இவர்கள் இப்படித்தான்
தங்கள் இரும்புக் கதவங்களுக்கு அப்பால் இவர்கள்.
கன்னுக்குட்டியளவு நாய் வைத்திருக்கக்கூடும்.
பெரும்பாலும் அது சிறுநீர் கழிக்க
அவர்கள் வீட்டுக்காவலாளிதான்
தன்னைத்தான் சபித்துக்கொண்டே
தெருவோர வீட்டுக் ’காம்பவுண்ட்’ சுவர்வரை
அழைத்துச்செல்வது வழக்கம் என்றாலும்
ஒரு கலவரநாளில் நாயின் விசுவாசம்
எஜமானருக்காக மட்டுமேயாகும்படியாக
‘ப்ரொக்ராம்’ செய்தாயிற்று.
கையில் காபி அல்லது வேறு பானக்
கோப்பையோடு
வசதியாக இருக்கையில் சாய்ந்தவண்ணம்
அவர்கள் சில அபாயகரமான சிந்தனைகளைப் பதிவேற்றிய பின்
அருகிலேயே அழைப்புவிடுத்துக்கொண்டிருக்கும்
படுக்கையில் சாய்ந்து
இரண்டு மணிநேரம் உறங்கிவிடலாம்.
‘வைரலாகிவிட்ட’ தங்கள் நெருப்புச் சிந்தனைகளால்
எங்கேனும் நிஜ நெருப்பு மூட்டப்பட்டிருக்குமானால்
பின், எழுந்ததுமே நெஞ்சு நிமிர்த்தி
வீட்டு வெளிவாயிலுக்குள்ளாகவே
வீர நடை பழகி
அதை ஒரு ஸெல்ஃபி எடுத்துப் போட்டுவிட்டால்
அப்பாடா! அதில் கிடைக்கும் நிம்மதியும் பெருமிதமும்
அருமையோ அருமை!
அரசியல்வாதிகளாவது ஐந்துவருடங்களுக் கொருமுறை accountable.
அறிவுசாலிகளுக்கோ அவர்கள் வாழும் நாளெல்லாம்
FREEDOM OF EXPRESSION available.
அப்படித்தான் இன்றிங்கே யொரு கலவரத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களில்
ஒருவர் சொன்ன காரணம்
கொஞ்சம் நியாயமானதாகவே இருந்தது:
”கலவரம் ஏற்பட்டால் ஒருவேளை நான்
காத்திரமான கவிதை யெழுதக்கூடும்”
No comments:
Post a Comment