LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Wednesday, June 4, 2025

அடிவருடிகள் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 அடிவருடிகள்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

அவர் சொன்னார் அப்படி
இவர் சொன்னார் இப்படி
எப்படி சொல்லியிருக்கிறார் பார்த்தாயா
என்னமாய் சுட்டிக்காட்டியிருக்கிறார் கேட்டாயா
கேட்பாயா மாட்டாயா
கேட்டால் உய்வாய்
கேட்காவிட்டால் உன்னுடையது பொய்வாய்
என்று சந்நதம் வந்தாற்போல்
நாலாந்தர விளம்பரப் பாடலாய்
ஆலாய்ப் பறந்தபடி
இன்னுமின்னுமாய் ’ஜய்ஞ்ஜக்’ தாளம் தட்டிக்கொண்டேயிருந்தவரிடம்
Silly’ ஆக இருந்தாலும் பரவாயில்லை
சுயமாய் உங்களுக்கே ஏதாவது தோன்றி
நீங்களாக ஏதாவது சொல்லும் நாளில்
சொல்லியனுப்புங்கள்
சாக்லேட் வாங்கி வந்து நான் செவிமடுக்கிறேன்
சண்டைபிடிக்கிறேன்
அல்லது சிலாகிக்கிறேன்
என்று சுருக்கமாக விடைபெற்றுக்கொண்டு
என் வழியே நடக்க ஆரம்பிக்கிறேன்
என் சீடரும் குருவுமாகிய நான்.

வியாபாரம் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 வியாபாரம்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

கமர்கட் வண்டிக்காரர் முதல்
கருப்பு வெல்வெட்டாய் ஜொலிக்கும் இறக்குமதிக் கார்காரர் வரை
தினமும் கடைதிறக்கத் தவறாத சந்தை யிது.
அவரவர் சக்திக்கேற்ப கடைக்கான அலங்கார விளக்குகளும்
விற்பனைப் பொருட்களும்.
‘அத்தனையும் தரமானவை’ என்ற வாசகம் தவறாமல் இடம்பெற்றிருக்கும்
சின்னதும் பெரியதுமான எழுத்துகளில்.
சமயங்களில் அதே பொருளைத்தரும் வேறு வேறு சொற்களைக்கொண்ட வாசகங்கள் இருக்க வழியுண்டு.
சில கடைக்காரர்கள் முந்தைய இரவு பார்த்த மெகா தொடரின் தாக்கத்தில்
ரகசியமாக தெருமுனை பில்லி சூனிய ஆசாமியிடம் சென்று
குறைந்தபட்சம் 500 ரூபாய் தண்டம் அழுது
தகடு வாங்கிவந்து
தன் கடையிலிருந்து ஐந்தாவதாக இருக்கும் கடையில்
எப்படியாவது கொண்டுபோய்வைத்துவிடுகிறார்கள்.
அவர் அப்படிச் செய்வதை பின்னோடு சென்று பார்ப்பதே
வேலையாக இருப்பவர்கள்
அடுத்த நாளே அதை தவறாமல் அம்பலப்படுத்திவிடுகிறார்கள்.
பொருள் வாங்கக் கடைவாசலில்
கூட்டங்கூடியிருப்பதாய்
நாளுங்காணும் மாயத்தோற்றம் நிஜமாகும் நாட்கள்
நிறைவாழ்வுத்தருணங்கள்.
அவற்றையும் போலச் செய்து போலி செய்து
பலரும் காண வாகான இடத்தில்
‘பச்சக்’ என்று போஸ்டர் ஒட்டி
பெருமைகொண்டு பிரமையிலுழல்வாரும் உண்டு.
மெய்யாகவே தரமான பண்டங்களை விற்கும் கடைகளுக்கு
அவ்வப்போது தாமே தயாரித்த அளவுகோல்களையும்
தரநிர்ணயங்களையும் கொண்டுவந்து
உருட்டி மிரட்டுவதாய் ஒரு பார்வை பார்த்து
ஒரு கூழைக்கும்பிடோ சிறிய பெரிய மாமூலோ
கிடைக்காத கோபத்தில்
சில்லறை வியாபாரம் என்றால் பொறுத்துக்கொள்ளலாம்
ஆனால் இப்படி சில்லறைத்தனமான வியாபாரம் செய்தால்?’
இல்லாத ஆன்மா வேசத்துடன்
அங்கலாய்த்து
அங்கே இங்கே சில மொட்டைக் கடுதாசிகள் அனுப்பி
மேற்படி நல்ல கடைகளை செல்லாக் கடைகளாக மாற்றும்
பிரயத்தனமே தம் மூலதனமாகக் கொண்ட
மொத்த வியாபாரிகளும் கைசுத்தமானவர்களே
அவரவர் செய்யும் கலப்படங்களில்.
அலப்பறைகளுக்கப்பால்
கருமமே கண்ணாய் வியாபாரம் செய்பவர்களுக்கு
செய்யும் தொழிலே தெய்வம்.

