LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Monday, November 18, 2019

இலக்கிய இலக்கணங்கள் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)


இலக்கிய இலக்கணங்கள் - 1
ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)



கதை கவிதையெழுதுவதை விட
மொழிபெயர்ப்பாளராவதைவிட
வெகுஎளிதாய்
விமர்சகராகிவிட்டால் போச்சு!
விவஸ்தையோடு எழுதுவதுதான் விமர்சனம்
என்பதெல்லாம் வெட்டிப்பேச்சு.

Ø  
மொழிபெயர்ப்பாளரை உதைபந்தாக உருட்டியவண்ணம்
இலக்கிய மைதானத்தில் வலம்வந்துகொண்டிருக்கிறார்கள்.
பந்தை உருட்டமுடிந்தவர்களெல்லாம்
பந்தாகிவிட முடியுமா என்ன ?
கேட்டால் கொடும்பாவியெரித்திடுவார்களோ -
ஒரே கலவரமாயிருக்கிறது.

Ø  
ஏன் அரசியல் கவிதையே எழுதுவதில்லை யென்று கேட்டா ரொருவர்
ஒரே யொருவரைப் பழிப்பதும் பகடி செய்வதும்
ஒரேயொரு குலத்தை மலமெனப் பேசுவதும்
நலங்கெட ஏசுவதும்
ஒரேயொரு மதத்தை விதவிதமாய் மதிப்பழிப்பதும்
வக்கிரமாய் நிந்திப்பதுமே
அரசியல் என்ற புரிதலோடு.

Ø  
அதிநேயமாய் சக படைப்பாளிகளைப் பேசுவதான
உத்தியைக் கையாண்டு
தன்னை யொரு அதிகாரமையமாய் கட்டமைத்துக்கொள்பவர்
புத்தியோடு அதைக் கண்டுபிடித்துவிடுபவர்களை
மதிகெட்டவர்களென்று முத்திரைக் குத்திவிடுகிறார்!

Ø  
கொஞ்சம் விட்டால் போதும்
னாவன்னா சொல்லிக்கொடுக்க ஆரம்பித்துவிடுகிறார்கள்;
மிஞ்சி மிஞ்சிப் போனால் நான்கெழுத்தில்
மேதாவியாகிவிடப் பார்க்கிறார்கள் எப்போதும்.

Ø  

இலக்கிய இலக்கணங்கள் - 2
அரட்டையடித்துக்கொண்டிருந்தவர்கள்
குறட்டை விட்டுத் தூங்கியெழுந்தவர்கள்
பரட்டைத்தலையே வாரிமுடிந்த கூந்தலெனக் கொள்பவர்கள்
இரட்டை மூக்குகள் இருப்பதாக பாவனை செய்பவர்கள்
சிரட்டை தான் தேங்காயின் சாராம்சமெனக் கையடித்து
சத்தியம் செய்பவர்கள்
கரகரக் குரலில் அபஸ்வரமாய்ப் பாடி
இசையை வாழவைப்பவர்கள்
கத்திக்கத்தியே தன் கருத்தைச் சத்தானதாக்கும்
வித்தகம் பழகியவர்கள்
மொத்தமாய் குத்தகைக்குக்கு எடுக்கப் பார்த்தும்
இத்தனை காலமும் இனியும் தப்பித்து வாழும்
இலக்கியம்.
Ø  

கவிதையெழுதுதல் என்ற சமூகச்செயல்பாடு - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)


கவிதையெழுதுதல் என்ற சமூகச்செயல்பாடு

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)



