LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Thursday, July 7, 2022

ஒட்டுத்தையல்களும் கந்தலான வாழ்வுரிமையும் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 ஒட்டுத்தையல்களும் 

கந்தலான வாழ்வுரிமையும்

 

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)

 


வாயைத் தைத்துவைத்துதான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்

சாமான்யர்கள்

வார்த்தைகள் சாமான்யர்களை மட்டுமே வழிமறிக்கின்றன

சாமான்யர்களுக்கு மட்டுமே குழிபறிக்கின்றன

சாமான்யர்களின் இறப்புக்குக் கிடைப்பதெல்லாம்

செலக்டிவ்மௌனங்கள்; மறதிகள்

சாலை விபத்தை வெறுமே செல்ஃபி எடுத்து ஷேர் செய்து

தலையை சிலுப்பிக்கொள்ளுதலே

சமூகப் பிரக்ஞையாக.

சின்னதா யொரு ரொட்டித்துண்டு கொடுத்துவிட்டாலோ

சட்டென்று தன்னை யொரு அன்னை தெரசாவாக்கிக்கொண்டுவிட

சொல்லியா தரவேண்டும்?

சாமான்யர்களுக்காக சதா உழைப்பதாக சொல்லிக்கொள்ளும்

சிலபலருக்கு சென்னை சீர்காழி ராஜஸ்தான்

ஸ்விட்ஜர்லாந்தில் சொந்தமாய்

அடுக்குமாடிக் கட்டடங்களும்

கிடுகிடுவென வளர்ந்தோங்கிய

பெருநிறுவன வியாபாரங்களும்.

சாமான்யர்களுக்கில்லை சுதந்திரங்கள்

பேச்சுரிமை கருத்துரிமை யாவும்

எட்டாக்கனியாக

சாமான்யர்களுக்கானதே தினந்தினம் செத்துமடியும் வாழ்க்கை

யென்றாக

வரும்போகும் அற்பப்பதர்களுக்கெல்லாம்

வயிற்றுப்பிழைப்புக்காக வணக்கம் சொல்லி

மடங்கி வளைந்து முழந்தாளிட்டு

மனம் நொறுக்கும் வார்த்தைகளைக் கேட்டுக் கேட்டு

மரத்துப் போய்விட்ட உணர்வுடன்

மடைதிறந்த வெள்ளமாய் பீறிடத்துடிக்கும்

சொற்களால் பிதுங்கும் இதழ்களை

இறுக்கித் தைத்துவைப்பதே

இயல்பாகிய

இகவுலக வாழ்வில்

இங்கே இன்று…..

இருந்திரந்து

இரந்திருந்து

இருந்திறந்து

இறந்திருந்து

இருந்திருந்திருந்திருந்து…..

வியாபாரம் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 வியாபாரம்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
கமர்கட் வண்டிக்காரர் முதல்
கருப்பு வெல்வெட்டாய் ஜொலிக்கும் இறக்குமதிக் கார்காரர் வரை
தினமும் கடைதிறக்கத் தவறாத சந்தை யிது.
அவரவர் சக்திக்கேற்ப கடைக்கான
அலங்கார விளக்குகளும்
விற்பனைப் பொருட்களும்.
‘அத்தனையும் தரமானவை’ என்ற வாசகம் தவறாமல் இடம்பெற்றிருக்கும்
சின்னதும் பெரியதுமான எழுத்துகளில்.
சமயங்களில் அதே பொருளைத்தரும் வேறு வேறு சொற்களைக்கொண்ட வாசகங்கள் இருக்க வழியுண்டு.
சில கடைக்காரர்கள் முந்தைய இரவு பார்த்த மெகா தொடரின் தாக்கத்தில்
ரகசியமாக தெருமுனை பில்லி சூனிய ஆசாமியிடம் சென்று
குறைந்தபட்சம் 500 ரூபாய் தண்டம் அழுது
தகடு வாங்கிவந்து
தன் கடையிலிருந்து ஐந்தாவதாக இருக்கும் கடையில்
எப்படியாவது கொண்டுபோய்வைத்துவிடுகிறார்கள்.
அவர் அப்படிச் செய்வதை பின்னோடு சென்று பார்ப்பதே
வேலையாக இருப்பவர்கள்
அடுத்த நாளே அதை தவறாமல் அம்பலப்படுத்திவிடுகிறார்கள்.
பொருள் வாங்கக் கடைவாசலில்
கூட்டங்கூடியிருப்பதாய்
நாளுங்காணும் மாயத்தோற்றம் நிஜமாகும் நாட்கள்
நிறைவாழ்வுத்தருணங்கள்.
அவற்றையும் போலச் செய்து போலி செய்து
பலரும் காண வாகான இடத்தில்
‘பச்சக்’ என்று போஸ்டர் ஒட்டி
பெருமைகொண்டு பிரமையிலுழல்வாரும் உண்டு.
மெய்யாகவே தரமான பண்டங்களை விற்கும் கடைகளுக்கு
அவ்வப்போது தாமே தயாரித்த அளவுகோல்களையும்
தரநிர்ணயங்களையும் கொண்டுவந்து
உருட்டி மிரட்டுவதாய் ஒரு பார்வை பார்த்து
ஒரு கூழைக்கும்பிடோ சிறிய பெரிய மாமூலோ
கிடைக்காத கோபத்தில்
சில்லறை வியாபாரம் என்றால் பொறுத்துக்கொள்ளலாம்
ஆனால் இப்படி சில்லறைத்தனமான வியாபாரம் செய்தால்?’
இல்லாத ஆன்மா வேசத்துடன்
அங்கலாய்த்து
அங்கே இங்கே சில மொட்டைக் கடுதாசிகள் அனுப்பி
மேற்படி நல்ல கடைகளை செல்லாக் கடைகளாக மாற்றும்
பிரயத்தனமே தம் மூலதனமாகக் கொண்ட
மொத்த வியாபாரிகளும் கைசுத்தமானவர்களே
அவரவர் செய்யும் கலப்படங்களில்.
அலப்பறைகளுக்கப்பால்
கருமமே கண்ணாய் வியாபாரம் செய்பவர்களுக்கு
செய்யும் தொழிலே தெய்வம்.