ஊருக்கு இளைத்தவர்கள் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 ஊருக்கு இளைத்தவர்கள்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

அவ்வப்போது சிலர் விலகிச் செல்வர்;
சிலர் விலக்கப்படுவர்;
சிலர் புதிதாகச் சேருவார்கள்;
சிலர் சேர்க்கப்படுவார்கள்.
என்றபோதும் _
உண்மையாகவே ஊருக்கு இளைத்தவர்கள்
என்று
எப்போதுமே சிலர் உண்டு.
இந்தப் பிரிவில்
இளைத்தவர்கள் என்ற பெயரில்
கொழுத்தவர்கள் சிலரும்
இடம்பிடித்துக்கொள்வார்கள்.
பின்
உண்மையான இளைத்தவர்களை
கொழுத்தவர்களாக்கிக் காட்டுவதற்காக
சளைக்காமல் களைக்காமல்
உத்திகளை வகுப்பார்கள்.
சித்தரிப்பார்கள் சில
இறந்தகாலங்களை.
எனில்,
உண்மையான ஊருக்கு இளைத்தவர்கள்
எகத்தாளத்திற்கும் எட்டியுதைத்தலுக்கும் வாகான
இளைத்தவர்களாகவே _
ஒருகாலத்தில் ’ஜோல்னாப்பை’யர்களாகக் காண்பிக்கப்பட்ட படைப்பாளிகள்
இன்றும் ஜோல்னாப்பையர்களாகவே இருப்பதுபோல்.

நானொரு முட்டாளுங்க….. ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 நானொரு முட்டாளுங்க…..

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

யாரிருந்தாலுமில்லாவிட்டாலும் ரத்தம் வீதிகளில்
சில சமயம் உறைந்தும் சில சமயம் வழிந்தும்
வறுமையால் உறிஞ்சப்பட்டு வெளியே தெரியாமல்
பலநேரமும்…….
மக்கள் என்று முழங்கி அரியணை ஏறுபவர்களில்
தம் மக்கள் முன்னேற்றத்தை முதலாகக் கொள்பவரே
அதிகம் என்றால்
புள்ளிவிவரங்களைக் கொண்டுவா என்பவர்கள்
தமிழ்நாடே எதிர்ப்பதாகவும் ஆதரிப்பதாகவும்தான்
திரும்பத்திரும்பச் சொல்கிறார்கள்.
.விரும்பும்வகையில் வாக்கியங்களை
வெட்டித்தட்டி
இட்டுக்கட்டிச் செய்யப்படும் ’எடிட்டிங்’ வேலைகளில்
எகிறும் ’டிஆர்பி’ ரேட்டிங்குகள்.
அது பொய்யில்லையா என்றால்
வாய்மை எனப்படுவது யாதெனில்
என்று வள்ளுவரை அந்தரத்தில்
தொங்கவிடுவார்கள்…..
பேருக்கு இரண்டு மூன்று தலைகள்
உருண்டால்தான் என்ன?
தன் காரணமாக என்றால் தியாகம் எனவும்
தன்னிகரற்ற வீரம் என்றும்
இன்னொருவர் காரணமெனில்
இரக்கங்கெட்ட கொலையென்றும்
வானத் தாரகைகளையும் சாட்சிக்கு அழைத்து
சத்தியம் செய்ய முடியாதா என்ன?
விண்மீன்கள் வரவில்லையெனில்
ஏலியன்கள் விழுங்கிவிட்டதாகச்
சொல்லிவிட்டால் போயிற்று.
பரபரப்பாக இங்கே எதையாவது
சொல்லிவிடத் தெரியவேண்டும்.
பொய்யா மெய்யா என்று
நாக்கு மேலே பல்லப் போட்டு கேட்கத்
துணிபவர்கள் குறைவாகவே இருப்பார்கள்.
பட்டென்று பொட்டிலொரு தட்டுதட்டினால்
போதும்.
ஏகவேலையிருப்பதாய்,
எக்குத்தப்பான கேள்விகளுக்கு பதிலளித்து
நேரத்தை விரயம் செய்யப் பிடிக்கவில்லை
யென்பதாய் , எத்தனைக்கெத்தனை
கிராக்கி காட்டிக்கொள்கிறோமோ
அத்தனைக்கத்தனை அறிவுசாலியாகப்
பகுக்கப்படும் சாத்தியப்பாடு அதிகம்.
அப்படியும் எவரேனும் தர்க்கித்தால்
அவர் சாதியைச் சொல்லி வசைபாடினால்
முடிந்தது விவகாரம்.
முடிந்துவிடுவதில்லை அதிகாரத்தின் உறவு _
அரியணையோடு மட்டும்.
எட்டும் வரை பட்டறிவு பார்த்ததில்
ஒரே சாதியென்றாலும் முதலாளியும் சேவகரும்
சமமாய் அமர்ந்துகொள்ள முடிவது
சினிமாத் தியேட்டரில் மட்டுமே.
அதாவது வேறு வேறு வரிசையிலுள்ள
இருக்கைகளில்.
வர்க்கம் என்ற சொல் வெறும் இன்னொரு கெட்டவார்த்தையாக்கப்பட்டுவிட்டது.
வெளியே சொன்னால்
”மரியாதை கெட்டவன்
மனிதர்களை மதிக்கத் தெரியாதவன்
நீயென்ன பெரிய இவனா
நாயாண்டி பேயாண்டி
‘க்ரா’ப்பாண்டி ’டூப்’பாண்டி
நக்கிப்பிழைப்பவன், பொய்யைக்
கக்கிக்கொண்டிருப்பவன்
நயத்தக்க வார்த்தைகள் இவை
நான் பேசும் விதத்தில் பேசினால்
நாண்டுகிட்டு சாவாய் நீ
யிருந்துதான் ஆகப்போவதென்ன?” _
யென ஆரம்பித்துப்
பண்பாளர்களாய்த் தம்மைத்தாம்
முரசறைந்து பிரகடனப்படுத்திக்
கொள்கிறவர்களிடமிருந்து
கிளம்பும் நரகல் நச்சு நாராசச் சொற்கள்
காறித்துப்பிக்கொண்டேயிருக்கும்.
விளம்பி மாளாது;
வித்தகமும் போதாது……
குரல்வளைக்கு வெளியே
தெறித்துவிட்டது கையளவு…..
அதுவும்கூடக் குத்தம்;
வாய்மூடிக்கொண்டிருப்பதே உத்தமம்
என்பீர்களெனில்
அப்படியே ஆகட்டும் –
தங்கள் சித்தம்.

