LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Wednesday, July 11, 2018

பூனையைப் புறம்பேசல் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)


பூனையைப் புறம்பேசல்

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

அவரிவர் குடியிருப்புப் பகுதிகளோ
ஆற்றங்கரையோரமோ
குட்டிச்சுவரோ
வெட்டவெளியோ _
பூனைக்கு அதுவொரு பொருட்டில்லை.
அதன் சின்ன வயிற்றுக்கு
இரை கிடைத்த நிறைவில்
கண்களை மூடிப் படுத்திருக்கும்.
உலகை இருளச்செய்யவேண்டும்
என்று கங்கணம் கட்டிக்கொண்டா என்ன?
பூனையாக நாம் மாறவியலாதது போலவே
பூனையும் நாமாகவியலாது.
இதில்
இலக்கும் பிரயத்தனமும்
அடுக்குமாடிகளும் அதிகாரபீடங்களுமாக இருப்பவர்கள்
இலக்கியத்தில் தங்களை யிழந்தவர்களையெல்லாம்
‘அசால்ட்’டாகப் பூனையாக்கிப் பேசுவதால்
அம்பலமாவது இறந்துபோய்விட்டவர்களல்ல –
இவர்களே யென்றறிவார்களாக.



ராமன் என்பது சீதை மட்டுமல்ல; சீதை என்பது ராமன் மட்டுமல்ல - லதா ராமகிருஷ்ணன்


அணுகுமுறை 
ராமன் என்பது சீதை மட்டுமல்ல;

சீதை என்பது ராமன் மட்டுமல்ல
லதா ராமகிருஷ்ணன்


ஒரு காவிய நாயகன் நாயகி, காவியக் கதை எல்லாவற்றிலுமே சாரமும் உண்டு; சக்கையும் உண்டு. எல்லாவற்றிலும் சாரத்தை எடுத்து சக்கையை விடுத்துச் செல்வதே வாசகர்களாகிய நாம் செய்ய வேண்டியது.

ராமன் என்ற காப்பிய நாயகனை நாம் ஏன் எப்போதுமே சீதையை சந்தேகித்தவனாக மட்டுமே அணுகவேண்டும்? அற்பதினாயிரம் மனைவி யரை ஒரு மன்னர் வைத்திருந்த காலத்தில் ஒரு சொல் ஒரு இல் ஒரு வில் என வாழ்ந்தவனும் அவன் தானே. எல்லாப் பெண்களுக்குமான ஆத்மார்த் தமான எதிர்பார்ப்பு அவன் வழி சீதைக்கு லபித்ததல்லவா! சீதையை சந்தேகித்ததில், அவள் பிரிந்ததில் அவன் மகிழ்ச்சியடைந் தானா? மனநிம்மதியடைந்தானா?

’தீர்ப்பளிக்காதே நாமெல்லாமே பாவிகள்தான்’ என்று ஒரு பரத்தைமீது கல்லெறி பவர்களை நோக்கி ஏசு கூறுவது பரத்தையர்களைக் குறை சொல்வதாக தொனிக்கிறது. அவர்கள் பரத்தையரானதற்கு இந்தச் சமூகம்தானே காரணம் என்று எழுத்தாளர் தேவகாந்தன் தனது கதை யொன்றில் குறிப்பிட்டிருப்பார். இதுவோர் ஆழமான சமூகநேயம் மிக்க பார்வை என்பதில் சந்தேகமில்லை. ஆனால், ஏசுவின் வாசகத்தில் தொனிப்பது, அடர்ந்திருப்பது பரத்தையை குறைசொல்லும் போக்கா, அல்லது அவளை ஏசுபவர்களுக்கு புத்திபுகட்டும் நோக்கமா? எழுத்தாளர் தேவகாந்தனை எனக்குத் தெரியும். பல வருடங்களுக்கு முன் அவர் சென்னையில் இருந்தகாலத்தில் நாங்கள் இதுகுறித்து விவாதித்ததுண்டு.

