LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Thursday, July 10, 2025

பங்களிப்பின் பல்பொருள் அகராதி : ஓர் அறிமுகம் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 பங்களிப்பின் பல்பொருள் அகராதி : ஓர் அறிமுகம்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
கவனமாக வெளிச்சமூட்டப்பட்ட
ஒளிவட்டங்களுக்கு அப்பால்
காரிருளார்ந்த நள்ளிரவில்
மினுங்கிக்கொண்டிருக்கின்றன
நட்சத்திரங்கள்.
கருத்தாய் மேற்கொள்ளப்
பட்ட
ஒத்திகையின் பிறகான
கைத்தட்டல்களுக்கு மேலாய்
ககனவெளியில் கலந்திருக்கின்றன
ஒருகையோசைகள்.
காண்பதும் காட்சிப்பிழையாகும்;
கேட்பதும் அழைப்பாகாதுபோகும்...
ஆனபடியால் ஆகட்டும் _
உம் ஒளிவட்டங்கள் உமக்கு;
எம் விண்மீனகங்கள் எமக்கு.
1

INSENSITIVITYயின் இருபக்கங்கள் : பெரிசு – கிழவர் லதா ராமகிருஷ்ணன்

 INSENSITIVITYயின் இருபக்கங்கள் : பெரிசு – கிழவர்

லதா ராமகிருஷ்ணன்



வயதின் காரணமாக உடலில், தோற்றத்தில் கண்டிப்பாக மாற்றங்கள் நிகழ்கின்றன என்றாலும் வயது என்பது உண்மையில் மனதால் நிர்ணயிக்கப் படுகிறது என்று தோன்றுகிறது.
சமீபத்தில் யதேச்சையாக தொலைக்காட்சியில் காணநேர்ந்த பழைய திரைப்படக் காட்சியொன்றில் 60 வயது நிரம்பிய கதாநாயகி ‘இனி தன் வாழ்க்கை சூன்யம் என்று அழுவதைக் காணநேர்ந்தது. வேடிக்கையாகவும் விசனமாகவும் இருந்தது. வாழ்வு சூன்யமாக வயதா காரணம்?
பாதிப்பேற்படுத்தாத ‘தலைமுடிச்சாயம் எல்லாம் வந்துவிட்ட பின்பு, நிறைய மருந்து மாத்திரைகள் கிடைக்கும்போது, முதுமை என்பது குறித்த சமூகத் தின் பார்வையில் நிறைய மாற்றம் ஏற்பட்டுவிட்ட நிலையில் இந்த 60 வயது இப்போது பழைய 60 வயதாக பாவிக்கப்படுவதில்லை என்பதைப் பார்க்க முடிகிறது.
ஆனாலும் நிறைய திரைப்படங்களிலும் தொலைக் காட்சித் தொடர்களிலும், (இதன் தாக்கத்தால் என்றும் சொல்லலாம்) தெருவில் எதிர்ப்படும் இளையதலை முறையினர் மத்தியிலும் ‘பெரிசு’ என்று கேலியாக 60, 60+ வயதினரைக் குறிக்கும் வார்த்தை பரவலாகப் புழங்குகிறது.
‘ஒண்ணுத்துக்கும் லாயக்கில்லாதது, வீணாக தனக்குத் தேவையில்லாத விஷயங்களில் மூக்கை நுழைப்பது, வாயைப் பொத்திக்கிட்டுப் போக வேண்டியது, என இந்த ஒற்றைச்சொல் பலவாறாகப் பொருள்தருவது.
சுருக்கமாகச் சொல்வதென்றால், சமூகம் என்பது இந்த வயதிலானவர்களையும்(60, 60+ அதற்கு மேல்) உள்ளடக்கியது, இவர்களையும் உள்ளடக்கியே முழுமை பெறுகிறது என்ற புரிதலை அறவே புறந்தள்ளும் சொல் இந்த ‘பெரிசு’.
சமீபத்தில் இந்தச் சொல்லுக்கு இணையான கிழவர் / கிழவர்கள் என்ற, ஒப்பீட்டளவில் நந்தமிழ்ச் சொல்லை தன்னளவில் அந்தப் பிரிவைச் சேர்ந்த ஒரு சீரிய இலக்கியவாதி யும் இளக்காரமாகப் பயன்படுத்தியிருக்கும் INSENSITIVITYஐ எண்ணி வருத்தப் படாமல் இருக்கமுடியவில்லை.

