LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Friday, July 11, 2025

இங்கிருந்து வெளியே…. ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

இங்கிருந்து வெளியே….

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
இத்தனை அலைச்சலுக்குப் பிறகும் இரண்டாம் சதுரம் வசப்படவில்லை யிதுவரை.
மூன்றாவது தொடுவானத்திற்கப்பால்.
அந்தரத்தில் அவ்வப்போது தொங்கிக்கொண்டிருக்கும் நூலேணியில்
எத்தனை முறை ஏறியும்
நிலவுக்குள் நுழையவே முடியவில்லை.
விண்கலத்தில் ஏறிச்செல்ல நானொன்றும் விஞ்ஞானியல்லவே.
அருகிலிருந்து பார்க்க அது அவ்வளவாக அழகாகவும் இல்லையாக…..
ஒரு குழந்தைபோல் காற்றின் முதுகேறி எத்தனை நேரம்தான் பறந்துகொண்டிருப்பது?
ஆற்றங்கரையோரத்தில் கட்டிவைத்திருக்கும் அரிய தோணி அப்படியேயிருந்தாலும்
ஆற்றைக் காணவில்லை.
நேற்றின் ஒரு முனையும் இன்றின் மறுமுனையும்
இறுகித்திருகி முறுக்கிக்கொண்டிருக்கும் நாளைக்குள்
நிற்கத் தோதான நான்காம் சதுரமிருக்கும் என்று நம்ப வழியில்லை.
சுக்கானற்ற நாவாயாய்
பாதாளத்தில் அலைந்து திரிந்துகொண்டிருக்கும் என் ரயில் வேறு
உலக உருண்டையின் பொன்சாய் வடிவமாய்
குறுகிய வட்டப்பாதையில் சுற்றிச்சுற்றி வந்துகொண்டிருப்பதும்
புரிந்துவிட்ட பிறகு _
திரும்பிடத்தான்வேண்டும் முதல் சதுரத்திற்கு...
என்னவொன்று _
சதுரம் சற்றே பின்வாங்கியிருக்கக்கூடும்
வடிவம் கொஞ்சம் சிதைந்திருக்கலாம்.
விட்டுவந்த மரகதப்புற்களும் மண்ணுளிப் புழுக்களும்
இன்னுமிருக்குமோ இருக்காதோ…..
ஆனாலும், ஆழ வேர்ப்பிடித்து அகலவிரிந்திருந்திருக்கும்
அந்த மரத்தின் அடியில்
நிற்க நிழலிருக்கும் எப்போதும். அதுபோதும்.

ஏழை ராணி - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

ஏழை ராணி
‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)