‘உனக்கும் கீழே உள்ளவர் கோடி, நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு’ என்று முடியும் சுமைதாங்கி திரைப்படப் பாடலைப் பற்றி (கண்ணதாசன் எழுதியது) ஒருவர் நமக்குக் கீழே உள்ளவர் கோடி என்னும்போது அதை நினைத்துப்பார்த்து நிம்மதியாக இருக்கமுடியுமா, அப்படிச் சொல்வது அக்கிரமமல்லவா என்று கோபத்தோடு எழுதியிருந்தார். அவருடைய சமூகப் பிரக்ஞையைப் புரிந்துகொள்ள முடிகிறது என்றாலும் அந்தப் பாட்டில் இடம்பெறும் அந்த வரிகள் அலைப்புறும் நாயகனை அமைதிப் படுத்தப் பாடப்படுவதே தவிர ’அவருக்குக் கீழே உள்ள மனிதர்களைப் பொருட்படுத்தாமலிருக்கும்படி போதிப்பதல்ல.

இருபதாண்டுகளுக்கு முன்பு என் தோழியொருவர் ஆசிரியராக இருந்து வெளிவந்துகொண்டிருந்த சூர்யோதயா என்ற இதழொன்றில் ‘படி தாண்டிய பாஞ்சாலி’ என்ற சிறுகதையை எழுதியிருந்தேன். மகாபாரதப் போரில் தங்கள் கணவர்கள், குழந்தைகள், தகப்பன், தமையன் என்று எல்லோரையும் இழந்துபோன பெண்கள் பாஞ்சாலியை சந்தித்து உங்கள் வீட்டு விவகாரத்திற்காக எங்கள் மக்களையெல்லாம் போரில் பலியாக்கிவிட்டீர்களே இது என்ன நியாயம் என்று கோபத்தோடு கேட்க, அந்தக் கேள்வியின் உண்மையுணர்ந்த பாஞ்சாலி தன் கணவர்களிடம் தன்னுடைய சீதனத்தை கேட்டு வாங்கி அவர்களை விட்டு நீங்கி பாதிக்கப்பட்ட பெண்களுக்காகப் பணியாற்றச் செல்வதாய் அந்தக் கதை விரியும். மகாபாரதத்தை ஒரு புதிய சமூகக் கண்ணோட்டத்தில் அணுகிவிட்டதாய் எனக்கு உள்ளூற ஒரு பெருமை இருந்திருக்கக் கூடும். அதற்குப் பின் சில காலம் கழித்து ஆங்கில நாளிதழொன்றில் வாசிக்க நேர்ந்த KURUKSHETHRA AND ITS AFTERMATH என்ற கட்டுரை என் கதை முன்வைத்த பார்வையும் அதைத் தாண்டிய பல பார்வைகளும், போரின் கொடுமை, மக்கள் சீற்றம், போரின் வெற்றி யாருக்குமே மகிழ்ச்சியளிக்காது என்ற உண்மை என பலப்பல குருக்‌ஷேத்திரப் போருக்குப் பிறகு’ என்பதாய் அந்தக் காப்பியத்திலேயே விரிவாகப் பேசப்பட்டிருப்பதை விரித்துக்கூறியிருந்தது!

வால்மீகி ராமாயணம் என்ற கடலில் தனது காப்பிய முயற்சி ஒரு துளி என்று கம்பராமாயணத்தில் கம்பர் குறிப்பிட்டிருப்பார். கம்பராமா யணத்தில் இந்திரனோடு கலந்திருந்ததன் விளைவாகக் கிடைத்த சாபத்தால் கல்லாகச் சமைந்திருக்கும் அகலிகை ராமனின் கால்பட்டு மீண்டும் உயிர்பெற்றதும் ராமனின் காலில் விழுந்து வணங்குவதாக வரும். ஆனால் மூல காவியமான வால்மீகி இராமாயணத்தில் இந்திரனின் அழகில் மயங்கி, தெரிந்தே அவனோடு கலக்கும் அகலிகை சாபத்தால் அருவமாக உலவிக்கொண்டிருக்க ராமன் அந்த இடத்தின் எல்லையை மிதித்ததும் உருவம் பெறுவாள். ஆனால், ராமன் தான் அவள் காலில் விழுந்து வணங்குவான். தெய்வாதீனமாக நேர்ந்துவிட்ட ஒன்று என்றுதான் அவளுடைய இந்திரக் கலப்பை அவள் மகனே  குறிப்பிடுவான். அதற்காக யாரும் அந்தப் பெண்மணியை மதிப்பழித்து நடத்தமாட்டார்கள். வால்மீகி இப்படி எழுதியதால் சோரம் போகிறவள் பெண், பெண் சோரம் போவதே சரி என்று சொல்வதாய் எடுத்துக்கொள்வது சரியா? கம்பர் இதை மாற்றியெழுதியதால் அவர் ஆணாதிக்கவாதியாக முத்திரைகுத்தத் தக்கவரா?

