LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Thursday, September 4, 2025

A POEM BY ATHMANAM

 A POEM BY ATHMANAM

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
RATIONALE

.............................................................
I never converse with
the waves that come confronting
I know its disposition
Quietly
I move aside and give way.
Thinking why invite menace to my self
On another day
when it would be calm-incarnate
I would throw rocks on it
And they would go floating
as boat for me.

ஆத்மாநாம் கவிதை
காரணம்
..................................................
எதிர்த்து வரும்
அலைகளுடன் நான் பேசுவதில்லை
எனக்குத் தெரியும் அதன் குணம்
பேசாமல்
வழிவிட்டு ஒதுங்கிவிடுவேன்
நமக்கு ஏன் ஆபத்து என்று
மற்றொரு நாள்
அமைதியாய் இருக்கையில்
பலங்கொண்ட மட்டும்
வீசியெறிவேன் கற்பாறைகளை
அவை மிதந்து செல்லும்
எனக்குப் படகாக

‘கடவுளின் கையெழுத்து. - DR.K.S.SUBRAMANIAN

 ‘கடவுளின் கையெழுத்து.

(CODE NAME GOD என்ற உலகபுகழ் பெற்ற நூலின் தமிழ் வடிவம்)


தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு நல்ல பல எழுத்தாக்கங்களை மொழிபெயர்த்திருக்கும் டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியத்தின் தமிழ் மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ள படைப்பு ‘கடவுளின் கையெழுத்து. CODE NAME GOD என்ற உலகபுகழ் பெற்ற நூலின் தமிழ் வடிவம். கவிதா பதிப்பக வெளியீடு.

வரலாறு - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 வரலாறு

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

சில தலைகள் எப்போதும் கைவசம் தேவை.
குட்டக் குட்டக் குனியவைக்க;
பட்டப்பகற்கொலைகொள்ளைக்
கெல்லாம் பொறுப்பேற்கச் செய்ய;
தட்டுவதாலேயே தன் கையை
மோதிரக்கையாக்கிக்கொள்ள;
தன் முதலாளித்துவத்தை சாதுர்யமாய்
மனிதநேயவிரிப்பின் கீழ் தள்ள;
சரித்திரக் குற்றவாளியாக்கி
சரேலென்று அறுத்தெறிய;
பொருத்தமற்ற பொய்யுரைத்து
புழுதிவாரியிறைக்க;
பேயரசைப் போர்த்திமறைக்க;
பிணந்தின்னும் சாத்திரங்களை
ஒருசாராருக்கே உரித்தாக்க;
அவரவர் அதிகாரவெறியை
அருவமாக்கித் திரிய;
வலியோரும் தம்மை எளியோராய்
காட்டிக்கொள்ள வாகாய்;
மலிவாகும் வாழ்வுமதிப்புகளுக்கெல்லாம்
கழுவேற்றத் தோதாய்;
பொத்தாம்பொதுவாய் போகிறபோக்கில்
குண்டாந்தடியால் ஒரு போடு போட்டு
உயிர்போக்க;
ஊருக்காயதைச் செய்ததாய்த்
தன்னைக் கொலைக்குற்றத்திலிருந்து
சுலபமாய்க் காக்க;
தத்தம் தீவினைகளையெல்லாம்
தார்மீக எதிர்வினையாக
நிலைநாட்ட….
எளிய தலைகளாய் எப்போதும்
நான்கைந்து தலைகளைத்
தயராய்க் கைக்கொள்ளத்
தெரியவேண்டும்.
போலவே, மொந்தைகளாக்கப்பட்ட
எளிய தலைகளை
மந்தைகளாக்கப்பட்ட மூளைகளில்
முதன்மை எதிரிகளாக மிகச்
சுலபமாய் சுட்டிக்காட்டவும்.
நேரங்கிடைக்கும்போதெல்லாம்
ஆள்காட்டி அடையாளங்காட்டி
உருவேற்ற மறக்கலாகாது.
பெரிதாக எதையும் செய்யத்
தேவையில்லை.
பலிகடாக்களாக வாகாய்
சில எளிய தலைகளை
எப்போதும்
வன்முறையார்ந்த சொற்களால்
எட்டித்தள்ளி
யுருட்டிக்கொண்டே போகத்
தெரிந்தால் போதும்.
ஏற்றத்தாழ்வுகளுக்
கெல்லாமான
சகலரோகத்தொற்றாகக்
காட்டத் தெரிந்துவிட்டால்
போதும்
பல்லக்குகளையும் பல்லக்குத்
தூக்கிகளையும்
உங்கள் உடைமைகளாக
பலகாலம் பத்திரப்படுத்திக்
கொண்டுவிட முடியும்.