Monday, June 30, 2025

மகிழ்ச்சியைக் கையகப்படுத்துதல் ( THE CONQUEST OF HAPPINESS ) - பெர்ட்ராண்ட் ரஸ்ஸல்

 மகிழ்ச்சியைக் கையகப்படுத்துதல்

https://puthu.thinnai.com/2025/06/29/%e0%ae%ae%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81/

https://puthu.thinnai.com/2025/06/29/

( THE CONQUEST OF HAPPINESS _
by BERTRAND RUSSEL
பெர்ட்ராண்ட் ரஸ்ஸலின் நூல் - முதல் அத்தியாயம் தமிழில் - திண்ணை இணையதளத்தில் 29.6.2025
https://puthu.thinnai.com/2025/06/29/
பெர்ட்ராண்ட் ரஸ்ஸல் தனது முன்னுரையில் இவ்வாறு கூறுகிறார்:
“இந்த புத்தகம் கற்றறிந்த சான்றோர்களுக்கானது அல்ல. அல்லது, வாழ்வியல் ரீதியான ஒரு பிரச்சினையை வெறுமே பேசிக்கொண்டிருந்தால் போதும் என்பதாக பாவிப்பவர்களுக்கு அல்ல. இந்த நூலின் இனியான பக்கங்களில் ஆழமான தத்துவமோ அல்லது ஆழ்ந்த புலமையையோ காண இயலாது. பொது அறிவு அல்லது நடைமுறை அறிவு என்று நான் நம்புகின்ற ஒன்றால் உத்வேகம் அளிக்கப்பட்ட சில கூற்றுக்களை ஒருங்கிணைத்துத் தருவது மட்டுமே என் நோக்கமாக அமைந்துள்ளது. நான் இதில் வாசகர்களுக்குத் தந்திருக்கும் செய்முறை விளக்கங்களைப் பற்றி நான் சொல்லிக்கொள்வதெல்லாம் இதுதான்: அவை என்னுடைய அனுபவத்தாலும், அவதானிப்பாலும் உறுதிசெய்யப் பட்டவை. அவற்றோடு பொருந்திய அளவில் நான் இயங்கியபோதெல்லாம் அவை எனதேயான மகிழ்ச்சியை அதிகரித்திருக்கின்றன. இந்த ஆதாரத்தின் அடிப்படையில், இங்குள்ள பெருந்திரளான ஆண்களும் பெண்களும் மகிழ்ச்சியை அனுபவிக்காம லேயே இருப்பவர்கள், மகிழ்ச்சியின்மையால் துயருற்றி ருப்பவர் களாக உள்ளவர்கள், தங்களுடைய நிலைமைக் கான காரண காரியங்கள் பரிசோதிக்கப்பட்டு அதிலிருந்து தப்பிப்பதற்கான வழிவகை ஒன்று பரிந்துரைக் கப்பட்டிருப்பதை இந்த நூலில் கண்டறியக் கூடும். நல்லவிதமாக மேற்கொள்ளப் படும் முயற்சியின் மூலம் மகிழ்ச்சியற்றிருக்கும் பலர் மகிழ்ச்சி அடைய முடியும் என்ற நம்பிக்கையில் தான் நான் இந்த நூலை எழுதியிருக்கிறேன்.
PUTHU.THINNAI.COM
மகிழ்ச்சியைக் கையகப்படுத்துதல் – திண்ணை

சொல்ல வேண்டிய சில திரைப்படம், தொலைக்காட்சி சீரியல், சமூகம்

சொல்ல வேண்டிய சில  திரைப்படம், தொலைக்காட்சி சீரியல், சமூகம்

https://puthu.thinnai.com/2025/06/29/

https://puthu.thinnai.com/2025/06/29/%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%aa%e0%af%8d/