நான் இந்தக் காப்பியங்களையெல்லாம் முழுமையாகப் படித்ததாகச் சொல்லிக் கொள்ள முடியாது. ஆனால், இந்தக் காப்பியங்களிலும் சரி, வேறு பல ஆழமான படைப்புகளிலும் சரி – அடிநாதமாக ஒரு தொனி, ஓர் உட்குறிப்பு வேர்ப்பிடித்து ரீங்கரித்துக்கொண்டிருக்கும். அதை நாம் மாற்றிப்போடலாகாது. ஒரு பிரதியில் மறை-பிரதி இருந்தால் அதைக் கண்டுகொள்ளலாம். ஆனால், நாமே மறை பிரதிகளை உருவாக்க லாகாது. இராமாயணம் முன்வைப்பது ராமன் கொடுமைக்காரக் கணவன், அடுத்தவன் மனைவியைக் கவர்ந்துகொண்டு போகிறவனே பேராண்மையாளன் என்பதா?  இல்லையென்றே நான் நினைக்கிறேன். அப்படியிருக்குமானால் இராமாயணம் இத்தனை காலம் மக்களிடையே நிலைத்திருக்க வழியில்லை.

காப்பியங்களாக இருந்தாலும் சரி, சமகாலப் படைப்புகளாக இருந்தாலும் சரி, வாழ்வின் BIG PICTURE அல்லது அதன் பிரதிபலிப்பு களை முன்வைக்கும் படைப்புகளை நாம் ஒற்றைப்பரிமாண வாசிப்பாக, பொருள்பெயர்ப்பாகக் குறுக்கிவிடுவதால் என்ன பயன்?

தவிர, ராமன் என்பவன் சீதையின் கணவன் மட்டும்தானா? ஒரு தனி மனிதன், ஒரு சமூக மனிதன், ஒரு தனயன், ஒரு அரசன், ஒரு மகன், ஒரு நண்பன் - ஒரு கருத்தாக்கம், ஒரு சிந்தனைப்போக்கு,  ஒரு வாழ்முறை, ஒரு கற்றல் – இன்னும் எத்தனையோ. நாம் உள்வாங்கிக்கொள்வதில் தான் இருக்கிறது எல்லாம்

நான் புகுமுக வகுப்பில் படித்துக்கொண்டிருந்தபோது கம்பராமாயணச் செய்யுள்கள் சில பாடமாக உண்டு. அதில் ஒன்று – முதல் நாள் பட்டாபிஷேகம் என்றபோதும் மறுநாள் காட்டுக்குப் போ என்றபோதும் ‘சித்திரத்தில் வரைந்த செந்தாமரையைப் போல் அபப்டியே இருந்தது அவன் முகம் என்பதாய் விவரிக்கும். அந்தப் பக்குவப்பட்ட மனம் வாய்க்க வேண்டும் என்பதே, அதற்கான வழிகாட்டியே என்னைப் பொறுத்த வரை எனக்கான இராமார்த்தம்.




Tuesday, July 10, 2018

அணுகுமுறை - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

அணுகுமுறை
ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)



ராமன் என்பது சீதை மட்டுமல்ல

சீதை என்பது ராமன் மட்டுமல்ல

இங்கிருந்து வெளியே…. - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

இங்கிருந்து வெளியே….
‘ரிஷி'
(லதா ராமகிருஷ்ணன்)


  இத்தனை அலைச்ச லுக்குப் பிறகும் இரண்டாம் சதுரம் வசப்படவில்லை யிதுவரை.

மூன்றாவது தொடுவா னத்திற்கப்பால்.

அந்தரத்தில் அவ்வப்போது 
தொங்கிக் கொண்டிருக்கும் நூலேணியில்
எத்தனை முறை ஏறியும்
நிலவுக்குள் நுழையவே முடியவில்லை.

