LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Monday, July 21, 2025

SIGNING OFF..... (Soliloquy – 2) 'rishi’ (Latha Ramakrishnan)

 SIGNING OFF.....

(Soliloquy – 2)
'rishi’
(Latha Ramakrishnan)
TRANSCIENCE
Yester night
some words as stray fireflies and butterflies
were hovering over me, oozing glow so rare
proving life more than a mere vanity fair
hoping that they would be seamlessly woven
into a poem.
But, half-afraid of the alien cabin
half of me already asleep, the rest drooping
I waved them away with a heavy heart.
Today I am wide awake,
waiting for those fireflies and butterflies
to bless me with their wings and shine
the boon of a poem sublime….
Much as I try, they refuse to oblige.
I remain a vauum to be filled by the
‘never to return’ Moment.

நிலையாமை
ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)
நேற்றிரவு
சுற்றித் திரியும் சில மின்மினிப்பூச்சிகள், சில வண்ணத்திப்புச்சிகள்
என் தலைக்கு மேலாய் வட்டமிட்டுக்கொண்டிருந்தன.
அரிய வெளிச்சத்தை வழியவிட்டபடி;
வாழ்க்கை வெறும் ‘VANITY FAIR’ ’ அல்ல என்று நிரூபித்தபடி;
அத்தனை நேர்த்தியாய் அவையோர் கவிதையில் ஊடுபாவாய்
நெய்யப்படும் என்ற நம்பிக்கையோடு.
எனில், புதிய அறை தரும் பயமும், பாதி உறங்கிப்போய்விட்ட தேகமும்
மீதிக் கண்கள் செருகிக்கொண்டிருக்கும் கோலமுமாய்
கனக்கும் மனதுடன் அவற்றை விரட்டிவிட்டேன்.
இன்று நான் முழு விழிப்பில் காத்துக்கொண்டிருக்கிறேன்
அந்த மின்மினிப்பூச்சிகளின் வண்ணத்துப்பூச்சிகளின் வருகைக்காய்.
தங்கள் சிறகுகளும் ஒளிர்வுமாய் அவை எனக்கோர்
கவிதைவரம் அருளும் என்ற நம்பிக்கையோடு.
ஆனால், எத்தனை முயன்றாலும் அவை என் கோரிக்கையை ஏற்க மறுக்கின்றன.
வெற்றிடமாகினேன் இனி ஒருபோதும் திரும்பிவராத தருணம் இட்டுநிரப்ப








Like
Comment
Share

கவிதைச் சர்வாதிகாரிகளுக்கு - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 கவிதைச் சர்வாதிகாரிகளுக்கு

