மெய்யோ மெய்.
அதற்காய்
மலை மலை மலை மலை
யென்று அடுக்கிக்கொண்டேபோனால்
அது கலையாகிவிடுமா?
கவிதையாகிவிடுமா?
இல்லை
மலை கலை வலை தலை
என்று அடுக்கினால் மட்டும்?
(விலை உலையை விட்டுவிட்டீர்களே யென்று
எடுத்துக்கொடுப்பவரை என்ன செய்ய?)
மலை உயரமானது
மலையுச்சி மிக மிக உயரமானது
மலையில் கற்களும் பாறைகளும் உண்டு
அலையலையாய் வீசும் காற்றுண்டு
நீரூற்றுண்டு நெடுமரங்கள் உண்டு
என்று சொல்லிக்கொண்டே போனால் மட்டும்
சொக்கத்தங்கக் கவிதையாகிவிடுமா என்ன?
எத்தனை கவிதைகள் மலைகளைப் பற்றி!
இத்தனையும் உண்டு; இன்னமும் உண்டு அவற்றில்!
மிகு அன்பில் மலையை மன இடுப்பில் சுமந்தேன்
சிறுகுழந்தையாய் என்றுகூட எழுதப்பட்டுவிட்டது.
படிக்கத்தெரிந்தால் மலையுருகிப்போயிருக்கும்
பரவசத்தில்.
மலைமேல் வெய்யிலடிக்கும், மழைபொழியும்
மாடு ஆடுகள் மேயும் என்று
அரைத்த மாவையே அரைப்பதல்ல கவிதை!
ஒரே நேரத்தில் மலையின் குழந்தைமையையும்
விசுவரூப தரிசனத்தையும்
எனக்குணர்த்துவதாய்
அதன் ஒரு நுண் துகளின் மகத்துவத்தை எனக்கு
கட்டுரையாகாக் கவித்துவத்தோடு எடுத்துச்சொல்லி
நீயே அந்தத் துகளாய் மாறி
என்னையும் அந்தக் துகளுக்குள் அழைத்துச்சென்று
கணநேரமேனும் அங்கே உயிர்த்திருக்கச் செய்வதே
கவிதையென்றறிவாய்.
உன் கவிதையே அவ்வாறில்லையே என்கிறாய்.
உண்மை.
எனில், இல்லையென்பதை நான் அறிவேன்.
நீ அறியாய்.
இருப்பதாகப் பிரகடனம் செய்யமாட்டேன்.
நீ செய்கிறாய்.
No comments:
Post a Comment