விண்கலத்தில் ஏறிச்செல்ல நானொன்றும் விஞ்ஞானியல்லவே.

அருகிலிருந்து பார்க்க அது அவ்வளவாக அழகாகவும் இல்லையாக…..

ஒரு குழந்தைபோல் காற்றின் முதுகேறி எத்தனை நேரம்தான் பறந்துகொண்டிருப்பது?

ஆற்றங்கரையோரத்தில் கட்டிவைத்திருக்கும் அரிய தோணி அப்படியேயிருந்தாலும்
ஆற்றைக் காணவில்லை.

நேற்றின் ஒரு முனையும் இன்றின் மறுமுனையும்
இறுகித்திருகி முறுக்கிக்கொண்டிருக்கும் நாளைக்குள்
நிற்கத் தோதான நான்காம் சதுரமிருக்கும் என்று நம்ப வழியில்லை.

சுக்கானற்ற நாவாயாய்
பாதாளத்தில் அலைந்து திரிந்துகொண்டிருக்கும் என் ரயில் வேறு
உலக உருண்டையின் பொன்சாய் வடிவமாய்
குறுகிய வட்டப்பாதையில் சுற்றிச்சுற்றி வந்துகொண்டிருப்பதும்
புரிந்துவிட்ட பிறகு _

திரும்பிடத்தான்வேண்டும் முதல் சதுரத்திற்கு….

என்னவொன்று _
சதுரம் சற்றே பின்வாங்கியிருக்கக்கூடும்
வடிவம் கொஞ்சம் சிதைந்திருக்கலாம்.

விட்டுவந்த மரகதப்புற்களும் மண்ணுளிப் புழுக்களும்
இன்னுமிருக்குமோ இருக்காதோ…..

ஆனாலும், ஆழ வேர்ப்பிடித்து அகலவிரிந்திருந்திருக்கும்
அந்த மரத்தின் அடியில்
நிற்க நிழலிருக்கும் எப்போதும்.
அதுபோதும்.


தனிமொழியின் உரையாடல் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)


தனிமொழியின் உரையாடல்
‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)


”உன் கவிதையில் எந்நேரமும் நீந்திக்கொண்டிருக்கும் மயில்களை
உண்மையில் காட்டமுடியுமா உன்னால்”

”உங்கள் கனவுகளிலிருக்கும் ஆற்றைக்கடந்துதானே அவை என்னை அடையாளம் கண்டு வந்தடைகின்றன!”

”என் கனவுகள் எனக்கே தெளிவாகாதபோது நீ யார்
அவற்றில் நதிகளை வகுத்துரைக்க?”

உங்கள் உள்ளாழ நிலவறைகள் சிலவற்றின் திறவுகோல்கள்
என்னிடமிருக்கின்றன!”

”களவாணியா நீ?”

“கவி”.


இயங்கியல் - ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

இயங்கியல்
‘ரிஷி’
                                                      (லதா ராமகிருஷ்ணன்)














இரு நாற்பதுகளுக்கு மேல் இருக்கும் வயது.
இருந்தும், இன்றெழுதிவரும் கவிஞர்களில் இடம்பெறுபவர்.


”இவரா கவிஞர்? ஐயையையே” என்று மலம் மிதித்ததாய்
மறைவாய் முகஞ்சுளித்தபடியே
அவருக்கு முகமன் கூறி விதந்தோதி மலரச் சிரிக்கும்
சக கவிகள் சிலர் உண்டென்றாலும்
அவசியம் படிக்கவேண்டிய கவி யிவர் என்பதே
அப்பட்டமான உண்மை.

அப்படியிருந்தும்
இன்றுவரை இலக்கிய பீடாதிபதிகளால் அதிகவனமாக
கண்டுங்காணாததாய் கடந்துசெல்லப்படுபவர்.
(ஆஹா! இஃதெல்லாம் இலக்கியவுலகில் அதி சகஜமப்பா! )

என்றாலும்
அவர்க்கான புகழாஞ்சலிகள்
அனைவரிடமும் ஆயத்தமாக உள்ளன!