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

‘ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரே பூ பூத்துச்சாம்
ரெண்டு குடம் தண்ணி ஊத்தி ரெண்டே பூ பூத்துச்சாம்
மூணு குடம் முப்பது குடம் மூவாயிரம் குடம்…”
என்று பாடிக்கொண்டே வந்தவர்
குடமும் நானே தண்ணீரும் நானே பூவும் நானே
பைந்தமிழ்க்கவியும் நானே யென
ஆலாபிக்கத் தொடங்கியபோது
கலங்கிநின்றவர்களை
“குவளையும் குளிர்ச்சியும், திவலையும், தளும்பலும்
தென்றலும் மழையுமிருக்க
கவலையெதற்கு என்று
கைபிடித்துத் தன்னோடு அழைத்துச் செல்கிறது
காலாதிகாலம் வற்றாக் கவித்துவ நீரூற்று.
’காக்கா காக்கா கண்ணுக்கு மைகொண்டுவா
குருவீ குருவீ கொண்டைக்கு பூ கொண்டுவா”
எனக் குழந்தை பாட்டுப் படிக்க,
’கவிதை கொண்டு வா’யென
வளர்ந்தவர்கள் கேட்பதில் தவறில்லைதான்.
அதற்காக
காக்காய் பிடித்து
கவிதைச் சிம்மாசனத்தில்
கொடுங்கோலோச்சப் பார்த்தால்
சும்மாயிருக்கலாமோ சொல்
வல்லமை கொள் கிளியே.
”தோ தோ நாய்க்குட்டி, துள்ளி வாவா நாய்க்குட்டி
உன்னைத்தானே நாய்க்குட்டீ, ஓடிவாவா நாய்க்குட்டீ”
யெனத்
தேடித்தேடிக் குழந்தைப்பாடல்களைச் சொல்லிச்
சக கவிகளையெல்லாம் செல்லம் கொண்டாடுவது
தன்னை பழுத்து முதிர்ந்த கவியாகவும்
பிறர் வரிகளைக் குழந்தைப் பிதற்றல்களாகவும்
நிறுவத்தான்
என்று புரிய நீண்டகாலமாயிற்று.
”தோசையம்மா தோசை, அம்மா சுட்ட தோசை
அரிசி மாவும் உளுந்த மாவும் அரைச்சு சுட்ட தோசை”
யெனக்
கரைந்து கரைந்து தன் கவிதையை
கனியமுதென்றுரைக்கப்
பிரயத்தனப்பட்டுக்கொண்டிருப்பவர்களுக்கு:
கேழ்வரகுக்கூழ் முதல்
பர்கர் பீட்ஸா வரை
வாய்க்கு ருசியாய்
இங்கே வகைவகையாய்
இருப்பது நன்றாகவே தெரியும் எமக்கு.
”நிலா நிலா ஓடி வா, நில்லாமல் ஓடி வா,
மலைமேல ஏறி வா, மல்லிகைப்பூ கொண்டுவா ......
ஆ! தெரியுமா!
ஓயாமல் ஓடியோடி மலைமேல் தாவியேறி மல்லிகைப்பூ கொண்டுவரும் அந்த நிலா என் கவிதை:” யெனப்
பதவுரை சொல்ல ஆரம்பித்த பெருந்தனக்காரக் கவியை
இடைமறித்து
‘என் நிலா பறந்துவரும், மலையாகவே மாறிவிடும்
குறிஞ்சிப்பூவனைய அரிய பூக்களையே அதிகம் கொய்துவரும்
என்று கூறி
கொட்டாவி விட்டுத் தூங்க ஆரம்பித்தது குழந்தை.

மொழிபெயர்ப்பதற்கென எடுத்துவைத்திருக்கும் கவிதைகள் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 மொழிபெயர்ப்பதற்கென எடுத்துவைத்திருக்கும் கவிதைகள்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

ஒவ்வொரு கவிதையிலும் ஒரு கவிமனது
அல்லது கவிதைக்குள்ளிருக்கும்
‘சொல்லி’யின் மனது
எனக்காக முழுமையாகத் திறந்துவைத்திருக்கும்
அந்த இருண்ட பாதையில் பயணம்போகத்
தக்கதொரு தருணம் வாய்க்கவேண்டும்...
வரிவரியாய் வழியேகப் பழகலாம் இருளும்.
அருகேகும் மின்மினியின் சிறு வெளிச்சம்
அடுத்த கணமும் இருக்கும் என்று
எந்த நிச்சயமும் இல்லை.
தமக்காகப் பயிரிட்ட விளைபொருள்கள்
மூலிகைத் தாவரங்கள்
நிலத்தடி நீர்,
ஒளித்துவைத்திருக்கும் புதையல்,
கண்ணிவெடி,
கையகப்பட்ட மின்னற்கீற்றுகளால்
வேய்ந்த நிழற்பந்தல்
உள்ளாழமனதில் தைக்கும் முள்
கண்ணுக்குத் தெரியா நீரூற்று
சின்னக் குப்பிக்குள் இருக்கும் குட்டி பூதம்
ஆதாமும் ஏவாளும் உண்ட
ஆப்பிளின் மிச்சம்
உச்சம்தொடும் பிச்சிமனம்
கச்சிதமாய் விழுந்த ஒற்றைச்சொல்
எங்கிருக்கிறதென்று தெரியாத
நிலவறைகளின் திறவுகோல்கள்
புறாக்கள் சிட்டுக்குருவிகளுக்கான
தானியங்கள்
நிறைவான அரைவட்டங்கள்
ஆரக்கால்கள்
வால்கள்
கள்
உள்ளெங்கும் பொங்கும் உன்மத்தம்
ஷணப்பித்தம் .....
ஒன்றுவிடாமல் என்னைக் காணச்செய்யும்
கனிவுக்கு
இன்றளவும் கைம்மாறு செய்யலாகாதிருக்குமென்னை
தன்னுள்ளிழுத்துக்கொண்டு
தானேயாக்கியொரு
ஆளுயர நிலைக்கண்ணாடியில் முகம்பார்க்கச்செய்யும்
அன்புக் கவிதைகளுக்கு
என்றுமான என் ஒற்றைவரி நன்றி:
”நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா”

