LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Sunday, September 13, 2020

ராஜா ராணி இளவரசியும் ஒரு சாமான்யப்பெண்ணும்……. ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 ராஜா ராணி இளவரசியும் 

ஒரு சாமான்யப்பெண்ணும்…….

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

எழுவது வயதுக்கு மேலிருக்கும் மூதாட்டியின் மீது
அத்தனை குரூரமாய் காறித்துப்பிக்கொண்டிருக்கிறாள் அந்தப் பெண்.

சிறுமியாகி சிறுமி வளரிளம்பருவத்தினளாகி
வாலைக்குமரியாகி புதுமணப்பெண்ணாகி இளம் மனைவியாகி தாயாகி
என காலத்தே அனைத்துக் கட்டங்களையும் கடந்த பின்
இன்று மும்முரமாகக் காய்வெட்டிக்கொண்டிருக்கிறாள்.

வாழ்க்கை சதுரங்கவிளையாட்டல்ல என்பதும்
சிப்பாய்க்கு ராஜாவின் அந்தப்புரக் கதவுகளைத் திறந்து
உள்நுழைய அனுமதியில்லை என்பதும் தெரியாமல்
மன்னரும் அவருடைய அன்புக்குரியவளும்
அடுத்தடுத்துப் படுத்ததேயில்லையென்றும்
அரசனை வெட்டிப்போடுவதே அந்த மாதின் நோக்கம் என்றும்
பரபரவென்று எழுதித்தள்ளுகிறாள்.

போதாக்குறைக்கு நேரடியாக வந்தும்
இப்படி காறித்துப்புகிறாள்.

மன்னர் இறந்து பட்டத்தரசியும் தளர்ந்துவிட்ட பின்
தாந்தோன்றி இளவரசி வைத்ததுதானே சட்டம்.

இரண்டாம் மனைவி, மனத்துணை, ஆசைநாயகி
போன்ற அடைமொழிகளில்
கொஞ்சம்போல் மரியாதை தொக்கிநிற்பதாக எண்ணி
அந்த மூதாட்டியை தன் தந்தையான சக்கரவர்த்தியின் வப்பாட்டி
யென்று திரும்பத்திரும்ப வசைபாடி மகிழ்கிறாள்.

இன்னும் விபச்சாரி என்று சொல்லவில்லையே தவிர
வேறு என்னவெல்லாமோ சொல்லியாயிற்று.

அரியணையும் கிரீடமும் வாரிசுரிமையும்
அசையும் அசையா சொத்துக்கள் யாவும் வேண்டும்
அதேசமயம் அவருடைய மனதுக்கினியவளை
வசைபாடிக்கொண்டேயிருக்க வேண்டும்.

முடிந்தால் ஊரைவிட்டே துரத்தி ஒரேயடியாய்
முடித்துவிடவேண்டும் தலையை வெட்டி.
ஆனால், மனிதநேயவாதி என்ற முகக்கவசத்தை
இழந்துவிடலாகாதே….

மனக்கணக்குகள் பலவகையாய்,
மூதாட்டியை மதிப்பழிப்பதே
முதலும் முடிவுமான நோக்கமாய்
காறித்துப்பிக்கொண்டிருக்கிறாள் இளவரசி.

கொரோனா காலத்தில் பொதுவிடங்களில் துப்பக்கூடாது
என்று அவளுக்கு யார் எடுத்துச்சொல்வது?

விரிந்து பரந்த அரசரின் பெயர் புகழ் செல்வத்திற்காய்
வந்து ஒட்டிக்கொண்டாள் என்று ஏசி
மீண்டும் மீண்டும் காறித்துப்பப்படும் தன் முகத்தை
மௌனமாய் துடைத்துக்கொள்கிறாள் மூதாட்டி.

தன் மனதுள்ளிருக்கும் டிரங்குப் பெட்டி நிறைய
மன்னர் தந்த சூக்குமப்பரிசுகள் இருப்பதை
எண்ணிப்பார்க்க
அவருடைய சுருக்கங்கள் நிறைந்த முகத்தில்
புன்னகை பரவுகிறது.

மூன்றாமவருக்கு இடமற்ற
அந்தரங்கம் புனிதமானது.

 

மகத்துவம் பலவிதம்! - ஷேக்ஸ்பியர்

                         மகத்துவம் பலவிதம்!



//மகத்துவத்தைக் கண்டு அஞ்சவேண்டாம்

மகிமையோடே பிறப்பவர்கள் உண்டு
.
மகத்துவமானவர்களாக மலர்பவர்கள் உண்டு.