Monday, June 2, 2025

POWERMONGERS - ‘rishi’ (Latha Ramakrishnan)

 POWERMONGERS

‘rishi’
(Latha Ramakrishnan)

In the name of being
‘The Voice of the Voiceless’
they become your voice
and decide your choice.

They want you to be dumb;
they turn you mum;
thereby you are forced to become
the mouthpieces of those some.

They say ” come” and you come;
They say ‘go’ and you go;
They say “yes”
and you turn their chorus.
They say “no” and you echo.

They say “less” when they mean ‘more’;
and’ three’ when they mean’ four’;
and you trust them
as ever before.

Climbing up the ladder
with greed-driven vigour
they train you to call
Salt – Sugar;
They brainwash you into believing
Poison - Nectar

All the while
keeping you under their evil spell
they claim to be your guardian angels.

All is well
as long as you do what they tell......

If by any chance you see the real ‘they’
and try to have your say
marking you as their target
to be wiped out
they try to buy your quiet
at all cost;
all too fast.

Aghast
at last
when you rise in revolt
they either slit your throat
or see you off with their gun shot.

ஒரே ஒரு ஊரிலே……… ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 ஒரே ஒரு ஊரிலே………

’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)


’யார் மணிகட்டுவது’ என்பதை
’யார் கட்டிவிடப்போகிறார்கள்’ என்றும்
’யாரும் கட்ட வரமாட்டார்கள்’ என்றும்
’யாராலும் கட்டிவிடமுடியாது’ என்றும்
பேர்பேராய்த் தந்த பொருள்பெயர்ப்பைப்
பெரிதும் நம்பிக்கொண்டிருந்த பூனை _
இரவுபகல் பாராது
விரும்பிய நேரமெல்லாம் பாய்ந்து பிடுங்கி
பற்களால் பெருங்கூர் வளைநகங்களால்
பிய்த்தும் பிறாண்டியும்
தானியங்கள் நிறைந்திருக்கும்
கோணிப்பைகள்
பால் பாக்கெட்டுகள்
அந்த அறையில்
சலவை செய்யப்பட்டு
அடுக்கிவைக்கப்பட்டிருக்கும்
புதுத்துணிமணிகள்
பார்த்துப் பார்த்து கவனமாய் எழுதிய
கவிதைகள்
கணக்குவழக்குகள்
பத்திரப்படுத்திய முக்கிய ஆவணங்கள்
போர்வைக்கு வெளியே நீண்டிருக்கும்
பிள்ளைகளின் கணுக்கால்கள்
பிறந்தகுழந்தையின் மென்கன்னம்
என கிழித்துக் குதறி ரத்தம் கசியச் செய்து
ரணகாயமுண்டாக்கிக்கொண்டிருந்தது
இத்தனை காலமும்……
எலிகளிலிடமிருந்து ஆட்களைக் காக்கும்
வீட்டுக்காவலனாய்
விட்டால் காட்டுராஜாவாகக்கூடத் தன்னை பாவித்துக்கொண்டிருக்கும்போலும்……