ஒருக்கால் அவருடைய படைப்புகள் நாட்டுடைமையாக்கப்பட்டால்
குறைந்தபட்சம் அவருடைய நான்கு நூல்களையாவது
அவசர அவசரமாக,
ஆயிரமில்லாவிட்டாலும் அறுநூறு அச்சுப்பிழைகளுடனாவது
வெளியிட்டுவிட _

அல்லது அன்னாரின் படைப்புகளைப் பற்றி
அரைகுறையாகவும் அறிந்திராத
அவருடைய குடும்பத்தாருக்கு
குத்துமதிப்பாக ஒரு சிறுதொகையைக் கொடுத்து
அவருடைய நூல்களில் பிரபலமானவற்றை
வன்பதிப்பு செய்ய _

சில வளர்ந்த பதிப்பகங்கள் என்றுமே
தயார்நிலையில்!

Saturday, July 7, 2018

பிரதி - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)


 பிரதி

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)



எதற்கு ?

வேண்டாம் _

போதும்.”


உறவு முறிவின் அறுதிப்புள்ளியாய்

எழுத்தாளர் பிரதி;


கலவியின்பக் கிறக்கச்சிணுங்கலாய்

இருபதாயிரம் மைல்களுக்கப்பால்

சுயமைதுனஞ்செய்யும்

வாசகப்பிரதி;


கண்சிமிட்டிப் புன்சிரிக்கிறது

கவிதை

கன்னங்களில் நீர் படிய


Ø  

பங்களிப்பின் பல்பொருள் அகராதி : ஓர் அறிமுகம் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)


பங்களிப்பின் பல்பொருள் அகராதி : ஓர் அறிமுகம்
ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)


கவனமாக வெளிச்சமூட்டப்பட்ட
ஒளிவட்டங்களுக்கு அப்பால்
காரிருளார்ந்த நள்ளிரவில்
மினுங்கிக்கொண்டிருக்கின்றன
நட்சத்திரங்கள்.

கருத்தாய் மேற்கொள்ளப்பட்ட
ஒத்திகையின் பிறகான
கைத்தட்டல்களுக்கு மேலாய்
ககனவெளியில் கலந்திருக்கின்றன
ஒருகையோசைகள்.

காண்பதும் காட்சிப்பிழையாகும்;
கேட்பதும் அழைப்பாகாதுபோகும்...

ஆனபடியால் ஆகட்டும் _

உம் ஒளிவட்டங்கள் உமக்கு;
எம் விண்மீனகங்கள் எமக்கு.


INSENSITIVITYயின் இருபக்கங்கள் : பெரிசு – கிழவர் - லதா ராமகிருஷ்ணன்

INSENSITIVITYயின் இருபக்கங்கள் :
பெரிசு – கிழவர்
 லதா ராமகிருஷ்ணன்

வயதின் காரணமாக உடலில், தோற்றத்தில் கண்டிப்பாக மாற்றங்கள் நிகழ்கின்றன என்றாலும் வயது என்பது உண்மையில் மனதால் நிர்ணயிக்கப் படுகிறது என்று தோன்றுகிறது.

சமீபத்தில் யதேச்சையாக தொலைக்காட்சியில் காணநேர்ந்த பழைய திரைப்படக் காட்சியொன்றில் 60 வயது நிரம்பிய கதாநாயகி ‘இனி தன் வாழ்க்கை சூன்யம் என்று அழுவதைக் காணநேர்ந்தது. வேடிக்கையாகவும் விசனமாகவும் இருந்தது. வாழ்வு சூன்யமாக வயதா காரணம்?

பாதிப்பேற்படுத்தாத ‘தலைமுடிச்சாயம் எல்லாம் வந்துவிட்ட பின்பு, நிறைய மருந்து மாத்திரைகள் கிடைக்கும்போது, முதுமை என்பது குறித்த சமூகத் தின் பார்வையில் நிறைய மாற்றம் ஏற்பட்டுவிட்ட நிலையில் இந்த 60 வயது இப்போது பழைய 60 வயதாக பாவிக்கப்படுவதில்லை என்பதைப் பார்க்க முடிகிறது.

ஆனாலும் நிறைய திரைப்படங்களிலும் தொலைக் காட்சித் தொடர்களிலும், (இதன் தாக்கத்தால் என்றும் சொல்லலாம்) தெருவில் எதிர்ப்படும் இளையதலை முறையினர் மத்தியிலும் ‘பெரிசு’ என்று கேலியாக 60, 60+ வயதினரைக் குறிக்கும் வார்த்தை பரவலாகப் புழங்குகிறது.