மகத்துவம் வலிந்தேற்றப்பட்டவர்கள் உண்டு//


_ ஷேக்ஸ்பியர்

(பி.கு: பிறரை மட்டந்தட்டுவதன் மூலமே தங்களை மகத்துவம் வாய்ந்தவர்களாகக் காட்டிக்கொள்பவர்களும் உண்டு!)

கவிதையாதல் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 விதையாதல்

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)


ஒரு சொல் என்னைப் பின்தொடர்ந்தவாறே….
அல்லது, நான் அதை விட்டு விலகிச்செல்கிறேனா…?
ஒரே சீரான இடைவெளி பராமரிக்கப்படுகிறது
தண்டவாளங்களிலும்……
அவ்வுலகில் அரைவட்டங்களும் பொருட்படுத்தப் படும்என்று சொல்லிச் சென்ற கவி ராபர்ட் ப்ரவுனிங்கை(என்று ஞாபகம்) நான் முழுதாகப் படித்தேனில்லை....
என்றாலும், அவருக்கு என் நன்றி உரித்தாகிறது.
இத்தனை வார்த்தைகளை இறைத்த பின்னரும்
என்னைப் பின் தொடரும் அந்தச் சொல்லின்
ஒலி வரி வடிவங்கள்
கனவுங்கற்பனையுமாய்.....
இருந்தபோதும் அந்தகாரத்திலிருந்து அதன் கண்கள்
என் மனதின் முதுகை உறுத்திக்கொண்டேயிருக்கின்றன.
சிறு சிறு திருப்பங்களில் அதன் மூச்சுக்காற்றை
என் பின்கழுத்திலும் காதுமடல்களிலும் உணரமுடிகிறது.
சமயங்களில் முதுகைச் சுரீரெனத் துளைத்து
உள்ளிறங்கி இலவம்பஞ்சின் இதமாய் வருடித் தந்து
பிரமிப்பில் நான் திக்குமுக்காடி நிற்கும் நேரத்தில்
சமச்சீராகப் பராமரிக்கப்படும் தொலைவிலிருந்து
Zoom
செய்யப்பட்ட தன் விழிகளைப் பின்னுக்கு இழுத்துக்கொண்டு
என்னைத் தொடரும் சொல்
வழித்துணையாய்
வாழ்வாய்

 

ஒரு கதையின் கனபரிமாணங்கள் ‘ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 ஒரு கதையின் கனபரிமாணங்கள்

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

சீக்கிரம் தூக்கம்வந்துவிடும்போலிருக்கிறது
சின்னதாக ஒரு கதை சொல்லேன்”, என்று கேட்ட பிள்ளைக்கு
என்ன கதை சொல்ல என்று
கணநேரம் குழம்பினாள் தாய்.

சீக்கிரம் வந்துவிடப்போகும் தூக்கத்தில் சிக்கிக்கொண்டிருந்தது அந்தச் சின்னது.

குழந்தையை மட்டுமா சமீபித்துக்கொண்டிருந்தது தூக்கம்?
அவளையும்தான்.

இருவரையும் நெருங்கிவந்துகொண்டிருக்கும தூக்கங்கள்
ஒன்றையொன்று குறுக்குவெட்டிக்கொள்ளும் புள்ளியில்
முடிந்துவிடவில்லையென்றால் பின்
அதிலிருந்து கிளைபிரிந்து எதிரெதிர்த் திசைகளில் போய்க்கொண்டிருக்கும்
தூக்கங்களிலும் சிக்கிக்கொண்டிருப்பது அதே கதையின் நீட்சிதான்
என்று எப்படிச் சொல்ல முடியும்?

பாதி மூடிய பிள்ளையின் கண்களையே பார்த்தபடி
இரண்டு பூக்கள் மலர ஆரம்பித்ததாகக் கதை சொல்ல ஆரம்பித்த அம்மா
ஒன்று சின்னது இன்னொன்று பெரியது என்று சொன்னதைக் கேட்டு _

இரண்டுமே அழகு,
இரண்டுமே ரொம்ப வாசனை
என்று நாக்குழறக் கூறி கதையை நிறைவுசெய்து
உறங்க ஆரம்பித்தது பிள்ளை.

மம்முட்டிக்கு வயதாவதில்லை! - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 மம்முட்டிக்கு வயதாவதில்லை!