தரிசனம் - ‘ரிஷி' (லதா ராமகிருஷ்ணன்)

 தரிசனம்

‘ரிஷி'
(லதா ராமகிருஷ்ணன்)
”எங்கும் நீக்கமற நிறைந்திருப்பின்
பின் உனக்கு எதற்கு தனிவீடு?”
”நீக்கமற நிறைந்திருக்கும் காற்று
ஒவ்வொரு உடம்புக்குள்ளும் நிரம்பி
தனித்தனி உயிராவதுபோல்
என்று வைத்துக்கொள்ளேன்” _
கண்ணிமைப்போதில்
ஒலியின்றிக் கேட்கும் அசரீரியுடன்
பார்வைப்பரப்பிற்கு அப்பால்
தெரிகிறதொரு சிறு புன்னகை.

இயங்குவிதிகள் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 இயங்குவிதிகள்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

கருத்துக்கு எதிர்க்கருத்துரைக்க முடியாதவர்கள்
Character Assassinationஇல் இறங்குகிறார்கள்
கொச்சை வார்த்தைப்பிரயோகங்களைக் கையாள்கிறார்கள்
கெட்ட வார்த்தைகளை நுனிநாக்கு ஆங்கிலத்தில் சொல்லி
அதையே criticism என்றும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறார்கள்.
ஒரு கருத்துக்கு வரக்கூடிய காத்திரமான எதிர்க்கருத்தை
எதிர்கொள்ள முடியாதவர்கள்
Character Assassination இல் இறங்குகிறார்கள்
கொச்சை வார்த்தைப்பிரயோகங்களைக் கையாள்கிறார்கள்
கெட்ட வார்த்தைகளை நுனிநாக்கு ஆங்கிலத்தில் சொல்லி
அதையே criticism என்றும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறார்கள்
ஒரு எதிர்க்கருத்துக்கு வரக்கூடிய காத்திரமான இன்னொரு எதிர்க்கருத்தை
எதிர்கொள்ள முடியாதவர்கள்
Character Assassination இல் இறங்குகிறார்கள்
கொச்சை வார்த்தைப்பிரயோகங்களைக் கையாள்கிறார்கள்
கெட்ட வார்த்தைகளை நுனிநாக்கு ஆங்கிலத்தில் சொல்லி
அதையே criticism என்றும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறார்கள்.
வெளியேறமுடியாதொரு விபரீத வட்டச்சுழற்சியில்
தலைசுற்றி கண்மயங்கி யவருமிவருமெவருமுவருமாய்
இன்னும் நிறையவே மிச்சமிருக்கின்றன
கொச்சைவார்த்தைப்பிரயோகங்கள்
கெட்ட வார்த்தைகள்
character assassinationகள்
கவிதைகள்.....

பூச்சாண்டிகள் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 பூச்சாண்டிகள்

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)
நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட
பார்வையும்
திமிர்ந்த ஞானச்செறுக்கும் தமிழின் திருமாண்பும்
தமதென்றே பாவனைசெய்து அதை ஆவணமாக்கி
நிஜத்தில் முதுகுத்தண்டில் நல்லதொரு ‘ஸ்ப்ரிங்க்’ பொருத்தி
நினைத்தபடியெல்லாம் நாலாபக்கங்களிலும் வளைந்து
மடங்கித் தழைந்து குழைந்து
அழையா விருந்தாளியாய் அங்குமிங்கும் சில
அவரளவிலான அரிய கருத்துகளை
அள்ளி வழங்கி
அறிஞரும் ஆய்வாளருமாகி
அருந்தவப்படைப்பாளியுமானபின்பும்
அழுதுபுலம்பிக்கொண்டிருப்பார்
கொஞ்சம்போல் எஞ்சியிருக்கும் மனசாட்சியும்
அரைகுறை ஆன்மாவும்
பழுதடையாமலிருப்பதாலோ
பழுதடைந்திருப்பதாலோ….

ஆளவந்தார் அரண்மனைக் கழிப்பறை! _அநாமிகா (லதா ராமகிருஷ்ணன்)

 சிறுகதை

ஆளவந்தார் அரண்மனைக் கழிப்பறை!
_அநாமிகா
(லதா ராமகிருஷ்ணன்)

{23 மார்ச் 2011 - 'உங்கள் நூலகம்' இதழில் வெளியானது]
....................................................................................................................