இந்த மாதமும் துண்டுவிழுவதில் வியப்பில்லை.
வரவு-செலவு பற்றாக்குறை வாடிக்கை.
(வீதியோரம் வெற்றுப்பார்வையுடன்
உள்ளொடுங்கிய வயிறுடன் படுத்திருப்பவரைப்
பார்க்க
நான் வெட்கங்கெட்ட வில்லி
விசித்திரகோடீஸ்வரி)
வங்கியிலுள்ள பூஜ்யசேமிப்பை
வர்ணமயமாக வெளிச்சமிட்டுக்
காட்டும் ஏடிஎம் மிஷின்
முகமூடிக்கொள்ளைக்காரர்கள்
என்னைச் சுற்றிவளைத்தால் என்னவாகும்?
அதாவது, அவர்களுக்கு
அத்தனை நிறைவளிக்காத ஒரு சிறு நூலை
இன்னும் பத்துநாட்களுக்குள் மொழிபெயர்த்துமுடித்தாகவேண்டும்.
மூவாயிரத்தி ஐந்நூறு ரூபாய் கிடைக்கும்.
முந்நூறு பக்க மொழிபெயர்ப்பை விட
முத்தான பத்து வரிக் கவிதை
அதிக சன்மானம் ஈட்டித்தரு மந்தப்
பொற்காலம்
என் வாழ்நாளுக்குள் வருமா?
(அப்படியே வந்தாலும்
யார் கேட்டாலும் தருவதற்கு
கவிதை யென்ன ஏழை வேசியின்
உடம்பா?)
அத்தனையையும் மீறி ஒரு கவிதை
இடைமறிக்கிறது
என்னை எழுதிவிடேன் என்று
மூச்சடைக்க இறைஞ்சுகிறது.
அது என்ன சுண்டுவிரலா?
கண்ணிமையா? சொப்புவாயா?
இன்னும் உருப்பெறவில்லை வடிவம்...
ஆனால், இளஞ்சூட்டில்
என்னமாய் சுவாசிக்கிறது அந்த உயிர்!
மையமா யொரு வரியிலிருந்து
துவங்கினால்
பின் மூன்று வரிகளோ
முன்னூறு வரிகளோ
அதில் நான் முயலோ முட்டுச்சந்தோ
முப்பரிமாண ஓவியமோ?
எங்கே ஒளிந்துகொண்டிருப்பேன்
என்னைநானே பார்த்தவாறு?
ஆறு மனமே ஆறு.....
ஆவியாகி மறையாம லொரு
கவிதையை அடைகாத்தல்
கைகூடினா லது
ஆகப் பெரும்பேறு.


IMPLICATIONS - ‘rishi’ (Latha Ramakrishnan) குறிப்புணர்த்தல்

IMPLICATIONS

‘rishi’ (Latha Ramakrishnan)

Here and Now are forever
inclusive of
There and then
Where and when
After all
Break and broken
Are but two sides of
The same coin.


குறிப்புணர்த்தல்

இங்கே இப்பொழுது என்றுமே
உள்ளடக்கியிருக்கும்
அங்கே அப்பொழுது;
எங்கே எப்பொழுது….
எண்ண
உடைவதும் உடைந்ததும்
ஒரே நாணயத்தின் இருபக்கங்கள்தானே.

நாய்வால் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

நாய்வால்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)


வழக்கம்போல் ஒருநாள் சோறுவைத்தபின்
நாயின் வாலைக் கடன் கேட்டான்.
வியப்போடு அவனைப் பார்த்தவாறே
செஞ்சோற்றுக்கடன் தீர்க்க
பெருகும் ரத்தத்தையும் பொருட்படுத்தாமல் அதைப்
பிய்த்துகொடுத்தது நாய்.
தன் பணிவைத் தெரிவிப்பதாய் _
தனக்கு அவரை யிவரை மிகவும் பிடிக்கும்
என்று தெரிவிப்பதாய் _
அடிமைச்சேவகம் செய்ய தான் தயாராக இருப்பதைத்
தெரிவிப்பதாய் _
சமயங்களில் வாலைப் பிறர் சுருட்டி முறுக்க
வலியோடு அனுமதித்தும்
பலவாறாய் முயன்றுபார்த்த பின் _
வாலைத் திருப்பிக்கொடுத்தவன்
நாயிடம்
‘உன் வாலால் ஒரு லாபமுமில்லை”
என்றான் வெறுப்போடு.
’என் வால் என் உறுப்புகளில் ஒன்று
வர்த்தகப் பண்டம் அல்லவே,
நீயாக அப்படி நினைத்துக்கொண்டால்
அதற்கு நான் என்ன செய்வது.’
என்று வருத்தத்தோடு பதிலளித்தவாறே
அறுந்த வாலை ஒட்டும் மார்க்கம் தேடி
அங்கிருந்து அகன்றது நாய்.

வாழ்நெறி ‘ரிஷி’ (லதா ராமகிருஷணன்)



வாழ்நெறி

‘ரிஷி’ 
(லதா ராமகிருஷணன்)

நான் நீங்கள் அவர்கள் என்ற
மூன்று வார்த்தைகளின்
நானாவித இணைவுகளில்
ஐந்துவிரல்களுக்கிடையே
ஆறேழு மோதல்களை உருவாக்கி
எட்டும் திசையெல்லாம்
’அமைதிப்புறா’ அடைமொழியும்
கிட்டுமென்றால்
ஒன்பது நாட்கள் ஒரு வாரத்திற்கு
என்றாலும்
பத்துதான் முதல் ஒன்று கடைசி
யென்றாலும்
இரண்டை மூன்றென்றாலும்
ஏழை சுழியமென்றாலும்
வேறு என்னென்னவோ
இன்னும் சொன்னாலும்
சரி யென்று சொல்வதே
அறிவுடைமையாக……

பறவைச்சிறகுகள் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

பறவைச்சிறகுகள்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)