மற்றும் சில திறவாக் கதவுகள் - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 மற்றும் சில திறவாக் கதவுகள்

’ரிஷி’

(லதா ராமகிருஷ்ணன்)

................................................................................................

* என்ற தலைப்பில் 2002 அல்லது 2003இல் வெளிவந்த என் (’ரிஷி’யின்) _ 3ம் கவிதைத் தொகுப்பிலிருந்து சில கவிதைகள்
(கவிதைகள் 36 _ 40)

36. சாட்சியங்கள்
...............................................................
சாட்சியாக மறுத்துவிட்ட நிலவின்கீழ்
நடந்துகொண்டிருக்கிறேன்
எனக்கு நானே காட்சிப்பொருளாகியபடி…
அடர்நெரிசலில் உடைப்பெடுக்கும் பெருந்தனிமையும்,
திரளொலிகளில் பெறக் கிடைக்கும் துல்லிய நிசப்தமும்
எப்பொழுதும் போல் தப்பாமல் தொடரும் தண்டனையாய்.
விண்டதும் கண்டதுமாய் கொண்ட பயணத்தில்
தடுக்கி விழுவதும், தடுமாறி எழுவதும் நியமமாய்.
இமயத்தில் உளி செதுக்கியதெல்லாம்
கரும்பலகையில் சாக்கட்டி யெழுத்தாகிவிட
முற்றுமாய்க் கலைக்கலாகாக் கற்றவைகள்
கபாலத்துள் குருதி கட்டிக் கொள்ளும்.
கழிவிரக்கம் வழிமறிக்க, எரிகாயங்கள் கருவறுக்க
அதிகம் பழுத்தவாறிருக்கும் தீரா அன்பின்
தழும்புகளும் கழுவேற்றும். அடிபடா பாவனையில்
முன்னேறும் முழங்காலின் மாறா ரணம் என்றும்
என் கட்புலனுக்கு மட்டும்.
விடா மழைப்பொழிவு விழிகளைப் பிய்த்தெறியும்.
கொடையின் குடையெங்கும் கிழிசல்கள் வரவாக
அடுத்த எட்டின் கதியறியாதவாறு
விதிவசப்பட்டதாய் விரையும் வேளை
உதவிக்கு வாராது உயிராற்றும் காற்றும்.
கரையுங் காலத்தே
நிறைவமைதியாய் உறையும் பிரியம் வரித்த
பூவிதழ்கள் சருகாகிச் சாகும்
தீராச் சோகத்திற்கு
சாட்சியாக மறுத்துவிட்டது சூரியனும்.
***

37. வெகுமானம்
...................................................................
ஐந்தடி நிலமும் வேண்டாம்
எரித்தால் பிடி சாம்பல்
கலந்திடலாம் காற்றில்
என்றிருந்தும்
கிட்டியது பட்டயம் நேற்று
பேராசைக்காரியென்று.
***
38. அத்துவானப் பயணம்
.................................................................................
நோய்வாய்ப்பட்டிருந்த அறைவிளக்கின் குறையிருளில்
அனாதைச் சிறுக்கியாய் அமர்ந்திருந்தேன்
அன்பளிப்பின் நிராகரிப்பை அனுபவித்தபடி.
அசிரத்தையும், அலட்சியமுமாய் கடந்துசெல்கிறது காலம்.
அதன் மௌனக் கெக்கலிப்பில் என் துக்கம் சிக்கிக் குழம்பிக்
கிளர்ந்தெழுகிறது ஒரு தீப்பிழம்பாய்.
எனதே யான இழப்பொன்றின் வளர் சிடுக்குகளில்
திணறித் திணறிக் கனன்ற வண்ணம்
நிலப்படக் காட்சியாய் சட்டமிடப்பட்ட சூழலில்
கட்புலனுக்குட்படா சலனமா யொரு வீழல்.
ஆழம் அதியாழமாமோ வெனக் கலங்கும் மனம்
பின்னமாகிக் கொண்டிருக்கும். ஆங்கே
வலியின் நீலத்தில் நீண்டு சென்றிருக்கும்
தண்டவாள வண்டித் தொடரில்
திக்குகளை எக்கித் தாண்டி யென்
கண்களி லேறிப் போய் ஒண்டிக் கொள்கிறேன்.
சின்னதொரு ஜன்னலோரம் போதும், எங்கேனும்
அத்துவானமொன்றில்
என்னை இறக்கிவிட்டுக்கொண்டுவிட வேண்டும்.
***