நாங்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதி நடுத்தர வர்க்கத்தின் கீழ், மேல் தட்டுகளைச் சேர்ந்தவர்கள் வசிக்கும் இடம். இரு சக்கர வாகனங்களுக்கும், நாற் சக்கர வாகனங்களுக்கும் குறைவில்லை. குடியிருப்புப் பகுதியின் வாயிற்புறத்தில் ஆட்டோக்கள் அணி வகுத்து நிற்கும். அவசரத் தேவைகளுக்கான கடை, கண்ணி, கோயில், கணினி மையம் எல்லாம் உண்டு.
இங்கேதான் இன்று காலை முதலே பரபரப்பாக இருந்தது. ஐந்நூறு ஆண்கள் அவர்களின் நடை யுடை பாவனைக ளைப் பார்த்தாலே யார் ஆண்டை - யார் அடிமை என்பது தெளிவாக விளக்கிவிடும். ஆனால், அடிமை யும் அவனொத்த சகமனிதர்களிடம் தன்னை ஆண்டையாய் பாவனை செய்துகொண்டிருப்பான் - வீடுவீடாகச் சென்றார்கள்.
வீடுவீடாகச் சென்றவர்கள். வெகு இயல்பாக ‘குடும்ப அட்டையின் முதல் பக்க ஜெராக்ஸ்’ பிரதியை வைத்தி ருக்கும்படி ஒவ்வொரு வீட்டிலும் சொல்லிவிட்டுச் சென்றார்கள்.
நியாயவிலைக் கடையில், குடும்ப அட்டை வைத்திருப் பவர்களுக்கு அரிசி தருவார்கள், பருப்பு தருவார்கள், மண்ணெண்ணெய் தருவார்கள் என்று கேள்விப் பட்ட துண்டு. ஆனால், தொலைக்காட்சிப் பெட்டி கூடவா?
அதுவும், ஏற்கனவே, கூடத்தில் நடுநாயகமாக. எல்லா வீடுகளிலும் தொலைக் காட்சிப் பெட்டி தான் ஆரோகணித்திருக்கிறதே. சில வீடுகளில் கூடத்தில் ஒன்றும், அடுப்படியில் அல்லது படுக்கையறையில் ஒன்றுமாய். பிடித்த நிகழ்ச்சியைப் பார்ப்பதில் ஏற்பட்ட தீவிர விரோதம் காரணமாய் அக்கா, தங்கையையும், அண்ணனைத் தம்பியும் அரிவாள் மணையில் வெட்டித் தீர்த்துக் கட்டுவது அதிகரித்துக்கொண்டு வருகிறதே யென்பதால் இந்தப் பாதுகாப்பு நடவடிக்கை. குளியல் அறையி லும், கழிப்பறையிலும் தொலைக்காட்சிப் பெட்டிகளைச் சுவரில் பதித்து வைக்க முடிந்தவர்கள் பேறு பெற்றவர்கள் என்பதில் மாற்றுக் கருத்திருக்க முடியுமா!
“நம்முடைய இத்தனை பரந்து விரிந்த பகுதி முழுக்க தூய்மையான கழிப்பறையே கிடையாது. காசு கொடுத் தாலும் கிட்டே போக முடியாத அளவு நாற்றம். இதில் பெண்கள் படும் சிரமம் சொல்லித் தீராது.”
“அதற்காக, தொலைக்காட்சிக்குப் பதிலாக வீட்டுக்கொரு கழிப்பறை கட்டித் தரச் சொல்கிறாயா? இதெல்லாம் நடக்கிற காரியமா?”
“ஏன் நடக்காது? இங்கே தரப்படும் நூறு தொலைக்காட்சி களுக்குப் பதிலாக நம் குடியிருப்புப் பகுதிக்குப் பின்பக்கம் அமைந்திருக்கும் குடிசைப் பகுதியில் நல்லதாக நான்கு கழிப்பறைகள் கட்டித் தரலாமே.”
“அவர்களெல்லாம் கழிப்பறைகளைத் தூய்மையாக வைத்திருக்கத் தெரியாதவர்கள்.”
“தெரியவில்லையென்றால் கற்றுக் கொடுக்கலாமே!
அடிமட்டத்திலிருப்பவர் களுக்கு அடிப்படை வசதிகளை யும் செய்துதராமல், அது பற்றிய விழிப்புணர்வை யும் அவர்களுக்குத் தராமல் அவர்களை மந்தைகளாக உழலச் செய்வதன் மூலம் தான் நாம் ஆண்டைகளாக, அறவுரை யாளர்களாக விளங்க முடியும்! அது தானே விஷயம்?”
“ஒரு சின்ன விஷயத்திற்கு எதற்கு இத்தனை அலட்டிக் கொள்கிறாய்? உனக்கு வாங்கிக்கொள்ளப் பிடிக்க வில்லையென்றால் உன்னுடைய அட்டைக்குரியதை வாங்கிக்கொண்டு அதை யாருக்காவது ஏழைக்குக் கொடேன். ஆனால், வாங்கிக் கொண்டு விடு.”
“நீ அப்படித்தான் கொடுக்கப் போகிறாயா?”
“அதைக் கேட்க நீ யார்?”
“அப்படியானால், தரப்படுவதை நான் வாங்கிக்கொள்ளத் தான் வேண்டும் என்று சொல்ல நீ யார்?”