- லதா ராமகிருஷ்ணன்

திண்ணை இணைய இதழ் - 29.6.2025

அரசுப் பள்ளிகளும், தரமான கல்விக்கான அடித்தட்டு மக்களின் அடிப்படை உரிமையும்

 அரசுப் பள்ளிகளும், தரமான கல்விக்கான அடித்தட்டு மக்களின் அடிப்படை உரிமையும்

https://puthu.thinnai.com/.../%e0%ae%85%e0%ae%b0%e0%ae.../

_லதா ராமகிருஷ்ணன்
திண்ணை இணைய இதழ் - ஜூன் 3,2025


எந்த நாட்டு மக்களாக இருந்தாலும் சரி, கல்வி என்பது அவர்களின் அடிப்படை உரிமை அப்படி தரப்படும் கல்வி தரமானதாக இருக்க வேண்டியது அவசியம் அரசு பள்ளி ஆசிரிய பெருமக்களுக்கு தனியார் பள்ளி ஆசிரிய பெருமக்களை விட சம்பளமும் சலுகைகளும்…

கவிஞர் ஆத்மாஜீவுக்கு உதவிதேவை

 கவிஞர் ஆத்மாஜீவுக்கு

உதவிதேவை

திண்ணை இணைய இதழ் ஜூன் 3, 2025


_ லதா ராமகிருஷ்ணன்

காலக்ரமம் என்ற சிற்றிதழைக் கைக்காசு போட்டு நடத்தியவர். கணிசமான எண்ணிக்கையில் தரமான கவிதைகள் எழுதியிருப்பவர்; எழுதிவருபவர் கவிஞர் ஆத்மாஜீவ். சமீபகாலமாக உடல்நலன் குன்றி......

உடலின் மனம் - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 உடலின் மனம்

’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

பாலியல் தொழிலாளிதான் அவள்
அண்ணே அண்ணே என்று பகலில் விளிப்பவர்களோடு அன்றன்றைய இரவுகளில் நெடுஞ்சாலை மேம்பாலத்தடி அதிகாலை யிருளில்
இடுக்குமுடுக்கில் படுத்தெழவேண்டிய பிழைப்பு
அவசர அவசரமாய் ‘சோலி’ முடிப்பவர்கள்
அவளளவில் அருளாளர்கள்.
அன்னாரொருவரிடமிருந்து கிடைத்த பணத்தில்
அடுத்த வீட்டில் இரண்டு மூன்று மணிநேரங்கள் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டுவந்திருக்கும்
நான்கு வயதுமகனுக்கும் ஆறு வயது மகளுக்கும் தெருவோரக்கடையிலிருந்து டீ பன் வாங்கிக்கொண்டு விரைந்தாள்
வழியில் குறுக்கிட்ட வாடிக்கையாளரொருவன்
வரச்சொல்லி யழைக்க
’விழித்துக்கொண்டு காத்திருப்பார்கள் குழந்தைகள்’
எனச் சொல்லி கையிலிருந்ததைக் காட்ட
”அட, வாடீ” என்று இடுப்பை வளைத்து இழுத்தவன் கையை
வெடுக்கென கடித்து அகன்றவளின்
ஒவ்வொரு பல்லும்
பிளேடாய்
பிச்சுவாக்கத்தியாய்
அருவாமணையாய்
அரிவாளாய்….

நிகழ்த்துகலை - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 நிகழ்த்துகலை

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)





இன்னொருவர் தலைமீது காகம்
எச்சமிட்டுச் சென்றால்
அருகிருப்பவருக்கு அப்படியொரு சிரிப்பு.
தன் தலையில் விழவில்லையே என்ற இறுமாப்பு.
மனிதத் தலைகள் காகங்களின் இலவசக் கழிப்பறைகள்
என்று கோணவாய்ச் சிரிப்போடு
தத்துப்பித்தென்று சில முத்திரை வாசகங்களை
உரிய ஏற்ற இறக்கங்களைக் குரலில் வரவழைத்து
உரத்துச் சொல்வது அவர்தம் தனிச்சிறப்பு.
விட்டால்
காக்காய்க்கு நல்லவரை அடையாளங்காணத் தெரியும்
என்று கதைக்கவும் தயங்கமாட்டார்கள்.
புறம்பேசி முடித்த பிறகு மறவாமல் சொல்லிக்கொள் வார்கள்
‘நமக்கெதற்கு பொல்லாப்பு’
சரி தப்பு என்பதெல்லாம்
அவரவருக்குக் காப்பாகவும் அடுத்தவருக்கு ஆப்பாகவும்
உருமாறும் திறமெழுத வேறொரு (Half-Boiled) KAFKAவால்தான் முடியும்
குப்புற விழுந்தாலும் ஒட்ட வழியில்லாதபடி மீசையை
மழித்துக்கொண்டுவிடுவதுதானே புத்திசாலித்தனம்
கழுகு மூக்கில் நாம் சுண்டெலியாகும்வரை
பழகாது வலி;
தத்துவம், ஆன்மிகம், அபத்த நாடகம், எக்ஸிஸ்டென்ஷியலிஸம், சந்தர்ப்ப சூழல், குறிப்புரை பொழிப்புரை பரப்புரையெனத் தேவையான பழமொழி புதுமொழிகளோடு ஆங்காங்கே பீடமமைத்துப்
பிப்பிப்பீ டும்டும்டும் கொக்கரக்கோ பெப்பரப்பே யென
கலந்துகட்டிக் கூட்டாஞ்சோறிடுவதாய் ஆகப் பெருமுழக்கமிடுவது
அடடாவோ பழக எளிதான பழியறு வாழ்நெறி
அடி தெறி
என வாழ்ந்துகொண்டிருப்பார் சிலபலர்
இங்கே ஒப்பாரும் மிக்காரும் இலராக….