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)


மம்முட்டி

மனதிற்கும் ஆன்மாவுக்கும் உள்ள தொடர்பின்
முதல்படியிலேற முற்படும் மா கனவு.

மம்முட்டி நடிக்கும் படங்களில் மற்றவர்களின் முகங்களும்
இயக்கங்களும் மங்கலாகவே தெரிவது
இன்றல்ல நேற்றல்ல.

மம்முட்டி காற்றுபோல்;
அவரவருக்கு மட்டும் என்று எண்ணுவதைக் காட்டிலும்
அபத்தம் வேறிருக்க முடியாது.

மம்முட்டி முழுநிலவுபோல்.
மேலேறிச்சென்று தொட்டுணரவேண்டும் என்ற நினைப்புக்கு
மிகு தொலைவில்.

மம்முட்டி யொரு கேட்கத் திகட்டாத
இசைக்கோர்வை.
செவிமடுக்கும் நேரம் அது துயரார்ந்த இசையா
துள்ளல் இசையா என்று பிரித்தறிய முற்பட
மறந்துபோய்விடுகிறது மனம்.

வில்லன் மம்முட்டியும் நல்லவனே
அவன் மம்முட்டியாக இருப்பதால்.

மம்முட்டி யொரு குறியீடு
மனதை நெகிழச்செய்யுமெல்லாவற்றிற்கும்.

மம்முட்டி யொரு கவித்துவ மொழிப்பயன்
ஆன்மாவை தூய்மையாக்கும் அனைத்திற்கும்.

மம்முட்டிக்கு வயதாவதில்லை.

மம்முட்டியைப் பார்க்கும்போதெல்லாம்
வருடங்களால் ஆட்டிப்படைக்கப்படாத
அருவவெளியொன்றை நோக்கி
இன்றின் முழுப்பிரக்ஞையோடு
இன்றிலிருந்து வெளியேறும் நான்…..

நினைவு நாள் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 நினைவு நாள்

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

எதிர்பாராமல் தோளில் எங்கிருந்தோ வந்திறங்கும்
மலரிதழ்போல
அண்ணாந்த கண்நிறைக்கும் வானவில்போல
அரைக்கணமே உணரமுடிந்த உள்ளொளிபோல
என்றோ கண்ட குழந்தைக்கண்ணின் நிர்மலம்போல
எங்கோயிருக்கும் அருவியின் குளிர்நீர்த்திவலைகள்போல
எல்லாமாகியிருக்கும் காற்றுபோல
பொல்லாப்பாலையின் பேய்த்தகிப்புபோல
அசந்த நேரம் சுருக்கென்று தைத்துவிடும் ஊவாமுள்போல
செருப்புக்கும் பாதத்திற்கும் இடையே சிக்கிக்கொண்டிருக்கும்
மணற்துகள்கள்போல
வாயிலிட்ட சோறில் இடறும் கற்கள்போல்
முகக்கவசத்திற்குள் கசகசக்கும் வியர்வைத்துளிகள்போல
இடுப்புக்குடச் சுமையின் அழுத்தத்தில் மளுக்கென்று எங்கோ
மிகுவலி திரளச் சுளுக்கிக்கொள்வதுபோல
மனதைக் குடைந்தும் கடைந்தும் உடைத்தும் கடைத்தேற்றியும்
தினந்தினம் உடன்வந்துகொண்டிருக்கும்
நினைவுக்கென்று தனியாக நாள் உண்டா என்ன?

 


ஏழை ராணி - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 ஏழை ராணி

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

பிறந்தது முதலாகவே அடைபட்டிருந்ததோ
அல்லது இடைவழியில் பறிபோனதோ குரல்……

இருதயமும் மூளையுமாய் ஒருங்கிணைந்து செயலாற்றி
உருவாகிவரும் சொற்திரள்கள்
அந்தத் தெருவோரவாசியின் தொண்டைக்குழியில்
சிக்கிக்கொண்டு சதா திக்கித்திணறும்.
உடைப்பெடுத்துப் பெருகும் வெள்ளமென அவை
பீறிட்டெழும் நாள் வரின்
இந்தத் தெருவும் தெரு சார்ந்த பகுதியும்
அதை எப்படி எதிர்கொள்ளும்.......

சிலர் பழைய ஐம்பது காசு நாணயத்தைக் கொடுப்பார்கள்.
சிலர் ஐந்து ரூபாய்.
அபூர்வமாக, யாரேனும் ஐம்பது ரூபாய்.