“வாங்கிக் கொள்ளாவிட்டால் போயேன். உன் கையெழுத் தைப் போட்டு வேறு யாராவது வாங்கிக் கொண்டு விடு வார்கள். அவ்வளவுதான்.”
சர்வ சாதாரணமாகச் சொல்லிவிட்டு எல்லோரும் சாரை சாரையாய் சிற்றெறும்புக் கூட்டமாய் ‘ நியாய விலைக் கடை நோக்கி நகர்ந்து செல்வதைப் பார்க்க எனக்கு உண்மையாகவே நடுக்கமெடுத்தது.
ஒரு கையறுநிலையில் வீட்டினுள் நுழைந்து கூடத்தில் படுத்துக்கொண்டேன். கோபமும், இயலா மையுமாய்க் கண்ணீர் ததும்பி கண்ணோரங்களில் வழிந்தது போலும். சில சிற்றெறும்புகள் என்னைச் சூழ்ந்து நின்று கொண்டு பரிவோடு பார்த்தன.
ஒன்று என்னிடம் நெருங்கி வந்தது. “நீ ஏன் இத்தனை கவலைப்படுகிறாய்? வண்ண வண்ணமான காட்சிகளைப் பார்த்துக்கொண்டேயிருந்தால் உனக்குக் கழிப்பறைக்குச் செல்ல வேண்டும் என்ற உணர்வே ஏற்படாது தெரியுமா?”
“இது என்ன கிறுக்குப் பேச்சு? நீ சொல்வதையெல்லாம் நம்ப நான் என்ன முட்டாளா?”
“நான் சொல்வதை நம்பவில்லையென்றால், அதோ அங்கே பார்,” என்று கூறி என்னைப் பார்த்துக் கண்சிமிட் டிச் சிரித்தது அந்தச் சிற்றெறும்பு.
பார்த்தால், அவரவர் வீட்டில் அவரவர் தொலைக்காட்சிப் பெட்டிக்கு எதிரில் மடியில் ஒரு சிறிய தொலைக்காட்சிப் பெட்டியைக் குழந்தை போல் அணைத்த வாறு உட்கார்ந் திருந்தவர்கள். யாருமே நகரவில்லை.
அரைமணி நேரம் ஒரு மணி நேரமல்ல. அன்று முழுவ தும் அப்படித்தான் அமர்ந்திருந்தார்கள். தொலைக்காட்சி விளம்பரங்களிலிருந்த உணவுப் பண்டங்களை உட்கொண்டார்கள், அவற்றிலிருந்த சோப்புக் கட்டிக ளைக் கொண்டு ‘ லக்ஸ்’ ’விளம்பர அருவியில் குளித்து முடித்து, போத்தீஸ் விளம்பர உடைகளை உடுத்திக் கொண் டார்கள். அவ்வப்போது தொடர் நாடகங்களில் தாய் மகளுக்கும், மரு மகள் மாமியாருக்கும் கலந்து வைக்கும் நஞ்சு கலந்த காபியை அருந்தி அப்படி யப்படியே மயங்கிச் சரிந்தார்கள்.
“பார், கழிப்பறைக்கு அவசியமேயில்லை!” என்று சுட்டிக் காட்டியது சிற்றெறும்பு.
“இல்லை, இது சாத்தியமில்லை. ஆபத்தானது. அதெப்படி மணிக்கணக்காக ஒருவ ரால் கழிப்பறைக்குச் செல்லாம லிருக்க முடியும்? மயங்கிச் சாய்ந்துவிட்டால் அது அபாயமல்லவா?”
“மனதைக் கட்டுப்படுத்திப் பயிற்சி தரப்படுவது போல் இதற்கும் தொலைக்காட்சி மூலம் தரப்படுகிறது. நாட்டின் பொருளாதார நிலைமையைக் கணக்கில் கொண்டு, கழிப்பறை கட்டுவதற்கு ஆகும் செலவைக் குறைக்க இந்தப் பரிசுத் திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது. உனக்குத்தான் எதுவும் தெரியவில்லை. பாவம் நீ!”
“திட்டமா? என்ன திட்டம்?”
“அதோ அங்கே பார்! திரையில் தெரியும் எழுத்துக்களைப் படி,” என்று அவசரப் படுத்தியது சிற்றெறும்பு. சற்றே தாமதித்தாலும் எழுத்துகள் ஓடி மறைந்துவிடுமே. அரைக்கண விளம்பரத்திற்குக் கட்டணம் அரை லட்சமா, ஆறு லட்சமா, அறுபது லட்சமா?
தரையதிர, ஆகாயமதிர பெருத்த ஓசை அந்தச் சின்னப் பெட்டியிலிருந்து வெடித் துக் கிளம்பியது. கூடவே, குறையாடையில் ஒரு பெண் பதாகை யொன்றைச் சிரித்தவாறு விரித்து இரவல் குரலில் பாடினாள்:
“யார் அதிக நேரம் தொலைக்காட்சிப் பெட்டிக்கு எதிரி லேயே அமர்ந்திருக்கிறார்களோ, அவர்கள் நடிகர் ஆளவந்தாரின் அரண்மனை வீட்டுத் தங்கக் கழிப்பறை யில் ஒரு வேளை மலங்கழிக்கலாம்! நழுவ விடாதீர் இந்த அரிய வாய்ப்பை!”