அடிவருடிகள் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 அடிவருடிகள்

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)

அவர் சொன்னார் அப்படி

இவர் சொன்னார் இப்படி

எப்படி சொல்லியிருக்கிறார் பார்த்தாயா

என்னமாய் சுட்டிக்காட்டியிருக்கிறார் கேட்டாயா

கேட்பாயா மாட்டாயா

கேட்டால் உய்வாய்

கேட்காவிட்டால் உன்னுடையது பொய்வாய்

என்று சந்நதம் வந்தாற்போல்

நாலாந்தர விளம்பரப் பாடலாய்

ஆலாய்ப் பறந்தபடி

இன்னுமின்னுமாய்ஜய்ஞ்ஜக்தாளம் தட்டிக்கொண்டேயிருந்தவரிடம்

Silly’ ஆக இருந்தாலும் பரவாயில்லை

சுயமாய் உங்களுக்கே ஏதாவது தோன்றி

நீங்களாக ஏதாவது சொல்லும் நாளில்

சொல்லியனுப்புங்கள்

சாக்லேட் வாங்கி வந்து நான் செவிமடுக்கிறேன்

சண்டைபிடிக்கிறேன்

அல்லது சிலாகிக்கிறேன்

என்று சுருக்கமாக விடைபெற்றுக்கொண்டு

என் வழியே நடக்க ஆரம்பிக்கிறேன்

என் சீடரும் குருவுமாகிய நான்.

 

லைக்’ வள்ளல் ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 லைக்வள்ளல்

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)




கொலைகாரர்களுக்கும் தருவார் ‘LIKE’

கொல்லப்படுகிறவர்களுக்கும் தருவார் ‘LIKE’

குழந்தைகளுக்கும் தருவார் LIKE

குட்டிச்சாத்தான்களுக்கும் தருவார் LIKE

பெண்ணியவாதிக்கும் தருவார் LIKE

ஆணாதிக்கவாதிக்கும் தருவார் LIKE

கொடுமைக்கார மாமியாருக்கும் தருவார் LIKE

கொடூர மருமகளுக்கும் தருவார் LIKE

இந்தி எதிர்ப்பாளருக்கும் தருவார் LIKE

தமிழ் வெறுப்பாளருக்கும் தருவார் LIKE

மறைவேத நம்பிக்கையாளருக்கும் தருவார் LIKE

இறை மறுப்பாளருக்கும் தருவார் LIKE

வெறுப்பு அருவருப்பானது என்பாருக்கும் தருவார் LIKE

அரும்பெருமையுடையது என்பாருக்கும் தருவார் LIKE

காதல் கட்டாயம் வேண்டும் என்பாருக்கும் தருவார் LIKE

கூடவே கூடாது என்பாருக்கும் தருவார் LIKE

எழுத்தில் கண்ணியம் காப்பவருக்கும் தருவார் LIKE

கண்ணியமா மண்ணாங்கட்டி என்பாருக்கும் தருவார் LIKE.