பிறந்தது முதலாகவே அடைபட்டிருந்ததோ
அல்லது இடைவழியில் பறிபோனதோ குரல்……
இருதயமும் மூளையுமாய் ஒருங்கிணைந்து செயலாற்றி
உருவாகிவரும் சொற்திரள்கள்
அந்தத் தெருவோரவாசியின் தொண்டைக்குழியில்
சிக்கிக்கொண்டு சதா திக்கித்திணறும்.
உடைப்பெடுத்துப் பெருகும் வெள்ளமென அவை
பீறிட்டெழும் நாள் வரின்
இந்தத் தெருவும் தெரு சார்ந்த பகுதியும்
அதை எப்படி எதிர்கொள்ளும்.......
சிலர் பழைய ஐம்பது காசு நாணயத்தைக் கொடுப்பார்கள்.
சிலர் ஐந்து ரூபாய்.
அபூர்வமாக, யாரேனும் ஐம்பது ரூபாய்.
இன்று ‘கையேந்திபவனிலாவது ஒரு தட்டு சோறு
ஐம்பது ரூபாய்க்குள் கிடைக்க வழியிருக்கிறதா,
தெரியவில்லை.
உரிமையோடு அதட்டுவதாய் அருகழைத்து
புரிபடா உச்சரிப்பில் எதையோ சொல்லி
ஒரு குழந்தைபோல் அந்த மனிதர் கையேந்தும்போது
அந்த நாளின் முடிவில் வீடுதிரும்பும் ஏழை ராணி
அவருக்கென ஒரு ஐந்து ரூபாயாவது
தன் நடுத்தரவர்க்கக் கைப்பையில் எங்கேனும்
மீதமிருக்கவேண்டுமே என்ற பிரார்த்தனையோடு
வெறும் தொப்பிக்குள் கைநுழைத்து
வெளியே முயல்குட்டியை எடுத்து
அதைப் புறாவாக்கிப் பறக்கவிடும் மந்திரவாதியாய்
மாறிவிடுவாள்!
அப்படி ஒருமுறை அவளுடைய கை உண்மையாகவே
ஒரு மாயாஜாலக்காரியின் கையாக மாறி
அவளே அறியாமல் அவளது கைப்பைக்குள் என்றோ புதையுண்டிருந்த
நூறு ரூபாய்த் தாளொன்றை
அகழ்வாராய்ச்சிக் கண்டுபிடிப்பாய்க் கையிலெடுத்தபோது
அரைக்கணமும் யோசிக்காமல் அதை
அந்த மனிதர் கையில் கொடுத்துவிட்டு
அன்றிரவு முழுவதும் அந்த நூறு ரூபாய் நோட்டு அவரைச் சிலரிடம் திருடனாகக் காட்டி
பேசமுடியாத அவரை நிறையபேர் நையப்புடைப்பதாக
விழித்தநிலையிலேயே கொடுங்கனவு வந்து
நெடுநேரம் கலவரத்திலாழ்ந்திருந்தாள்
பூஜ்யத்திற்குள்ளே ராஜ்யத்தை ஆண்டுகொண்டிருக் கும்
ஏழை ராணி.
இன்று
பிளிறலா, வீறிடலா, உறுமலா பொருமலா
விசும்பலா விசன முணுமுணுப்பா
என்று பிரித்துச்சொல்லவியலாதபடிக்கு
எல்லாம் கலந்தொலிக்கும் தனதேயான பாதிக் குரலும்
தன் சைகைகளின் வழியாக ஒலிக்கும் மீதிக்குரலுமாய்
தான் அங்கிருந்துபோய்விடப்போவதை அந்த மனிதர்
பிரியாவிடையாய்த் தெரிவித்தபோது
வருத்தத்தை மீறி மனதில் பரவிய நிம்மதிக்காக
தன்னைத்தானே கசையாலடித்துக்கொண்டு
வீடுதிரும்பும்
நியாயந்தவறா ஏழை ராணியின் கண்களில் திரளும் நீர்த்துளிகளை
எங்காவது சில கோடிகளுக்கு விற்க இயலுமானால்
அவள் விரும்பும் சாம்ராஜ்யத்தைக் கட்ட முடியலாம்….

இயங்கியல் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

இயங்கியல்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

இரு நாற்பதுகளுக்கு மேல் இருக்கும் வயது.
இருந்தும், இன்றெழுதிவரும் கவிஞர்களில் இடம்பெறுபவர்.
”இவரா கவிஞர்? ஐயையையே” என்று மலம் மிதித்ததாய்
மறைவாய் முகஞ்சுளித்தபடியே
அவருக்கு முகமன் கூறி விதந்தோதி மலரச் சிரிக்கும்
சக கவிகள் சிலர் உண்டென்றாலும்
அவசியம் படிக்கவேண்டிய கவி யிவர் என்பதே
அப்பட்டமான உண்மை.
அப்படியிருந்தும்
இன்றுவரை இலக்கிய பீடாதிபதிகளால் அதிகவனமாக
கண்டுங்காணாததாய் கடந்துசெல்லப்படுபவர்.
(ஆஹா! இஃதெல்லாம் இலக்கியவுலகில் அதி சகஜமப்பா! )
என்றாலும்
அவர்க்கான புகழாஞ்சலிகள்
அனைவரிடமும் ஆயத்தமாக உள்ளன!
ஒருக்கால் அவருடைய படைப்புகள் நாட்டுடைமையாக்கப்பட்டால்
குறைந்தபட்சம் அவருடைய நான்கு நூல்களையாவது
அவசர அவசரமாக,
ஆயிரமில்லாவிட்டாலும் அறுநூறு அச்சுப்பிழைகளுடனாவது
வெளியிட்டுவிட _
அல்லது அன்னாரின் படைப்புகளைப் பற்றி
அரைகுறையாகவும் அறிந்திராத
அவருடைய குடும்பத்தாருக்கு
குத்துமதிப்பாக ஒரு சிறுதொகையைக் கொடுத்து
அவருடைய நூல்களில் பிரபலமானவற்றை
வன்பதிப்பு செய்ய _
சில வளர்ந்த பதிப்பகங்கள் என்றுமே
தயார்நிலையில்!

தனிமொழியின் உரையாடல் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 தனிமொழியின் உரையாடல்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
”உன் கவிதையில் எந்நேரமும் நீந்திக்கொண்டிருக்கும் மயில்களை
உண்மையில் காட்டமுடியுமா உன்னால்”

”உங்கள் கனவுகளிலிருக்கும் ஆற்றைக்கடந்துதானே அவை என்னை அடையாளம் கண்டு வந்தடைகின்றன!”