39. இன்னொரு தோட்டம்
...............................................................................
அசரீரி சொன்னது கண்காணாத அந்தத்
தோட்டத்தில் கொட்டிக் கிடக்கிறதென்று.
ஓட்டமாய் ஓடிச் சென்றவள்
தேடிப் பொறுக்கி யெடுத்து நிரப்பிய
கூடைக்குள் கனத்திருக்கும்
‘க்விக் ஃபிக்ஸ்’ மனங்கள்.
***

40.மாலுமென்னெஞ்சு
...............................................................................
நீர்மேல் நடக்கும் மந்திரம் தேர்ந்திருந்தேன்
போய்வந்தவாறிருந்தேன் நிச்சலனமாய்
அச்சமயம் வந்த மச்சகன்னிகைகள் நீந்தி
விளையாடிக் களிக்கலாயினர் அநாயாசமாய்
அதிநிர்வாணமாய் சிறுமீன்களும் சுறாக்களும்
துள்ளி யெழும்பித் திரும்ப அழுந்தின வெள்ளத்தில்
விண்மீன்கள் மிதக்கலாயின சுபாவமாய்
தென்றல் அரவணைத்துக் கொண்டாடியது திரவப்பரப்பை
தன் அனேக அருவக் கைகளால் உரிமையோடு
நீருலா வரலானது நிலா நினைப்பில்
அனைத்தும் கண்டதில் அந்நியமானது போல்
வினை தீர்க்கும் மந்திரம் மறந்துபோக தரை
தண்ணீராகிப் பெருகும் தலைக்கு மேல்.

( கவிஞர் நகுலனுக்கு நன்றி: கவிதைத் தலைப்பிற்கு)

தரவுகள் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 தரவுகள்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
ஓர் ஏழையின் மண்பானையை ஒருவர்
காலால் எத்தி உடைத்துப்போட்ட
அரைகுறை உண்மைக்கதையை
அன்றாடம் அத்தனை ஆக்ரோஷத்தோடு சொல்லிக்கொண்டேயிருக்கிறவரை சற்றே பயத்தோடு இடைமறித்து
உடற்குறையுடையவரை இன்னொருவர் நையப்புடைத்த உண்மைக்கதையை
நாம் ஏன் பேசுவதேயில்லை என்று கேட்க
உர்ரென்று முறைத்தவாறே அங்கிருந்து போய்விட்டார்.
ஒரு குறிப்பிட்ட நாளிலிருந்துதான்
நாட்டில் வறுமை ஊஞ்சலாடுகிறது என்று அடித்துச்சொல்பவரிடம்
அதற்கு முன்பிருந்தே இருப்பதைக் காட்டும் ஆதாரத்தை எடுத்துத் தந்தபோது
அத்தனை கடுப்போடு அவர்
காறித்துப்பியதைப் பார்க்க
என்னுள் அதிகரித்த
அச்சம் மீறிய ஆற்றாமையில்
குறுக்கிட்டு எதுவும் கேட்காமல்
அங்கிருந்து போய்விட்டேன்.

மௌனம் ஒரு காவல் தேவதை - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 மௌனம் ஒரு காவல் தேவதை

’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
மௌனம் சம்மதமென்று,
சீக்காளிமனதின் சுரவேக பலவீனமென்று
யார் சொன்னது?
மௌனம் ஒரு மந்திர உச்சாடனம்.
ஒரு மாயக்கோல்.
ஒரு சங்கேதமொழி.
ஒரு சுரங்கவழி.
சொப்பனசங்கீதம்
அரூபவெளி.
அந்தரவாசம்.
அனாதரட்சகம்.
முக்காலமிணைப்புப் பாலம்.
மீமெய்க்காலம்.
மொழிமீறிய உரையாடல்.
கதையாடல் ஆடல் பாடல்.
மனசாட்சியற்றவரிடம் நம் வார்த்தைகள்
மண்டியிட்டுத் தெண்டனிடுவதைத்
தடுக்கும் சூத்திரம்.
பாத்திரம் அறிந்து நாம் இடும் பிச்சை.
ஆத்திரத்தின் வடிகால்.
அடிமன வீட்டின் திறவுகோல்.
யாரிடமும் நம்மை நிரூபித்தாகவேண்டிய
கட்டாயத்திலிருந்து விடுதலை.
ஆய தற்காப்புக் கலை.
அவரவர் இமயமலை.
நெருங்கியிருப்பவரையும் கணத்தில்
நெடுந்தொலைவிலாக்க எறியப்படும்
சூட்சுமக்கல்.
நித்தமும் நெஞ்சொளிரும் வானவில்.
பித்தாகிநிற்கும் சொல்.
வலியாற்ற மனம் தயாரிக்கும்
அருந்தைலம்.
கொடியவிலங்குகளிடமிருந்து காக்க
நம்மைச் சுற்றிக் கனலும் எரிவளையம்.
கடல்நடுவே கரையாகும் மணல்திட்டு.
அடர்மழை.
நள்ளிரவின் உயிர்ப்பு.
நிலவின் புன்சிரிப்பு.
இன்னும்……
9