கலைடாஸ்கோப் கவிதைகள் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 கலைடாஸ்கோப் கவிதைகள்

‘ரிஷி’

(லதா ராமகிருஷ்ணன்)

1. நம்பிக்கை

மழை பெய்கிறது இங்கே
மாமழையின் கருணையும்
மகத்துவ சூரியனின் கருணையும்
சில நல்ல உறவுகளின் கருணையும்
பல அரிய தருணங்களின் கருணையும்
சிலருக்கேனும் உதவமுடியும் கருணையும்
நம்மை நாமே நம்பும் கருணையும்
நல்ல கவிதைகளின் கருணையும்
உள்ள வரை
மாபிச்சி மனம் மருகத் தேவையில்லை.

2. கவிதைக்கான ஆயத்தம் போலும் ஒரு சொல்…..



முன்பின் பார்த்தறியாத அரிய பறவையொன்றின்
ஒற்றைச் சிறகிதழ் காற்றில் மிதந்து வருவதைப்
போலொரு சொல்
மூச்சை உள்ளிழுக்கும்போதாயிருக்கலாம் _
அத்தனை மென்மையாக என் நுரையீரல்களுக்குள் நிறைந்து
என் இரத்தநாளங்களில் ஊடுருவிச் செல்லத் தொடங்குகிறது….
சொப்பனத்தில் எங்கென்றே சொல்லமுடியாத ஒரு வனாந்தரத்தில்
அல்லது ஒரு தெருவில்
நான் கால்கடுக்க நடந்துகொண்டிருக்கும்போது
ஒரு தேவதை எதிரே வந்து
‘என்ன வேண்டும் கேள்’ என்று சொன்னால்
பேந்தப்பேந்த விழிப்பதுபோலவே _
விழித்தபின் காலின்கீழ் எங்கோ புதையுண்டிருக்கும்
அந்த வனாந்திரத்தை அல்லது தெருவை
நினைவில் மீட்டுயிர்ப்பிக்க மீண்டும் மீண்டும் முயலும்
பிரக்ஞையின் கையறுநிலையாய்
காந்தும் அந்தச் சொல்……
பூங்கொத்தாகுமோ
உதிரிப்பூவாகவே நின்றுவிடுமோ
எப்படியிருந்தாலும்
இப்போது அது எனக்குள் தன்னை எழுதிக்கொண்டிருக்கும்
கவிதையாக….

3. இல்லாதிருக்கும் அகழி
காலத்தின் அடர்கருநிழல் படர்ந்த உருவம்
கண்ணெதிரே நிற்கக்கண்டும்
அடையாளந்தெரியாதுழலும் அக்கணம்
தான் செய்யாத குற்றத்திற்காகத்
தவித்துத் தண்ரனைையனுபவித்துக் கூனிக்குறுகி
அவமானப்பட்டுநிற்கும் உள்.
அடையாளமெனல் தோற்றக்கூறுகளுக்கு அப்பாலும்
நீண்டுகொண்டேபோக
அப்பட்ட அந்நியமாதலைக் காட்டிலும் அவலமாய்
அடுத்தடுத்து நிற்கும்போதும் இடையோடும்
கண்ணுக்குத்தெரியா அகழியில் மறைந்திருப்பன
முதலைகளோ மூழ்கடிக்கப்பட்ட மூச்சுத்துளிகளோ
மலர்களோ மறுவாழ்வோ
இறங்கிப்பார்த்துவிடலாமென்றால்
இல்லாதிருக்கும் அகழியின் நீராழம் கணுக்காலளவோ கழுத்தளவோ .......
கண்டறியும் வழியறியாது கலங்கிநிற்கும்
கால்களைக்
கீழிழுத்தவாறிருக்கும்
பிணமாய் கனக்கும் மனம்.