”என் கனவுகள் எனக்கே தெளிவாகாதபோது நீ யார்
அவற்றில் நதிகளை வகுத்துரைக்க?”

உங்கள் உள்ளாழ நிலவறைகள் சிலவற்றின் திறவுகோல்கள் என்னிடமிருக்கின்றன!”

”களவாணியா நீ?”

“கவி”.

Thursday, July 10, 2025

மொழிப்பெருங்கருணைக் கவிதைகள் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

மொழிப்பெருங்கருணைக்
கவிதைகள்

- ‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

1. மொழி
சின்னதாக இருப்பதால் கையிலெடுத்து
இடுப்பில் பொருத்திக்கொள்கிறேன்
என்பதால்
குழந்தையின் விஸ்வரூபம் எனக்குத் தெரிந்ததாகிவிடுமா என்ன?
வாய்க்குள் தெரியாத அகிலத்தை
மனதிற்குள் பார்க்க முடிய வேண்டும் நமக்கு.
அர்த்தம் புரிவதற்கு முன்பாகவே நம்மை
உள்ளுக்கிழுத்து முத்துக்குளிக்கவைக்குமொரு கவிதையின் ஆழத்தை
எதைக்கொண்டு அளப்பது?
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று.
தெய்வம் இல்லையென்பார்க்கு
குழந்தை இசையொத்தது எனல் நன்று.
அன்பிற்கும் அதிகாரத்திற்கும் தனக்கு
வித்தியாசம் தெரியுமென்பதை
உதட்டைப் பிதுக்கி ஒரு துளி கண்ணீரை
வெளியேற்றி
எத்தனை தெளிவாக உணர்த்துகிறது குழந்தை!
நாம் தான் அதை உள்வாங்கத்
தவறிவிடுகிறோம்.
பித்தம் தலைக்கேற
மொழியைக்
குழந்தையாக பாவிப்பதற்கு பதிலாக
குழந்தைத் தொழிலாளியாக நடத்தத் தொடங்கிவிடுகிறோம்.
ஒரு கட்டத்தில் நம் வளர்ச்சி முடங்கிவிட
நம்மைத் தாண்டி வளர்ந்துகொண்டேயிருக்கும் குழந்தை.

2. மொழிவாய்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

அவரிடம் நத்தையோடாய் இறுகிக்கிடக்கிறது
இவரிடம் இறக்கையாய் விரிந்து பறக்கிறது
பிள்ளையின் மழலையில் புதிதாய்ப் பிறக்கிறது
முதியவர் குழறலில் அதன் வேர் தெரிகிறது
ஒரு வியாபாரி கணக்குவழக்காய்
கைவரப்பெற்றிருப்பது
ஓர் ஓவியரின் வண்ணக்கலவைகளில்
இரண்டறக் கலந்திருப்பது
யார் யாரோ நகமும் சதையுமாக வழியமைத்துக்கொடுப்பது.
தீராத தாகத்திற்கெல்லாம் நீராகி
அமுதமுமாவது
கண்ணிமைப்போதில் இடம் மாறும் வித்தை
யதன் கூடப்பிறந்தது
காலத்திற்கும் அதற்குமான கொடுக்கல்வாங்கல்கள்
கணக்கிலடங்காது
அவரவர் வழிச்செலவுக்கான கட்டுச்சாதமாய்
தாகம் தணிக்கும் நன்னீராய்
தண்காற்றாய் தலைச்சுமையாய்….
கூடவேயிருக்கும் மொழி
இன்னொரு மேனியாய்
இதயமாய் மூளையாய்…
கூடுவிட்டுக்கூடுபாயவும் வழிகாட்டும்.
இன்றுமென்றும் நம் காலைமாலையாய்
நன்றும் தீதும் பிறிதுமாய் தேடிவந்து
தட்டிக்கொடுத்தும் முட்டுக்கொடுத்தும்
எட்டையும் நான்கையும் பெருக்கியும் கூட்டியும்
கழித்தும் வகுத்தும் பகுத்துரைக்கும்.
அழுகையில் அலறலில் ஆங்கார வசையில்
அதிமதுர இசையில்
அத்தரிபாட்சா கொழுக்கட்டைச்சுவையில்
அனார்க்கலியின் ஆடல்பாடலில்,
அழியாக் காதலில்.
அம்மாவின் இருப்பில்
அடிமனப் பெருவிருப்பில்
அங்கிங்கெனாதபடி யிருக்கும்
வீடுபேறாய மொழி யழிவதில்லை.
நாடிலியானோர் ஒருபோதும் மொழியிலி
யாவதில்லை.