இன்று தன் கழுத்தில் மணி கட்டப்பட்டது எப்படி
என்ற விடைதெரியாமல் அது
நழுவிப் பம்மி இருள்மூலையில் பதுங்க _
’பாவம் பூனை, அதன் பிரியத்தைப் புரிந்துகொள்ள
மனமற்றோர் மாபாவிகள்' என்று
’பிராணியெல்லாம் மனிதனுடைய கொத்தடிமைகளே’
என்று நித்தம் நித்தம் அத்தனை திராணியோடு
அடித்துப்பேசிக்கொண்டிருந்தவர்கள்
கோபாவேசமாக சீறத்தொடங்க _
பேய்மழைக்குக் குடை விரித்த பாங்கில்
வீடுகள் ஆசுவாசமடைய _
மணியோசைக்கு பயந்து பூனை
இருள்மூலையில் மலங்க மலங்க
விழித்துநிற்க_
’இந்தக் கதையில் நீதி உண்டோ ?’
எனக் கேட்டவரிடம்
உண்டென்றால் அது உண்டு;
‘இல்லையென்றால் அது இல்லை’ என்று
வெறும் உருவகமாகிவிட்ட பூனை
மனிதக்குரலில் ’மியாவ்விட்டு
மேலும் சொன்னது :
"கற்க கசடற".

குரலற்றவர்களின் குரல்களாகிறவர்கள் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 குரலற்றவர்களின் குரல்களாகிறவர்கள்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
குரலற்றவர்களின் குரலாக இருப்பதான பாவனையில்
அவர்கள் நம் குரலாகிறார்கள்;
ஊமையாக நாம் இருக்கவேண்டுமென்று விரும்புகிறார்கள்;
நம்மை வாயடைத்துப்போகச் செய்கிறார்கள்.
அவ்விதமாய் நம்மை அவர்களின் ஊதுகுழல்களாக்கி விடுகிறார்கள்.

அவர்கள் 'வா' என்கிறார்கள்; நாம் வருகிறோம்;
'போ' என்கிறார்கள். போகிறோம்
‘ஆமாம்’ என்கிறார்கள்
அவர்களுக்கு ‘கோரஸ்’ பாடுகிறோம்.
’இல்லை’ என்கிறார்கள்
அவர்கள் சொல்லை எதிரொலிக்கிறோம்.

அவர்கள் ‘குறைவு’ என்கிறார்கள் _
‘அதிகம்’ என்ற பொருளில்;
மூன்று என்கிறார்கள் நான்குக்கு.
நாம் அவர்களை நம்புகிறோம்
என்றும் போலவே..

பேராசை உந்தித்தள்ள பரபரவென்று
ஏணியில் மேலேறியவாறே
அவர்கள் நமக்குக்கற்றுத்தருகிறார்கள்
உப்பை சர்க்கரையென்று சொல்ல.
மூளைச்சலவை செய்து உருவேற்றுகிறார்கள்
நஞ்சை அமுதமென்று நம்ப.

எல்லாநேரமும் நம்மை அவர்கள் கைவசமே
கட்டுண்டிருக்குமாறு மாயம் செய்து
அவர்களே நமது காவல்தேவதைகள் என்று
கையடித்துச் சத்தியம் செய்யாத குறையாகக்
கூறியவாறிருக்கிறார்கள்.

எல்லாம் நல்லதாகவே இருக்கும்_
நாம் அவர்கள் கூறுவதைக் கேட்டு நடக்கும்வரை
எப்படியோ நமக்கு அவர்களது நிஜமுகம் தெரியவந்தால்
நம் கருத்தை நாம் உரைக்க முனைந்தால்
அழிக்கவேண்டிய
இலக்காக நம்மைக் கொண்டு
அவர்கள் நம்மை எல்லாவழிகளிலும்
வாய்பொத்தியிருக்கச் செய்ய முனைவார்கள்.

அதிர்ந்துபோய்
ஒருவழியாக
நாம் எதிர்த்தெழுந்தால்
நம் குரல்வளையை அறுப்பார்கள்;

அல்லது கைத்துப்பாக்கியால் நம்மை
வழியனுப்பிவைப்பார்கள் _
இறுதி யாத்திரைக்கு.