் அவசியம் என்று திரும்பத்திரும்பக் கூறுவார்.
வாக்குவங்கிகள் அல்ல என்பதால் குழந்தைகளின் ஆரம்பக் கல்வி, ஆளுமை வளர்ப்பு, வகுப்பறைச் சூழல், திறன் வளர்ப்பு, மொழிப்புலமை, போன்ற பல விஷயங் களில் போதுமான கவனம் செலுத்தப்படு வதில்லை. இந்நிலை மாறவேண்டும், எல்லா அரசியல் கட்சிகளுமே அடித்தட்டு மக்களின் குழந்தைகளுக்குத் தரமான கல்வி யும், குழந்தைப்பிராய வாழ்க்கையும் கிடைப்பதற் காகப் பாடுபடவேண்டும் என்று ஆதங்கத்தோடு சொல்வார்.
மாண்டிசோரி ஆசிரியைகள் குறித்து அவர் தெரிவித் துள்ள சில கருத்துகள் அடுத்த பதிவில் தரப்பட்டுள்ளன.
....................................................................................................................................

// பத்மினி கோபாலன் - விளம்பரத்திலிருந்து விலகியிருக்கும் தன்னார்வல சமூகப்பணியாளர்

 // பத்மினி கோபாலன் - விளம்பரத்திலிருந்து விலகியிருக்கும் தன்னார்வல சமூகப்பணியாளர் கூறுகிறார்.//


மாண்டிசோரி கல்விமுறையில் ஆசிரியர் பயிற்சி பெறு வதற்கான சிறந்த வழி:

பல வருடங்களாக மாண்டிசோரி முறையில் கல்வி போதித்துவரும் ஓர் அறக்கட்டளையை நம்பிக்கையோடு நிறுவி, நடத்திவருபவர்கள் என்ற முறையில் நாங்கள் இந்த முறையில் குழந்தைகள் எத்தனை மனமகிழ் வோடு, அனுபவரீதியாக, வாழ்க்கையோடு தொடர்பு டைய வழிகளில் கல்வி கற்கிறார்கள் என்பதை நேரிடை யாகப் பல காலம் கவனித்துவருவதன் அடிப்படையில் சில கருத்துகளை இங்கே பகிர்ந்துகொள்ள விரும்புகி றேன்.
மருத்துவம் போன்ற செயல்முறைக் கல்வித்திட்டங்க ளில் Theory முடித்த பின் internship கொடுக்கப்படுகிறது.

ஆனால், மாண்டிசோரி முறையில் முதலில் internship, அதன் பிறகு Theory என்று இருந்தால் கூடுதலாகப் பலனளிப்பதாய் இருக்கும் என்பதை எங்களால் கண்கூடாகக் காண முடிந்தது.
மாண்டிசோரி கல்விமுறையில் ஆசிரியருக்கும் குழந்தைக்கும் இடையேயான உறவு முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த உறவு மிகவும் மகிழ்ச்சியான தாகவும், ஆழமானதாகவும் இருக்கிறது. அதனால் குழந்தைகள் ஆசிரியர் சொல்வதைக் கேட்கிறார்கள். இத்தகைய உறவு எப்படி ஏற்படுகிறது என்பதை அனுபவத்தின் மூலம் தான் தெரிந்துகொள்ள முடியும்.
மாண்டிசோரி கல்விமுறை குழந்தைகளின் ஆளுமை வளர்ச்சியில் ஏற்படுத்தும் சீரிய தாக்கம் வாழ்நாளுக்குமானது. குழந்தைகளிடம் தன்னம்பிக் கையையும், தன்மதிப்பையும் வளர்க்கும் இந்தக் கல்வி முறையின் பயன்களை நேரிடையாகப் பார்க்கும்போது ஆசிரியர்க ளுக்கும் இந்தக் கல்விமுறையில் ஒரு நம்பிக்கை ஏற்படும். இந்தக் கல்விமுறைக்கான ஆசிரியர் பயிற்சியை விரும்பிக் கற்பார்கள்.
ஆசிரியர் தொழிலில் அதற்கான மனப்போக்குடையவர்களே ஈடுபாட்டுடன் செயலாற்ற முடியும் என்பார்கள். ஆனால் சில காலம் மாண்டிசோரி வகுப்பின் செயல்பாடு களைஅங்கேயேயிருந்து பார்த்தாலே அந்தக் கல்வி முறையின் மகத்துவமும், அதன் வழிமுறைக ளும் மனதில் வேர்பிடித்து விடும்.
நாம் செய்யும் விஷயம், ஈடுபடும் பணி முதலியவை குறித்து நமக்கு முதலில் நம்பிக்கை இருக்க வேண்டும். அப்படியிருந்தால் அந்தப் பணியில் அர்ப்பணிப்பு மன தோடு ஈடுபடும் மனப்பாங்கு நமக்கு வந்துவிடும். இதை நான் எங்கள் ஆசிரியைகளிடம் கண்கூடாகக் கண்டிருக் கிறேன்.
எனவேதான், மாண்டிசோரி கல்விமுறையில் ஆசிரியர் பயிற்சியளிக்கப்படுவோருக்கு முதலில் மாண்டிசோரி வகுப்புகளில் நேரடி அனுபவம் கிடைக்கச் செய்வது முக்கியம் என்று மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டி ருக்கிறேன்.