‘ஒண்ணுத்துக்கும் லாயக்கில்லாதது, வீணாக தனக்குத் தேவையில்லாத விஷயங்களில் மூக்கை நுழைப்பது, வாயைப் பொத்திக்கிட்டுப் போக வேண்டியது, என இந்த ஒற்றைச்சொல் பலவாறாகப் பொருள்தருவது.

சுருக்கமாகச் சொல்வதென்றால், சமூகம் என்பது இந்த வயதிலானவர்களையும்(60, 60+ அதற்கு மேல்) உள்ளடக்கியது, இவர்களையும் உள்ளடக்கியே முழுமை பெறுகிறது என்ற புரிதலை அறவே புறந்தள்ளும் சொல் இந்த ‘பெரிசு’.

சமீபத்தில் இந்தச் சொல்லுக்கு இணையான கிழவர் / கிழவர்கள் என்ற, ஒப்பீட்டளவில் நந்தமிழ்ச் சொல்லை தன்னளவில் அந்தப் பிரிவைச் சேர்ந்த ஒரு சீரிய இலக்கியவாதி யும் இளக்காரமாகப் பயன்படுத்தியிருக்கும் INSENSITIVITYஐ எண்ணி வருத்தப்படாமல் இருக்கமுடியவில்லை.

இலக்கியப் பங்களிப்பும் INSENSITIVITYயும் லதா ராமகிருஷ்ணன்



இலக்கியப் பங்களிப்பும் INSENSITIVITYயும்



லதா ராமகிருஷ்ணன்


  எதிர்வினை என்பது அதற்குக் காரண மான வினையின் அளவு அல்லது அதற்கும் அதிகமாக மோசமாகிவிடும் போது அந்த எதிர்வினை அதற்குக் காரணமான வினை குறித்து குறை சொல்லும், தீர்ப்பளிக்கும் தகுதியை இழந்துவிடுகிறது என்றே தோன்றுகிறது.



ஒரு பிரதி புரியவில்லை என்று படைப்பாளியிடம் சொல்லும்போது அது தனக்கும் தன்னொத்தவர்களுக்கும் புரியும்படியாக எழுதப்படவில்லை, எழுதப்படவேண்டும், அப்பொழுதுதான் அது இலக்கியமாகக் கொள்ளப்படும் என்ற அதிகார தொனி அதில் ஊடுபாவாக இடம்பெறுவதை உணரமுடியும்.

(உண்மையாகப் புரிந்துகொள்ளும் ஆர்வத்தில்புரியவில்லைஎன்று சொல்லிக் கேட்பவர்களின் தொனியும் அணுகுமுறையும் தெளிவான அளவில் வேறாக இருக்கும். இந்தபுரியவில்லையைப் பொருட்படுத்தி விரிவாகப் பேசுவது எந்தவொரு படைப்பாளிக்கும் மனநிறைவைத் தரும்; தரவேண்டும்.)

அதேசமயம், இந்த அதிகாரத்தொனிக்கு எதிர்வினையாற்றுவதாய் கருத்துரைப்பவர்கள் தரமாக எழுதும் சக படைப்பாளியைநீ யார்னே தெரியாது என்று கூறுவதில், “உன் இலக்கியப் பங்களிப்பு என்ன?” என்று கேட்பதில் உள்ள அதிகார தொனியையும் அதிலுள்ள INSENSITIVITYஐயும் எண்ணிப்பார்த்து வருத்தப்படாமலிருக்க முடியவில்லை.

களிப்பும் பரிதவிப்புமே எழுதத்தூண்டும் படைப்பாளிக்கு தன் இலக்கியப் பங்களிப்பை அளக்க சிலர் கைகளில் ஆழாக்குகளோடும், அவரவர் அதிகாரத்திற்கேற்ற துலாக்கோல்களோடும் அலைபாய்ந்துகொண்டிருப் பது குறித்து பிரக்ஞையிருக்க வழியில்லை.

அதுசரி, இங்கே இலக்கியப் பங்களிப்பு என்பது இலக்கியம் சார்ந்ததாக மட்டுமா இருக்கிறது? இறுதிசெய்யப்படுகிறது?