3.மொழிவழி
திக்குத்தெரியாத காட்டில் தேடித்தேடி இளைக்கு
மென் நோயும் மருந்துமாகும் மொழியின்
வழியெல்லாம் பறக்கும் மின்மினிப்பூச்சிகள்
விண்மீன்களாய் சந்திரசூரியர்களாய்
ஒளிவழிந்தொளிர
குழந்தைப் பருவமும் குழந்தைக்கான பருவமும்
இருவேறாய்ப் புரிய
திக்குத்தெரியாத காடாகப் படரும் மனதின்
கிளைகளெல்லாம் பூபூத்துக் காய்காய்க்க
நகரும் வனமாய் மொழிசொல்லும் வழி செல்லும்
பகலும் இரவும் விரிந்துகொண்டேபோக
அங்கங்கே சில திருப்பங்களில்
இறக்கைகளும் இலவம்பஞ்சுத்திரள்களும் தந்து
களைப்பாற்றித் தேற்றும்
மொழியின் வள்ளன்மைக்கு என்ன
கைம்மாறு செய்யவென்ற கேள்வியில்
மீண்டும் திக்குத்தெரியாத காட்டில்
தேடித்தேடி இளைக்கு மென்
நோயும் மருந்துமாகும் மொழி….

***
4. மொழிபெருங்கருணை
..................................................................................................................
வழியேகும் அடரிருள் கானகத்தில்
கைப்பிடித்து அழைத்துச்செல்லும் மொழி
குழிகளிலிருந்தும் கட்டுவிரியன்களிலிருந்தும் காத்து
உயிர்பிழைக்கும் வழி கற்றுத் தந்தவாறு
பழிபாவங்களுக்கஞ்சி சில ஒழுக்கங்களுக்குட்பட்டுப்
போகுமாறெல்லாம் என்னை உயிர்ப்பித்தபடி
சுழித்தோடும் நதியாக தாகம் தீர்த்து
கரையோரங்களில் பூவாய்ப் பூத்து
சோர்ந்துபோகாமல் தீர்ந்துபோகாமல் மனதை அறிவை
அவற்றின் அருவசேமிப்பையெல்லாம்
காவல்காத்தவாறு
கூடவே வரும் அருந்துணைக்கு
யாது கைம்மாறு செய்யலாகும்
ஏழை யென்னால்
காதலாகிக் கசிந்து கண்ணீர்மல்கி நிற்பதல்லால்.....

கல்லுக்குள் தேரை ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 கல்லுக்குள் தேரை

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
குளிரூட்டப்பட்ட அறையில் அமர்ந்தபடி அவர்கள் காரசாரமாக விவாதித்துக்கொண்டிருந்தார்கள்:
"குளிரை வெய்யிலென்றும்
வெயிலைக் குளிரென்றும்
மாற்றிச்சொல்ல யார் அதிகாரம் அளித்தது?"
"கடலை அருவியென்றும்
அருவியைக் கடலென்றும்
மாற்றிச்சொல்ல யார் அதிகாரம் அளித்தது?"
குளிருக்கும் வெயிலுக்கும் மூலாதாரமான தட்பவெப்பத்தில்
அதன் அடிவேரான அற்புத இயற்கையில்
இரண்டறக் கலந்த பின்னே
யார் என்பதும் அதிகாரம் என்பதும்
குளிரும் வெய்யிலும் பிறவும்
இருமையற்றதாக
வெறுங்கால் நடைபழகிக்கொண்டிருக்கும்
இறை உறை திரு வுளமெலாம்
மறைபொருளாகி வலம்வரும் அண்டம்
கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்….

சிறுசேமிப்பு - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 சிறுசேமிப்பு

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

இன்னும் சொல்லில் வந்திறங்காமல்
அண்ணாந்து பார்த்தால் அடையாளந்தெரியாத
வெகுதொலைவில்
அந்தரத்தில் பித்தம் தலைக்கேற சுற்றிச்சுற்றி
வட்டமடித்துக்கொண்டிருந்த
உணர்வொன்று கவிதையாகுமா ஆகாதா என்று
ஆரூடங்கேட்க/கூறத் தொடங்கினேன்.
அறிவியல் கோபத்தோடு கணினியை அணைத்துவிட
சேமிக்காத என் வரிகள் என்றுமாய் காணாதொழிந்தன.
நினைவுண்டியலைக் குலுக்கிப் பார்த்தேன்.
சன்னமாய் கேட்கும் ஒலி செல்லாக்காசுகளோ,
சில்லறையோ, சுருங்கி மடிந்த இரண்டாயிரம் ரூபாய்த் தாளோ, தொகை குறிப்பிடப்படாமல் கையொப்பமிடப்பட்டிருக்கும் காசோலையோ......