Tuesday, November 8, 2022

INSIGHT - A BILINGUAL BLOGSPOT FOR CONTEMPORARY TAMIL POEMS - OCT.2022


2019insight.blogspot.com

( A Bilingual Blogspot for Contemporary Tamil Poems) 

OCTOBER 2022 ISSUE OF 

 





 

புகைப்படத்தில் உருண்டுகொண்டிருக்கும் கண்ணீர்த்துளி - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 புகைப்படத்தில் உருண்டுகொண்டிருக்கும் கண்ணீர்த்துளி

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

அந்தவொரு புகைப்படத்தில்
உருளக் காத்திருக்குமொரு கண்ணீர்த்துளி
உண்மையில் பெரிய கதறலாகாது போயிருக்கும் சாத்தியங்களே அதிகம்.
அது உண்மையான கண்ணீர்த்துளிதானா
என்பதே சந்தேகம்.....
இரண்டாந்தோலாகிவிட்ட பாவனைகளில்
இதுவும் ஒன்றாயிருக்கலாம்;
அல்லது
இருமியபோது கண்ணில் துளிர்த்திருக்கலாம்;
அல்லது
கவனமாய் முன்கூட்டியே தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த சாலையோர கொத்துபராத்தாக் கடையில்
காமராக்கள் காணத் தோதாய் நின்றவண்ணம்
சற்றுமுன் சாப்பிட்ட கொத்துபராத்தாவின் காரம் காரணமாயிருக்கலாம்;
அல்லது நடக்கையில் ஏற்பட்ட சன்ன தூசிப்படலத்தின் ஓர் அணுத்துகள் பறந்துவந்து நாசித்துவாரத்தில் புகுந்து கிச்சுகிச்சு மூட்டியிருக்கலாம்;
அல்லது
அவசர அவசரமாய்க் குடித்த தண்ணீரின் ஒரு துளி வாய்க்குள் புகத் தவறியிருக்கலாம்;
அல்லது
சிறிதாய்த் திரளச்செய்து உருளும்போது அதைப் படம் பிடித்துப் பல கால விம்மலாக்கத்
தம்மாலான தொழில் நுட்ப நுணுக்கங்கள் கையாளப்பட்டிருக்கலாம்;
அல்லது
குடிநீர்க்கோப்பையிலிருந்து ஒரு துளியைக்
கன்னத்தில் வாகாய் ஒட்டவைத்துப் படம்பிடித்திருக்கலாம்.
அல்லது….. அல்லது…… அல்லது…… அல்லது……
நல்லது _
உள்ளது உள்ளபடி யெனில்
இருட்டறைகளில் பெருகும் கண்ணீர் புகைப்படத்தில் தெரிவதில்லை.
கருணையின் செயல்வடிவம் பெறாக் கண்ணீர் விரயமாகும் நீர்த்துளிகளன்றி வேறில்லை.
திரும்பிப்பார்க்கும்போது அவருக்கே கூடத் தெரியக்கூடும்
அவருடைய புகைப்படத்தில் அவருடைய கண்களிலிருந்து உருளும் நீர்த்துளி எத்தனை கலப்படமானது என்று;
அன்றாடம் பார்த்துப்பார்த்து அரற்றியழும்
அந்தக் கண்ணீர்த்துளி யுருள்
கன்னத்துக்குரியவர்
‘என்னமாய் நடித்தேன் என்று புன்முறுவலித்திருக்கக்கூடும்….
உதட்டளவாகுமாம் சிலர் சொற்கள்
ஊறுங் கண்ணீரும் அம்மட்டே
சிலரிடத்து....
சின்னத்திரை வெள்ளித்திரையோடு
முடிந்துபோய்விடுவதில்லை
மெகா சீரியல்கள்
என்றுணர்தலே ஏற்புடைத்து.