LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Saturday, May 3, 2025

என்றும்போல் இன்றும்…. ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 என்றும்போல் இன்றும்….

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
கூட்டம் கூடிவிட்டது
நிறைய காசு சேர்ந்துவிடும் என்ற நம்பிக்கையில்
கைத்தட்டிப் போவோர் வருவோரை அழைத்துக்கொண்டிருந்தான்.
பொருதப்போகிறவர்களின் சுருக்கமான வரலாறுகளை
சொல்லத்தொடங்கினான்;
பெட்டிக்குள் இருக்கும் பாம்பும் கீரிப்பிள்ளையும்
பழக்கப்படுத்தப்பட்டிருக்கின்றன
பகைமை பாராட்டவும்.
*****
”ஆடுரா ராஜா ஆடுடா ராஜா” என்று குட்டிச்சாட்டையால் அடித்தபடி
குரலெடுத்துக் கூவிக்கொண்டேயிருந்தவனைக்
குரங்கு கோபத்தோடு பார்த்து அசையாமல் அமர்ந்திருக்க
”ஆடாதே படிடா குரங்கே”, ”ஆடாதே படிடா குரங்கே’
என்று அன்றாடம் அம்மையப்பன் கூவும் பாங்கில்
புத்தகமும் கையுமாய் மூலையில் ஒடுங்கியிருந்த சிறுவன்
ஆனந்தமாய் குதித்தாடலானான்.
*****
“One a penny two a penny hot cross bun”
என்று ‘ரைம்’ சொல்லிக்கொண்டிருக்கின்றன
சில குழந்தைகள்;
One part woman, two part woman என்று
பெண்ணியம் போற்றிக்கொண்டிருக்கிறார்கள்
சில கனவான்கள்.
*****
இவர் சொன்னால் கருத்துச் சுதந்திரம்;
அவர் சொன்னால் அடிப்படைவாதம்.
இவர் செய்தால் மனிதநேயம்
அவர் செய்தால் வணிகநோக்கம்.
இவர் மௌனம் மெச்சத்தகுந்தது
அவர் மௌனம் அச்சத்தில் விளைந்தது….
அகராதிபிடித்தவர்களின் அதிகாரக்கைகளில்
அடிமைகளாய் உழலும் சொற்கள்.
*****
உயிரோடிருக்கும்போதே தனக்கு அஞ்சலிக்கூட்டம் நடக்கவேண்டும்
என்று தன் இறுதி ஆசையை வெளியிட்டார்
கவிஞரொருவர்.
‘அவருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை
கிடைக்கவில்லை
கிடைக்கவேயில்லை
என்று அதுநாள் வரை எதுவும் செய்யாதவர்கள்
ஒருவர் விடாமல்
தகர டப்பாவில் ஆளுக்கொரு அங்கீகாரத்தைப் போட்டுக் குலுக்கிய குலுக்கலில்
கலக்கமடைந்து பாதியிலேயே கிளம்பிப்போய்விட்டார்.
*****
சாலையோரம் குறிசொல்லிக்கொண்டிருந்தவள்
இன்னும் நாலைந்து மாதங்களில் உலகாள்வாய் நீ
என்று எல்லோருக்கும் சொல்வதுபோலவே சொல்லக் கேட்டுக்
கன்னங்குழியச் சிரித்துத்
தன் உள்ளங்கையுலகைத் திறக்கிறாள் சிறுமி.
*****
நிலா நகரும் காலத்தே ஒருநாளேனும் எனக்கு
இறக்கைகள் முளைக்கலாகாதா
என்று ஏங்கி யண்ணாந்து பார்க்கும்
என்னிடம்
அன்பொழுகச் சொல்கிறது மனம்:
“நானிருக்கிறேனே உனக்கு…”
*****

No comments:

Post a Comment