என்னை விட்டுவிடுங்கள் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 என்னை விட்டுவிடுங்கள்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
நன்றாகவே அறிவேன் ஐயா –
நீங்கள் என்னை நலம் விசாரித்து
நயத்தக்க நாகரிகத்துடன் நாலும் அளவளாவுவதெல்லாம்
சில பல செய்திகளை என்னிடமிருந்து சேகரித்து
நான் சொல்லாததைச் சொன்னதாய் செய்தி பரப்பவே.
ஊர்வன பறப்பனவுக்கு உள்ளதெல்லாம் ஐந்தே அறிவுதானாம்
உங்களுக்குத் தலா பத்துப் பதினைந்துகூட இருக்கலாம்.
உயர்வானவராகவே இருங்கள், ஆனால்
அடுத்தவரை அவமதிப்பதற்கும் அவதூறு பேசுவதற்குமே
அவையென்று ஆகிவிட்ட அவலத்தை
இன்றேனும் எண்ணிப்பாருங்கள்.
ஆன்றோரே! சான்றோரே! மீண்டும்
மன்றாடிச் சொல்கிறேன் _
உங்கள் போட்டி பொறாமைகள் பொல்லாப்பு
பொச்சரிப்புகளையெல்லாம்
நீங்கள்தான் சுமக்கவேண்டும்,
அவரவர் சிரசுகளில்.
என் தலையில் ஏற்றப்பார்க்காதீர்கள்.
பனங்காயின் கனத்தையும் சுமக்கலாகும்
என் குருவித்தலையால், தேவையெனில்;
உங்கள் குப்பைக்கூளங்கள் கழிசடைகளையெல்லாம்
வழிநீளச் சுமந்து ஆவதுதான் என்ன?
இல்லாததை இருப்பதாக, இருப்பதை இல்லாததாகப்
பொல்லாங்கு சொல்லிச் சொல்லி
என்ன கண்டீர்?
நல்லோரே வல்லோரே -
சொல்லுங்கள்.
பித்துப்பிடித்ததுபோல்
தெரிந்தவர் தெரியாதவர் தலைகளையெல்லாம் ஏன்
எத்திக்கொண்டேயிருக்கிறீர்கள்?
பெருமதிப்பிற்குரியோரே! பெருந்தகைகளே!
உத்தமர்களில்லை நீங்கள்,
அறிவேன்;
உன்மத்தர்களுமில்லை.
உங்களைக் கலந்தாலோசிக்காமல்,
உரக்க வழிமொழியாமல்
சுயம்புவாய் எழுதுபவர் கைவிரல்களை அறுத்தெறியும் வெறியில்
உங்கள் நாவிலும் எழுதுகோல் முனையிலும் பிச்சுவாக்கத்தியோடு
நகர்வலம் வந்துகொண்டிருக்கிறீர்கள்.
மோதிரம் அணிந்திருப்பதொன்றே உங்களுக்கான தகுதியென்று
தேடித்தேடித் தலைகளைக் குட்டுகிறீர்கள்
ரத்தம் சொட்டச்சொட்ட.
ரணகாயமடைந்தவர்கள் நன்றிபாராட்டவேண்டும் என்று
மனதார விரும்பும் உங்கள் மனிதநேயம்
மெய்சிலிர்க்கவைக்கிறது.
மறவாமல்
எரிகொள்ளியை எல்லா நேரமும்
முதுகுப்புறம் மறைத்தபடியே
நட்புபாராட்டிவருகிறீர்கள்.
என்றேனும் நெருப்பு உங்களையே பதம்பார்த்துவிடாமல்
கவனமாயிருங்கள்
(உங்களுக்குச் சொல்லித்தரவேண்டுமா என்ன!)
எப்படியோ போங்கள் _
என்னை விட்டுவிடுங்கள்.