’பாவம் உனக்குப் பேச்சே வரவில்லை’ என்கிறீர்கள்.
’நான் பேசிக்கொண்டுதானிருக்கிறேன்
உங்களுக்குத்தான் புரியவில்லை’ என்கிறேன்.
’பாவம், பேசுமொழியே இல்லையே உனக்கு’
என்று பச்சாதாபப்படுகிறீர்கள்
’எனக்கு மொழியுண்டு; உங்களால் அதைப்
பழகமுடியவில்லை’ என்கிறேன்.
’நாங்கள் எத்தனை முன்னேறிவிட்டோம்!
பாவம் நீ அதே கூட்டைத்தான்
இன்னமும் கட்டிக்கொண்டிருக்கிறாய் _’
என்று அனுதாபப்படுகிறீர்கள்.
’உங்கள் வீடு கட்டலைப்போலவே
என் கூடு கட்டலின்
முன்னேறிய தொழில்நுட்பங்களை
உங்களால் அறியவியலாது’
என்று சுட்டிக்காட்டுகிறேன்.
போனால் போகட்டும் என்று
பரிந்துபேசினால்
பெரிதாய் சிலுப்பிக்கொள்கிறாயே
என்று கோபப்படுகிறீர்கள்.
பரிந்துபேசுவதுபோல் உங்கள் பெருமையை
பீற்றிக்கொண்டேயிருந்தால் எப்படி
என்று சிரித்தபடியே
உங்களிடம் என்றுமே இல்லாத
என் சிறகுகளை விரித்துப்
பறந்துசெல்கிறேன்.

பொறுப்பேற்பு ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

பொறுப்பேற்பு

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
நம் மனதி னோரச் சுவரொன்றில்
ஓர் ஆடி தொங்கிக்கொண்டிருந்தால்
நமக்கு அதில் நம்மைக் காண
நேரமிருந்தால்
ஆடியின் எதிரே ஒப்பனைகளற்ற
நம் வதனத்தை
எதிர்கொள்ள நமக்குத் துணிவிருந்தால்
காலப்போக்கிலான அதன் மாற்றங்களை
நாம் பார்க்கப் பழகிவிட்டால்
பின்
நாம் முடிந்தவரை பொய் பேசமாட்டோம்.

குறுக்குவிசாரணை - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

குறுக்குவிசாரணை

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)




சிதறடிக்காதே யென்று பதறுகிறாயே
சொற்கள் என்ன தங்கக்காசுகளா?

காசுகளைக்கொண்டு நீ பேசிவிடு வாயா?
கொஞ்சங்கூட யோசிக்கவே மாட் டாயா?

ஊரும் பேரும் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

ஊரும் பேரும்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

யாருமற்ற வனாந்திரத்தில் பாடிக்கொண்டிருக்கிறாயே
பாவமாயிருக்கிறது உன்னைப் பார்க்க.

ஊருமுழுக்க நீ மட்டுமே என்று 
யார் சொன்னது?
பாவமாயிருக்கிறது எனக்கும், 
உன்னைப் பார்க்க.

கவிதை என்ற பெயரில்…. ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

கவிதை என்ற பெயரில்….


‘ரிஷி’

(லதா ராமகிருஷ்ணன்)




எத்தனை ‘லைக்’குகள் வாங்கினாலென்ன?

எத்தனை விருதுகள் வாங்கினாலென்ன?

விதவிதமான புகைப்படங்களில்

புதுப்புது ஆடையணிமணிகளுடன்

அழகுப்போட்டிகளில் பங்கெடுப்பதே போன்று,

அல்லது ‘ரௌத்ரம்’ பழகுவதாய்

எத்தனைவிதமாய்

‘போஸ்’ கொடுத்தால்தான் என்ன?

இத்தனை வன்மமும்

வெறுப்பும்

விபரீத அகங்காரமும்

வெட்கங்கெட்ட மனச்சாய்வும்

வேண்டும்போதான ‘மறதி’யும்

வசதியாய் சிலவற்றைப் பற்றி

எண்ணமறுக்கும்

வக்கிரமும்
வழிந்தோடும் மனம் வாய்த்தவர்

வரிவரியாய் பல்லாயிரம் எழுதினாலும்

எப்படி கவியாக முடியும்?



'லைக்'குகள் அதிகமாக அதிகமாக

தலைக்கேறிய கர்வத்திற்கு

விலைபோய்க்கொண்டிருக்கும் கவியை

விசனத்தோடு பார்த்துக்கொண்டிருக்கிறது

நவீன தமிழ்க்கவிதை.


பெரியபெரிய வார்த்தைகளை

கைபோன போக்கில்

அடுக்கிக் கோர்த்து

பூச்சாண்டி காட்டலே

கவிதை

யென்ற அவர் புரிதலுக்கு

முதல் பலி அவராக;

அடுத்தது

அவர் வடித்ததாக.