பார்வை - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 பார்வை

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)


வேறு வேறு நவீன உத்திகளைக் கையாண்டு
நூறு யானையின் பசியோடு
பழிபாவத்திற்கு அஞ்சாமல்
ஊருப்பணத்தையெல்லாம் விழுங்கித்தீர்ப்பவர்கள்
விழியிழந்தவர் யானையைத் தடவிப் புரிந்துகொண்ட
வழக்கொழிந்த கதையை
முழங்கிக்கொண்டிருக்கும் வெட்கக்கேட்டை யெண்ணி
ஆரம்பப்பள்ளியிலேயே யானையின் முழு உருவை
அவர்களுக்கேயான வரைபடத்தில்
தொட்டுத்தடவித் தெரிந்துகொண்டவர்கள்,
ஆசிரியர் விரித்துரைக்க காதுகளெல்லாம் கண்களாக
விரியக் கேட்டிருந்தவர்கள்,
கல்விச் சுற்றுலா சென்ற பூங்காவிலிருந்த
குட்டி யானைச் சிலையை பேர்பேராகச் சுற்றிவந்து
தொட்டுணர்ந்து தொட்டுணர்ந்து
சரியாக முதுகிலேறி
தந்தத்தைப் பிடித்துக் கீழிறங்கியவர்கள்,
அடிக்கொரு பள்ளத்தைத் தாண்டி
அவ்வப்போது தடுக்கி விழுந்து
அடிபட்டுக்கொண்டும் முன்னேறி
இன்று கணினியில் சுயமாய் உலகத்தைச் சுற்றிவரும்
பார்வைக்குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் _
‘உங்களால் மட்டும்
பூமிப்பந்தின் மொத்தப்பரப்பையும் பார்க்கமுடிகிறதா?
உங்கள் பார்வைகளுக்கு எல்லைகளே யில்லையா
இருவிழிகளிருந்தும் நீங்கள் எப்படியெல்லாம் வழுக்கிவிழுந்துகொண்டிருக்கிறீர்கள் .....
கொழுப்பெடுத்த அழுக்குப்பிடித்த உங்கள் நெறிப்பிறழ்வுகளுக்கெல்லாம்
எங்களையேன் குறியீடாக்குகிறீர்கள்....?
என்று கேட்டால்
ராஜாக்கள் தங்கள் தவறுணர்வார்களோ,
இல்லை, அவர்களைக் கொன்றுவிடுவார்களோ……