கட்டெறும்புக்கூட்டங்களுக்கும் தருவார் LIKE

சுட்ட அப்பளங்களுக்கும் தருவார் LIKE

விட்டகுறை தொட்டகுறையாய் அவரிடம் அத்தனை LIKE

எவருக்கோ எதற்கோ தர எக்கச்சக்க LIKE

அன்றாடம் அரிசிமிட்டாயாய் அவர் இறைக்கும் LIKE

அவருக்கு என்றாவது பெற்றுத்தரலாம் ‘LIKE வள்ளல்பட்டம்!

அதற்கும் இப்போதே போட்டுவிட்டார் ஒரு LIKE!!

வாய்கள் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 வாய்கள்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
பேசுவதற்கென்றே சில வாய்கள்
மூடியிருக்கவென்றே சில வாய்கள்
பேசும் வாய்களைப் பகடி செய்யவும் பழிக்கவும்
பேசவிடாமல் செய்யவும்
சில வாய்கள்
பேசினால் பிடாரி
பேசாவிட்டால் பயந்தாங்கொள்ளி
நாவடக்கம் எல்லோரிடமும் ஒரேயளவாய்ப் பகுக்கப்படுவதில்லை.
நாவினாற் சுட்ட வடு இல்லாதார் யார்?
ஊர் பேர் உள்ள காருக்கேற்ப
ஒருவர் ஏற்படுத்திய காயம் உட்காயமாக
இன்னொருவர் உண்டாக்கியது அங்கிங்கெனாதபடி
எல்லாவிடமும் சுவரொட்டிகளாகும்.
சிலர் வாயால் வடைமட்டுமா சுடுகிறார்கள்?
பஜ்ஜி போண்டா பராத்தா பிரியாணி
பக்கோடா இன்னும் என்னென்னவோ
உள்ளூர்வாசிகளுக்கும் சுற்றுலாப்பயணிகளுக்குமாய்
வியாபாரம் அமோகமாய்.
பேச்சுரிமை சில வாய்களின் தனிச்சொத்தாக
சகமனிதர்களின் குரல்வளைகளை நெரித்துக்
குரலற்றவர்களாக்கி
அவர்களுக்காகப் பேசியவாறிருக்கும் சில வாய்கள்.
விளம்பரங்களால் பெண்ணுரிமையின் வாயில் நஞ்சூற்றிப் பொசுக்கியபடியே
பெண்விடுதலையை முழங்கிக்கொண்டிருக்கும் அச்சு ஒளி-ஒலி ஊடக வாய்கள்.
சின்னக் குழந்தைகளின் வாய்களில் நுழையமுடியாத சொற்களைத் திணித்துத்
தங்களுடைய வெறுப்பையும் வன்மத்தையும்
கக்கவைத்துக்கொண்டிருக்கும் பெரியவர்களின் வாய்கள் இப்போதெல்லாம் வெற்றிலைக்கு பதிலாக
அரசியலையே அதிகம் குதப்பியபடி.
பிறவியிலேயே வாய்பேச முடியாதவளின்
மனமெல்லாம் பேசும் வாய்களாக
நிலைக்கண்ணாடி முன் நின்றவண்ணம் பேச முயற்சித்துக்கொண்டிருக்கும் அவளுடைய
நாபியிலிருந்து பீறிடும் அமானுஷ்ய ஒலிகளின்
மொழியறிந்ததாய் அருகிலிருந்த மரத்திலிருந்து
ஒரு பறவை கீச்சிடுகிறது.
அவளுக்கு அது கேட்குமோ தெரியவில்லை.
வாயிருப்பதால் மட்டும் எல்லாவற்றையும் பேசிவிட முடிகிறதா என்ன?
மூடிய அறைக்குள் யாருமற்ற நேரத்தில் உரக்கத் தானும் தானான பிறனுமாக உரையாடிக்கொண்டிருந்தால்
மனநல விடுதிக்கு அனுப்பிவைக்கப்படும் சாத்தியக்கூறுகள் அதிகம்.
அதனால்தானோ என்னவோ
அடித்தால் பதிலடிகொடுக்கவியலாத பலவீனராய்த் தேர்ந்தெடுத்து
அடித்துக்கொண்டேயிருக்கின்றன சில வாய்கள்.