இன்று ‘கையேந்திபவனிலாவது ஒரு தட்டு சோறு
ஐம்பது ரூபாய்க்குள் கிடைக்க வழியிருக்கிறதா,
தெரியவில்லை.

உரிமையோடு அதட்டுவதாய் அருகழைத்து
புரிபடா உச்சரிப்பில் எதையோ சொல்லி
ஒரு குழந்தைபோல் அந்த மனிதர் கையேந்தும்போது
அந்த நாளின் முடிவில் வீடுதிரும்பும் ஏழை ராணி
அவருக்கென ஒரு ஐந்து ரூபாயாவது
தன் நடுத்தரவர்க்கக் கைப்பையில் எங்கேனும்
மீதமிருக்கவேண்டுமே என்ற பிரார்த்தனையோடு
வெறும் தொப்பிக்குள் கைநுழைத்து
வெளியே முயல்குட்டியை எடுத்து
அதைப் புறாவாக்கிப் பறக்கவிடும் மந்திரவாதியாய்
மாறிவிடுவாள்!

அப்படி ஒருமுறை அவளுடைய கை உண்மையாகவே
ஒரு மாயாஜாலக்காரியின் கையாக மாறி
அவளே அறியாமல் அவளது கைப்பைக்குள் என்றோ புதையுண்டிருந்த
நூறு ரூபாய்த் தாளொன்றை
அகழ்வாராய்ச்சிக் கண்டுபிடிப்பாய்க் கையிலெடுத்தபோது
அரைக்கணமும் யோசிக்காமல் அதை
அந்த மனிதர் கையில் கொடுத்துவிட்டு
அன்றிரவு முழுவதும் அந்த நூறு ரூபாய் நோட்டு அவரைச் சிலரிடம் திருடனாகக் காட்டி
பேசமுடியாத அவரை நிறையபேர் நையப்புடைப்பதாக
விழித்தநிலையிலேயே கொடுங்கனவு வந்து
நெடுநேரம் கலவரத்திலாழ்ந்திருந்தாள்
பூஜ்யத்திற்குள்ளே ராஜ்யத்தை ஆண்டுகொண்டிருக் கும்
ஏழை ராணி.

இன்று
பிளிறலா, வீறிடலா, உறுமலா பொருமலா
விசும்பலா விசன முணுமுணுப்பா
என்று பிரித்துச்சொல்லவியலாதபடிக்கு
எல்லாம் கலந்தொலிக்கும் தனதேயான பாதிக் குரலும்
தன் சைகைகளின் வழியாக ஒலிக்கும் மீதிக்குரலுமாய்
தான் அங்கிருந்துபோய்விடப்போவதை அந்த மனிதர்
பிரியாவிடையாய்த் தெரிவித்தபோது
வருத்தத்தை மீறி மனதில் பரவிய நிம்மதிக்காக
தன்னைத்தானே கசையாலடித்துக்கொண்டு
வீடுதிரும்பும்
நியாயந்தவறா ஏழை ராணியின் கண்களில் திரளும் நீர்த்துளிகளை
எங்காவது சில கோடிகளுக்கு விற்க இயலுமானால்
அவள் விரும்பும் சாம்ராஜ்யத்தைக் கட்ட முடியலாம்….

ஆஸ்கார் வைல்ட் எழுதிய கவிதை

 ஆஸ்கார் வைல்ட் 

எழுதிய கவிதை

ஆங்கிலத்திலிருந்து தமிழில்: 

லதா ராமகிருஷ்ணன்

(*முதல் வரைவு)

என் இதயம், உன் பொருட்டு உடைந்தேயாகவேண்டுமென்றால்,

அன்பே,
அது இசையாகவே சிதறும், எனக்குத் தெரியும்
கவிகளின் மனங்கள் அப்படித்தான் நொறுங்குகின்றன.

ஆனால்,
மூளையால் ஒரு குட்டியூண்டு அபூர்வ அணுக்குள்
கடவுளின் சொர்க்கம் நரகம் இரண்டையும் உள்ளடக்கியிருக்க முடியுமென்று,
ஏனோ எனக்குச் சொல்லப்படவேயில்லை


(*Oscar Wilde : Irish poet
Oscar Fingal O'Flahertie Wills Wilde was an Irish poet and playwright. After writing in different forms throughout the 1880s, the early 1890s saw him become one of the most popular playwrights in London. Wikipedia
Born: 16 October 1854, Westland Row, Dublin, Ireland
Died: 30 November 1900, Paris, France