4. ஒட்டுத்தையல்களும்
கந்தலான வாழ்வுரிமையும்

வாயைத் தைத்துவைத்துதான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் சாமான்யர்கள்
வார்த்தைகள் சாமான்யர்களை மட்டுமே வழிமறிக்கின்றன
சாமான்யர்களுக்கு மட்டுமே குழிபறிக்கின்றன
சாமான்யர்களின் இறப்புக்குக் கிடைப்பதெல்லாம்
’செலக்டிவ்’ மௌனங்கள்; மறதிகள்
சாலை விபத்தை வெறுமே செல்ஃபி எடுத்து ஷேர் செய்து தலையை சிலுப்பிக்கொள்ளுதலே
சமூகப் பிரக்ஞையாக.
சின்னதா யொரு ரொட்டித்துண்டு கொடுத்துவிட்டாலோ
சட்டென்று தன்னை யொரு அன்னை தெரசாவாக்கிக் கொண்டுவிட
சொல்லியா தரவேண்டும்?
சாமான்யர்களுக்காக சதா உழைப்பதாக சொல்லிக்கொள்ளும்
சிலபலருக்கு சென்னை சீர்காழி ராஜஸ்தான்
ஸ்விட்ஜர்லாந்தில் சொந்தமாய்
அடுக்குமாடிக் கட்டடங்களும்
கிடுகிடுவென வளர்ந்தோங்கிய
பெருநிறுவன வியாபாரங்களும்.
சாமான்யர்களுக்கில்லை சுதந்திரங்கள்
பேச்சுரிமை கருத்துரிமை யாவும்
எட்டாக்கனியாக
சாமான்யர்களுக்கானதே தினந்தினம் செத்துமடியும் வாழ்க்கை யென்றாக
வரும்போகும் அற்பப்பதர்களுக்கெல்லாம்
வயிற்றுப்பிழைப்புக்காக வணக்கம் சொல்லி
மடங்கி வளைந்து முழந்தாளிட்டு
மனம் நொறுக்கும் வார்த்தைகளைக் கேட்டுக் கேட்டு
மரத்துப் போய்விட்ட உணர்வுடன்
மடைதிறந்த வெள்ளமாய் பீறிடத்துடிக்கும்
சொற்களால் பிதுங்கும் இதழ்களை
இறுக்கித் தைத்துவைப்பதே
இயல்பாகிய
இகவுலக வாழ்வில்
இங்கே இன்று…..
இருந்திரந்து
இரந்திருந்து
இருந்திறந்து
இறந்திருந்து
இருந்திருந்திருந்திருந்து….

பேசப்படாதவர்களைப் பேசுவோம் சமர்ப்பணம்: கவிஞர் ஜெயதேவ னுக்கு

பேசப்படாதவர்களைப் பேசுவோம் சமர்ப்பணம்: கவிஞர் ஜெயதேவ னுக்கு)

- ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

23 ஜூன் 2025  பதிவுகள் இணையதளத்தில்



முயன்றுபார்ப்போம் மொழிபெயர்ப்பை - லதா ராமகிருஷ்ணன்

 முயன்றுபார்ப்போம் மொழிபெயர்ப்பை

- லதா ராமகிருஷ்ணன்
திண்ணை இணைய இதழ்
ஜூன் 3, 2025
https://puthu.thinnai.com/2025/06/03/%e0%ae%ae%e0%af%81%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%aa/



‘வைதீஸ்வரன் கவிதைகள் - தமிழ் இலக்கிய விரிவெளியில்

‘வைதீஸ்வரன் கவிதைகள் -

தமிழ் இலக்கிய விரிவெளியில்



மூத்த கவிஞர் வைதீஸ்வரன் இன்றளவும் இலக்கியப் பங்களிப்பு செய்துவருபவர். தமிழ் இலக்கிய வெளியில் அவருடைய பங்களிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து, உணர்த்துவதாய் எழுதப்பட்டிருக்கும் நூல் இது.